Saturday, August 29, 2009

ஏர் - இந்தியா ஊழியர்களுக்கு ஊக்க தொகை குறைக்கப்பட்ட விவகாரம் : குழு அமைப்பு

இப்போது கொடுத்து வரும், உற்பத்திக்கு தகுந்த ஊக்க தொகை மற்றும் பறக்கும் நேரத்திற்கு தகுந்தஊக்க தொகை ஆகியவற்றில் 50 சதவீதத்தை குறைக்க ஏர் - இந்தியா நிர்வாகம் எடுத்திருக்கும் முடிவை, பெரும்பாலான யூனியன்கள் எதிர்க்கின்றன. இதனையடுத்து, அந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர நான்கு கமிட்டிகளை நியமிக்க ஏர் இந்தியாவின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் அர்விந்த் யாதவ் முடிவு செய்திருக்கிறார். அந்த கமிட்டிகள், அதன் அறிக்கைகளை வரும் செப்டம்பருக்குள் அளிக்கும் என்றும், அது வரை ஊக்க தொகை பாதியாக குறைக்கப்பட்டிருக்கும் என்று ஏர் - இந்தியா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. தற்போது ஏர் - இந்தியா ஊழியர்களுக்கு மாதா மாதம் கொடுத்து வரும் சுமார் 3,100 கோடி ரூபாய் சம்பளத்தில், பாதி, ஊக்க தொகையாகவே இருந்து வருகிறது. எனவே இதனை பாதியாக குறைக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஏர் - இந்தியாவின் இந்த முடிவை பெரும்பாலான யூனியன்கள் எதிர்க்கின்றன. அது குறித்து போராட்டம் செய்யவும் அவைகள் திட்டமிடுகின்றன.
நன்றி : தினமலர்


வெள்ளையடித்து வெப்பத்தைக் குறைப்போம்

கடந்த ஜூன் ஆறாம் நாளை உலகச் சுற்றுச்சூழல் தினமாக உலகெங்கும் கொண்டாடி முடித்துவிட்டார்கள். வழக்கம்போல பிளாஸ்டிக் குப்பைகளைத் தடை செய்ய வேண்டும், மின்சார நுகர்வைக் குறைக்க வேண்டும், பழைய காகிதங்களையும் துணிகளையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும், கரிமக் குப்பைகளை உரமாக்க வேண்டும், குளியல் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் நீரைத் தோட்டங்களில் பாய்ச்சி, கறிகாய்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் தாராளமாக அள்ளி வீசப்பட்டுள்ளன.

நோக்கியா நிறுவனம் பழைய செல்பேசிகளையும் இதர மின்னணுச் சாதனங்களையும் சேகரித்துச் சமையல் பாத்திரங்களாகவும் பூங்கா பெஞ்சுகளாகவும் மறுசுழற்சி செய்து வழங்கப் போவதாகச் சொல்கிறது. அத்துடன் தன்னிடம் தரப்படும் ஒவ்வொரு செல்பேசிக்கும் ஒரு மரக்கன்றை நடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. நல்ல நோக்கம். நல்ல முயற்சி.

மனிதக் காரியங்களால் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பது கட்டாயம் என்று விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் எச்சரிக்கிறார். தமிழகத்தின் நீண்ட கடற்கரையே ஒரு சாபமாக மாறிவிடலாம் என அவர் கூறுகிறார்.

வளிமண்டல வெப்பநிலை ஒரு செல்சியஸ் டிகிரி உயர்ந்தாலும் ஹெக்டேருக்கு முக்கால் டன் என்ற அளவில் நெல் உற்பத்தி குறையும். கடல் மட்டம் உயர்ந்து கடற்கரையோர வயல்கள் மூழ்கினால் நெல் உற்பத்தி வெகுவாகக் குறையும்.

இமயமலைப் பனியாறுகள் உருகி நேபாளத்தில் வெப்ப அபாயத்தை உண்டாக்கி வருகின்றன.

அடுத்த 50 ஆண்டுகளில் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளது.

அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து செல்லத் திட்டமிடுகிறார்கள்.

சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நவீன உலகின் விவசாயப் பண்ணைகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் எனப் பலவகையான காரணிகள் உள்ளன.

இதெல்லாம் சரிதான். அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.

அமெரிக்க அரசின் ஆற்றல்துறை அமைச்சர் ஸ்டீவன் சூ வீடுகளின் கூரைகள், மொட்டை மாடிகள், சாலைகள், வாகனங்களின் மேற்பரப்புகள் என வெயில்படுகிற எல்லாப் பரப்புகளிலும் வெள்ளையடித்துவிட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அவர் சொன்னால் அர்த்தமிருக்கும்.

வெள்ளை நிறப்பரப்புகள் தம் மீது விழும் வெப்பத்தில் எண்பது விழுக்காடு வரை பிரதிபலித்து வானுக்குத் திருப்பி அனுப்பிவிடும்.

மொட்டை மாடியில் வெள்ளையடிப்பதால் வீட்டுக்குள் இறங்கும் வெப்பம் குறைந்து மின் விசிறிகள், குளிர் சாதனங்கள் போன்றவற்றின் தேவை குறையும். கார்களின் மேற்பரப்பு வெள்ளையாக இருந்தால், உள்ளே சூடு குறைந்து ஏசி போடாமல் சமாளிக்க முடியும்.

இவ்விதமாக வெள்ளையடிப்பது, உலகிலுள்ள அத்தனை கார்களும் பதினோரு ஆண்டுகளுக்கு ஓடாமலிருந்தால் ஏற்படக்கூடிய வெப்ப உமிழ்வு குறைவின் நல்விளைவை ஏற்படுத்தும் என்று கலிபோர்னியாவிலுள்ள தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த ஆர்ட் ரோசன்பெல்ட், ஹஷிம் அக்பரி, சுரபி மேனன் ஆகிய விஞ்ஞானிகளின் ஆய்வுகள் காட்டுகின்றன.

நூறு சதுர அடி பரப்புள்ள வெள்ளைக் கூரை, ஒரு டன் கரியமில வாயுவால் ஏற்படக்கூடிய பசுங்குடில் விளைவை ஈடு செய்யும் என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதன்மூலம் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்குப் பத்து லட்சம் டாலர் வரை மின்சாரச் செலவைக் குறைக்க முடியும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

கலிபோர்னியா மாநில அரசு அங்குள்ள வர்த்தக நிறுவனங்களில் வெயில்படும் பரப்புகள் யாவும் வெள்ளை நிறம் பூசப்பட வேண்டுமென சட்டமியற்றியுள்ளது.

விரைவில் அந்தச் சட்டம் தனியார் வீடுகள் மற்றும் பண்ணைகளுக்கும் நீட்டிக்கப்படவுள்ளது.

இங்கிலாந்திலும் அதே போன்றதொரு சட்டம் வரப்போகிறது. நாமும் அதை மேற்கொள்ளலாம்.

அமெரிக்கா, ரஷியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் நாடாக இந்தியா உள்ளது.

அவற்றில் 68 சதவிகிதம் நிலக்கரியை எரிப்பதால் உருவாகின்றன.

மரம் நடுவது, மழை நீர் சேமிப்பு, மின்சார உபயோகத்தைக் குறைப்பது, நடை அல்லது சைக்கிள் மூலம் பயணிப்பது போன்றவற்றுடன் நம் வீட்டு மொட்டை மாடிகளில் வெள்ளைச் சாயம் பூசுவதன் மூலம் நம்மாலான அளவில் வளிமண்டலம் சூடாவதைக் குறைக்கும் பங்களிப்பைச் செய்யலாம்.

கட்டுரையாளர் : கே.என். ராமசந்திரன்
நன்றி : தினமணி

வீதியில் விளையாடும் விதி!

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை ஒன்று திடுக்கிடும் புள்ளிவிவரத்தைத் தருகிறது. 2006 - 2007-ம் ஆண்டுகளில் 178 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையின்படி, சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் மரணமடைவதாகத் தெரிகிறது. படுகாயமடைவோரின் எண்ணிக்கை இரண்டரை கோடிக்கும் அதிகம் என்கிறது அந்த ஆய்வு.

