Showing posts with label விலை உயர்வு. Show all posts
Showing posts with label விலை உயர்வு. Show all posts

Thursday, January 7, 2010

உணவு பற்றாக்குறை பத்து ஆண்டுகளில் அதிகரிக்கும்

இந்தியா ஏற்கனவே பணவீக்கத்தால் தள்ளாடி வரும் நிலையில், உணவு தானிய பற்றாக்குறையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் உணவு தானியங்களுக்கான தேவை 30 சதவீதம் வரை உயரும் என தெரிகிறது.
புவி வெப்பமடைந்ததால், இந்தியாவில் பருவ நிலைகள் மாறின, கடுமையான வெப்பச் சூழல் நிலவியது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, வறட்சி நிலவியது. இது உணவு உற்பத்தியிலும் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. மக்கள் தொகை பெருக்கமும் கட்டுக்கு அடங்காமல் போனதால், வரும் பத்து ஆண்டுகளுக்கு உணவு உற்பத்தியை 30 சதவீதம் அதிகரிக்க வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் கூறியதாவது:

கடந்த 1972ம் ஆண்டு 55 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை 2007ம் ஆண்டில் 112 கோடியை தாண்டியது. இதனால், உணவு உற்பத்தியை இரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 20.34 கோடி டன்கள் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. வரும் 2020ம் ஆண்டில் 28.81 கோடி டன்கள் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பால், காய்கறிகள், பழங்கள், சர்க்கரை ஆகியவற்றுக்கு மிகுந்த தேவை ஏற்பட்டுள்ளது.

மண் வளம் குறைந்து வருதல், நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருதல், விவசாய உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இயற்கை வளங்களை பாதுகாத்து, வளப்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் வளர்ச்சியை எட்டலாம்.

விவசாய உற்பத்தியை பெருக்க மத்திய அரசு சமீபத்தில் புதிய புதிய விஞ்ஞான, தொழில் நுட்பங்களை கையாண்டு வருகிறது. 25 கோடி ரூபாய் செலவில் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதே நேரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு கழகமும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நன்றி : தினமலர்


Wednesday, January 6, 2010

வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும்!

ஒரு நாட்டின் பொருளாதார இயக்கமும், வளர்ச்சியும், பலமும், வாங்கும் சக்தி, தாங்கும் சக்தி என்கிற இரண்டு வார்த்தைகளில்தான் மறைந்திருக்கின்றன. இன்றைய நவீன பொருளாதார யுகத்தில், பல நாடுகளின் வளர்ச்சியை, அந்த நாட்டு மக்களின் வாங்கும் சக்தி எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை, ஒரு முக்கிய அடிப்படையாகக் கொண்டு, ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.

÷நம் நாடு, கால் நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததைவிட, இப்பொழுது நன்கு வளர்ந்துள்ளது என்பது தெளிவு. ஒருகாலத்தில், இந்தியா முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ஐம்பதாயிரம் கார்கள்கூட உற்பத்தி செய்து, விற்பனை செய்ய முடியாத காலம் மாறி, தற்போது ஆண்டொன்றுக்கு ஆயிரக்கணக்கான கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதுடன், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யுமளவுக்கு வளர்ந்திருக்கிறோம். தவிர, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களை லட்சக்கணக்கில் உற்பத்தி செய்வது மட்டுமன்றி, மக்களின் தேவைக்கேற்ப வாங்கும் சூழ்நிலையும், அதற்குத் தேவையான தொகையைக் கடனாகப் பெறுவதற்கு ஏதுவாக வாய்ப்புகளும் ஏற்பட்டிருப்பது நம் நாட்டின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

÷விவசாயிகள் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலையைக் கேட்டு, ஒவ்வோராண்டும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதை நாம் காண்கிறோம். குறிப்பாக, பால், கரும்பு, நெல், கோதுமை, பருத்தி, காய்கறிகள், பழங்கள் ஆகிய பொருள்களுக்கு நியாயமான விலையை விவசாயிகள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. விவசாய உற்பத்திச் செலவுகள் விலை உயர்வதால், விற்கும் பொருள்களின் விலையும் உயரும் என்பது தீர்க்கமான உண்மை.

÷நம் நாட்டில் விவசாயிகள் தங்களின் விவசாய உற்பத்திக்கான பொருள்களின் விலை அதிகரித்திருப்பதைக் கண்டித்துக் கிராமங்களிலும், விவசாயப் பொருள்களின் விலையேற்றத்தால் தங்களின் தாங்கும் சக்தி மீறியதைக் கண்டித்துப் பொதுமக்கள் நகரங்களிலும் போராடுவதுமான எதிர்மறைச் செயல்களைப் பார்க்கிறோம்.

÷தங்கத்தின் விலையேற்றம், அன்னியச் செலாவணி மாற்றம், அதிகமான பணவீக்கம், பணம் பற்றாக்குறை சூழ்நிலை, உலக அளவில் அதிகமான வட்டி விகிதம், பொருளாதாரச் சரிவு போன்ற உலகச் சூழ்நிலைகள், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் போன்றவை கண்டிப்பாக நம் நாட்டையும் பாதிக்கும். நம் நாட்டின் இயற்கைச் சூழலும், பருவ மழை குறைவும், மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் காரணிகளாக அமையக் கூடும்.

÷ஆக, உற்பத்தி செய்வதற்குத் தேவையான நேரத்தில், தேவையான அளவு பணவசதி இருக்க வேண்டும். அதேபோல, நியாயமான வட்டி விகிதத்தில் கடன் வசதிகள் பெறுவதற்குத் தேவையான வழிவகைகளை வகுக்க வேண்டும். தவிர, மக்கள் செலவு செய்வது மட்டுமன்றி, நியாயமான அளவு பணம் சேமிப்பும் இருக்க வேண்டும். அப்படிச் சேமிக்கும் பணத்துக்கு அரசாங்கம் நியாயமான அளவு வட்டியும் அளிக்க வேண்டும்.

