Monday, October 12, 2009

கடனும் இலவசம்

கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவிப்பு செய்தது. 2009-10-ம் கல்வியாண்டில் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடியை அரை மனதுடன்தான் பாராட்ட முடிகிறது. ஏனெனில், மத்திய அரசு அறிவித்திருக்கும் நிபந்தனையைப் பார்க்கும்போது, யாருக்கு இந்தக் கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடி மிகவும் பயனுள்ளதாக இருக்குமோ அவர்களை மீண்டும் பின்னுக்குத் தள்ளுகிற நிலைமையை மத்திய அரசே உருவாக்கப்போகிறது என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.

வீட்டு வங்கிக் கடன்கூட 8 முதல் 8.5 சதவீத வட்டியில் தருகிறார்கள். அதாவது நிலத்தின் மதிப்பு ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போகக்கூடிய ஒரு உடைமை மீதான கடனுக்கே இந்த அளவுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் படிப்பைத் தவிர எந்தவித வருவாய்க்கும் வழியே இல்லை என்கிற மாணவருக்கு அளிக்கும் கல்விக் கடனுக்கு வங்கிகள் நிர்ணயித்துள்ள வட்டி 11 சதவீதம்.

ஒரு மாணவர் முதல் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், அவர் மாதம் ரூ.1000 வரை வட்டி கட்டியாக வேண்டும். அடுத்தஆண்டு இன்னொரு லட்சம் வாங்கினால் அந்த ஆண்டில் மாதம் ரூ. 2,000 வட்டி. மாணவர் படித்துக்கொண்டிருக்கிறாரே தவிர, தொழில் செய்பவர் அல்ல. வீடு, நிலம் போல ஆண்டுதோறும் மதிப்புக்கூடக்கூடிய பொருள் அல்ல அவருடைய படிப்பு. அவர் வேலைக்குச் சேர்ந்தாலொழிய கடனைத் திருப்பிச் செலுத்தும் சக்தி அவருக்குக் கிடையாது.

தற்போது மத்திய அரசு அனைத்துக் கல்விக் கடனுக்கும் வட்டியைத் தானே செலுத்தும் இந்த அறிவிப்பால், வசதி உள்ளவர்களும், சொத்து உள்ளவர்களும், கருப்புப்பணத்தை வைத்திருப்பவர்களும்கூட, "சும்மா கிடைக்கிற கடன்தானே', "நாலு வருஷத்துக்கு வட்டியில்லாத கடன்தானே' என்று கல்விக் கடனை வாங்கி, அதைத் தொழிலில் முதலீடு செய்தோ அல்லது அப்படியே அதே வங்கியில் வைப்பு நிதியாக வைத்து 7 சதவீதம் வட்டியைப் பெறுவதற்கான ஆசையாலோ, கல்விக்கடன் பெற முயல்வர். இதனால் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் வங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதியுள்ளவர்களையே "பாதுகாப்பாக'த் தேர்வு செய்யும். முன்னுரிமை வழங்கும். மேலும், ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் குறிப்பிட்ட அளவுக்குமேல் கல்விக் கடன் வழங்க முடியாது. ஆகவே, தகுதியுடைய, ஏழை மாணவர்கள் இந்த இலவசக் கடன் போட்டியில் நிராகரிக்கப்படுவார்கள்.

தற்போது மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஒரேயொரு நிபந்தனை பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே. அதாவது பெற்றோரின் ஊதியம் மாதம் ரூ. 37,500-க்கு மிகாமல் இருந்தால் இந்தக் கல்விக் கடன், வட்டி தள்ளுபடிச் சலுகையைப் பெற முடியும். ஆகவே, இந்த இலவசக் கடனைப் பெற எல்லோரும் முயற்சி செய்வார்கள் என்பது நிச்சயம். இந்தக் கல்விக் கடன் திட்டத்தில் பயன்பெறவுள்ள 5 லட்சம் மாணவர்களில் 75 சதவீதம் பேர் வசதி உள்ளவர்களாகவும், அரசு இலவசக் கடன் என்று அறிவித்ததால் வாங்க வந்தவர்களாகவும் இருப்பர்.

