சமீபகாலமாக பிரபலம் அடைந்து வரும், 'ஸ்டெம் செல்' சிகிச்சைக்காக தொப்புள் கொடி, 'செல்'கள் சேமிக்கப்படுகின்றன. இதற்கான சேமிப்பு வங்கிகளின் வர்த்தகம், 100 கோடி ரூபாயையும் தாண்டியுள்ளது. தொப்புள் கொடி ரத்தத்தின் மூலம் வளரும், 'செல்'களை பயன்படுத்தி, உடலில் செயலிழந்த பகுதிகளில் காணப்படும் பழுதடைந்த செல்களை நீக்கிவிட்டு, புது செல்களை புகுத்தும், 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறைக்கு தற்போது பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே, 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறை வெகுவாக பிரபலமடைந்துள்ளது. இதனால், 'ஸ்டெம் செல்' சேமிப்பு வங்கிகளின் வர்த்தகமும் அதிகரிக்க துவங்கியது. அதிக விலைக்கு இந்த, 'செல்'கள் விற்பனை செய்யப்படுவதால், பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளின் தொப்புள் கொடி ரத்தத்தை சேமிப்பு வங்கிகளின் மூலம் சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நரம்பியல் பிரச்னை உள்ளிட்ட அதிகமான குடும்ப வியாதிகளுக்கு இது ஒரு மாற்று சிகிச்சை முறை. இதனால், இந்த தொப்புள் கொடி ரத்தம் சேமிப்பு விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறையில், உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த செல்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய செல்களை உடலுக்குள் செலுத்த வேண்டும். இந்த செல்கள் வேண்டி வங்கிகளை நாடும் தனியாருக்கு பொருத்தமான செல்கள், 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
'ஸ்டெம் செல்' தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக செல் உற்பத்தி செய் யும், 'கார்டு பிளட்' சேமிப்பு மற்றும் விற்பனையில் இறங்கிவிட்டன. டில்லியைச் சேர்ந்த, 'ஸ்டெம் செல்' குளோபல் பவுண்டேஷன் என்ற அமைப்பின் ஆய்வுப்படி, 'ஸ்டெம் செல்' சேமிப்பு வங்கிகளில் 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து வருவது தெரியவந்துள்ளது. இது ஆண்டு வளர்ச்சியில் 35 சதவீதமாகும். இந்த ஆண்டில் இதன் வர்த்தகம் 140 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான நோயால் பாதிக்கப் பட்ட பல லட்சம் நோயாளிகளுக்கு, 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறை ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று, 'ஸ்டெம் செல்' ஆராய்ச்சி பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்
