அந்த ஆய்வில் அதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், உலகிலேயே மிக அதிகமானோர் சாலை விபத்துகளில் பலியாவது இந்தியாவில்தான் என்பதுதான். 2007-ல் மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,14,590. அதாவது, ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 13 பேர் இந்தியாவில் சாலையில் நடக்கும் விபத்துகளில் மரணமடைகிறார்கள். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட 6.9 சதவிகிதம் அதிகம்.

இந்தியாவைவிட அதிகம் மக்கள்தொகையும், மோட்டார் வாகனங்களும் உள்ள நாடு சீனா. ஆனால், அங்கே 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி சாலை விபத்தில் மரணமடைந்தவர்கள் 89,455 பேர்தான். அதுமட்டுமல்ல, இந்தியாவில் சாலை மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் அதேவேளையில் சீனாவில் இந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகிறார்கள் என்பதுதான் நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

சாலை விபத்துகளில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டிருப்பதைவிட மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. பல விபத்துகள் முறையாக வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மரணமடைவது இந்தப் புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவும் இல்லை.

இந்தியாவைவிட அதிக அளவில் வாகனங்கள் இருந்தாலும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் சாலை விபத்துகள் கணிசமாகக் குறைந்து இருப்பதற்கு முக்கியக் காரணம், அங்கே சாலை விதிகள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதும், விபத்துகள் நேராமல் இருப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து திருத்தங்களை அவ்வப்போது கொண்டு வந்தபடி இருப்பதும்தான். சுவீடன், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகக் குறைவாகவே சாலை விபத்துகள் நடைபெறுவதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் மிக அதிகமாகப் பலியாவது லாரி ஓட்டுநர்களும், உதவியாளர்களும்தான். சாலை மரணங்களில் 22 சதவிகிதம் பலியாவது இவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிறது அறிக்கை. அதற்கு முக்கியக் காரணம், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும், முறையான உரிமம் இல்லாமல் உதவியாளர்கள் லாரியை இயக்குவதும், சரியான வாகனப் பரிசோதனை இல்லாமல் இருப்பதும்தான் என்பதையும் அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

19 சதவிகிதம் இரண்டு சக்கர வாகனங்களும், 11 சதவிகிதம் பஸ்களும், 9 சதவிகிதம் பாதசாரிகளும் சாலை விபத்துகளில் பலியாவதாகத் தெரிகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமாக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்கள் என்கிற பெருமையை ஆந்திரப் பிரதேசமும் மகாராஷ்டிரமும் தட்டிச் செல்கின்றன. அடுத்தபடியாக 12.5 சதவிகிதம் சாலை மரணங்களுடன் உத்தரப் பிரதேசமும், 12 சதவிகிதம் சாலை மரணங்களுடன் தமிழ்நாடும் சாலை விபத்துகளில் சாதனையாளர்களாகத் தலைகுனிகின்றன.

நகர்ப்புற சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் என்று பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன. மேலும் ஆட்டோக்களும், இரு சக்கர வாகனங்களும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று குற்றம்சாட்டப்படுகின்றன. ஆனால், நாம் கவனிக்காமல் விட்டுவிடும் விஷயம் என்னவென்றால், சாலை விதிகளை மதிக்காமல் நினைத்த இடத்தில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளும்கூட சாலை விபத்துகளுக்குக் காரணமானவர்கள் என்பதை.

வளர்ச்சி பெற்ற நாடுகளில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள்கள் செல்ல அகலமான நடைமேடைகள் நகர்ப்புறங்களில் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. பிளாட்பாரங்கள் கடைத்தெருவாகி விடும் நிலையில் பாதசாரிகள் சாலையைப் பயன்படுத்தியாக வேண்டிய நிர்பந்தம் இங்கே ஏற்பட்டு விடுகிறது. மேலும், ஆங்காங்கே இடைவெளிவிட்டு பாதசாரிகள் சாலையைக் கடக்கப் போதிய வசதிகள் செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பாதசாரிகளின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு சாலைகளும், சாலை விதிகளும் வளர்ச்சி பெற்ற நாடுகளில் அமைக்கப்படுவதால்தான் அங்கே விபத்து விகிதம் குறைகிறது என்று தோன்றுகிறது.