மாணவர்களின் உயர்கல்வியில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், அவர்கள் செய்திருக்கவேண்டிய முதல் வேலை, கல்விக் கட்டணத்தைக் குறைப்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களைச் சேர்த்து ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் ஏறக்குறைய ரூ. 1 லட்சம் செலுத்தவேண்டியுள்ளது. மத்திய அரசு கடுமையான, உறுதியான நடவடிக்கை எடுத்தால், இந்தக் கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ. 50,000 என குறைக்க முடியும். இதனால் பெற்றோர் நேரடியாகப் பயன்பெறுவார்கள். அவர்கள் கல்விக் கடன் வாங்கினாலும்கூட, அதுவும் 50 சதவீதமாகக் குறையும். அதற்கு மத்திய அரசே வட்டியைச் செலுத்தினாலும், அதுவும் பாதியாகக் குறையும்.

இதற்கு மாறாக, கல்விக் கடனுக்கான வட்டியை மட்டும் அரசே ஏற்பதன் மூலம், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழக்கம்போல பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறார்கள் என்பதோடு, அனைவரும் கல்விக்கடன் பெறவும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

அதிக மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு முழு வட்டி தள்ளுபடி என்றும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கடனுக்கு குறிப்பிட்ட சதவிகித வட்டி தள்ளுபடி என்றும் அரசு அறிவித்தாலும்கூட, இந்தக் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி நியாயமானதாகவும், உண்மையானதாகவும் அமையும்.
கர்நாடக மாநில அரசைப் போல, கல்விக் கடனில் 6 சதவீத வட்டியை மானியமாக அளிக்கும் வழக்கத்தை கையில் எடுத்துக்கொண்டால்கூட, வெறுமனே இலவசக் கடன் என்பதற்கான போட்டி பெருமளவு குறையும்.

அனைத்து மாணவர்களின் கல்விக் கடனுக்கும் வட்டி தள்ளுபடி என அறிவித்து, தேவையில்லாமல் ஒரு போட்டியை உருவாக்கி, அதில் வலுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெறவும், இளைத்தவர்கள் ஒதுங்கி நின்று ஏங்கவும் அரசே பாதை அமைத்துள்ளது. நல்ல திட்டம், ஆனால் நடைமுறையில் சில கடிவாளம் தேவைப்படுகிறது.
நன்றி : தினமணி

ஆகஸ்ட் மாதம் உற்பத்தி துறையில் 10.2 சதவீத வளர்ச்சி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய தொழில்துறையின் வளர்ச்சி 10.4 சதவீதமாக உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப் பட்டுள்ள செய்தியில், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்திய ‌‌தொழில்துறை வளர்ச்சி 10.4 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும், உற்பத்தி துறையில் 10.2 சதவீதமாக வளர்ச்சி அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2007-08ம் ஆண்டில் 8.5ஆக இருந்த தொழில் துறை வளர்ச்சி 2008-09ம் ஆண்டிற்கான, ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் 2.6 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி தினமலர்


மகாராஷ்டிர தேர்தல்: காங்கிரஸýக்கு ஆதாயமா?

திரைப்படத் தயாரிப்பாளரான கரண் ஜோஹர், சமீபத்தில் மகாராஷ்டிர நிர்மாண் சேனை அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேயைச் சந்தித்து, தனது படத்தில் "மும்பை' என்ற வார்த்தையை "பம்பாய்' எனப் பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். இதனால் எல்லாம் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் மனதில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