÷வங்கிகளில் போடும் பணத்துக்கு நியாயமான வட்டியும், வங்கிகளின் நிர்வாகச் செலவுகளுக்கு உலக அளவில் உள்ள நியாயமான தொகைகளும் இருக்க வேண்டும். தவிர, வட்டிக்குக் கடன் கொடுப்பதும் நியாயமான வட்டி விகிதத்தில் இருக்க வேண்டும். இத்தகைய சீரான இலக்கால் மட்டுமே மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் அதிகரிக்கும்.

÷ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் வரும்போது, ஒவ்வோர் அரசாங்கமும் தங்களுடைய வரவு செலவுகளுக்கும், திட்டச் செலவுப் பணிகளுக்காகவும், நிர்வாகச் செலவுக்கேற்ப, வரிவிதிப்பு முறைகளை மேற்கொள்கிறார்கள். இது எல்லோரும் அறிந்ததே.

÷சாதாரண நடுத்தர மக்கள், மாதாந்திரச் சம்பளம் வாங்குவோர், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்ப்போர், சிறு தொழில் முனைவோர் போன்ற சமுதாயத்தின் இடைத்தட்டு மக்கள் எதிர்நோக்கும் சவால் வேறு வகையானது. ""மத்திய, மாநில அரசுகள் மற்றும் நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் பற்றாக்குறைக்கு கூடுதல் வரிவசூல் செய்து விடுகிறார்கள் அல்லது வெளிநாடுகளில் கடன் தொகையாகப் பெற்று, நிர்வாகம் செய்கிறார்கள். ஆனால், யாருமே எங்களைப் பற்றியோ, எங்களது குடும்ப பட்ஜெட் தாங்குமா, எங்களால் குடும்ப நிர்வாகம் செய்ய முடியுமா என்று எள்ளளவும் ஆராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லையே என்பது அவர்களின் நியாயமான ஆதங்கம்.

÷ஒரே நேரத்தில் உணவுப் பொருள்கள், கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வீட்டுவாடகை உயர்வு, பஸ் மற்றும் ரயில் கட்டண உயர்வு, மருத்துவச் செலவு உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் குடும்ப நிதிநிலை பற்றாக்குறைக்கு அவர்கள் என்ன செ ய்ய முடியும்? அதைச் சரிக்கட்ட அவர்கள் எங்கிருந்து கடன் வாங்குவது? அப்படி வாங்கிய கடனை எப்படித் திருப்பிக் கொடுப்பது? இன்றைய அத்தியாவசியத் தேவைகளான டி.வி., கம்ப்யூட்டர், ஆளுக்கொரு செல்போன் போன்றவைகளை வாங்கும் சக்தியின்றி, நடுத்தர வர்க்கத்தினர் மன அதிருப்தியில் உழல்கிறார்கள்.

÷இன்றைய இந்தச் சூழ்நிலையில், பலதரப்பட்ட குடும்பங்கள் அவர்கள் பெறும் சம்பளம், அவர்களின் மாதாந்திர வீடு, உணவு செலவினங்களுக்கும், அவர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகளுக்கும், மற்றைய இதர போக்குவரத்துச் செலவுகளுக்கும் போதுமான அளவில் இருக்கிறதா, அவர்கள் செலுத்தும் வரிவிகிதம் மாறிய சூழ்நிலையில் விலைவாசி ஏற்றத்திற்கேற்ப பொருள்களை வாங்கும் சக்தி அவர்களிடம் உயர்ந்து உள்ளதா என்பதையும், அதனைத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பது பற்றியும் பொருளாதார நிபுணர்கள் கவனம் செலுத்துவதில்லை. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள் மற்றும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் பிரச்னைகளுக்கும் தரப்படும் கவனம் நடுத்தர வர்க்கத்தினருக்குக் கிடைப்பதில்லை.

÷நம் நாட்டில் 80 சதவிகித மக்களின் மாத வருமானம் ரூ. 5,000, 10,000, 15,000, 30,000 ஆகிய இந்த நான்கு பிரிவுகளில் அடங்கிவிடும். அப்படிப்பட்ட மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப திருப்தியாக இருப்பதற்கு வழிவகைகள் என்ன என்பதை அரசாங்கம் தொடர்ந்து ஆராய வேண்டும்.

பல பெரியவர்கள் நாங்கள் எல்லாம் அன்றைய காலத்தில் மிகக் குறைந்த வருவாயில் தங்கம் சவரன் ரூ.15 லிருந்து ரூ.100 விற்ற காலங்களில் நிறைய தங்க நகைகள் வைத்திருந்தோம். கவலையின்றி நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்தோம். ஆனால் எங்கள் பேரக் குழந்தைகளோ, நல்ல மேற்படிப்பு படித்திருந்தும், அத்தியாவசியத் தேவையான ஒரு சொந்த வீடு கூட இல்லாமல், நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று அடிக்கடி சொல்வதைப் பார்க்கலாம்.

÷எல்லா மக்களும் தங்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி, வேலை வாய்ப்பு, ஓய்வூதியப் பாதுகாப்பு, முதியோர் நலத் திட்டங்கள் என்ற அளவில், ஏழை பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல், சமவாய்ப்புக் கிடைப்பதுடன், கீழ்தட்டில் இருப்பவர்களை உயர்த்துவதற்குத் திட்டங்கள் தீட்டி, புதிய சமுதாயம் உருவாக்க வேண்டும்.
அதேநேரத்தில், மத்தியதர வகுப்பினரின் பிரச்னைகளை மையப்படுத்தித்தான் திட்டங்கள் தீட்டுவதும், நிதிநிலை அறிக்கை தயாரிப்பதும் செய்யப்பட வேண்டும்.

