Friday, July 31, 2009

இருவேறு காஷ்மீர்களின் கதை

சீனாவிற்கும் ஒரு காஷ்மீர் பிரச்னை உண்டு என்பதும், இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையைப் போலவே இஸ்லாமியப் பிரிவினைவாதிகளால் பிரச்னைகள் உண்டு என்பதும் நம்மில் பலருக்குத் தெரியாத விஷயம். ஏன் வெளியுலகம் அதிகமாக அறியாத விஷயம் என்றுகூடச் சொல்லலாம்.

""சிங்கியாங்'' என்கிற சீனப் பிரதேசம்தான் சீனாவின் காஷ்மீர் ஆகும். சிங்கியாங் இந்தியாவின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. 18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுள்ள அப்பகுதி சீனாவில் ஆறில் ஒரு பங்கு. இந்தியாவில் பாதி நிலப்பரப்புக்கு சமமான பகுதி.

இந்தியாவில் காஷ்மீர் 2,65,000 ச.கி.மீ. பரப்பாகும். அதிலும் 86,000 ச.கி.மீ. பாகிஸ்தான் வசம் உள்ளது. 37,500 ச.கி.மீ. சீனாவின் வசமும் மீதமுள்ள 1,41,000 ச.கி.மீ. மட்டுமே இந்தியாவின் வசம் உள்ளது. இன்று சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் இந்தியாவின் காஷ்மீர் (சுமார் 1,45,000 ச.கி.மீ.) சிங்கியாங்கில் நூறில் ஒரு பங்குதான். எனவே, சீனாவின் காஷ்மீர் இந்தியாவின் காஷ்மீரைப்போல நூறு மடங்கு பெரிது என்பதால் அதனால் வரும் பிரச்னையும் பெரிது. ஆனாலும்கூட பலருக்கும் இதுகுறித்து அதிகம் தெரிவதில்லை என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

அதற்கான காரணம் என்னவென்றால், இந்தியாவின் காஷ்மீர் சர்வதேசப் பிரச்னையாக்கப்பட்டதுபோல் சீனா சிங்கியாங் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்கவில்லை. 1949-ல் துருக்கிய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கியாங்கின்மீது படையெடுத்து சீனா தன் எல்லைகளை மீட்டுக் கொண்டது. ""சிங்கியாங்'' என்பதற்கே கூட, ""பழைய எல்லைகள் திரும்புகின்றன'' என்றுதான் பொருள். அதற்கு மாறாக, 1948-ல் இந்தியா, பாகிஸ்தான் வசமிருந்த பெரும்பான்மையான காஷ்மீர் பகுதியை வென்றது, ஆனால் தானாகவே முன்வந்து காஷ்மீரை சர்வதேசப் பிரச்னையாக்கியது. அதனால், அது பிரச்னையாகவே இன்றுவரை தொடர்கிறது.
ஐ.நா.வுக்குச் சென்று சர்வதேசப் பிரச்னையாக மாற்றியது இந்தியாதான். பாகிஸ்தான் அல்ல. அதனால், இது இருதரப்புப் பிரச்னைதான் என்பதைச் சொல்லவே இப்போது இந்தியா திணறிக் கொண்டிருக்கிறது. சீனா எவ்வாறு தனது காஷ்மீரை (சிங்கியாங் என்று படிக்கவும்) தன்னுடன் ஒருங்கிணைத்தது என்பதை கூர்ந்து கவனித்தால், நாம் எந்த அளவுக்கு ராஜதந்திர ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்பது புரியும்.

சிங்கியாங் பிரதேசம் 2 கோடி மக்கள்தொகை கொண்டது. அதில் 45 சதவீதம் ""உய்கர்'' முஸ்லிம்கள், 12 சதவீதம் மற்ற முஸ்லிம்கள். 41 சதவீதம் ""ஹன்'' எனும் சீன மக்கள். 1949-ல் ஹன் மக்கள்தொகை வெறும் 6 சதவீதம்தான். அறுபது ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது எப்படி நடந்தது?

சீனா தனது ராணுவத்தை மாத்திரமே சிங்கியாங்கை நிர்வகிப்பதற்கு நம்பவில்லை. மாறாக, சீனா தனது மக்களை நம்பியது. ஹன் சீன மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியில் அதிகரிக்கும்படி சீனா பார்த்துக் கொண்டது. இப்போதைய 41 சதவீதம் மக்கள்தொகையானது அங்குள்ள ராணுவ வீரர்களோ, அவர்களது குடும்பத்தினரையோ, இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் தொழிலாளர்களையோ உள்ளடக்கியது அல்ல.

சிங்கியாங் ஒருகாலத்தில் விவசாயத்தில் பெயர்போன பகுதியாக விளங்கியது. ஆனால் இப்போது அதன் நிலைமை என்ன? அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2004-ல் 28 பில்லியன் டாலராக இருந்து 2008-ல் 60 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அதனுடைய சராசரி தனிநபர் உற்பத்தி 2864 டாலர்கள்.

சிங்கியாங் நிறைய தாதுக்களும் எண்ணெய் வளமும் நிறைந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அப்பகுதியில் பூதாகரமாக வளர்ந்து வருகிறது. ஷாங்காய் நகருடன் இப்பகுதி எண்ணெய்க் குழாய் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இயற்கை வளங்களாலும் மக்கள்தொகையாலும் பெரிய நிலப்பரப்பினாலும் சிங்கியாங் சீனாவுக்கு நிறைய அனுகூலங்களைச் செய்து வருகிறது.

இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் காஷ்மீருக்கு இந்தியா கொடுத்து வரும் விலை அபரிமிதமானது. காஷ்மீருக்கான இந்திய அரசின் மானியங்களைக் கணக்கிட்டால் ஒவ்வொரு காஷ்மீரிக்குமான சராசரி மத்திய மானியம் ரூ. 8,092 ஆகும். மற்ற இந்திய மாநிலங்களில் இந்தச் சராசரி வெறும் ரூ. 1,137 மட்டும்தான். ஐந்து பேர் கொண்ட ஒரு காஷ்மீர் குடும்பத்துக்கு நேரடியாக அரசாங்கம் மானியத் தொகையை மணியார்டர்கள் மூலம் அனுப்பினால் ஒவ்வொரு குடும்பமும் ரூ. 40,460-ஐ ஆண்டுதோறும் பெற்றுக் கொள்ளும்.

இன்னும்கூட ""உய்கர்'' முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் சீன அரசின் மீது மகிழ்ச்சியுடன் இல்லை. ஜெர்மனியைச் சார்ந்த ரெபியா காதிர் என்ற பெண் தொழிலதிபர் ""உலக உய்கர் காங்கிரஸ்'' என்ற அமைப்பை தலைமை தாங்கி நடத்தி உய்கர்களின் விடுதலைக்காகப் போராடி வருகிறார்.

சிங்கியாங் பகுதியில் வன்முறையும் பயங்கரவாதமும் இருந்தாலும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு சீனாவுக்கு நட்பாக இருப்பதால் காஷ்மீரில் நடக்கும் அளவுக்கு வன்முறையின் அளவு இல்லை. எனவே உய்கர்கள் பாகிஸ்தானிடம் இருந்து எந்த ஆதரவையும் பெற முடியவில்லை.

ஆனாலும், பயங்கரவாதமும் வளர்ந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளுக்கு மூன்று நாள்கள் முன்பாகக்கூட சிங்கியாங்கில் பயங்கரவாதத் தாக்குதலில் 16 போலீஸôர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 11-ம் தேதி ஒலிம்பிக்ஸ் நடந்து கொண்டிருக்கும்போதுகூட பெய்ஜிங்கில் ஒரு தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஜூலை 6-ம் தேதி உய்கர் முஸ்லிம்களுக்கும் ""ஹன்'' சீன மக்களுக்குமிடையே பெரிய கலவரம் நடந்தது. சிங்கியாங்கின் தலைநகர் உரும்கியில் நடைபெற்ற கலவரத்தில் 184 பேர் கொல்லப்பட்டனர். 1000 பேர் காயமுற்றனர். இத்தனைக்கும் உரும்கியின் நான்கில் மூன்று பங்கு ஹன் சீன மக்கள்தான். இக்கலவரத்திற்கு சீனா என்ன நடவடிக்கை எடுத்தது என்பதைப் பார்ப்போம்.

சீன அதிபர் ஹூஜிண்டாவோ ஜி-8 மாநாட்டுக்குச் சென்றவர் உடனடியாகப் பறந்து வந்தார். அவருடைய அரசு பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இந்த மூன்று சக்திகளையும் எதிர்த்து யுத்தம் தொடுப்பதாகப் பிரகடனம் செய்தது.

சீன அரசு வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் தொழுகையைத் தடைசெய்து முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்துமாறு அறிவித்தது. வேறு எந்த ஒரு நாடும் இப்படிச் செய்யத் துணியாது. அல் - காய்தாவே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் என்று சீனா சொல்லியது.

ஆம். சீனாவுக்கு இஸ்லாமியப் பிரிவினைவாதிகளுடனும் பயங்கரவாதிகளுடனும் பிரச்னை உள்ளது. ஆனால் சீனா இதைத் தனது உள்நாட்டுப் பிரச்னையாகவே கருதுகிறது. ஆனால் இந்தியாவோ அதன் சொந்தப் பிரச்னையான காஷ்மீரை சர்வதேசப் பிரச்னையாக்கிவிட்டது.

சீனா முஸ்லிம்கள் அல்லாத ஹன் சீன மக்களை 41 சதவீதம் அளவுக்கு வர வைத்து மக்கள்தொகையின் மதத் தொகுப்பை மாற்றியமைத்தது. இந்தியாவோ, சீனா போல காஷ்மீரின் மக்கள் தொகுப்பை மாற்ற முயற்சிக்கவில்லை என்பது மட்டுமல்ல, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்டதைக் கூடத் தடுக்க முயற்சிக்கவில்லை.

சிங்கியாங்கில் பாதிக்கு மேல் ஹன் சீன மக்களால் நிரப்பப்பட்டபோது இங்கே காஷ்மீரிலோ ஹிந்துக்களே இல்லாத நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக, இந்திய மக்களை நம்பி காஷ்மீரைக் காக்க முடியாமல் ராணுவத்தை நம்ப வேண்டியிருக்கிறது.

இந்தியா மட்டும் சீனா சிங்கியாங்கில் கையாண்ட அதே நடைமுறையைப் பின்பற்றி இருந்தால், காஷ்மீரை 370-வது ஷரத்தின் ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து காஷ்மீரில் குடியேறுபவர்களைத் தடுக்காமல் இருந்திருந்தால், காஷ்மீர் இன்று இந்தியாவுடன் இரண்டற இணைந்துவிட்டிருக்கும். எப்போதாவது நாம் சில உள்நாட்டுக் கலவரங்களைக் கையாள வேண்டியிருக்கும். ஆனால் இப்போதுபோல பாகிஸ்தானுடனும் அதன் பயங்கரவாதத்துடனும் ஒவ்வொரு நாளும் யுத்தம் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இந்தியாவுக்கான பாடம் இதுதான் - மக்கள் தொகுப்பு. மக்கள்தொகையின் மதத்தொகுப்புச் சமன்நிலைதான் ஒரு நாட்டுக்கு குறிப்பாக அதன் எல்லைகளுக்கு உத்தரவாதமாகும். சீனா மெதுவாக சிங்கியாங்கை (அதன் காஷ்மீரை) தன் ஹன் சீன மக்கள் மூலமாக தேசிய நீரோட்டத்தில் இணைத்தது.

ஆனால் இந்தியா தனது அரசியல் சட்ட ஒப்பந்தத்தால் காஷ்மீர் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலக வழிவகுத்தது. அதுமாத்திரமல்ல, காஷ்மீரில் ஹிந்துக்கள் மொத்தமாகத் துடைக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலையை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இதுதான் வேறுபாடு!

இன்னும் ஒரு வார்த்தை~

19-ம் நூற்றாண்டில் பிரெஞ்ச் தத்துவமேதை ""ஆகஸ்ட் சாம்டே'', "மக்கள் தொகுப்பே (மனித குல) விதி'' என்று கூறுகிறார். அவரை மேற்கோள் காட்டி ""எக்கனாமிஸ்ட்'' பத்திரிகை (ஆகஸ்ட் 24 - 31, 2002) மக்கள் தொகுப்புக்கு நாடுகள் மீதும் அவற்றின் பொருளாதாரம் மீதும் இருக்கிற தாக்கத்தை வலியுறுத்தி எழுதி இருந்தது. சீனா, மக்கள்தொகுப்பின் மகிமையைப் புரிந்துகொண்டது. இந்தியா, அதைப் புரிந்துகொள்ளவில்லை. இதுதான் இரு காஷ்மீர்களின் இருவேறுபட்ட கதை!