எனினும் இதன் மூலம் ஜோஹர் தனது படம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் திரையிடப்படுவதை உறுதி செய்துள்ளார். அவ்வளவுதான்! திரைப்படங்களுக்குத் தணிக்கை அதிகாரிகள்தான் நற்சான்றிதழ் கொடுத்து படத்தை வெளியிட அனுமதி அளிப்பது வழக்கம். ஆனால், தங்கள் படம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் தியேட்டரில் ஓடவேண்டுமானால், அதற்கு முன்னதாக மகாராஷ்டிர நிர்மாண் சேனை அமைப்பிடமும் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக கரண் ஜோஹர் மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவாணை நாடவில்லை. ஆனால், அவசரம் அவசரமாக ராஜ் தாக்கரேயைச் சந்தித்துள்ளார். "சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலிலேயே விழுந்துவிட்டால் பிரச்னை ஏதும் இருக்காது' என்று அவர் எண்ணியிருக்கலாம்.

அரசியல் கண்ணோட்டத்தில் இதைப் பார்த்தால் இதனால் காங்கிரஸýக்குத்தான் லாபம் என்பது தெரியவரும். மகாராஷ்டிரத்தில் இப்போதைய நிலையில் முடிசூடா மன்னனாக இருப்பவர் மகாராஷ்டிர நிர்மாண் சேனை அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேதான். அவரது செல்வாக்கு உயர்ந்தால் பரவாயில்லை. அதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. ஆனால், சிவசேனை என்ற கிழட்டுப் புலி மீண்டும் தலையெடுத்துவிடக்கூடாது என்று நினைக்கிறது காங்கிரஸ்.

சிவசேனையிலிருந்து ராஜ் தாக்கரே பிரிந்து வந்து தனிக் கட்சியை உருவாக்கி நடத்தி வருவதால் காங்கிரஸýக்குத்தான் லாபம்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மும்பை, தாணே பகுதியில் 17 இடங்களைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ்.

மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஹரியாணாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் அங்கு காங்கிரஸ் புதுவிதமான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியொரு நிலை அங்கு உருவாகலாம்.
ஒருமுறைக்கு மேல் முதல்வராக இருந்தவர்கள் மேலிடத் தலையீடு இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட நினைக்கிறார்கள்.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் திடீர் மரணத்துக்குப் பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என்று சிலர் பிடிவாதமாகக் கோரி வருகிறார்கள். எல்லைப்புற மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், உண்மையான தேர்தல் போட்டி மகாராஷ்டிரத்தில்தான்.

மகாராஷ்டிரத்தில் இந்த முறையும் பாஜக, சிவசேனை கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறது. மகாராஷ்டிர நிர்மாண் சேனையின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி வெற்றியைக் குவிக்குமா என்பது கேள்விக்குறிதான். மகாராஷ்டிர நிர்மாண் சேனை, வட இந்தியர்களைத் தாக்கிப் பேசி வருகிறது. இதனால் பிராமணர்கள், ராஜபுதனத்தினர், இதர பிற்பட்ட வகுப்பினர்கள், உ.பி. மற்றும் பிகாரைச் சேர்ந்த தலித்துகள் "பையாக்கள்' என்ற ஒரே பிரிவாகத் தனித்து நின்று காங்கிரûஸ ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக மராத்தி பேசும் மக்களிடம் ஒருவித விரக்தி ஏற்பட்டுள்ளது. வெளி மாநிலத்தவர்கள் மீது அவர்களுக்குக் கோபம் உள்ளது. ஆனால், உண்மை நிலவரம் என்னவெனில் வெளிமாநிலத்தவர்கள்தான் அங்கு உழைப்பதுடன் செல்வாக்காகவும் உள்ளனர்.

சாதாரண நிலையில் உள்ள பேப்பர் போடும் பையனிலிருந்து, பால்காரர், காய்கறி வியாபாரி, டாக்ஸி டிரைவர் வரை அனைவரும் வெளிமாநிலத்தவர்தான். இவர்களுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்வதன் மூலம் தேர்தலில் ஆதாயம் அடையப் பார்க்கிறது மகாராஷ்டிர நிர்மாண் சேனை.