÷மத்திய, மாநில அரசுகள், சமுதாய நலம் பேணும் பொருளாதாரத் திட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள். ஆனாலும், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்தினர் ஒவ்வொரு மாதமும் அவர்களின் அன்றாடச் செலவுகளைச் சந்திப்பது குறித்து பயந்துகொண்டே வாழ்கிறார்கள்.

திடீரென உடல்நலக் குறைவோ அல்லது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்தாலோ, அவர்களின் பாடு பெரும் திண்டாட்டம்தான். திடீர் விலையேற்றத்தால் உணவுப் பொருள்கள் வாங்குவதுகூட மிகவும் கடினமாகி விடுகிறது.

÷பெரும்பாலானோர் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் கடைகளில் திடீரென அதிக விலைக்கு விற்றால், அந்தப் பணம் ஏதோ அந்தப் பொருள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குச் செல்வதாக எண்ணுகிறார்கள்.
ஆனால், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையில் இருக்கும் ஒருசிலர்தான் அந்த விலையேற்றத்தின் பலனை அனுபவிக்கிறார்கள். இந்த நிலை மாறி உற்பத்தியாளருக்கு நியாயமான விலையும், வாங்கும் சக்தியும் இருப்பதை அரசுதான் உறுதி செய்ய முடியும்;
செய்ய வேண்டும்.

÷அதேபோல, உணவுப் பொருள்கள் மற்றும் தேவையான பொருள்கள் வாங்குவோருக்கும் நியாயமான விலைக்கு வாங்கும், தாங்கும் சக்தி இருக்க வேண்டும். பட்ஜெட் மற்றும் பொருள்களின் விலை உயர்வு, வரி உயர்வு போன்றவை பலதரப்பட்ட மக்களுக்கும் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் தொடருமா என்பதன் அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டும்.

÷செலவுக்கேற்ற வரவை அரசுகள் செய்து கொள்ள முடியும். பொதுமக்களில் பெரும்பாலோருக்கு அது அசாத்தியம். ஆகவே, அவர்கள் வரவுக்கு ஏற்ற செலவு செய்யும் வகையில் மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் இருப்பதை உறுதி செய்வதுதான் மத்திய, மாநில அரசுகளின் கண்ணோட்டமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட செயல்பாடு இருந்தால் மட்டுமே அரசு மக்கள் நல அரசாக இருக்கும். சுதந்திரம், மக்களாட்சி என்பதற்கெல்லாம் அர்த்தம் இருக்கும். வாங்கும் சக்தி அதிகரிப்பது மட்டுமே வளர்ச்சிக்கு அறிகுறி அல்ல. தாங்கும் சக்தியும் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்துவதுதான் நல்லதொரு பொருளாதாரக் கண்ணோட்டமாக இருக்கும்.
கட்டுரையாளர் :ஜெம் ஆர். வீரமணி
நன்றி : தினமணி

Friday, January 1, 2010

ஆன்-லைன் சர்க்கரை வர்த்தக தடை தொடர்வதால் விலை குறையுமா?

சர்க்கரையின் விலை, ஒவ்வொரு 100 கி.கி.,க்கும் 50 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்து கொண்டே போகிறது. சர்க்கரையின் இத்தகைய விலை உயர்வை கட்டுப்படுத்த, ஆன்-லைன் வர்த்தக தடையை வரும் செப்டம்பர் மாதம் வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரையின் விலை 36 ரூபாயாக அதிகரித்த போது, கடந்த மே மாதம் 26ம் தேதி, சர்க்கரையின் ஆன்-லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இந்நிலையில், சர்க்கரையின் ஆன்-லைன் வர்த்தகத்திற்கான தடையை வரும் செப்டம்பர் மாதம் வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுகுறித்து முன்னணி வர்த்தக கமிஷன் தலைவர் பி.சி.கதுவா கூறியதாவது: தற்போதைய பயிர் சூழ்நிலையை ஆய்வு செய்ததில், சர்க்கரை ஆன்-லைன் வர்த்தகத்தை மீண்டும் துவக்குவது ஏற்றதல்ல என, கருதப்பட்டது. எனவே, சர்க்கரை ஆன்-லைன் வர்த்தகத்திற்கான தடை வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பி.சி.கதுவா கூறினார். இதற்கிடையில், ஜனவரி மாதத்திற்காக, அரசு 14.30 லட்சம் டன் வரியில்லா சர்க்கரையை வெளியிட்டுள்ளது. லெவி என்ற வரியில்லா சர்க்கரை, ஆலை உரிமையாளர்கள் மூலம் சந்தையில் விற்கப்படும். ஆனால், ஒவ்வொரு ஆலையும் விற்கும் சர்க்கரையின் அளவை, மாத அடிப்படையில் அரசு நிர்ணயிக்கும். அந்த அடிப்படையில் டிசம்பர் மாதம், 13.92 லட்சம் டன் வரியில்லா சர்க்கரையை அரசு வெளியிட்டது. ஆனால் கரும்பு உற்பத்தி அளவு குறைந்ததாலும், சர்க்கரை உற்பத்தி அளவு குறைந்திருப்பதாலும், அடுத்த சில மாதங்களுக்கு இரண்டு ரூபாய் வரை கிலோவுக்கு ஏற்றம் அல்லது இறக்கம் தொடரும்; விலை முன்பு போல குறையாது என்று மும்பையில் சர்க்கரை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