கட்டுரையாளர் : எஸ். குருமூர்த்தி
நன்றி : தினமணி

இன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸூக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை ( சி ஐ எஸ் எஃப் ) பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஒரு உதவி கமாண்டர் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 12 சப் இன்ஸ்பெக்டர்கள், 18 தலைமை காவலர்கள் மற்றும் 69 காவலர்கள் அடங்கிய 101 பேரை கொண்ட குழு இன்று முதல் இன்போசிஸ் நிறுவனத்தை 24 மணி நேரமும் பாதுகாக்கும். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்திய கார்பரேட் உலகில் இதுவரை இல்லாத வகையில், ஒரு தனியார் நிறுவனத்திற்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு போடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. சி ஐ எஸ் எஃப். பின் பாதுகாப்பிற்காக, இன்போசிஸ் நிறுவனம் வருடத்திற்கு ரூ.2.56 கோடியை கட்டணமாக கொடுக்க வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த சட்டப்படி, பணம் கொடுக்க தயாராக இருந்தால் தனியார் நிறுவனங்களும் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பிற்காக வைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. அதன்படி, தனியார் நிறுவனமான இன்போசிஸ்தான் முதன் முதலில் இந்த பாதுகாப்பை பெறுகிறது. ஆனால் அங்கிருக்கும் பாதுகாப்பு படையினர், அங்கு ' வாட்ச் அண்ட் வார்டு ' வேலையை பார்க்க மாட்டார்கள் என்றும், அதை ஏற்கனவே அங்கிருக்கும் தனியார் பாதுகாப்பு படையினரே பார்த்துக் கொள்வார்கள் என்றும், தீவிரவாத தாக்குதல் மற்றும் சதி வேலை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பது தான் எங்கள் வேலை என்று சி ஐ எஸ் எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரிலையன்ஸின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், விப்ரோ, தாஜ் ஹோட்டல் ( மும்பை ), டிரைடன்ட் ஹோட்டல்ஸ் ( எட்டு இடங்களில் இருப்பவை ), ஹோட்டல் மேரியோட் ( மும்பை ), டில்லி பப்ளிக் ஸ்கூல் ( டில்லியில் மூன்று இடங்களில் இருப்பது ), ஜேபி குரூப் ஆப் ஹோட்டல்ஸ் ( எட்டு ஹோட்டல்கள் ), டோரன்ட் பவர்ஸ் ( அகமதாபாத் ) ஆகியவையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பிற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.

நன்றி : தினமலர்


துணைபோவதும் குற்றமே!

நேர்மையாளர், அப்பழுக்கற்றவர், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று எதிர்க்கட்சியினரேகூட ஏற்றுக்கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், ""கோடிகள்'' என்பது சர்வ சகஜமாக ஊழல்களிலும், முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளிலும் இடம்பெறுவது வருத்தமாக இருக்கிறது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய தகவல் தொடர்புத்துறை கையாளும் வழிமுறைகளால் மத்திய அரசுக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் குறைந்துவிட்டது, ""முதலில் மனுச் செய்தவருக்கே முதலில் அனுமதி'' என்ற கொள்கையால் அரசுக்கு லாபம் ஏதும் இல்லை என்று இடைவிடாமல் கூறிவரும் நிலையில் "2-ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் அதே முறையைக் கடைப்பிடித்துள்ளதாகவும், ஏற்கெனவே இப்படித்தான் நடந்திருக்கிறது என்றும் அத்துறைக்கான அமைச்சர் மீண்டும் கூறியிருக்கிறார்.

அடித்தளக் கட்டமைப்புத் துறையை மேம்படுத்தத் தேவைப்படும் திட்டங்களுக்காக அரசின் நவரத்தினங்களான அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளைக் கூட விற்றால் பரவாயில்லை என்ற அளவுக்கு நிதியைத் தேடும் ஓர் அரசு, இன்னமும், ""முதலில் வருபவருக்கு முதலில் அனுமதி'' என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மர்மம்தான் அம்பலமாகவில்லை.

இதில் ஊழல் நடைபெறுகிறது, கோடிக்கணக்கான பணம் கைமாறுகிறது என்பதெல்லாம் ஊகிக்க முடியாத விஷயங்கள் அல்ல. ஆனால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத வகையில் நன்கு திட்டமிட்டு, (நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா பாஷையில் சொல்வதானால்) விஞ்ஞான முறைப்படி நடைபெறுகிறது என்பதல்லவா உண்மை.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தீருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு அவருடைய பிள்ளைகள் முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சொத்துகளைப் பிரித்துக் கொண்டதும், அதில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதும், அவர்களிடையே தொழில்ரீதியாகப் போட்டி ஏற்பட்டதும் அவர்களுடைய சொந்த விவகாரங்கள். ஆனால் நாட்டையே பாதிக்கும் ஒரு விஷயத்தை அந்தச் சகோதரர்களில் ஒருவர் சில நாள்களுக்கு முன்னால் தன்னுடைய நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட பொதுக்குழு கூட்டத்தில் கூறியிருக்கிறார். அது உண்மையா அல்லது வியாபாரப் போட்டிக்காகக் கூறப்பட்டதா என்று விசாரித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகக் கூட மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையும் சட்டத்துறையும் காட்டிக் கொள்ள மறுக்கிறதே, அது ஏன் என்று நமக்கே கேட்கத் தோன்றுகிறதே, பிரதமர் மன்மோகன் சிங்கால் எப்படி எதுவுமே தெரியாததுபோல இருக்க முடிகிறது?

தேசிய அனல் மின் நிலையத்துக்குக் கூடத் தராமல் கோதாவரி-கிருஷ்ணா வடிநிலத்தில் கிடைக்கும் இயற்கை எரிவாயு முழுவதையும் தன்னுடைய சகோதரர் விற்றுக் காசாக்கப் பார்க்கிறார் என்று அம்பானி சகோதரர்களில் ஒருவரான அனில் அம்பானி குற்றம்சாட்டியிருக்கிறார். விசாரணைகூட இல்லாமல் போனால் எப்படி?

அடுத்ததாக வந்திருக்கிறது பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியில் 2500 கோடி ரூபாய்க்கு நடந்திருப்பதாகக் கூறப்படும் புதிய ஊழல். இதை மக்களவையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வியாழக்கிழமை எழுப்பியிருக்கிறார்கள். இதில் உண்மையை வெளிக்கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவை நியமிக்க வேண்டும் என்றுகூட ஒருமித்த குரலில் கோரியிருக்கிறார்கள். ""இது அவசியம் இல்லை, வெறும் அரசு விசாரணையே போதும்'' என்று மத்திய அமைச்சர் கூறிவிட்டார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய முற்பட்ட நிறுவனங்கள் எவை என்று வெளிப்படையாகத் தெரியவில்லையாம்; அந்த நாடுகளில் இந்த அரிசியை வாங்கும் நிறுவனங்கள் எது என்றும் தெரியவில்லையாம். அதைவிட வேடிக்கை, சில நாடுகளுக்கு இந்த அரிசியே போகவில்லையாம். அப்படியானால் ஏற்றுமதியானதாகக் கணக்கு காட்டப்பட்டு அந்த அரிசி இங்கேயே பதுக்கப்பட்டு, விலை ஏறும்போது விற்பதற்குப் பயன்படுத்தப்பட உள்ளதா? முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நடுநிலையாளர்கள் கோரும்போதெல்லாம் அரசு அதை நிராகரிப்பது இது போல ஊழல்கள் நடந்தால்தான் தங்களுக்குத் தேர்தல் நிதி கிடைக்கும் என்பதாலா? 2,500 கோடி, 50,000 கோடி என்பதெல்லாம் வெறும் சைபர்கள்தானா, அந்த ரூபாய்க்கெல்லாம் மதிப்பே கிடையாதா? மக்கள் தொடர்ந்து ஏமாற வேண்டியதுதானா?

தவறுக்கு மேல் தவறு நடக்கிறது. அதைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் கண்டும் காணாமல் இருப்பதும், தவறுக்குத் துணை போவதற்குச் சமம்தானே! குற்றம் செய்பவர்களைவிடக் குற்றத்துக்குத் துணை போவதல்லவா அதைவிடத் தவறு? பொருளாதார மேதையாகவும், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் போதுமா? தவறைத் தட்டிக் கேட்கவும், தடுக்கவும் திராணி இல்லாதவர்களும் தலைமைப் பதவியில் இருப்பதுபோன்ற ஆபத்து வேறு எதுவும் இருக்க முடியாது. இனியாவது, பிரதமர் சற்று சுதாரித்துக் கொண்டு செயல்பட்டால் அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது!

நன்றி : தினமணி

ஹோண்டா - முத்தூட் ஒப்பந்தம்

ஹோண்டா நிறுவனம், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் தனது வாடிக்கையாளர்கள் நிதிச் சேவைக்காக, முத்தூட் பப்பச்சன் துணை நிறுவனமான முத்தூட் கேபிடல் சர்வீசசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜப்பானின் ஹோண்டா நிறுவனம், தனது இந்திய நிறுவனம் மூலம் பல்வேறு இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் முத்தூட் பப்பச்சன் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, கடன் நிதிச் சேவைகளை செய்து வருகிறது. பத்து லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது இந்நிறுவனம். முத்தூட் பப்பச்சன் நிறுவனத்தின் துணை நிறுவனமான முத்தூட் கேபிடல் சர்வீசசுடன், ஹோண்டா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஹோண்டா நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களை, முத்தூட் கேபிடல் சில்லரை மையங்கள் மூலம் விற்பனை செய்ய உள்ளது. இதே போல், ஹோண்டா நிறுவன விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்கள் கடன் தேவைகளுக்கு முத்தூட் கேபிடல் மூலம் நிதிச் சேவை அளிக்கப்படும். 'பிளெக்சி' என்ற புதிய திட்டத்தை முத்தூட் கேபிடல் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள், கடன் தொகையை
தவணைக் காலத்திற்குள், தங்கள் கையிருப்பு வசதிப்படி தினம்தோறும், வாரம்தோறும் அல்லது மாதம்தோறும் தங்கள் வசதிக்தேற்ப திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தை, முத்தூட் கேபிடல் சர்வீசஸ் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு அதிகாரி பால கிருஷ்ணன் வழி நடத்தவுள்ளார். தற்போது சந்தையில் நிலவும் கட்டணங்களுக்கு ஏற்ப இந்த சேவைகள் இருக்கும். இந்த ஒப்பந்தம் தற்போது தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் அமல்படுத்தப் பட்டுள்ளது; பின்னர் படிப்படியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
நன்றி : தினமலர்


பொதுமனிதனையும் பொறுப்பாக்குவோம்!

பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்தும் கடுமையான சட்டத்தைத் தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று ஒரு பொதுநலவழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே அறிமுகப்படுத்திய பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை, இருப்பு வைத்தல் தொடர்பான சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

20 மைக்ரான் திடம் குறைவான பிளாஸ்டிக் கைப் பைகள் தயாரிப்புக்கு இந்தச் சட்ட மசோதா தடை விதித்திருந்தது. இதற்குப் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இச்சட்டத்தால் தொழில் நசிவும், பல்லாயிரம் பேருக்கு வேலையிழப்பும் நேரிடும் என்று அவர்கள் கூறியதால், சட்ட மசோதாவைக் கிடப்பில் போட்டது தமிழக அரசு.

மகாராஷ்டிர மாநிலத்திலும் இதேபோன்றுதான் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் அரசை அச்சுறுத்தினர். ஆனாலும், 2005-ம் ஆண்டு பெய்த பெருமழையில் மும்பை மாநகரம் முழுவதுமே வெள்ளத்தில் மிதக்கவும், மக்கள் வீடு திரும்ப முடியாத அளவுக்கு தனித் தீவுகள் உருவாகவும் நேர்ந்தபோது, அதற்குக் காரணம் சாக்கடையை அடைத்துக்கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும், மறுசுழற்சி செய்யவியலாத பிளாஸ்டிக் பொருள்கள் என்று தெரியவந்தது. அதன்பிறகு எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், சட்டத்தை அமல்படுத்தியது மகாராஷ்டிர அரசு. 50 மைக்ரான் திடம் குறைவாக கைப்பைகள் உற்பத்தி, விற்பனை கூடாது என்றும், ஒவ்வொரு பையின்மீதும் உற்பத்தியாளர் தனது முகவரியை அச்சிட வேண்டும் என்றும் சட்டம் வகை செய்துள்ளது. இதுவரை விதிமுறை மீறலுக்காக 21 நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்தால் மும்பையில் பால் விநியோகம் (நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர்) மிகப் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரும் என்றுகூட அச்சம் இருந்தது. ஆகவே, 50 மைக்ரான் திடம் குறைவான பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பால் பாக்கெட், சமையல் எண்ணைய் பாக்கெட். ஷாம்பு பாக்கெட் (மிகச் சிலவற்றைத் தவிர) அனைத்துமே 50 மைக்ரான் தடிமன் கொண்டவை. இந்த பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சிக்கு ஏற்றவை.

இந்தியாவில் ஆண்டுக்கு 45 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் குறைந்தது 40 சதவீதம் "பேக்கேஜ்' துறை பயன்பாட்டில் உள்ளன. 50 மைக்ரான் திடம் குறைவான பிளாஸ்டிக் கைப் பைகளுக்குத் தடை விதிக்கப்படுமேயானால், 90 சதவீத பிளாஸ்டிக் கைப் பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும்.