சாலைகளைக் கட்டணச் சாலைகளாக்குவதில் அரசு காட்டும் முனைப்பும் அக்கறையும் விபத்துகளைத் தவிர்ப்பதில் காட்டத் தவறுகிறதே, அங்கேதான் பிரச்னையே எழுகிறது. உரிமம் வழங்குவதிலும், வாகனப் பரிசோதனையிலும் லஞ்சம் வாங்க அனுமதித்துவிட்டு, கணக்கு வழக்கில்லாமல் வாகனங்களைச் சாலையில் ஓட விட்டுவிட்டு, பிரமாதமாக சாலைகளை அமைத்துக் கட்டணம் வசூலித்து என்ன பயன்?

நன்றி : தினமணி

ரூ.10,000 கோடிக்கு ஆர்டரை எதிர்பார்க்கும் எல் அண்ட் டி

இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பவர், இன்ஃப்ராஸ்டிரக்சர் மற்றும் ஹைட்ரோகார்பன் துறைகளில் ரூ.10,000 கோடிக்கு ஆர்டரை எதிர்பார்க்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் தான் எல் அண்ட் டி நிறுவனம் ரூ.11,000 கோடிக்கு ஆர்டரை பெற்றிருக்கிறது. செப்டம்பர் மாதத்திற்குள் மொத்தம் ரூ.90,000 கோடிக்கு ஆர்டர்கள் பெறப்படும் என்றும் எல் அண்ட் டி யின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் ஏ.எம்.நாயக் தெரிவித்தார். மத்தியில் நிலையான ஆட்சி நடந்து வருவதால், இன்ஃப்ராஸ்டிரக்சர் துறை மீது அதீக அக்கறை காண்பிக்கப்படுவதாலும் அந்த துறையில் முதலீட்டு செலவு அதிகரித்து வருகிறது என்றும் எனவே அந்த துறை வளர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். எனவே 2008 - 09 நிதி ஆண்டில் இதுவரை, எங்களுக்கு வந்துள்ள ஆர்டர் 23 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றும் அதில் 15 சதவீத ஆர்டர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கிறது என்றும் நாயக் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


மொபட் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு

இரு சக்கர வாகனங்களில் ,மொபட் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் மொபட் விற்பனை ஒரு லட்சத்து 28 ஆயிரம் மொபட் வாகனங்கள் விற்பனை ஆயின. கடந்தாண்டு இதே காலாண்டில், விற்பனை ஆனது ஒரு லட்சத்து ஆறாயிரம்; 20 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மோட்டார் பைக் விற்பனையும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து, டி.வி.எஸ்., விற்பனை பிரிவு தலைவர் எச்.எஸ்.கோயின்டி கூறுகையில், கிராமங்கள் மறறும் சிறு நகரங்களில் தான் அதிக அளவில் மொபட் வாங்குகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளில் இவற்றின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எங்கள் மொபட் வாங்குபவர்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மொபட்கள் அதிக சரக்குகள் ஏற்றிச்செல்லவும், கிராம பகுதி செயல்பாட்டுக்கும் அதிகம் பயன்படுத்தபடுகின்றன. சிலர் இந்த மொபட் மலிவு விலையில் கிடைப்பதாலும், இயக்குவதற்கு சுலபமாக இருப்பதாலும் இரண்டாவது பைக்காக வாங்கி பயன்படுத்துகின்றனர்' என்றார்.
மொபட் உற்பத்தியில் டி.வி.எஸ்., கைனடிக் ஆகிய இரு பெரிய கம்பெனிகள் மட்டுமே உள்ளன. அதில் கைனடிக்கின் லுனா மொபட் உற்பத்தியை நிறுத்தி விட்டது. டி.வி.எஸ்.,ன் எக்செல் சூப்பர் மட்டுமே தற்போது நிலையான மொபட்டாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, ஆண்டு வளர்ச்சியில் மொபட் விற்பனை 7 முதல் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
நன்றி : தினமலர்