Thursday, December 31, 2009

உணவு பணவீக்கம் 19.83%ஆக அதிகரிப்பு

டிசம்பர் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உணவுப் பொருளுக்கான பணவீக்கம் 19.83 சதவீதமாக அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் மற்றும் உருளைகிழக்கின் விலை அதிகரித்து இருப்பதே, பணவீக்க உயர்விற்கு காரணம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில்(கடைசியாக) உணவுப் பொருளுக்கான பணவீக்கம் 18.65 சதவீதமாக இருந்தது.
கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் உருளைக்கிழங்கின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது, பருப்பு வகைகளின் விலை 41 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை 40.75 சதவீதமும், காய்கறிகளின் விலை 46.7 சதவீதமும் அதிகரித்துள்ளன. அரிசி விலை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

உணவுப் பொருள் அல்லாத ரப்பர் மூலப்பொருள் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
நன்றி : தினமலர்

பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவு பொருட்கள் விலை உயர்வு : பிரபல நிறுவனங்கள் முடிவு

சர்க்கரை, பால் மற்றும் வெண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டதால், பிரபல நிறுவனங்களின் பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவுப் பொருட்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்த, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (எப்.எம்.சி.ஜி.,) தயாரிப்பு நிறுவனங்களான பிரிட்டானியா, பார்லே மற்றும் குஜராத்

கூட்டுறவு பால் பொருட்கள் தயாரிப்பு கூட்டமைப்பு (ஜி.சி.எம்.எம்.எப்.,) போன்றவை தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. உணவுப் பொருட்கள் பணவீக்கம் கடந்த பத்தாண்டுகள் இல்லாத அளவாக, தற்போது 20 சதவீதத்தை அடைந்துள்ளது. எனவே, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பை சமாளிக்க பிரிட்டானியா நிறுவனம், தங்கள் தயாரிப்பு பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவுப்பொருட்களின் விலையை, 5 சதவீதம் முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில், பார்லே நிறுவனம், 'பார்லி ஜி' (88 கிராமின்) விலையை 4 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேபோன்று பால் விலை அதிகரிப்பை தொடர்ந்து,

அமுல் நிறுவனம், தயாரிப்புகளின் விலையை பிரிவு வாரியாக 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மற்றொரு பெரிய நிறுவனமாக ஐ.டி.சி., அடுத்த இரண்டு வாரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், இத்துறையில் உள்ள பிற பெரிய நிறுவனங்கள், தற்போதைய நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

இதுகுறித்து, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வினிதா பாலி

கூறுகையில், 'எங்களின் அனைத்து பிராண்டுகளின் விலையையும், 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை, சமீபத்தில் அதிகரித்துள்ளோம். நாங்கள் லாபகரமான வளர்ச்சியையே எதிர்பார்க்கிறோம்' என்றார்.

இதுகுறித்து, குஜராத் கூட்டுறவு பால் பொருட்கள் தயாரிப்பு கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனர் ஆர்.எஸ்.சோதி கூறியதாவது: மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க, தயாரிப்புகளின் விலையை 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளோம். 100 கிராம் வெண்ணெயின் விலையை 23 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரித்துள்ளோம். சமீபத்தில், எங்கள் அனைத்து நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளின் விலையையும் அதிகரித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். எனினும், 'தங்கள் தயாரிப்பு பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் தற்போது இல்லை' என, டாபர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் துகால் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


Monday, December 28, 2009

சுமக்கிறவனுக்குத்தான் வலி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி பிரச்னைக்காக அவைத் தலைவரின் உள்வட்டத்திற்குள் நுழைந்து கூச்சல் போட்டதற்குக் காரணம்,​​ தேர்ந்தெடுத்த மக்கள் தங்களைப் பார்த்து சங்கடமான கேள்விகளைக் கேட்டுவிடக்கூடாதே என்ற எண்ணத்தினால்தான்.​ பத்திரிகைகளும் ஊடகங்களும் விலைவாசி உயர்வில் இவர்கள் காட்டிய அதீத அக்கறையைக் கண்டு,​​ நல்லெண்ணம் கொண்டுவிடுவார்கள் என்பதால்தான்.​ ​

ஆனாலும்,​​ மத்திய அரசு இதைத் தவறாகப் புரிந்துகொண்டதாலோ அல்லது மிகச் சரியாகவே புரிந்துகொண்டதாலோ என்னவோ, நாடாளுமன்ற உணவுக்கூடத்தில் சப்பாத்தி ஒரு ரூபாய்,​​ டீ ஒரு ரூபாய்,​​ சாப்பாடு ரூ.12.50,​ பிரியாணி ரூ.22 என்று - பாவம் வறுமையில் பரிதவிக்கும் மக்களவை உறுப்பினர்களுக்காக குறைந்த விலையை நிர்ணயம் செய்தது.​ பொதுச் சந்தையில் எந்தவொரு பொருளின் விலையும் ஒரு பைசாகூட குறையவில்லை.

இது போதாதென்று,​​ மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்தப் பாடுபட வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் சொல்ல,​​ மத்திய அரசின் தவறான கொள்கையால்தான் விலையேற்றம்; இதை மாநில அரசின் மீது தள்ளிவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத் பதிலடி கொடுக்க,​​ ஒரு சொற்போர் நடந்துகொண்டிருக்கிறது.​ இதனால் எந்தப் பொருளின் விலையும் ஒரு ரூபாய் கூட குறையப் போவதில்லை.

ஒரு பக்கம் 9 சதவீத வளர்ச்சி என்கிறது மத்திய அரசு.​ விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது என்றும் கூறுகிறது.​ ஆனால் பொருள்களின் விலையோ தாறுமாறாக உயர்ந்துகொண்டே போகிறது.​ இந்திய அரசு விலைவாசி உயர்வை மொத்தவிற்பனை விலைப் பட்டியல் ​(ஹோல்சேல் பிரைஸ் இன்டக்ஸ்)​ மூலம் கணக்கிடுகிறது.​ மொத்தவிற்பனை விலைப் பட்டியல் வாரம் தோறும் கணக்கிடப்பட்டாலும்கூட,​​ இதன் மூலம் கிடைக்கும் விலைஉயர்வு சராசரியாக 0.3 சதவீதமாகவே இருக்கிறது. ஏனென்றால்,​​ மொத்தக் கொள்முதல் செய்து அதைப் ​ பதுக்கி,​​ அல்லது சில்லறை வணிகமாக மாற்றப்படும்போதுதான் ஒரு பொருளின் விலை குறைந்தபட்சம் 100 சதவீதத்திலிருந்து 400 சதவீதம் வரை உயர்கிறது.