மறுசுழற்சிக்கு லாயக்கற்ற பிளாஸ்டிக் பொருள்கள் என்று கருதப்படுபவை- மெலிதான பிளாஸ்டிக் கைப் பைகள், ஒருமுறை பயன்படுத்தப்படும், குவளைகள், கோப்பைகள், உணவுகள் அடைக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள், தட்டுகள், குடிநீர் போத்தல்கள் ஆகியவைதான். இவை பெரும்பாலும் ஓட்டல்களில்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டல்கள் 50 மைக்ரான் தடிமனுக்குக் குறைவான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்தாலே போதும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு மிகமிகக் குறைந்துவிடும். தற்போது பல ஓட்டல்களில் பார்சலுக்குத் தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், 50 மைக்ரான் திடம் கொண்ட பிளாஸ்டிக் கைப் பைகளையே பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதால் அவர்களுக்குப் பெரிய இழப்பு ஏற்படப்போவதில்லை.

ஓட்டல்துறைக்கு அடுத்தபடியாக, மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் குப்பை என்பது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள்தான். கோலா, பெப்ஸி பானங்களின் பெட் பாட்டில்களை வாங்கிக்கொள்ளும் பழைய பேப்பர் கடைக்காரர்கள், நகரம் முழுவதிலும் இறைந்து கிடக்கும் இந்தக் குடிநீர் போத்தல்களை வாங்குவதே கிடையாது. பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிப்பவர்களும், இந்த போத்தல்களின் மூடிக்கு மட்டுமே மரியாதை கொடுத்து எடுத்துச் செல்கின்றனர். நகரச் சாக்கடைகளிலும், ரயில் பாதையிலும், நெடுஞ்சாலைகளிலும் இந்த குடிநீர்ப் போத்தல் குப்பைகள் முடிவற்றுக் கிடக்கின்றன. பால் பாக்கெட்டுகளைப் போலவே 50 மைக்ரான் திடம் கொண்ட, வண்ணம் இல்லாத பிளாஸ்டிக் பைகளில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் குடிநீர் விற்கப்படுமேயானால், விலை அதிகம் இல்லாமலும் மறுசுழற்சிக்கு உதவி செய்யும் வகையிலும் அமையும்.

தமிழக அரசின் மசோதாவில் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் அதைப் பயன்படுத்தும் தொழிற்கூடங்கள் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. இதைப் பயன்படுத்தித் தூக்கியெறியும் பொறுப்பற்ற பொதுமக்கள் கண்டுகொள்ளப்படவில்லை. எந்தவொரு பிளாஸ்டிக் குப்பையையும் தெருவில் வீசியெறியும் நபருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதியையும் அந்த மசோதாவில் சேர்ப்பதுதான், தமிழகத்திற்கு மிகப்பெரும் நன்மையைக் கொண்டுவரும்.
நன்றி : தினமணி

பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை : இந்த வருடத்தின் மிக உயர்ந்த நிலையில் சென்செக்ஸ்

சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றம் காரணமாக இன்று காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்கு சந்தையிலும் நல்ல ஏற்ற நிலை காணப்படுகிறது. வர்த்தகம் துவங்கிய நிமிடத்தில் இருந்தே உயர்ந்திருந்த மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், காலை 10.40 மணி அளவில் 316.03 புள்ளிகள் உயர்ந்து 15,703.99 புள்ளிகளாக இருந்தது. இது, இந்த வருடத்தின் மிக உயர்ந்த நிலை. அதே போல் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டியும் 88 புள்ளிகள் உயர்ந்து 4,659.45 புள்ளிகளாக இருந்தது. அதிக அளவில் பங்குகளை வாங்கும் போக்கு காணப்படு வதால் பங்கு சந்தை குறியீட்டு எண்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன. ஆயில் அண்ட் கேஸ், ஆட்டோ, ரியாலிட்டி, மெட்டல் மற்றும் இன்ஃராஸ்டிரக்சர் பங்குகள் விலை உயர்ந்திருக்கின்றன. தேசிய பங்கு சந்தையில் 660 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்திருந் தன.கெய்ர்ன், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், சுஸ்லான்,டிஎல்எஃப், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், எஸ்பிஐ, எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரான்பாக்ஸி லேப்ஸ், ஹீரோ ஹோண்டா மற்றும் ஹெச்டிஎப்சி நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தைகள் உயர்ந்தன

கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தைகள் நேற்று திடீரென உயர்ந்தன. எதிர்பார்த்ததையும் மீறி அமெரிக்க நிறுவனங்கள் லாபம் சம்பாதித்திருப்பதாக வந்த அறிக்கையை அடுத்து, அங்குள்ள முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டமும் கொஞ்சம் குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து டவ்ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் இன்டக்ஸ் 83 புள்ளிகள் ( 0.9 சதவீதம் ) உயர்ந்திருக்கிறது. கடந்த நவம்பர் 4 ம் தேதிக்குப்பின் இது தான் மிக உயர்ந்த நிலை. 2009 ல் இதுவரை இல்லாத உயர்ந்த நிலையும் இதுதான். எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸூம், கடந்த நவம்பர் 4 ம் தேதிக்குப்பின் நேற்று 11 புள்ளிகள் ( 1.2 சதவீதம் ) உயர்ந்திருக்கிறது. நாஸ்டாக் காம்போசைட் இன்டக்ஸ், கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப்பின் 16 புள்ளிகள் ( 0.8 சதவீதம் ) உயர்ந்திருக்கிறது.
நன்றி :தினமலர்


வாழு, வாழவிடு!

கோவை-பாலக்காடு ரயில் வழித்தடத்தில் யானைகள் விபத்தில் இறந்துபோகும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், அந்த வழித்தடத்தில் ரயில்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ரயிலின் வேகத்தைக் குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் முன்வந்திருக்கிறது.

யானைகள் ரயிலில் அடிப்பட்டுச் சாகின்றன என்பது உண்மையே என்றாலும், நியாயமாகப் பார்த்தால் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியது வனத்துறைதான்.

இந்த ரயில் வழித்தடம் புதியதல்ல. இந்த ரயில்தடத்தின் ஒரு சிறுபகுதி, சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள்ளும் அதையொட்டியும் செல்கிறது என்பதும் புதிதல்ல. கடந்த 30 ஆண்டுகளில் இந்த ரயில் வழித்தடத்தில் 13 யானைகள் இறந்துள்ளன. இவற்றில், 2008 பிப்ரவரி முதல் 2009 ஜூலை வரையிலான 18 மாதங்களில் இந்த ரயில் வழித்தடத்தில் 4 விபத்துகளில் 8 யானைகள் இறந்துள்ளன என்பதை எண்ணிப்பார்த்தால், இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நிவாரண நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது வனத்துறைதான் என்பது புரியும்.

ஏன் இப்போது மட்டும் ரயிலில் யானைகள் விபத்தில் சிக்கி இறப்பது அதிகரித்திருக்கிறது என்ற உண்மையை நுட்பமாகப் பார்த்தால் கேரள, கர்நாடக, தமிழக வனத்துறை தனது பொறுப்பைத் தட்டிக் கழித்ததும், தான் செய்திருக்கவேண்டிய கடமையைச் சரியாகச் செய்யத் தவறியதும்தான் காரணம் என்பது வெளிப்படையாகத் தெரியவரும்.

பன்னெடுங்காலமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் மைசூர் தொடங்கி ஏற்காடு வரை வந்து திரும்பும் யானைப் பாதை உள்ளது என்பது வனத்துறைக்குத் தெரியாதது அல்ல. ஆனால், யானைப் பாதை குறுக்கிடும் என்று தெரிந்திருந்தும், தேயிலை, காப்பித் தோட்டங்கள் விரிவாக்கம் மற்றும் பல்வேறு தொழில்களுக்காக குத்தகைக்கு அனுமதி அளித்தது வனத்துறைதான். இதற்கு அரசியல் தலைவர்களின் நிர்பந்தம் மற்றும் பெருந்தொகை கையூட்டு என எது காரணமாக இருந்தாலும், வனத்துறைதான் இப்போது பொறுப்பேற்க வேண்டும்.

இத்தகைய அனுமதியில், யானைப் பாதைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது என்று ஒரு ஷரத்து வெறும் பெயரளவுக்கு இருந்தாலும், முதலீடு செய்தவர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. வழிகளை ஆக்கிரமித்து அடைத்துவிட்டார்கள். இதனால்தான் யானைகள் புதிய வழிதேடி (வழிதவறிய யானைகள் என்று சொல்வது யானையை சிறுமைப்படுத்துவதாக அமையும்) அலைகின்றன.

யானைகள் ரயிலை மட்டுமே தேடி வரவில்லை. அண்மைக்காலமாக, அரூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஜவ்வாது மலை, ஒசூர், தேன்கனிக்கோட்டை என எல்லா இடங்களிலும் கூட்டமாக வருகின்றன. பயிர்களைச் சேதம் செய்வதும் நடைபெறுகிறது. சில நேரங்களில் யானைகளால் மனிதர்கள் உயிரிழக்கிறார்கள். சில நேரங்களில் மனிதர்களால் யானைகள் சாகின்றன.

யானைகள் மீது வனத்துறைக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், யானைப் பாதையை தடைகள் இல்லாதபடி செய்வதும், அந்தப் பாதையில் யானைக்குத் தேவையான உணவுப் பயிர்களை மானியம் கொடுத்து விளைவிக்கச் செய்வதும், யானைகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்க உறுதி செய்வதும்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். இதற்கு கேரள, கர்நாடக, தமிழக வனத்துறை மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும்.

ரயில்களின் வேகத்தைக் குறைப்பதும், இந்த வழித்தடத்தில் உணவுப் பொட்டலங்களை வீச வேண்டாம் என்று பயணிகளுக்குப் போதிப்பதும், ரயில்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் சரியான தீர்வுகள் அல்ல. ரயில் தடத்தைவிட்டு பஸ் தடத்துக்கு யானைகள் வந்தால் அப்போது என்ன செய்வார்களோ? ரயில் பாதைக்கு அருகே சில இடங்களில் மின்வேலி அமைக்கும் யோசனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வேலியிலும் யானைகள் சிக்கி இறக்கின்றன என்பதை அறிந்தால், இதையெல்லாம் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்.

வனப்பகுதியில் எல்லா நீர்ஆதாரங்களும் எஸ்டேட்களின் தேவைக்காகத் திசை திருப்பப்படுகின்றன. தவறான நடைமுறைகளால், காட்டாறுகள் திசைமாறி மண்அரிப்பை ஏற்படுத்தி, மழைநீர் வீணாகி வருகிறது. முன்பு அதிமுக ஆட்சியில் காட்டு விலங்குகளுக்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில் காட்டுக்குள் பல இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டினார்கள். தலைமையைத் திருப்திசெய்ய "ஜே' ஆங்கில எழுத்துவடிவத்திலேயே தொட்டிகள் அமைக்கப்பட்டன.

விலங்குகளுக்குத் தேவையான உணவும் நீரும் காட்டுக்குள்ளேயே கிடைக்குமானால் அவை மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைக் கொஞ்சம்கூட விரும்பாது.

யானைகளின் வாழ்வாதாரத்தைப் பறித்துக்கொண்டு, அவை "வழிதவறி' வருவதாகவும், பயிர்களை அழிப்பதாகவும், ரயில் விபத்துகளில் சிக்கி அவை இறப்பதாகவும் குறைசொல்வது மனிதர்களால் மட்டுமே இயலும்.
மனிதா, வாழு, வாழவிடு! - குறைந்தபட்சம் விலங்குகளையாவது!

நன்றி : தினமணி

Thursday, July 30, 2009

லிட்டருக்கு 80 கி.மீ., தரும் பஜாஜ் புதிய பைக் அறிமுகம்

மகாராஷ்டிரா, புனேயில் கடந்த 17ம் தேதி, 100சிசி திறனுள்ள பஜாஜ் டிஸ்கவர் டி.டி.எஸ்., - எஸ்.ஐ., பைக்கை, அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் ஆர்.சிதம்பரம் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர், ராகுல் பஜாஜ் கலந்து கொண்டார். ஒரு லிட்டருக்கு 80 கி.மீ., மைலேஜ் கொடுக்கும், நீண்ட தூர பைக் போன்றே, இந்த, புதிய 100சிசி டிஸ்கவர் டி.டி.எஸ்., - எஸ்.ஐ., பைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக், நாட்டில் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். அனைத்து சூழ்நிலைகளிலும் எளிதாக ஸ்டார்ட் செய்யும் வகையிலான ஆட்டோ சோக் வசதியும் இந்த புதிய டிஸ்கவர் பைக்கில் உள்ளது.
நன்றி : தினமலர்


இந்தியன் ஆயில் கார்பரேஷனின் நிகர லாபம் கடந்த வருடத்தை விட ஒன்பது மடங்கு அதிகம்

ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில், அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் ரூ.3,682.83 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இதே காலாண்டில் பெற்றிருந்த நிகர லாபமான ரூ.415.13 கோடியை விட 9 மடங்கு அதிகம். ஆனால் கடந்த வருடம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.89,148.57 கோடியாக இருந்த அதன் மொத்த வருவாய் இந்த வருடத்தில் ரூ.60,683.97 கோடியாக குறைந்திருக்கிறது. பாம்பே பங்கு சந்தைக்கு அந்த நிறுவனம் அளித்த அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2009 மார்ச்சில் பொங்கைகான் ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தை இந்தியன் ஆயில் கார்பரேஷன் தன்னுடன் இணைத்துக்கொண்டது. எனவே கடந்த நிதி ஆண்டுடன் இந்த ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்க்க முடியாது.
நன்றி : தினமலர்


தோல்வியை தோளில் போட்டு நடந்தால்தான்...