ராஜ் தாக்கரேயின் நோக்கமெல்லாம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடவேண்டும் என்பதல்ல. உத்தவ் தாக்கரேயின் கை ஓங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். அதுமட்டுமல்ல; இன்னும் மூன்று ஆண்டுகளில் நடைபெற உள்ள மும்பை மாநகராட்சித் தேர்தலில் வென்று தற்போது சிவசேனை கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சியை தங்கள் வசம் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான்.

ராஜ் தாக்கரேயின் அரசியல் விளையாட்டை நன்கு புரிந்துகொண்டுள்ள சிவசேனை கட்சி, மகாராஷ்டிர நிர்மாண் சேனை, காங்கிரஸ் இரண்டையும் தோற்கடிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. உத்தவ் தாக்கரேயும் "நீங்கள் பால் தாக்கரே மீது உண்மையிலேயே அன்பு கொண்டிருந்தால் தேர்தலில் சிவசேனை கட்சிக்கு வெற்றியைத் தேடித் தாருங்கள்' என்று தொண்டர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரும் இதுதான் தனது கடைசித் தேர்தல் என்றும் அரசியலிலிருந்து ஓய்வுபெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டப் போவதாகவும் கூறியுள்ளார். இந்தத் தேர்தல் பால் தாக்கரேவுக்கும் ராஜ் தாக்கரேவுக்கும் இடையிலான போட்டி என்பது போலவும், இது தனக்கும் (உத்தவ் தாக்கரே), ராஜ் தாக்கரேவுக்கும் இடையிலான போட்டி அல்ல என்பது போலவும் உத்தவ் தாக்கரே பேசி வருகிறார். உடல்நலம் இல்லாமல் இருக்கும் பால் தாக்கரேவுக்கும் இது கடைசித் தேர்தலாக இருக்கும் என்று தெரிகிறது. எப்படியாவது தமது மகனை மும்பையின் முடிசூடா மன்னராக்க வேண்டும் என்பதுதான் பால் தாக்கரேயின் ஆசை.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சரத் பவார், தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்பட்சத்தில் தனக்கு நெருக்கமான ஒருவரை மாநில முதல்வராக ஆட்சிப் பீடத்தில் அமர்த்தலாம். இன்னும் சொல்லப்போனால் தமக்குச் சாதகமான நிலை ஏற்பட்டால் கட்சியை அவர் காங்கிரஸýடன் இணைத்துவிடவும் முடிவு எடுக்கலாம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்றாவது அணி என்பது எடுபடவில்லை. குடியரசுக் கட்சி (கவாய் பிரிவு), காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதேபோல வடஇந்தியர்களும், முஸ்லிம்களும் காங்கிரஸ் பக்கம்தான் உள்ளனர். சமாஜவாதி கட்சியைப் பொருத்தவரை அந்தக் கட்சிக்கு மாநிலத்தில் முன்பு இருந்த செல்வாக்கு இப்போது இல்லை.

இதர மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலைவிட மகாராஷ்டிர மாநிலத் தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இதற்குப் பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தால் அது காங்கிரஸýக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். அதுமட்டுமல்ல; 2014-ல் தனித்து ஆட்சியைப் பிடிக்க இது வழிகோலலாம்.

மற்றொருபுறம் பார்த்தால் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஓரளவு கணிசமான இடங்களைப் பிடித்துள்ளது பாஜக-சிவசேனை கூட்டணி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்று கட்சிக்குப் புத்துயிரூட்டலாம். இந்தத் தேர்தல் அந்தக் கட்சிக்கு வாழ்வா-சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனை கட்சியின் எதிர்காலம் என்ன என்பது இந்தத் தேர்தல் மூலம் தெளிவாகிவிடும் என்று தெரிகிறது. ஏனெனில் சிவசேனை கட்சி நாளுக்கு நாள் தனது செல்வாக்கை இழந்து வருகிறது. அதை ஒரு கிழட்டுப் புலிபோல மக்கள் கருதுகிறார்கள். ஒரு வீரியம் நிறைந்த கட்சி போல அதன் செயல்பாடுகள் இல்லை என்றே பலரும் நினைக்கின்றனர். நகர்ப்புறங்களில் அதன் தலைவர்கள் தோல்வியைத் தழுவி வருகின்றனர். ஊரகப் பகுதிகளில் மட்டுமே அவர்களின் செல்வாக்கு நீடித்து வருகிறது.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒருவிதமான தேர்தல் உத்தி இருக்கும். ஆனால், கவலை தரும் விஷயம் என்னவெனில் மகாராஷ்டிர நிர்மாண் சேனைக்கு காங்கிரஸ் மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதுதான். இதன் மூலம் குறுகிய லாபம் அடைய காங்கிரஸ் நினைக்கிறது.