அரசு வெளியிடும் நுகர்வோர் விலைப் பட்டியலைப் பார்த்தாலே இந்த உண்மை தெளிவாகத் தெரியும்.​ ஒவ்வொரு மாதமும் வெளியாகும் இந்தப் பட்டியலில் விலைஉயர்வு என்பது 9 முதல் 13 சதவீதம் வரை உள்ளது.

விலைவாசி உயர்வைக் கணக்கிடும்போது குறைந்தபட்சம் 435 வகைப் ​ பொருள்களின் விலையைக் கணக்கிடுகின்றனர்.​ இதில் அதிக முக்கியத்துவம் தரும் பொருள்ககளான-​ மின்சாரம்,​​ பெட்ரோலியப் பொருள் போன்றவைகளின் விலை மாற்றமின்றி இருக்கின்றன.​ ஆனால் கணக்கிடுவதில் குறைந்த முக்கியத்துவம் பெறும் காய்கறிகள்,​​ இறைச்சி போன்ற உணவுப் பொருள்களின் விலை சந்தையில் தாறுமாறாக உயர்ந்து கிடக்கிறது.​ இதனால்தான் விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அரசு சொன்னாலும்,​​ நடுத்தரக் குடும்பத் தலைவனின் கையைக் கடிக்கிறது.

சாதாரணமாக இந்தியர்கள் உணவுக்காகத் தங்கள் வருவாயில் 42 சதவீதத்தைச் ​ செலவழிக்கின்றனர்.​ போக்குவரத்துக்கு 9 சதவீதமும்,​​ பொழுதுபோக்குக்கு 8 சதவீதமும் செலவிடுகின்றனர்.​ மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறது.​ இதில் உணவுப் பொருள்களின் விலை கூடிக்கொண்டே வந்தால்,​​ அவர்கள் தங்கள் சம்பளத்தில் பெரும்பகுதியை உணவுக்கே கொடுத்துவிட்டால்,​​ மற்ற செலவுகளுக்கு என்ன செய்வார்கள்.​ இவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும்,​​ தங்கள் மருத்துவச் செலவுக்கும்,​​ சேமிப்புக்கும் என்ன செய்வார்கள்?

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் கிலோ ஒரு ரூபாய் அரிசியை அனைத்துக் குடும்பங்களுமே வாங்கி,​​ அதைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை நிஜம் என்றே வைத்துக்கொண்டாலும்,​​ எண்ணெய்,​​ பருப்பு,​​ மிளகாய்,​​ மிளகு,​​ பூண்டு,​​ வெங்காயம் இவற்றின் விலைஉயர்வு சாதாரண குடும்பத்துக்குத் தாளமுடியாத சுமையாக இருக்கிறது.​ தமிழ்நாட்டில் அனைவரும் ஒரு ரூபாய் அரிசிதான் வாங்குகிறார்கள் என்றால்,​​ பொன்னி அரிசியின் விலை வாங்குவார் இல்லாததால் குறைந்திருக்க வேண்டுமல்லவா,​​ 25 கிலோ சிப்பம் விலை ரூ.1000-த்தை நெருங்குகிறதே ஏன்?​ ​

கடந்த ஆறு மாதங்களில் சமையல் எண்ணெய்,​​ பருப்புவகை,​​ அரிசி,​​ கோதுமை,​​ காய்கறிகள் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.​ விலை உயர்வு என்பது,​​ தேவை -​ உற்பத்தி இரண்டுக்கும் இடைவெளி பெருகினால்தான் உண்டாகும் என்ற பொருளாதார வாய்ப்பாடுகள் எல்லாமும் பொய்யாகும் வகையில் இந்த விலை உயர்வு நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் விந்தையிலும் விந்தை.

2008-09 சாகுபடி ஆண்டுக்கான விளைச்சல் பட்டியலில் 233 மில்லியன் "ரெக்கார்டு' உற்பத்தி என்று அரசு சொல்கிறது.​ அதாவது அரிசி 99 மில்லியன் டன்,​​ கோதுமை 80 மில்லியன் டன்,​​ 39 டன் தானிய வகைகள்,​​ 15 டன் பருப்பு வகைகள் என்று புள்ளிவிவரம் தரப்படுகிறது.​ இதில் பருப்பு வகைகள் மட்டும் தேவையைவிட 4 மில்லியன் டன் பற்றாக்குறை நிலவுவதாக வர்த்தகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்,​​ மற்றவர்கள் யாரும் பற்றாக்குறை இருப்பதாகச் ​ சொல்லவில்லை.​ அப்படியானால் ஏன் விலை உயர்கிறது.​ அல்லது யார் விலையை உயர்த்துகிறார்கள்?

ஓட்டல்கள் தங்கள் உணவுப் பொருள்களின் விலையை உயர்த்திவிட்டன.​ டீக் கடைகளில் ஒரு கோப்பை தேநீர் விலை கிராமப்புறங்களில் ரூ.4 ஆகவும் நகரங்களில் ரூ.5 ஆகவும் உயர்ந்துவிட்டது.​ மற்ற உணவுப் பண்டங்களின் விலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.​ அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு செய்தி வந்தவுடன் முதலில் உயர்ந்தது வீட்டு வாடகை என்பது,​​ வாடகைக்குக் குடியிருப்போருக்குத் தெரியும்.