தமிழகத்தில் இடைத்தேர்தல்களைப் புறக்கணித்திருக்கும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா சொல்லும் நியாயங்களில், வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்ற ஒன்றைத் தவிர எதுவுமே ஏற்புடையதல்ல.

அதற்காக தேர்தலைப் புறக்கணிப்போம் என்று சொல்வது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாக இல்லை என்று சொல்லாமல் "புறக்கணிக்க' நம்மால் முடியவில்லை.

பணபலமும், அதிகார பலமும் பெற்றிருக்கும் ஒரு ஆளும்கட்சி எப்படியாகிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, விதிமுறைகளை மீறும் என்பதுதான் உலக நடைமுறை. அதிமுக ஆளும்கட்சியாக இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும்கூட, பணபலம், அதிகார பலம் இருக்கவே செய்தன. "அம்மா'வின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்ற அச்சத்தில் அதிமுக அமைச்சர்கள் அன்றைய தினம் "வழியற்ற வழி'களைக் கையாண்ட சம்பவங்கள் இல்லாமலில்லை.

இந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் சொல்லக்கூடிய ஒரே பதில்-"நாங்கள் இந்த அளவுக்கு மோசமாக விதிகளை மீறவில்லை. பணத்தை இறைக்கவில்லை' என்பதாக இருக்கலாம். ஆனால், உலகத்தில் எல்லாமும் ஒன்றையொன்று விஞ்சுவதாகத்தான் இருக்கும். இன்றைய ஸ்பெக்டரம் ஊழலை ஒப்பிட்டால் போஃபர்ஸ் ஊழல் ஒரு விஷயமே அல்லதான். அதற்காக, அது ஊழல் இல்லை என்று சொல்லி ஒதுக்கிவிட முடியுமா?

இப்போது ஜெயலலிதா முன்வைக்கும் மிக முக்கிய குற்றச்சாட்டு- வாக்குஇயந்திரங்களில் முறைகேடுக்கான வாய்ப்பு என்பதுதான்.

வாக்கு இயந்திரங்களைக் கையாள்பவர்கள் அனைவரும் அரசு அதிகாரிகள். ஒரே நாளில் துணிச்சலாக அனைத்து அரசு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்த தன்னை (ஜெயலலிதாவை) வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டார்கள் என்பதையும், அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு எப்போதுமே சம்பளம், படி எல்லாவற்றையும் அள்ளித்தருபவர் தமிழக முதல்வர் மு. கருணாநிதி என்பதையும் கருதிப் பார்க்கும் ஜெயலலிதா, வாக்கு இயந்திரத்தில் முறைகேடு இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கிறது. மேலும், கடைசி ஒரு மணிநேரத்தில் 30 சதவீத வாக்குப் பதிவுகள் என்பதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது அவர் சந்தேகம் கொள்வதும் நியாயம்தான்.

அதற்காக, ஒரு ஜனநாயக வாய்ப்பை, மிக முக்கியமான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் தவற விடுவதன் மூலம் ஆட்சியாளருக்கு எதிராக மக்களுக்குக் கிடைக்கும் ஒரேயொரு வாய்ப்பை இல்லாமல் செய்துவிடுகிறார். "ஆளும்கட்சியையே தேர்வு செய்து கொள்ளுங்கள்' என்று மறைமுகமாகச் சொல்வதைப் போலத்தான் அமையும்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், அவரது கூட்டணியில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது அதிமுக மட்டுமே. ஜெயலலிதா குறிப்பிடும் வாக்கு இயந்திர முறைகேடுகள் அனைத்தையும் மீறித்தான் அதிமுகவால் இந்த வெற்றியைப் பெற முடிந்திருக்கிறது. இதற்குக் காரணம், ஆளும்கட்சி மீதான வெறுப்பை வெளிப்படுத்த ஓர் இடமாக அதிமுகவை மக்கள் கருதுகிறார்கள் என்பதுதான். இதை அவர் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.

இப்போது நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களிலும்கூட வேட்பாளரை நிறுத்தி, ""இவர்தான் எனது வேட்பாளர், ஆளும்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தால் என்னால் செயல்பட முடியவில்லை. அவர்களைப் போல பணத்தை இறைக்க என்னால் முடியாது. உங்கள் வாக்குகளை எனக்கு அளித்தால் சரி. இல்லையானாலும் சரி'' என்று அமைதியாக போட்டியில் பங்குகொண்டிருந்திருக்கலாம். அதைவிட நல்லதொரு அரசியல் சத்யாகிரகம் வேறு எதுவாக இருக்க முடியும்?

அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு முடிவால், கட்சிக்குள் தற்போது இருக்கும் தீப்பொறியை அணைந்துபோகச் செய்யும் ஆபத்து அதிகம். குறிப்பாக, அதிமுகவின் வாக்குவங்கியை உடைத்து, வெற்றியை தடுக்கும் தேமுதிக-வுக்கு ஜெயலலிதாவே ரத்தினக்கம்பளம் விரித்து வாழ்த்துக் கூறுவதற்கு இணையானது இந்த தேர்தல் புறக்கணிப்பு. கிராமத்தில் சொல்வார்கள், "சொந்த காசுல தனக்கே சூனியம் வச்சிக்கிட்டாப் போல' என்று. அதைத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

வாக்கு இயந்திரத்தில் அதிமுகவுக்கு குறிப்பிட்ட வாக்கு எண்ணிக்கை சேர்ந்த பிறகு, இரட்டை இலையை அழுத்தினாலும் வேறு சின்னங்களில் வாக்குப் போய்ச் சேரும் மென்பொருள் (சாப்ட்வேர்) வாக்கு இயந்திரத்தில் இருக்கிறது என்று ஜெயலலிதா சந்தேகப்பட்டால், அதை அவர் நிரூபிக்க வேண்டும். சிறந்த கணினி நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளிப்படையான செயல்விளக்கத்தை, ஒரு ஒத்திகை வாக்குப்பதிவை, நாடே காணும்படி செய்துகாட்டி, வாக்கு இயந்திரத்தின் மென்பொருளை மாற்றி அமைக்க முடியும் என்று நிரூபித்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து வெறுமனே வாக்கு இயந்திரத்தில் முறைகேடு என்று பேசிக்கொண்டிருப்பதும், தேர்தலைப் புறக்கணிப்பதும் அர்த்தமற்ற செயல்கள்.

ஆளும்கட்சி எதுவாக இருந்தாலும் பணபலம், அதிகார பலம், விதிகளை மீறுதல் என்று எல்லாமும் இருக்கவே செய்யும். ஒரு எதிர்க்கட்சி இதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது.

அரசியல் கட்சித் தலைமை என்றால் தோல்வியைத் தோளில் போட்டு நடந்தால்தான், நாளை நமதே.

இல்லையானால், இன்றைய பொழுதும் இல்லையென்றாகும்!

கட்டுரையாளர் : இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி

ஏறியது பங்கு சந்தை

நிதி, டெக்னாலஜி, எஃப் எம் ஜி சி, சிமென்ட், பவர், மெட்டல் மற்றும் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளின் பங்கு மதிப்பு உயர்ந்திருந்ததால் இன்று பங்கு சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்திருக்கிறது. நிப்டி மீண்டும் 4,500 புள்ளிகளுக்கு மேல் சென்று முடிந்திருக்கிறது. இருந்தாலும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பெல், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஜின்டால் ஸ்டீல், சன் பார்மா, டாடா பவர், ஏபிபி, நால்கோ, மற்றும் சுஸ்லான் எனர்ஜி நிறுவன பங்கு மதிப்பு குறைந்திருந்ததால் சந்தை வளர்ச்சி தடைபட்டது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம், எதிர்பார்த்ததையும் மீறி 42 சதவீதம் அதிகமாக வந்திருப்பதால் அதன் பங்கு மதிப்பு இன்று 4 சதவீதம் உயர்ந்திருந்தது. அதேபோல் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி பேங்க் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்திருந்தது. கோடக் மகிந்திரா மற்றும் பேங்க் ஆப் பரோடா பங்கு மதிப்பு 0.7 சதவீதம் உயர்ந்திருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 214.50 புள்ளிகள் ( 1.41 சதவீதம் ) உயர்ந்து 15,387.96 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 57.95 புள்ளிகள் ( 1.28 சதவீதம் ) உயர்ந்து 4,571.45 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


அடுத்த வருடத்தில் இருந்து மீண்டும் வேலைக்கு ஆட்களை எடுக்க துவங்குவோம் : இன்போசிஸ் சி.இ.ஓ.

பொருளாதார மந்த நிலை காரணமாக புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதை நிறுத்தி வைத்திருந்த இன்போசிஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்., அடுத்த வருடத்தில் இருந்து மீண்டும் ஆட்களை எடுக்க துவங்கி விடும் என்று அதன் சி.இ.ஓ.,மற்றும் மேலாண் இயக்குனர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடந்த சி.ஐ.ஐ., கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, இந்த நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் இருந்து பொருளாதார நிலை மேம்பட்டு விடும் என்றும், எனவே மீண்டும் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் வேலை நாடு முழுவதும் துவங்கிவிடும் என்றும் சொன்னார். பொருளாதார மந்த நிலையால், இன்போசிஸ் உள்பட எல்லா ஐ.டி.,நிறுவனங்களுமே கடும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தன என்றார் அவர்.
நன்றி : தினமலர்


தங்கம் விலை அதிரடி சரிவு ஒரே நாளில் ரூ.200 குறைவு

ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 200 ரூபாய் வரை குறைந்தது. நேற்று சவரன் 10,960 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் விலை நிலையில்லாமல் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆபரணத் தங்கம், சவரன் 11 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விற்றது. நேற்று காலை நிலவரப்படி கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 1,376 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து எட்டு ரூபாய்க்கும் விற்றது. மாலையில், கிராமுக்கு மேலும் ஆறு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 1,370 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது. அதாவது நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 200 ரூபாய் வரை குறைந்தது.
நன்றி : தினமலர்


Wednesday, July 29, 2009

சரிவில் முடிந்த பங்கு சந்தை

இன்றும் பங்கு சந்தை சரிவில் முடிந்திருக்கிறது. மெட்டல், ரியாலிட்டி, பவர், கேப்பிடல் குட்ஸ், டெலிகாம் மற்றும் பேங்கிங் துறை பங்குகள் விலை குறைந்திருந்ததை அடுத்து பங்கு சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறைந்து விட்டது. ஆனால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு ( ரூ.1,47,352.24 கோடி ) வர்த்தகம் நடந்திருக்கிறது. இது 39 சதவீத வளர்ச்சி. ஆசிய பங்கு சந்தைகளான ஷாங்கை ( 5 சதவீதம் ), ஹாங்செங் ( 2.4 சதவீதம் ), ஸ்டெரெயிட் டைம்ஸ் மற்றும் தைவான் ( 0.5 - 0.8 சதவீதம் ) ஆகியவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது எனலாம். ஆனால் ஐரோப்பிய சந்தைகள் 0.7 - 1.5 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது என்ற தகவல் வந்ததற்கு பின் இந்திய சந்தைகள் ஓரளவு வளர்ச்சி அடைந்தன. எனினும் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 158.48 புள்ளிகள் ( 1.03 சதவீதம் ) குறைந்து 15,173.46 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 50.60 புள்ளிகள் ( 1.11 சதவீதம் ) குறைந்து 4,513.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ரூ.100 கோடிக்கு விற்பனை ஆன முதல் இந்தி படம் ' மை நேம் இஸ் கான் '