1970-களில் மகாராஷ்டிரத்தில் கம்யூனிஸ்டுகளைச் சமாளிக்க காங்கிரஸ், சிவசேனையை ஆதரித்தது. அதுபோல இப்போது மகாராஷ்டிர நிர்மாண் சேனையை காங்கிரஸ் ஆதரிக்கிறது.

ராஜ் தாக்கரேயை வளரவிட்டால் மீண்டும் அவரது கட்சியைக் கட்டுப்படுத்துவது என்பது காங்கிரஸýக்கு பெரும் தலைவலியாகப் போய்விடும்.

மத அடிப்படையிலான அரசியல் எப்படி ஆபத்தானதோ அதேபோல மொழி அடிப்படையிலான அரசியலும் ஆபத்தானது. இதை காங்கிரஸ் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
கட்டுரையாளர் :நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்; முதலீட்டாளர்கள் குஷி

கடந்த நாட்களாக இறக்கு முகத்துடன் இருந்த இந்திய பங்குச்சந்தை, இன்று காலை தொடங்கிய போதே ஏறு முகத்துடனேயே தொடங்கியது. நண்பகலில் சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளை தாண்டி, 400 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது. இதனால், முதலீட்டாளர்கள் ஏக குஷியாகினர்.
வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 384.01 புள்ளிகள் அதிகரித்து 17026.67 புள்ளிகளோடு முடிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 109.05 புள்ளிகள் அதிகரித்து 5054.25 புள்ளி‌களோடு முடிந்தது.
நன்றி : தினமலர்


5 முறைக்கு மேல் பிற ஏ.டி.எம்.,களில் பணம் ‌எடுத்தால் கட்டணம்

ஐந்து முறைக்கு மேல் பிற ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை வரும் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கட்டுப்பாடின்றி பணம் எடுக்கும் நடைமுறை வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு, 16ம் தேதி முதல் பிற வங்கி ஏ.டி.எம்.,களை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்தலாம்.ரூபாய் 10,000 ஒரே தடவையில் எடுக்க முடியும். ஆறாவது முறை பயன்படுத்தும் போது, ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்றக் கட்டணம் உயர்ந்திருப்பதாக வங்கிகளில் சங்கம் ரிசர்வ் வங்கியிடம் குற்றம் சாட்டின. இதனை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டது.
நன்றி : தினமலர்


தரம் தாழ்கிறோமே!

ஒரு தமிழர் உலக சாதனை படைத்திருக்கிறார். இந்தியர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அதைப் பற்றி எழுதாமல் சமுதாயத்துக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத ஒரு விஷயம் பற்றி எழுத வேண்டிய துர்பாக்கியத்தை நினைத்து நொந்து கொள்வதைத்தவிர வேறு என்ன வழி?
நல்ல விஷயம் பற்றி எழுத நாலு நாள் தள்ளிப்போகலாம். ஆனால் தவறுகள் உடனடியாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இல்லையென்றால் தவறான முன்னுதாரணம் உருவாகிவிடும்.

பத்திரிகைகள் வியாபார நோக்கத்துடன் செயல்படுகின்றன என்பதையும், சமுதாயத்துக்குப் பயனில்லாத விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து வெறும் பரபரப்பை மட்டுமே நம்பிச் செயல்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாத் துறைகளிலும் உள்ளதுபோலவே பத்திரிகைத் துறையிலும் தரக்குறைவு ஏற்பட்டிருப்பது உண்மை.