இதிலும் ராஜதந்திரிகளாகச் செயல்படும் பெரும் நிறுவனங்கள் தங்கள் நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளின் ​ விலையை உயர்த்தாமல் அதில் உள்ள எடையை மட்டும்,​​ 100 கிராம் என்பதை 80 கிராமாகக் குறைத்து மாயாஜாலம் காட்டுகின்றன.​ முன்பெல்லாம் 250 கிராம் இருந்த பாக்கெட்டுகள் எல்லாமும் இப்போது 200 கிராம் பாக்கெட்டுகளாக மாறி ரொம்ப காலமாகிறது.​ நுகர்வோர்தான் பாவம்,​​ அரை கிலோ பாக்கெட் விலையில் பாதிதான் கால்கிலோ பாக்கெட் விலையும் என்று நினைத்து ஏமாறும் நுகர்வோர் அதில் அச்சிட்டுள்ள எடையைப் பார்த்தால் தெரியும்,​​ ஏமாந்துகொண்டிருப்பது.

​ மாதம் ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஒழிய சராசரி இந்தியன் இன்றைய விலைவாசியில் வாழ வழியே இல்லை போலிருக்கிறதே!
நன்றி : தினமணி

Thursday, December 24, 2009

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்: அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய முடிவு

அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர், அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய ஆலோசனை மேற் கொள்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப் பது குறித்து விவாதிக்கப்படும் பட்சத்தில், அவைகள் விலை அதிகரிக்கும் . இந்த கூட்டத்தில், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் கிரிட் எஸ்.பாரீக் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோலியத் துறை குறிப்பாக அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆராய, இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு விற்பதால், நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, அரசு வழங்கும் எண்ணெய் கடன் பத்திரங்களை கொடுக்காததால், இரண்டாவது காலாண்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் ஆகிய தனியார் எண்ணெய் நிறுவனங்களும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க கேட்டு வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.49 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.38 ரூபாயும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தொடர்பாக அரசின் விலை நிர்ணய கொள்கை குறித்து ஆய்வு செய்த குழு, அடுத்த மாதம் இறுதியில் தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


Tuesday, November 10, 2009

நீரோக்களும், லூயிக்களும்...

விலைவாசி உயர்ந்துவிட்டதாக அன்றாடம் செய்தி வெளியிட்டு பத்திரிகைகள் பரபரப்பை ஊட்டுகின்றன; உண்மையில் விலைவாசி உயர்ந்தால் அதன் பலன் விவசாயிகளுக்கும்தான் சென்று சேருகிறது என்று பேசியிருக்கிறார் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா.

இதை உடனடியாக வன்மையாகக் கண்டித்திருப்பதுடன் விலைவாசி உயரவில்லையா, மக்கள் அதனால் பாதிக்கப்படவில்லையா, அதன் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கிறதா, அப்படி என்றால் எத்தனை சதவீதம் அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது என்று நியாயமான கோபத்துடன் கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன்.

உருளைக்கிழங்கு 100.82%-ம், வெங்காயம் 49.91%-ம், பருப்பு வகைகள் 23%-ம், அரிசி 12.19%-ம், கோதுமை 7.47%-ம் விலை உயர்ந்துள்ளது. பால், சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை பற்றிச் சொல்லவே வேண்டாம் என்றும் பரதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வறுமைக்கோடு எது என்பதை நிர்ணயிக்க பிரதமர் தலைமையில் குழு அமைத்திருப்பதையும் அவர் சாடியிருக்கிறார்.
வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறவர்கள் 28% பேர்தான் என்று மத்திய திட்டக்குழுவும், 40% பேர் என்று சாம்பிள் சர்வே நடத்தும் மத்திய அரசின் புள்ளிவிவரத்துறையும், 50% என்று ஊரக வளர்ச்சித்துறையும் தெரிவிக்கின்றன. இவை மூன்றுமே மத்திய அரசின் அங்கங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பணியை மேற்கொண்ட அர்ஜுன் சென் குப்தா தலைமையிலான குழுவோ வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 77% என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் தலைமையிலான குழு எந்த அடிப்படையைக் கையாளப் போகிறது என்று தெரியவில்லை.

மொத்தவிலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் குறைந்துவிட்டது, மைனஸôகிவிட்டது, கட்டுக்குள் வந்துவிட்டது என்றெல்லாம் கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் வெவ்வேறு துறைகள் சார்பில் மாற்றிமாற்றி அறிவித்துக் கொண்டிருந்தார்கள். உண்மையில் மக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் பண்டங்களின் விலை எதுவும் இறங்கு முகமாக அல்ல, நிலையாக அதே விலையில்கூட விற்கப்படவில்லை. எனவே மான்டேக் சிங் அலுவாலியாவை, கம்யூனிஸ்ட் தலைவர் பரதன் கண்டித்திருப்பதில் நியாயம் இருக்கிறது.

அடுத்து விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க, பரதன் பயனுள்ள யோசனை ஒன்றையும் சொல்லியிருக்கிறார். அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 14 அவசியப் பண்டங்களை ரேஷன் கடைகள் மூலம், வருவாய் வரம்பு ஏதும் விதிக்காமல் அனைவருக்கும் நியாய விலையில் விற்க வேண்டும் என்பதுதான் அது. இதன் மூலம், கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகளை வழிக்குக்கொண்டுவர முடியும். அத்துடன் விவரம் தெரிந்தவர்கள் ரேஷன் கடைகளுக்குப் போகிறார்கள் என்றால்தான் அங்கு வேலையும் ஓரளவுக்கு நடக்கும்.