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், கஜோல் நடித்து வெளிவர இருக்கும் ' மை நேம் இஸ் கான் ' என்ற திரைப்படம் இதுவரை வேறு எந்த படமும் விற்காத விலையான ரூ.100 கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தை கரண் ஜோகர் என்பவர் இயக்குகிறார். அதன் விநியோக உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ என்ற நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியிருப்பதாக சொல்லப் படுகிறது. 2007 ல் வெளிவந்த ஓம் சாந்தி ஓம் திரைப்படம் ரூ.75 கோடிக்கும், 2008 ல் வெளிவந்த கஜினி ரூ.90 கோடிக்கும் விற்பனை ஆகி இருந்த நிலையில், மை நேம் இஸ் கான் ரூ.100 கோடிக்கு விற்பனை ஆகி இருப்பதாக சொல்கிறார்கள். ஜோகரும், கானும் இணைந்து தயாரிக்கும் இந்த படம் ரூ.55 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம். அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்குப்பின் அங்குள்ள இந்திய முஸ்லிம்கள் படும் கஷ்டத்தை எடுத்துக்காட்டும் விதமாக இது படமாக்கப்பட்டிருக்கிறது. பல வருட இடைவேளைக்குப்பின், ஷாருக்கானும் கஜோலும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை தர்மா புரடெக்ஷன்ஸ் உரிமையாளரான ஜோகர் இயக்குகிறார். ரூபர்ட் முர்டோவுக்கு சொந்தமான ஃபாக்ஸ் அண்ட் ஸ்டார் டி.வி. நெட்வொக்கின் ஒரு அங்கமான ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் தர்மா புரடெக்ஸனும் இணைந்து பட தயாரிப்பு மற்றும் விநியோக தொழிலில் ஈடுபட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த வருட ஆரம்பத்தில், ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தை இந்தியாவில் விநியோகம் செய்ததில் இருந்து தான் ஸ்டாக் ஃபாக்ஸ் ஸ்டூடியோ இங்கு பிரபலமானது. இப்போது பல இந்தி மற்றும் தமிழ் படங்களின் விநியோக உரிமையை அந்த நிறுவனம் பெற்றிருக்கிறது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை குறைந்தது

அமெரிக்க மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதாக வெளிவந்த செய்தியாலும், பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனமான பிபி, நஷ்டமடைந்திருப்பதாக வெளிவந்த செய்தியாலும், ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. நியுயார்க்கின் முக்கிய வியாபார பொருளான யுஎஸ் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) பேரலுக்கு 60 சென்ட் குறைந்து 66.63 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 28 சென்ட் குறைந்து 69.60 டாலராக இருக்கிறது. அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து அதன் காரணமாக அங்கு வாங்கும் சக்தி குறைந்து போனதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஜூன் மாதம் 49.3 புள்ளிகளாக இருந்த வாங்கும் சக்தி, ஜூலை மாதத்தில் 46.6 புள்ளிகளாக குறைந்திருக்கிறது. இது, கடந்த மே மாதத்தில் 54.8 புள்ளிகளாக இருந்தது.

நன்றி : தினமலர்



அதிக லாபத்திற்கு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ஆசைப்படுகிறது : அனில் அம்பானி குற்றச்சாட்டு

கிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் ( கேஜி - டி6 ) ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தால் எடுக்கப்படும் எரிவாயுவை பிரித்துக்கொள்வது சம்பந்தமாக, இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ( ஆர் ஐ எல் ) மற்றும் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் ( ஆர் என் ஆர் எல் ) ஆகியவைகளுக்கிடையே நடந்து வந்த மோதல் நேற்று பெரிதாக வெடித்துள்ளது. ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம் நேற்று நடந்தபோது, அதில் பேசிய அதன் தலைவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் அதிக லாபத்திற்கு ஆசைப்படுகிறது என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தேவையில்லாமல் எங்கள் இருவருக்குமிடையே நடந்து வரும் பிரச்னையில் மூக்கை நுழைக்கிறது என்றும் பேசினார். இது பெரும் புயலை கிளப்பி உள்ளது. அனில் அம்பானியின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ஆலோசகர் ஹரிஷ் சால்வே, எங்கள் இருவருக்குமிடையே உள்ள பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இப்போதைக்கு இது குறித்து கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது என்றார். மேலும் இந்த விவகாரம் குறித்து கோர்ட்டில் பேசவே விரும்புகிறோம்; மீடியாவில் அல்ல என்றும் சொல்லி விட்டார். மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முளரி தியோராவும், இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் எங்களால் பதில் ஏதுவும் தெரிவிக்க இயலாது என்று சொல்லி விட்டார். திருபாய் அம்பானி நிறுவனம் 2005 ல் இரண்டாக பிரிந்தபோது செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சொல்லப் பட்டிருப்பதை போல, கே - ஜி பேசில் கிடைக்கும் எரிவாயுவை, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் ஒன்றுக்கு 2.34 டாலர் என்ற விலையில் எங்களுக்கு தர வேண்டும் என்று ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் கோருகிறது. ஆனால் மத்திய அரசோ, மற்ற நிறுவனங்களுக்கு கொடுக்கும் 4.2 டாலர் விலையில் தான் இதையும் கொடுக்க வேண்டும் என்கிறது. இது குறித்து ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், 2.34 டாலர் விலையிலேயே 17 வருடங்களுக்கு ரிலையன்ஸ் ரிசோர்சஸ் நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. இப்போது இந்த தீர்ப்பை எதிர்த்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்கிறது. அங்கு விசாரனை நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. அதில், பூமிக்கடியில் கிடைக்கும் எரிவாயு மத்திய அரசுக்கு தான் சொந்தமானது. எனவே அதற்கு இரு தனியார் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


எல்லைச் சிக்கல்கள் - என்னதான் முடிவு?

தமிழக - ஆந்திர எல்லையிலும் மற்றும் கேரள எல்லையிலுமுள்ள கிராமங்களைப் பற்றி பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் அணைமுகம் கிராமம் தமிழகத்தைச் சார்ந்தது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட இந்தக் கிராமத்தில், ரப்பர் தோட்டங்கள் அதிகம். வருவாய்த் துறையின் ஆவணங்களின்படி தமிழக அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ள கிராமம் இது. தமிழ்நாடு அரசின் சார்பில் இலவசத் தொலைக்காட்சியும் இங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தக் கிராமத்துக்கு அடுத்துள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த அம்பூரி உள்ளாட்சி நிர்வாகத்தினர் இங்குள்ள வீடுகளில் அடையாள எண்களை மலையாளத்தில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதுபோலவே, ஆந்திர எல்லையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டைக்குப்பம் கிராமத்தில் உள்ள பீமலவாரிப்பாளையம் எல்லையில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்திற்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் பிரச்னையை திடீரென கர்நாடகம் எழுப்பியுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த அந்த இடம் தங்களுக்கே சொந்தமென்று தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது. இதனால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் தாமதமாகிறது.

""வடவேங்கடம் தென்குமரி யாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து''
என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறாக தமிழகத்தின் எல்லைகள் ஆதியில் இருந்தபொழுது ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லூர், திருப்பதி போன்ற பகுதிகளை இழந்தோம். இதனால்தான் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பாலாறு, பொன்னையாறு, பழவேற்காடு ஏரிப் பிரச்னைகள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. ம.பொ.சி.யின் தீவிர போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம். இல்லையெனில் திருத்தணியும் இன்றைக்கு ஆந்திரத்திடம் இருந்திருக்கும்.

கேரளத்திடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, அதுமட்டுமல்லாமல் பாலக்காடு போன்ற பகுதிகளை இழந்தோம். கேரளத்திடம் இழந்த பகுதியால் முல்லைப் பெரியாறு, நெய்யாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், அடவிநய்யனார், மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் போன்ற பல நதிநீர்ப் பிரச்னைகளும், கம்பம் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோட்டப் பிரச்னையிலும் இன்றைக்கும் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை. கர்நாடகத்திடம் வெங்காலூர் என்று அழைக்கப்பட்ட பெங்களூர், கோலார் தங்கவயல் போன்ற பல பகுதிகளையும் நாம் இழந்துள்ளோம். இதனால் தமிழகத்தின் காவிரி மீதும், ஒகேனக்கல்லிலும் நமது ஆதிபத்தியங்கள் கேள்விக்குறியாகி விடுகின்றன.

பாலக்காடு பகுதியில் உள்ள சாம்பாறை, மூங்கில் மடை, வண்ணாமடை போன்ற 100 கிராமங்களில் தமிழர்கள் வசிக்கின்றனர். ஓணம் பண்டிகைக்கு தமிழக அரசு இங்கு விடுமுறை தருவதுபோல தைப் பொங்கலுக்கு அங்கு விடுமுறை இல்லை என்று அந்தப் பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இவர்கள் பயிர் செய்கின்ற காய்கறிகள் யாவும் கொச்சி போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

பசல் அலி தலைமையில் அமைக்கப்பட்ட மொழிவாரி மாநில எல்லைகளின் சீரமைப்பு ஆணையம் வழங்கிய தீர்வுகள் யாவும் தமிழகத்திற்கு நியாயமாக வழங்கப்படவில்லை. அதனால்தான் இன்றைக்குப் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இந்தக் குழுவில் இடம்பெற்ற பணிக்கருடைய ஆளுமையால் தமிழகத்திற்கு அநீதி கிடைத்தது என்று அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பு என்று 1956-ல் இன்றைய தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. அன்றைக்கு சீரமைப்பு என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட எல்லைகளை நாம் ஏற்றுக்கொள்ளாமல் சரியாக எல்லைகள் வரையறை செய்யப்பட்டிருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோயிருக்காது. இன்றைக்கும் கர்நாடகமும் மகாராஷ்டிரமும் எல்லைப் பிரச்னையில் பெல்காம் மாவட்டத்தில் மோதிக் கொண்டிருக்கின்றன.

வரலாற்றில் ஆதி தமிழ் மண் குறித்த செய்திகள் வருமாறு: இன்று திருப்பதி என அழைக்கப்படும் திருமலைதான் வடவேங்கடம் ஆகும். சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையவன் மூலம் திருவேங்கடவர் திருக்கோலத்தை வர்ணிக்கிறார் இளங்கோ அடிகள். வைணவ ஆழ்வார்கள் தமிழில் இயற்றி உள்ள பாசுரங்களில், திருமலைபுரமும், வேங்கடவர் தலமும் கூறப்பட்டு உள்ளன. பிள்ளைப் பெருமான் அய்யங்கார் பாடி உள்ள அஷ்டப் பிரபந்தத்தில் உள்ள திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி ஆகிய பிரபந்தங்கள் திருப்பதியைப் பற்றியவையாகும். இதுபோல், திருப்பதி கோயிலைப் பற்றித் தெலுங்கில் இலக்கியம் எதுவும் கிடையாது. தமிழகத்தின் வடஎல்லை கிருஷ்ணா நதி என்று சிற்ப சாத்திரம் கூறுகிறது என உ.வே.சா. கூறுகிறார்.

பல்லவர்கள், சோழர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்து, ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூர், தமிழ்நாட்டின் பகுதியாகவே இருந்து வந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களூர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. கி.பி. 997-ம் ஆண்டில் ஒசக்கோட்டை போன்ற இம்மாவட்டப் பகுதிகள், சோழ அரசனால் கைப்பற்றப்பட்டது. பெங்களூர் மாவட்டத்தில் உள்ள மாகடிபட்டணத்தை நிறுவியவர்களே சோழர்கள்தான்!

பெங்களூர் மாவட்டத்தில் இருக்கின்ற பழங்கோயில்கள் பெருமளவு பல்லவர்களாலும், சோழர்களாலும், தமிழ்க் கங்கர்களாலும் கட்டப்பட்டவை. பேளூரில் இருக்கின்ற நாகதாதேசுவர் கோயில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்டது. 1537-ம் ஆண்டில் பெங்களூர் பட்டணத்தை நிறுவிய கெம்பே கவுடாவின் முன்னோர்கள், காஞ்சியைச் சார்ந்த முரசு ஒக்கலு வேளாளர் குடியினரின் வழியில் வந்தவர்கள் ஆவர்.

சங்க காலத்தில் இருந்து பாண்டிய அரசின்கீழ் குமரி நாடு திகழ்ந்தது. திவாகரம் எனும் நூல் பாண்டிய மன்னனை குமரி சேர்ப்பன் என்று குறிப்பிடுகிறது. தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கும் மதுரைக் காஞ்சியில் அவனைக் குமரியோடு இணைத்துக் கூறுகிறது. பிற்காலச் சோழர்களான முதலாம் இராஜராஜன், வீர இராஜேந்திரம், முதல் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் ஆகியோரின் பெயர்கள் நாஞ்சில் நாட்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள், குலசேகர ஆழ்வார் போன்றோர் கேரளத்தில் பிறந்து தமிழ்த் தொண்டாற்றியவர்கள். கி.பி. 3-ம் நூற்றாண்டில் பாண்டியனின் அமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகர் வைக்கம் சென்றார். 63 சைவ நாயன்மார்களுள் ஒருவரான விறல்மிண்டன் நாயனார் மத்திய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள செங்களூரில் பிறந்தவர். சைவ நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் சேர குலத்துக்கு நெருங்கியவராக இருந்தார். இவர் சேர மன்னனான சேரமான் பெருமானின் மரியாதைக்குரியவராக இருந்ததுடன், கேரள மாநிலம் திருவஞ்சிக்குளம் என்கிற இடத்தில்தான் சிவபெருமானிடம் கலந்ததாகப் புராணம் கூறுகிறது. கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டினான். இதனால் கேரளத்தில் பகவதி வழிபாடு என்ற பெயரில் கண்ணகி வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கண்ணகி விழாவுக்கு இலங்கை அரசன் கயவாகுவும், வெற்றிவேற்செழியனும் வந்து இருந்தனர். இவர்கள் காலம் ஏறத்தாழ கி.பி. 175 ஆகும்.