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் புகைப்படங்களுடன் வெளியிடப்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட செய்தி, எந்தவிதத்திலும் சமுதாய வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கப் போவதில்லை என்பது தெளிவு. இப்படிச் செய்திகள் பிரசுரிக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

திரைப்பட நடிகைகளின் ஒழுக்கத்தைப் பொது விவாதமாக்குவதால் யாருக்கு என்ன லாபம்? அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கவோ, அவர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவோ பத்திரிகைகளுக்கு யார் அதிகாரம் அளித்தது? பெரிய, பெரிய வண்ணப்படங்களைப் போட்டு நடிகைகளின் அங்க அவயவங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, தங்களது விற்பனையை அதிகரித்துக் கொள்வதுடன் பத்திரிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, இதுபோல வரம்புமீறி விமர்சனம் செய்யும் உரிமை பத்திரிகைகளுக்குக் கிடையாது.

அதேநேரத்தில், நடிகைகளின் படங்களை ஆபாசமாகப் போட்டு பெண்ணினத்தையே வெறும் போகப்பொருளாகக் காட்ட முயலும்போதெல்லாம் பாயாத பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான சட்டம், சம்பந்தப்பட்ட செய்திக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. நடிகைகள் தங்களது ஒழுக்கத்தைப் பற்றிய விமர்சனத்துக்காக அந்தப் பத்திரிகையின்மீது தனித்தனியாக அவதூறு வழக்குப் போடலாமே தவிர, பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எப்படி, ஏன், எதற்காக இந்தப் பிரச்னையில் கையாளப்பட்டிருக்கிறது என்பது புதிராக இருக்கிறது.

நடிக, நடிகையர் ஒன்றுகூடி நடிகர் சங்க வளாகத்தில் நடத்திய கூட்டத்தில், பத்திரிகையாளர் பற்றிய விமர்சனங்களும், செவிகூசும் வார்த்தைகளால் சில பிரபல நடிக, நடிகையர் நடத்திய சொல்அபிஷேகங்களும் அவரவர் தரத்தையும் கலையுலகத்தின் தராதரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நா கூசாமல் பேசும் இவர்களுக்கு, நாசூக்கான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் சக்திகூடக் கிடையாது என்பது ஊரறிந்த உண்மை.

பிராந்திக்கும், பிரியாணிக்கும், பணத்துக்கும் விலைபோகிறவர்கள்தான் பத்திரிகையாளர்கள் என்று பொத்தாம்பொதுவாக நடிக, நடிகையர் விமர்சிக்கலாம் தவறில்லை. காரணம், அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். தங்களது செய்திகளும், படங்களும் பிரசுரமாவதற்காக இவர்கள் தயாரிப்பாளர்களின் செலவில் மேலே குறிப்பிட்ட தானதர்மங்களை அல்லது கையூட்டல்களைக் கொடுக்கலாம் தவறில்லை. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். இது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை என்று யாரும் கருதலாகாது. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள்.

கலையுலகம், கலையுலகம் என்று கூக்குரலிடும் இன்றைய கலையுலகத்தின் சமுதாயப் பங்களிப்புதான் என்ன? ஒட்டுமொத்த தமிழ் சினிமாவால் ஆண்டொன்றுக்குச் செய்யப்படும் மொத்த விற்றுமுதல் எவ்வளவு தெரியுமா? சுமார் நூறோ, இருநூறோ கோடிகள். அதுவும் பெரிய படங்கள் வந்தால் மட்டுமே. திருப்பூரிலும் சிவகாசியிலும் இருக்கும் பல தனியார் நிறுவனங்களின் வருட வருமானம்தான் சினிமாத்துறையின் ஒட்டுமொத்த விற்றுமுதல்!