உள்நாட்டு, வெளிநாட்டு பெரு வர்த்தக நிறுவனங்களின் சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பச்சைக் கொடி காட்டும் மத்திய அரசு, இந்த யோசனைகளைப் பரிசீலிக்கக்கூட முன்வருமா என்பது சந்தேகமே.
மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த காலத்திலிருந்து மத்திய பட்ஜெட்டுகளில் இடைவிடாமல் மக்களுக்குக் கூறப்படும் மற்றொரு உறுதிமொழி, நாடு முழுக்க உணவு தானியங்களையும், காய்கறி, பழங்களையும் சேமித்து விநியோகிக்க சங்கிலித் தொடராக உணவு தானியக் கிடங்குகளும், குளிர்பதனக் கிடங்குகளும் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டித்தரப்படும் என்பதாகும். இதுவும் உதட்டளவிலேயே இருக்கும் வாக்குறுதியாகும்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள உணவுப் பாதுகாப்பு மசோதா நன்மையைத் தராது. மாறாக, இந்திய விவசாயிகளுக்கு துரோகத்தை இழைக்கும் என்று எச்சரித்திருக்கிறார் பரதன். உணவு தானிய பற்றாக்குறையை எப்படிச் சமாளிப்பது என்று நடத்திய ஆலோசனையில் வெளிநாடுகளிலிருந்து குவிண்டால் ரூ.1,600 விலையில் கோதுமையை இறக்குமதி செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. உள்நாட்டு விவசாயிகளுக்கு இப்போது குவிண்டாலுக்கு ரூ.1,100 தருவதற்குக்கூட தாராளம் காட்டாத அரசு, இறக்குமதிக்கு அதிக விலை தருவதன் ரகசியத்துக்கும், சுவிஸ் வங்கி சேமிப்புக்கும் சம்பந்தம் இருக்காது என்று நம்புவோமாக!

கோதுமை சாகுபடிக்கு ஊக்குவிப்புக் கிடைக்க, குவிண்டாலுக்கு ரூ.1,500 கொள்முதல் விலை நிர்ணயிக்கலாம் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அரசுக்கு யோசனை கூறியிருப்பதையும் பரதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வேளாண் பொருள்களுக்குக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய நியமிக்கப்படும் குழுவில் (ஏ.பி.சி.) தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். அதிகார வர்க்கமும், மக்களிடமிருந்து அன்னியப்பட்டுவிட்ட ஆட்சியாளர்களும் நியாயங்களை யார் சொன்னாலும் ஏற்கும் பக்குவம் பெற்றாலே இந்த நாட்டின் பிரச்னைகளில் பெரும்பாலானவை தீர்ந்துவிடும்.
""ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடுவதுதானே?'' என்று பிரெஞ்சுப் புரட்சியின்போது கேட்ட பிரெஞ்சு மகாராணியின் மனப் போக்கிலேயே மான்டேக் சிங் அலுவாலியாக்கள் இருந்தால் வறுமை ஒழிவது எப்போது? நீரோக்களும், லூயிக்களும் ஆட்சியாளர்களாக இருந்தால், இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்!
நன்றி : தினமணி

Saturday, November 7, 2009

இந்தியாவின் 15 முக்கிய நகரங்களில் வீடு விலை உயர்வு

சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 15 பெரிய நகரங்களில் வீடு விலை கடந்த ஜூன் வரை 15 சதவீதம் உயர்ந்ததாக தேசிய வீட்டு வசதி வங்கி (என்எச்பி) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வீடுகளின் விலை ஏற்றத் தாழ்வு குறித்த புதிய அட்டவணையை என்எச்பி வெளியிடத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், பணவீக்கம் போல அதற்கு ரெசிடெக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கியின் விலை புள்ளிவிவரப் பிரிவு திரட்டிய தகவல்கள் அடிப்படையில், 2008ம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை வீட்டு விலை ஏற்றத் தாழ்வு பற்றிய ரெசிடெக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை உட்பட 15 பெரிய நகரங்களில் வீடு விலை 5 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. சென்னையின் சில பகுதிகளில் 26 சதவீதம் வீட்டு விலை உயர்ந்தது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வீடுகளின் விலை 27 சதவீத உயர்ந்தன. மும்பையில் 6 சதவீதமும், கோல்கத்தாவில் 13 சதவீதமும், டில்லியின் புறநகர் பகுதியான ஃபரிதாபாத்தில் குடியிருப்பு வீடுகளின் விலை அதிகபட்சமாக 36 சதவீதம் அதிகரித்தது.
நன்றி : தினமலர்


Saturday, October 24, 2009

பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்கிறது

பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை பெட்ரோலுக்கு, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1028 கமிஷன் வழங்கப்படுகிறது. இனி அது ரூ.1098 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதேபோல் டீசலுக்கு தற்போது, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.630 வழங்கப்படுகிறது. இனி அது ரூ.670 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசும், டீசல் லிட்டருக்கு 4 காசும் அதிகரிக்கும். இந்த விலை உயர்வு நாடு முழுவதும் நுகர்வோரிடம் வசூலிக்கப்படும். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Thursday, August 13, 2009