கி.பி. 10-ம் நூற்றாண்டுக்கு முன்பு நம்பூதிரி பிராமணர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து சேர நாட்டில் குடியேறினர். சேர மன்னர்கள் சத்திரியர்களாக மாறி சூரிய வம்சத்தினர் என அழைத்துக் கொண்டனர். கி.பி. 1534-க்கு முன்பே திருவடி ராஜ்யம் என வழங்கப்பட்ட திருவிதாங்கூர் அரசனான மார்த்தாண்டவர்மன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பல பகுதிகளைக் கைப்பற்றினார். ஸ்ரீவல்லப பாண்டியன், விஜயநகர வேந்தனான அச்சுதராயரிடம் உதவி கேட்டான். விஜயநகரப் படைகளின் உதவியுடன் திருவிதாங்கூர் படைகளைத் தோற்கடித்து பாண்டியன் இழந்த பகுதிகளை மீட்டான் என்பது சரித்திரம்.

கி.பி. 18-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை தமிழ்நாட்டு அரசர்களுக்கு உரிமை உடையதாகவே நாஞ்சில் நாட்டுப் பகுதி இருந்தது. திருவிதாங்கூர் அரசு 1941-ம் ஆண்டு வெளியிட்ட பர்ல்ர்ஞ்ழ்ஹல்ட்ண்ஸ்ரீஹப் கண்ள்ற் ர்ச் ஐய்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ண்ர்ய் -படி இந்தப் பகுதியில் உள்ள 1100 கல்வெட்டுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் மட்டும் 828 உள்ளன. கல்குளம், முன்சிறை போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் கி.பி. 900 ஆண்டைச் சார்ந்தவை. அவை தமிழிலேயே உள்ளன. திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் காணப்படும் கி.பி. 16, 17, 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாஞ்சில் நாடு தொடர்பான ஓலைச்சுவடிகள் தமிழ் எழுத்திலேயே எழுதப்பட்டு இருப்பதை இன்றும் காணலாம்.

1920-ம் ஆண்டில் இருந்தே தனி ஆந்திர மாநிலம் கோரி ஆந்திரர்கள் போராடத் தொடங்கினார்கள். ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் பிரதமர்களாக ஆந்திரர்கள் பலர் பொறுப்பு வகித்தனர். இருப்பினும் தெலுங்கர்கள் விசால ஆந்திரம் என தனி மாநிலம் கேட்டுக் குரல் கொடுக்கத் தொடங்கினர். இதற்காகவே ஆந்திர மகா சபை அமைக்கப்பட்டது. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் மாவட்டம் ஆகிய மூன்று பகுதிகளையும் ஒன்றாக இணைத்து ஐக்கிய கேரள மாநிலம் அமைத்திட வேண்டும் என்று மலையாளிகள் குரல் கொடுத்தனர். இதற்கென கேரள சமாஜம் என்ற ஓர் அமைப்பின்கீழ் ஒன்றுபட்டனர். சம்யுக்த கர்நாடகம் என கர்நாடகத்தினர் போராடினர்.

நெல்லூர் ஜில்லாவின் தென் கோடியும், சித்தூர், வட ஆர்க்காடு, செங்கல்பட்டு, தென் ஆர்க்காடு, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி என்னும் ஜில்லாக்களும், மலையாளம், தென் கன்னடம் ஜில்லாவின் முக்கால் பங்கும், மைசூரின் தென் பாதியும், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை என்ற சமஸ்தானங்கள், கடலில் மூழ்கிய குமரிப் பகுதிகள் தமிழ் நிலங்களாகவே அக்காலத்தில் இருந்தன. இங்கு வேறு மொழிகள் வழங்கியது இல்லை என கா.ர. கோவிந்தராஜ முதலியார் தனது நூலில் எழுதி உள்ளார்.

1948-ம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் மொழிவாரி மாநிலத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1948-ன் தொடக்கத்தில் மொழிவாரி மாநிலப் பிரிவினை பற்றி ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட தார் கமிஷன் 13.9.1948-ல் சென்னைக்கு வந்தபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தமிழரசுக் கழகம், திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தங்கள் கருத்துகளை இக்குழுவிடம் தெரிவித்தன. அக்குழுவில் தமிழரான டி.ஏ. இராமலிங்கம் செட்டியாரும், ஆந்திரரான இராமகிருஷ்ண ராஜும் உறுப்பினர்களாக இருந்தனர்.

தமிழர் உறுப்பினராக இருந்த அந்தக் குழு இப்போதைக்கு மொழிவாரி மாநிலம் தேவை இல்லை என்று அறிவித்தது. இருந்தாலும் மாநிலங்களை மொழிவாரியில் பிரிப்பதாயின் அவற்றுக்கு இடையே மலை அல்லது ஆறு இருந்தால் அதையே எல்லையாகக் கொள்ள வேண்டும். மொழி வரம்பு வேறுபட்டால் அதைப் பொருள்படுத்தக் கூடாது என்று பரிந்துரைத்தது. அப்பரிந்துரைப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டுக்கு வேங்கட மலையும், குடகு மலையும் கிடைத்திருக்க வேண்டும். காவிரி உள்பட தமிழ்நாட்டில் பாயும் ஆறுகளின் உற்பத்திப் பகுதிகளும் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கிடைக்கவில்லை.

1954-ல் கேரளத்திற்கும் தமிழகத்திற்குமான எல்லைச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காக மத்திய அரசு இரண்டாவது எல்லை நிர்ணயக் குழுவை நியமித்தது. 1954-ல் நியமிக்கப்பட்ட அந்த மூன்று உறுப்பினர் எல்லை நிர்ணயக் குழுவுக்கு பசல் அலி எனும் பிகார் மாநிலத்தைச் சார்ந்தவர் தலைவராகவும், கே.எம். பணிக்கர் என்ற கேரளத்தைச் சேர்ந்தவரும், எஸ்.என். குன்ஸ்ரு என்ற வடஇந்தியரும் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர். தமிழர் யாரும் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. இதில் பாரபட்சம் காட்டப்பட்டது. அந்தக் குழு 10.10.1955-ல் அளித்த பரிந்துரையில்,

சென்னை மாகாணத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னடம் மாவட்டத்தைக் கர்நாடகத்தோடும் சேர்த்துவிட வேண்டும். (இதில் தென் கன்னட மாவட்டம் பற்றிய பரிந்துரை இக்குழுவின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்).

திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யத்தில் உள்ள கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையின் பாதி ஆகிய தமிழ்த் தாலுகாக்களைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து தனி ராஜ்யம் அமைக்க வேண்டும். அதன் பெயர் சென்னை ராஜ்யம் என்றே இருக்க வேண்டும்.

தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தொடர்பாக பல்வேறு பொருளாதாரக் காரணங்களை உத்தேசித்து அவை திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யத்திலேயே இருந்து வர வேண்டும்.

மொழிவாரியில் மாநிலங்களைத் திருத்தி அமைப்பது பற்றிப் பரிந்துரைக்கத்தான் இந்தக் குழுவே அமைக்கப்பட்டது. ஆனால் மொழி அடிப்படையை முதன்மையாகக் கருத முடியாது என்று சொன்னது இக்கமிஷன்.

சென்னை மாகாண - ஆந்திர ராஜ்ய எல்லைச் சிக்கலை அதற்கென நியமிக்கப்படவிருக்கும் எல்லைக் கமிஷன் கிராம அடிப்படையில் திருத்தி அமைப்பதை இக்கமிஷன் ஒப்புக்கொள்கிறது. அதாவது இக்கமிஷன் மொழி அடிப்படையையோ, கிராம அடிப்படையையோ ஒப்புக் கொள்ளவில்லை. ஒப்புக்கொண்டு இருந்தால் திருவனந்தபுரத்தையே தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் நிலை தோன்றி இருக்கும். ஏனென்றால், அக்கால கட்டத்தில் திருவனந்தபுரமே தமிழ்ப் பகுதியாகத்தான் இருந்தது.

1956-க்கு முன் சென்னை ராஜதானி என்பது விரிந்த மாநிலமாக இருந்தது. தமிழ்நாட்டோடு வடக்கே விசாகப்பட்டினத்திலிருந்து ஒரிய மொழி பேசும் கஞ்சம் மாவட்டம் வரையிலும், மேற்கே காசர்கோடு, பாலக்காடு வரையிலும், கர்நாடகத்தில் தென் கன்னடமும் இதனுடன் இணைந்த பகுதிகளாக இருந்தன. பசல் அலி குழுவிடம் தமிழர்கள் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. நத்தானியேல், நேசமணி, பி.எஸ். மணி, கரையாளர் போன்ற பல தலைவர்கள் செய்த தியாகத்தால் தெற்கே குமரியும், செங்கோட்டையும் பெறப்பட்டது.

மொழிவாரி மாநிலம் அமைக்கப்படும் எனும் கோரிக்கை எழுந்தபொழுது ஆளும் கட்சியான காங்கிரஸில் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜீவா போன்ற தலைவர்கள் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைக்கு துணை நின்றனர். வடக்கெல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. மற்றும் அவரது சகாக்களின் பணி, காலத்தாலும் மறைக்க முடியாது. இந்த வரலாற்றை நீண்ட பக்கங்களில்தான் அடக்க முடியும்.

இப்போதோ, தமிழகத்தின் எல்லைகளை ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும் அபகரிக்க நினைப்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகத்தை விளைவிக்கும் முயற்சியே ஆகும். தமிழகத்தில் தொடர்ந்து மாநிலக் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க ஒவ்வொரு கட்டத்திலும் கடமை ஆற்றியுள்ளன. ஆனால் அகில இந்தியக் கட்சிகள் ஆளும் ஏனைய மூன்று மாநிலத் தலைவர்கள், இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காததுதான் வேதனை தருகிறது.

இதுபோலவே, கச்சத்தீவையும் நாம் இழந்தோம் என்பது ஒருபுறம் இருக்க, அந்தமான் தீவிலும் அவ்வப்போது பிரச்னைகள் எழுகின்றன. மேற்கு வங்கத்தைச் சார்ந்தவர்கள் ஆளுமையால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்தமானின் நீதிபரிபாலனம் சென்னை நீதிமன்றத்தின் கீழ்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு கல்கத்தா நீதிமன்ற ஆளுமையில் இருக்கிறது.

தமிழர்கள் என்ற மொழிவாரி வெறியோடு இதையெல்லாம் நாம் பார்க்கவில்லை. இதிலுள்ள நியாயங்களையும் பிரச்னைகளையும் அறிந்து தீர்வு காண வேண்டும் என்பதால் எழுப்பப்படும் கோரிக்கை இது. அந்தக் கடமையைச் செய்யத் தவறினால் தமிழ் மண்ணுக்குப் பேராபத்து வரும்.

இன்றைக்கு நாம் இருக்கின்ற பகுதிகளிலேயே அண்டைய மாநிலத்தவர் ஒரு ஜனநாயக நாட்டில் தவறாக உரிமை கொண்டாடுவதை எப்படிச் சகிக்க முடியும்? கடந்த காலங்களில் இழந்த மண்ணால் ஏற்பட்ட பிரச்னைகளால் விளைந்த தலைவலிகளைத் தீர்க்க முடியாமல் நாம் இன்று தவிக்கிறோம். இந்த நிலையில் கர்நாடகம் ஒகேனக்கல்லைக் கேட்கிறது. ஆந்திரம் ஒரு ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு வம்பு செய்கிறது. தென் கோடியில் கேரளம் அணைமுகம் கிராமத்தை அபகரிக்க நினைக்கிறது. இதை நாம் எப்படி வேடிக்கை பார்ப்பது?

தமிழக அரசியல் கட்சிகள் தங்களது மனமாச்சரியங்களை மறந்து இந்த விஷயத்தில் கைகோர்த்துச் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு குரலெழுப்பி, மத்திய அரசை வற்புறுத்தி நமது உரிமைகளை நிலைநாட்டியே தீரவேண்டும். இனியும் நாம் நமது உரிமையை வலியுறுத்தித் தமிழக எல்லைகளைக் காக்காமல் போனால், நமது சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள். கடலின் சீற்றத்தால் லெமூரியா கண்டம் அழிந்தது. நமது மெத்தனத்தால், இன்றைய தமிழகம் அழிந்துவிடக் கூடாது!

கட்டுரையாளர் :கே.எஸ். இராதாகிருஷ்ணன்
நன்றி : தினமணி

Tuesday, July 28, 2009

கவலையளிக்கும் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடு...!

2008 - 2009, பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, 71.9 சதவிகித கிராமப்பகுதி மக்களும், 32.3 சதவிகித நகர்ப்புறப் பகுதி மக்களும் ஒரு நபருக்காகச் செலவிடும் நுகர்வு செலவினம் ஒரு நாளுக்கு, ரூ. இருபதுக்கும் குறைவானதே. இதன் அடிப்படையில் தேசிய அளவில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உள்ளதாக சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

இந்தக் கணக்கெடுப்புகளும் தோராயமானவையே. உண்மையில் பெரும்பான்மை மக்கள் நல்ல தரமான வாழ்க்கையோ, வாழ்வாதாரமோ, சமூகப் பாதுகாப்போ இன்றி அன்றாடம் பிழைப்பிற்காக அல்லலுறும் நிலையிலேயே உள்ளனர். இந்நிலையில், மக்கள்தொகையில் 40 சதவிகிதம் உள்ள குழந்தைகளின் நிலையை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 76 சதவிகிதம் குழந்தைகள், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைச் சார்ந்தே வாழ்பவர்களாக உள்ளனர். ஏனெனில், அவர்களின் பெற்றோர்கள் அடிப்படை உயிர் வாழ்விற்கான உணவு உத்தரவாதத்திற்கே போராட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான்.