ஆனால் ஊடகங்களில் கலைத்துறையினருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமோ பல மடங்கு அதிகம். இவர்களது கலைச்சேவையால் மொழி வளர்ச்சி அடைகிறதா? நமது கலாசாரம் மேன்மையடைகிறதா? சமுதாயப் பிரச்னைகள் முன்னுரிமை பெறுகின்றனவா? நாளைய தலைமுறைக்கு நல்ல பல கருத்துகளை முன்வைத்துக் கடமையாற்றுகிறதா? வரிவிலக்குக்காக தமிழில் பெயரை வைத்துவிட்டு தமிழையும் தமிழனின் கலாசாரத்தையும் சீரழிப்பதைத்தவிர இவர்களது கலைச்சேவைதான் என்ன என்று யாராவது விளக்கினால் நலம்.

அரிதாரம் பூசும் நடிகர்கள், தங்களது துறையில் ஈடுபட்டிருக்கும் கடைநிலை ஊழியர்களுக்காகவும், ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்களுக்காகவும் எந்தவிதத்தில் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்பதை அவர்களது மனசாட்சியே கூறும். இவர்கள் மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்னால் தங்களது முகத்தைத் தாங்களே ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நலம். நடிகரானாலும் நடிகையானாலும் இவர்களது சாதனைகளின் அடிப்படை எழுத்தாளர்களின் கற்பனாசக்தியும் பேனா வலிமையும்தான். நல்ல கதை அமையாத திரைப்படங்கள் நடித்தது யாராக இருந்தாலும் ஓடுவதில்லை என்பதுதான் திரையுலக சரித்திரம் கூறும் உண்மை.

பத்திரிகைகள் தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுவது கண்டனத்துக்குரியது. நடிக, நடிகையர் வரம்புமீறி ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது. துணிவிருந்தால் இருசாராருமே மற்றவரைச் சாராமல் வாழட்டுமே, அதற்குத் தயாரா? இவர்கள் பிராந்தி, பிரியாணி, பணம் கொடுக்கவும் வேண்டாம். அவர்கள் வாங்கவும் வேண்டாம். செய்வார்களா?

பத்திரிகையில் வெளிவரும் செய்தி தவறானால் அவதூறு வழக்குத் தொடரலாமே தவிர, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது எப்படி நியாயம்? ஒரு பத்திரிகைச் செய்திக்காக செய்தி ஆசிரியரை எப்படிக் கைது செய்யலாம்; அதுவும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில்? ஒரு தவறான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டிருக்கிறதே அது ஏன்? எந்தவிதத்திலும் சமுதாயத்துக்குப் பயனில்லாத ஒரு விஷயம் விவாதப் பொருளாகியிருப்பது வேதனையிலும் வேதனை!
நன்றி : தினமணி

முகேஷ் அம்பானிக்கு அனில் அம்பானி வெள்ளைக்கொடி: இந்திய தொழில் துறையில் புதிய திருப்பம்

அண்ணன் முகேஷ் அம்பானிக்கு, அவரது சகோதரர் அனில் அம்பானி வெள்ளைக் கொடி காட்டியுள்ளார். இந்திய தொழில் துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம், சகோதரர்களும் ‌தொழிலதிபர்களுமான அம்பானி சகோதரர்கள் பிரிந்ததே. தற்போது நல்ல விஷயமாக, இருவரும் மீண்டும் இணைவதற்கு தம்பி அனில் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார். தனது அண்ணனுடன் உள்ள அனைத்து பிரச்னைகளையும் கலைந்து சுமூகமான உறவு ஏற்பட விரும்புவதாக அனில் அம்பானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனில் அம்பானி வெளியிட்டுள்ள செய்தியில், இருதரப்பும் இணைந்து செயல்பட்டால், நிச்சயம் பிரச்னைகளை சமாளிக்க முடியும். இது அண்ணன் முகேஷ் நினைத்தால் நிச்சயம் நடக்கும். பிரச்னைகளை பேசி தீர்க்க முடியும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
நன்றி : தினமலர்