மூலப் பொருட்கள் விலை உயர்ந்தாலும் பிஸ்கெட் விலை தற்போதைக்கு உயராது : ரிப்போர்ட்

பிஸ்கெட் தயாரிப்புக்கான மூலப் பொருட்களான பால் மற்றும் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ள நிலையிலும் தற்போதைக்கு பிஸ்கெட் விலை உயராது என சந்தை நிலவரம் தெரிவிக்கின்றது. இருப்பினும் எடையை குறைப்பது குறித்து பிஸ்கெட் தயாரிக்கும் நிறுவனங்கள் பரிசீலித்து வருதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. பிஸ்கெட் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பார்லே பிராடக்ட்ஸ் மார்கெட்டிங் மேனேஜர் ப்ரவீன் குல்கர்னி : தற்போதைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பிஸ்‌கெட்டு பார்க்கெட்டகளின் எடையை குறைப்பது மட்டும் தான் ஒரே வழி என்று தெரிவித்துள்ளார். மேலும் விலையை உயர்த்துவது என்ற முடிவில் பரவலாக எல்லா பிஸ்கெட் நிறுவனங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற கொள்கையுடன் தான் இருக்கிறது என்றார். பிஸ்கெட் நிறுவனங்கள் மத்தியில் நிலவும் போட்டா போட்டியில், வி‌லையை குறைப்பது என்பது மார்க்கெட்டை பாதிக்கும் என்பதால் தான் இந்த தயக்கம் என்றும் விளக்கியுள்ளார். இதனால் ஒன்று பிஸ்கெட் விலை 10 சதவீதம் உயர்த்தப்படலாம் இல்லையால் பேக்கேஜில் 10 கிராம் எடை குறைக்கப்படலாம் என பேசப்படுகிறது.
நன்றி : தினமலர்


Monday, June 29, 2009

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உடனடியாக இல்லை : முரளி தியோரா

எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உடனடியாக உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை எவ்வாரெல்லாம் மாறுகிறது என்பதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதன் அடிப்படையில்தான் இந்தியாவில் விற்கப்படும் சில்லரை விலை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாறுதல் செய்யப்படும் என்றார் அவர். அவர் மேலும் தெரிவித்தபோது, நாம் வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயிலின் விலை வெள்ளிக்கிழமை அன்று பேரலுக்கு 68.54 டாலராக இருந்தது. அது உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் அந்த விலை மேலும் உயருகிறதா என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எப்படி இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்தும் முன், மத்திய அமைச்சரவை கூடி விவாதித்துதான் முடிவு செய்யும் என்றார். இப்போது இந்திய எண்ணெய் கம்பெனிகள், ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்கும் போதும் ரூ.2.96 நஷ்டம் அடைகின்றன. பெட்ரோலி விற்கும் போது ரூ.6.08 நஷ்டம் அடைகின்றன.
நன்றி : தினமலர்


Wednesday, March 25, 2009

போர்டு ' ஐகான் ' விலை ஏப்ரலில் இருந்து உயருகிறது

போர்டு ஐகானின் விலை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உயருகிறது. ஏப்ரலில் இருந்து அதன் விலை 1.5 சதவீதம் வரை உயருகிறது என்று போர்டு இந்தியாவின் எக்ஸிகூடிவ் டைரக்டர் ( மார்க்கெட்டிங், சேல்ஸ், அண்ட் சர்வீஸ் ) நிகல் வார்க் தெரிவித்தார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால் நாங்கள் இந்த விலை உயர்வை செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கடந்த மூன்று மாதங்களாகவே ரூபாயின் மதிப்பு குறைந்து, நேற்று அதன் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.50.70 ஆக குறைந்திருந்தது என்றார். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால், காருக்கான பாகங்களை இறக்குமதி செய்யும்போது அதிகம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் நாங்கள் காரின் விலையை உயர்த்தவேண்டியிருக்கிறது என்றார் அவர். கடந்த நவம்பரில் தான் போர்டு நிறுவனம், ஐகான் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் காரை வெளியிட்டது. அதன் பெட்ரோல் காரின் விலை ரூ.4.59 லட்சமாகவும் ( எக்ஸ் - ஷோரூம் டில்லி ) டீசல் காரின் விலை ரூ.5.19 லட்சமாகவும் இருக்கிறது. இருந்தாலும் இப்போது விலை உயர்த்தியிருப்பது அதன் ஆரம்ப கட்ட மாடல் ஐகானுக்கு தான். மற்ற மாடல்களின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டுதான் இருக்கிறது. இப்போது பெட்ரோல் மாடல் கார்களுக்கு கிராக்கி அதிகரித்து வருவதால், நாங்களும் பெட்ரோல் மாடல் ' ஐகான் ' மற்றும் ' பியஸ்டா ' கார்களை அதிக அளவில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார் வார்க்.
நன்றி : தினமலர்


Thursday, March 12, 2009

ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்வு

உணவு தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்த்தப் பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதனால், ஓட்டல் உரிமையாளர்கள் பலர், சாப்பாடு வகைகளில் ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விலை ஏற்றத் தை சப்தம் இன்றி அரங்கேற்றி உள்ளனர்.
சேலம், திருச்சி, திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ரூ.25க்கு விற்கப்படும் அளவு சாப்பாடு ரூ.26க்கும், ரூ.30க்கு விற்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு ரூ.31க்கு விற்கப்படுகிறது.
சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய தொழில் நகரங்களில் தற்போது ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட அளவு சாப்பாடு ரூ.31க்கும், ரூ.40க்கு விற்பனை செய்யப்படும் ஸ்பெஷல் சாப்பாடு ரூ.42க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஓட்டல்களில் சாப்பாடு விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, டிபன் வகைகளிலும் விலை உயர்வு செய்யப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.
இது குறித்து ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''அரிசி, பருப்பு வகைகள் மட்டுமின்றி மளிகை சாமான் விலையிலும் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. விலை உயர்வில் இருந்து தப்பிக்கவும், எங்கள் தொழிலை காப்பாற்றும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற் பட்டுள்ளது. முதல் கட்டமாக சாப்பாடு விலையை உயர்த்தி உள்ளோம்.
''வரும் 1ம் தேதிக்குள் மூலப்பொருட்களின் விலையில் சரிவு ஏற்படாத பட்சத்தில் டிபன் வகைகளின் விலையை இரண்டு ரூபாய் முதல் ஏழு ரூபாய் வரை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றார்.
நன்றி : தினமலர்