கிராமப் பகுதிகளில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின், உணவிற்கு கூட அரசின் அங்கன்வாடி மற்றும் அரசுப் பள்ளிகளின் ஒருவேளை மதிய உணவுத் திட்டத்தையே நம்பியுள்ளனர். இவ்வாறு பெரும்பான்மை மக்கள், அரசின் நலத் திட்டங்களை நம்பி வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான அடிப்படை உணவு, ஆரோக்கியம் - மருத்துவம், கல்வி, பாதுகாப்பு (பெற்றோர் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு) ஆகியவற்றுக்கான நிதியானது, சமூக சேவைத் துறைகள் என்ற தலைப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி, சமூகத் துறைகளுக்கான பொறுப்பு மத்திய, மாநில அரசுகள் இரண்டிற்கும் பொதுவான பொதுப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையால், இரண்டு இயந்திரங்களும் இதற்கு சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், மத்திய பட்ஜெட்டில் குழந்தைகள் நலம் சம்பந்தப்பட்ட துறைகளில் நிதி ஒதுக்கீடு 2007 - 08-ல் 4.93 சதவிகிதமாக இருந்தது, 2008 - 09-ல் 4.13 சதவிகிதமாகக் குறைந்து, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2009 - 10 பட்ஜெட்டில் 4.15 சதவிகிதமாக உள்ளது. இந்த 0.2 சதவிகிதம் உயர்வின் மதிப்பு ரூ. 5,193 கோடி.

இதில் அதிகபட்சமாக கல்விக்கான செலவினம் ரூ. 3,515 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில், 1,450 கோடி கூடுதல் ஒதுக்கீடாக மத்திய அரசு நடத்தும் கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1,350 கோடி நடுநிலைக் கல்விக்கான பள்ளிகள், வகுப்பறைக் கட்டடங்களுக்கான திட்டமும், பிரதமர் அறிவித்த மாடல் பள்ளிகளுக்கான (வட்டார அளவில்) 350 கோடி திட்டமும் கல்விக்கான கூடுதல் செலவினத்தில் அடங்கும். மற்றபடி, மதிய உணவுத் திட்டத்திற்கோ, தொடக்கக் கல்விக்கோ எந்தவித நிதி உயர்வும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.

அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் 13,100 கோடியும் உலக வங்கிக் கடன் மூலமே செயல்படுத்தப்படுகிறது. அனைத்துக் குழந்தைகளுக்கும், சமமான, தரமான, கட்டாயத் தொடக்கக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை. இந்நிலையில் 6 வயது முதல் 14 வயது வரை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையின்படி நிறைவேற்ற வேண்டிய தொடக்கக் கல்விக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லை.

ஏற்கெனவே, தொடக்கக் கல்விக்கான 88 சதவிகிதம் நிதி, மாநில அரசுகளாலேயே ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநிலங்கள் தொடக்கக் கல்வியில் தனியார்மயத்தை அதிக அளவில் ஊக்குவித்து வருகின்றன. இதனால் கல்வியில் மிக அதிகமான பாகுபாடுகளைக் குழந்தைகள் சந்தித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த பட்ஜெட்டில் (4.15 சதவிகிதம்), 71 சதவிகிதம் மத்திய அரசின் கல்வித் திட்டங்களுக்காகவும், 11 சதவிகிதம் குழந்தைகள் ஆரோக்கியம் - மருத்துவம் (போலியோ சொட்டு மருந்து, பிற தடுப்பு மருந்துகள் திட்டம் போன்றவற்றுக்கானவை), 17 சதவிகிதம் குழந்தைகள் வளர்ச்சி (அங்கன்வாடிகள் - ஊட்டச்சத்து - ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை), 0.8 சதவிகிதம் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும் (ஆதரவற்ற, கைவிடப்பட்ட, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மையங்கள் அமைத்தல்) ஒதுக்கப்பட்டுள்ளது. இப் புள்ளிவிவரங்களை மேலோட்டமாகப் பார்த்தால் குழந்தைகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதுபோல் தோன்றும். ஆனால் இவை அனைத்தும் அவ்வப்போது வெளியிடும் திட்டங்களே அன்றி, நிலையான முதலீடுகள் அல்ல.

மேலும், மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போதும், அடிமட்ட அளவில் குழந்தைகளுக்கான தேவைகளைக் கருத்தில்கொண்டு பார்த்தால் இந்த ஒதுக்கீடு மிகச் சொற்பமே. 2005-ல் தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் உறுப்பினராக இடம் பெற்றிருந்த கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழுமம் தெரிவித்த கணக்கின்படி, இந்தியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும், தரமான, சமமான, கட்டாயத் தொடக்கக் கல்வி 14 வயது வரை உறுதி செய்ய வேண்டுமானால், தற்போது தொடக்கக் கல்விக்காகச் செலவிடப்பட்டு வரும் ரூ. 47,100 கோடியுடன் (2003 - 04) சேர்த்து கூடுதலாக ஒவ்வோர் ஆண்டும் 53,500 கோடி முதல் 72,700 கோடி வரை 6 ஆண்டுகளுக்கு மொத்தம் 3,21,000 கோடியிலிருந்து 4,26,000 கோடி வரை செலவிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இதில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் நிதியை மத்திய அரசு ஏற்கெனவே வசூலித்து வரும் கல்வி வரியைக் கொண்டு சரிக்கட்டலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கூடுதல் நிதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இவையனைத்தும் மத்திய அரசின் நிதிக் கொள்கையைப் பொறுத்தே செயல்படுத்தப்படும். தற்போதைய நிலை, மத்திய அரசு எப்படியாவது இக்கூடுதல் நிதிச்சுமையை தனியார்மயத்தைக் கொண்டு சமாளிக்க முடியுமா என்று பார்ப்பதாகவே தெரிகிறது. இதனால் பொதுப் பள்ளிக் கல்வி முறையின் மூலமான சமச்சீர்கல்வி என்பது எட்டாக்கனியாகி வருகிறது.

குழந்தைகளுக்கான அடிப்படைக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு இந்தப் பாடுபட்டு வரும் நிலையில், 2008 - 09-ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்காக அப்போது ஒதுக்கப்பட்ட 180 கோடியில், 54 கோடி மட்டுமே மாநிலங்களால் செலவிடப்பட்டதால், 2009 - 10-ம் நிதி ஆண்டில், அதற்கான ஒதுக்கீடு 60 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த பட்ஜெட் குறைப்பிற்கு காரணம், இதில் பெரும் தொகை ஆதரவற்ற குழந்தைகள் இல்லக் கட்டட உருவாக்கத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அவற்றை நடைமுறைப்படுத்த மாநில, மாவட்ட அளவில் உள்ள நிர்வாகச் சிக்கல்களே காரணம்.

மாவட்ட அளவில், அனைத்துத் துறைகளுக்கும் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற ஒரு நபரே பொறுப்பாக இருப்பதால், அவரால் அனைத்துத் துறைகளின் திட்டங்களையும் குறித்த நேரத்திற்கு நிறைவேற்ற இயலாமல் உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தவிர, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சட்டம், ஒழுங்கு, வருவாய் நிர்வாகம் ஆகிய மிகப்பெரும் இரண்டு பொறுப்புகள் உள்ளன. மேலும் ஓராண்டுக்கான நிதி, மத்தியிலிருந்து மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் வந்து சேர்வதற்குள் பாதி நிதியாண்டு முடிவடைந்து விடும். மீதமுள்ள காலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள், தரமில்லாமல், ஊழல் குறைபாடுகளுடனே நிறைவேற்றப்படுகின்றன அல்லது செலவிடப்படாமல் வைக்கப்படுகின்றன.

இவ்வாறு குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் அனைத்து செலவினங்களும், திட்டம் சார்ந்த நிதியாகவே உள்ளது. மேலும், அவை மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு மட்டுமே அதற்கான வரையறைகளைப் பின்பற்றிச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் பெரும்பாலான தொகை மாநிலங்களால் செலவிடப்படாமலேயே உள்ளது.

உதாரணமாக, ஆதரவற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பராமரிப்பிற்கான திட்டம் என்பது அரசின் கண்ணோட்டத்தில் குழந்தைகள் இல்ல கட்டடங்கள் அமைத்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம அளவில் உள்ளாட்சி மன்றங்களைக் கொண்டு, சமூகக் குழுக்களை வலுப்படுத்துவதன் மூலமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அரசுகள் தங்கள் விருப்பப்படி அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் திட்ட நிதியாகவே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

நிலையான முதலீடுகள் குழந்தைகளுக்கான முழுமையான வளர்ச்சி, பாதுகாப்பிற்கு உத்தரவாதம் செய்யப்படுவதில்லை. இதற்கு உதாரணம், கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம். 6 வயது வரையிலான பள்ளி முன்பருவப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தினை உறுதி செய்ய வேண்டிய இத்திட்டம் சரியான முதலீடின்றி, ஊழியர்களுக்கான மிகக் குறைந்த ஊதியத்துடனே செயல்படுத்தப்படுகிறது. தேசம் முழுமைக்கும் இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,705 கோடி மட்டுமே.

உள்ளாட்சி மன்றங்களுக்கு போதிய அதிகாரம் அளித்து, அதற்கான அரசின் நிதி முறையாக ஒதுக்கப்பட்டால் பல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். மேலும், சமூகத் துறைகளுக்கு மத்திய அரசின் நிதி திட்ட நிதியாக மட்டுமல்லாமல், திட்டம் சாரா முதலீடுகளாக அமைந்து, உள்ளாட்சிகள் உள்ளூர் சூழலுக்குத் தக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் நடைமுறையும் கொண்டு வரப்பட வேண்டும்.

மேலும், உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, குடிநீர் விநியோகம், குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகிய சமூக சேவைத் துறைகள், பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமையாக இல்லை. இவை தேர்தல் அறிக்கைகளில் மட்டுமே அலங்காரத்திற்காக இடம்பெறும் வாக்கியங்களாக உள்ளன.

மேலும், பாரம்பரியமாக இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், குழந்தைகளுக்கான மூலதனமாக அல்லாமல், மத்திய அரசின் நலத்திட்டங்களாகவே தொடர்வது குழந்தை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது.

போதுமான நிதி ஆதாரங்களும், ஊழியர்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினரான குழந்தைகளுக்கும் நேரிடையாக எந்தவித குளறுபடிகளும் இன்றி சென்றடைய வேண்டுமானால் மத்திய, மாநில உள்ளாட்சிகளின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

இவற்றுக்கான, நிதிச் சுமையை மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதோடு, முறையான வழிகாட்டுதலுடன், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே மக்களால் ஜனநாயகத்தில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டும். இதற்கான, கொள்கை, சட்டம், நிர்வாக மாற்றங்களும், சீர்திருத்தங்களும் இன்றைய உடனடி தேவை.
கட்டுரையாளர் : கல்பனா சதீஷ்
நன்றி : தினமணி

இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி இன்னமும் குறைவாகவே இருக்கிறது

இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி முன்பை விட அதிகரித்திருந்தாலும், உற்பத்தியுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவாகவே இருக்கிறது. உற்பத்தி அதிகமாக இருந்தாலும் அதற்கு தகுந்த ஏற்றுமதி இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் உபயோகம் அதிகமாகி இருப்பது, உற்பத்தி ஆன பழங்கள் உபயோகிப்போருக்கு சென்று அடைவதில் ஏற்படும் சிக்கல், விவசாயிகளிடம் கொஞ்சம் கொஞ்சமாக நிலங்கள் இருப்பது, சரியான உள்கட்டமைப்பு இல்லாதிருப்பது, பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது ஏற்படும் செலவு அதிகமாக இருப்பது, உலக அளவிலாள தரத்திற்கு பழங்களை உற்பத்தி செய்ய முடியாமல் போனது, சர்வதேச அளவில் போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் இந்தியாவில் இருந்து அதிக அளவில் பழங்கள் ஏற்றுமதி ஆவதில்லை என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிட்டால், 2008 - 09 நிதி ஆண்டில் ஜனவரி வரை உள்ள காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏற்றுமதி 17 சதவீதம் மட்டுமே அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2007 - 08 நிதி ஆண்டில் மொத்தம் 17.24 லட்சம் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. அது 2008 - 09 நிதி ஆண்டில் ஜனவரியுடன் முடிந்த காலத்தில் 20.26 லட்சம் டன்னாக மட்டுமே உயர்ந்திருக்கிறது என்றார் அவர்.
நன்றி : தினமலர்


தடுப்பு மருந்துக்கும் தட்டுப்பாடு

"நோய்த் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்டு, மருந்து உற்பத்தியைக் குறைத்துள்ளது பற்றி விசாரணை நடத்தப்படும்' என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் உறுதி கூறியுள்ளார்.

இந்தியாவில் 2.5 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை, கக்குவான், போலியோ, மஞ்சள்காமாலை போன்ற நோய்த் தடுப்பு மருந்துகள் அரசால் இலவசமாகத் தரப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் தற்போது கையிருப்பில் இல்லை. காரணம், தடுப்பு மருந்து தயாரிக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தற்போது தனியார் மருந்து உற்பத்தியாளர்கள்தான் இந்தத் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வருகின்றனர். இவர்களிடம் இரு மடங்கு விலை கொடுத்து அரசு வாங்குகிறது.

இமாலயப் பிரதேசத்தில் கசெüலி என்ற இடத்தில் உள்ள மத்திய ஆய்வு நிறுவனம், சென்னையில் பிசிஜி வேக்ஸின் லேபரட்டரி, குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனம் ஆகிய மூன்றும் இந்தியாவுக்குத் தேவையான நோய்த்தடுப்பு மருந்துகளில் 80 சதவீதத்தை தயாரித்து வந்தன. ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் தடுப்பு மருந்து உற்பத்திக்கான உரிமம் 2008, ஜனவரி 16-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.

இதற்குக் காரணமாக, மத்திய சுகாதாரத் துறை மேற்கோள் காட்டிய விஷயம் என்னவெனில், உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வில் இந்த மூன்று நிறுவனங்களும் "தரமான உற்பத்தி முறைகளை (ஜிஎம்பி) கடைப்பிடிக்கவில்லை என்று அறிக்கை அளித்துள்ளது' என்பதுதான்.

உலக சுகாதார நிறுவனம் இந்த விஷயத்தை 2007 ஆகஸ்ட் மாதம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தது என்பது உண்மையே. இருப்பினும், இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவின் 80 சதவீத தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கின்றன என்ற உண்மை நிலையை மத்திய அரசு உணர்ந்திருக்குமானால், தரமான உற்பத்தி முறைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கும். ஆனால், உரிமத்தை ரத்து செய்துவிட்டு, தனியாரிடம் தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்யத் தொடங்கியது மத்திய அரசு. இதனால் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையை இரு மடங்காக உயர்த்தின. தடுப்பு மருந்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.140 கோடியைக் கொடுத்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்து தேவைப்படும் மருந்தில் பாதி அளவுக்கே வாங்க முடிந்தது; இப்போது தட்டுப்பாடு!

""தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக இவ்வாறு உரிமம் ரத்து செய்யப்பட்டது என்று கூற முடியாது'' என்று குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் தெரிவித்திருப்பது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போன்றது.

மூன்று அரசு நிறுவனங்களின் நோய்த் தடுப்பு மருந்து தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், இந்த நிறுவனங்கள் தங்கள் மூலப்பொருள்களை திசை திருப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து எஸ்.பி. சுக்லா (முன்னாள் தனிச்செயலர்) உள்பட சில தன்னார்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இதுதான்: தட்டம்மை தடுப்பு மருந்துக்கான மூலப்பொருளை ஹைதராபாதில் உள்ள அரசு நிறுவனமான "இந்தியன் இம்யுனோலாஜிகல் லிமிடெட்' இலவசமாகத் தருகிறது. இருப்பினும்கூட, சென்னையில் உள்ள பிசிஜி வேக்ஸின் லேபரட்டரி அவற்றை சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் விலைக்கு வாங்கியது ஏன்? அதேபோன்று, குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனமும், தனியார் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டு, ரூ.17.8 கோடிக்கு தட்டம்மை மருந்து தயாரிக்கவும், இதன் உரிமத் தொகையில் (ராயல்டி) 70 சதவீதத்தை தனியார் நிறுவனத்துக்கு அளிக்கவும் முன்வந்தது ஏன்?

இத்தகைய தவறுகள் எங்கே, ஏன், யாரால் நடந்தது என்பது இன்றைக்கான பிரச்னை அல்ல. ஆனாலும், 2.5 கோடி குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் அரசு நிறுவனங்களுக்கு உரிமத்தை ரத்து செய்யும் முன்பாக மாற்று ஏற்பாடுகளைப் பற்றி ஏன் மத்திய அரசு யோசிக்கவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.

இதுபற்றி மத்திய அரசுக்குத் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. இந்தப் பிரச்னை, 2008 தொடக்கத்திலேயே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலும் தரப்பட்டுள்ளது. அதன் பிறகும் இந்தப் பிரச்னைக்கு உரிய கவனம் தரப்படாமல் இப்போது இந்தியா முழுவதற்கும் தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது என்றால், இதற்கு அப்போதும் இப்போதும் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிதானே முழுப்பொறுப்பு?
நன்றி : தினமணி

லேசான சரிவுடன் முடிந்த பங்கு சந்தை

இன்றைய பங்கு சந்தை லேசான சரிவுடன் முடிந்திருக்கிறது. வங்கிகளின் பங்குகள் மற்றும் ஹெச்யுஎல், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இன்போசிஸ், எல் அண்ட் டி, கிராசிம், ஐடியா, ஏபிபி, ரேன்பாக்ஸி, ஹீரோ ஹோண்டா நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. பவர், டெலிகாம், ரியாலிட்டி, சிமென்ட், மெட்டல் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இன்று நாள் முழுவதும் அவ்வளவாக மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 43.10 புள்ளிகள் குறைந்து 15,331.94 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 8.20 புள்ளிகள் குறைந்து 4,564.10 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


இந்தியாவின் அலட்சியம்

இந்திய, பாகிஸ்தான் உறவில் "ஹாட் நியூஸ்' பலுசிஸ்தான் விவகாரம். அணிசாரா நாடுகளின் மாநாட்டுக்குச் சென்ற மன்மோகனும், கிலானியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் பலுசிஸ்தான் என்ற சொல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பிறகே, இரண்டு நாடுகளுக்கு இடையேயும், இந்தியாவுக்குள்ளும் அறிக்கைப் போர் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தக் கூட்டறிக்கை பலுசிஸ்தான் பற்றி விவகாரமாக எதையும் கூறிவிடவில்லை. "இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டபோது, பலுசிஸ்தானுக்கு வெளியிலிருந்து அச்சுறுத்தல் இருக்கிறது என பாகிஸ்தானுக்குத் தகவல் கிடைத்திருப்பதாக மன்மோகனிடம் கிலானி கூறினார்' என்கிறது அந்த சர்ச்சைக்குரிய வாசகம். எங்கேயும் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும், இது பழிபோடும் முயற்சிதான்.

1970-களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவு மிக மோசமாக இருந்தது. பாகிஸ்தானின் ஒரு பகுதி, தனி நாடாக சுதந்தரித்துக்கொள்ள இந்தியா வெளிப்படையாக உதவி செய்தது. அப்போதைய சூழலில் அது நியாயமாகவே கருதப்பட்டது. பலுசிஸ்தான் தொடர்பாகவும் இந்தியா மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. அது அந்தக் காலம். இந்தியா இப்போது பலுசிஸ்தானை மறந்துவிட்டது. இன்றைய சூழலில், பலுசிஸ்தானை சுட்டிக்காட்டுவதை இந்தியா அனுமதித்தது மாபெரும் தவறுதான். அதற்குக் காரணம் அலட்சியம். அந்த அலட்சியம்தான் இப்போது விபரீதமாகியிருக்கிறது.

வெளியுறவுக் கொள்கையைப் பாதிக்கும் இன்னொரு விஷயத்திலும் இந்திய அரசு அலட்சியமாகவே இருக்கிறது. அது கிரிக்கெட் வாரியம். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்று பாகிஸ்தான் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அங்குள்ள ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை அவ்வப்போது நினைவூட்டுகின்றன. இப்படியொரு பயங்கரமான சந்தேகம் எழுந்ததற்கான அடிப்படைக் காரணம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான்.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என முதலில் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 49 போட்டிகளில் இந்தியாவுக்கு 21 போட்டிகளும், பாகிஸ்தானுக்கு 14 போட்டிகளும், இலங்கைக்கு 8 போட்டிகளும், வங்கதேசத்துக்கு 6 போட்டிகளும் ஒதுக்கப்பட்டன. நொடிந்து கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஒரு வாய்ப்பாகவே கருதப்பட்டன.

இந்தச் சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைக் காரணம்காட்டி, பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்குப் பாதுகாப்பில்லை என்னும் முடிவுக்கு ஐசிசி வந்தது. போட்டிகளை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடமிருந்து பறிக்கப்பட்டது.

போட்டிகளை துபை, சார்ஜா, அபுதாபி போன்ற இடங்களில் நடத்துகிறோம் என்கிற பாகிஸ்தானின் கோரிக்கையும் எடுபடவில்லை. இந்த இடங்களில் பாதுகாப்பு, போக்குவரத்து, தங்கும் வசதிகளுக்கு எந்தக் குறைவும் இல்லை; நிர்வாகச் சிக்கலும் இல்லை. அப்படியிருந்தும் இந்தக் கோரிக்கையை ஏற்காததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஏக அதிருப்தி.

இறுதியில், பாகிஸ்தானில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட 14 போட்டிகளில் ஒரு அரையிறுதிப் போட்டி உள்ளிட்ட 8 போட்டிகள் இந்தியாவுக்கு மாற்றப்பட்டன. உலகக் கோப்பை போட்டிகளின் தலைமையிடம் லாகூரிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. இப்படியாக ஒரு நோஞ்சான் கிரிக்கெட் வாரியத்தை எல்லோருமாகச் சேர்ந்து நசுக்கினார்கள்.

இதெல்லாம் ஐசிசியின் முடிவு என்று கூறுவது காதில் பூச்சுற்றும் வேலை. உண்மையில் ஐசிசியின் எந்தவொரு முடிவையும் மாற்றும் வலு இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கிறது. சைமண்ட்ஸ்-ஹர்பஜன் விவகாரம் உள்ளிட்ட பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போதும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோதும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன பேசியது என்பது அனைவருக்கும் தெரியும்.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் பாகிஸ்தானில் சூழ்நிலை மாறக்கூடும். ஒரே மாதத்தில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற முடியும் என்றால், சூழ்நிலைக்கேற்ப கொஞ்ச காலம் கழித்து முடிவெடுக்கலாமே? அப்படியில்லாமல், அவசர, அவசரமாக பாகிஸ்தானிலிருந்து போட்டிகளை மாற்றுவதற்கு, இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு கொழுத்த லாபம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், பாகிஸ்தானியர்கள் அப்படிச் சந்தேகப்படுவதற்கு கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான் காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நல்லுறவை ஏற்படுத்துவதற்கு அரசுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களிடமும் கசப்புணர்வு அதிகரிக்கும்.

இப்படி, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்க, அதற்கு நேரெதிர் பாதையில் கிரிக்கெட் வாரியம் சென்று கொண்டிருக்கிறது. உரிய கட்டுப்பாடுகளை விதிக்காதவரை, விளையாட்டு என்கிற பெயரில் வெளியுறவுக் கொள்கையுடன் இவர்கள் விளையாடிக்கொண்டுதான் இருப்பார்கள். இன்னும் அலட்சியமாக இருந்தால், நாட்டுக்கு ஆகாது.

கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி

சீனா தயாரிப்பு சாக்லேட்களுக்கு இந்தியா தடை விதித்தது

பளபளப்பான கவர்களில் பார்சல் செய்யப்பட்டு, பார்ப்பவர்களை கவர்ந்திழுத்து வந்த சீனா தயாரிப்பு சாக்லேட்கள் இனிமேல் இந்தியாவில் கிடைக்காது. அந்நாட்டு சாக்லேட்களில் மெலமைன் என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று பார்லிமென்ட்டில் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சீன தயாரிப்பு பால் மற்றும் பால் பொருட்களுக்கு இந்தியா தடைவிதித்திருக்கிறது. இப்போது அந்த வரிசையில் சாக்லேட்டும் சேர்ந்திருக்கிறது. சீன தயாரிப்பு பால் பொருட்களிலும் நச்சு கெமிக்கல் கலந்திருப்பது தெரிய வந்து, அதற்கு பல நாடுகள் தடை விதித்தன. அப்போது இந்தியாவும் தடை விதித்தது. ஆனால் இந்தியாவுக்குள் வரும் சீன தயாரிப்பு சாக்லேட்கள் பெரும்பாலும் முறையான வழிமுறையில் வருவதில்லை என்றும், கள்ள மார்க்கெட் வழியாகத்தான் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவில் சாக்லேட்களுக்கு இருக்கும் சுமார் ரூ.2,000 கோடி சந்தையில், சீன சாக்லேட்கள் வெறும் 5 - 10 சதவீத பங்கையே வைத்திருக்கின்றன. எனவே இந்த தடையால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்கிறார்கள் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பிரிட்டனில் சராசரியாக ஒவ்வொருவரும் 10 கிராம் சாக்லேட்டை சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் சராசரியாக ஒவ்வொருவரும் 40 கிராம் சாக்லேட்டை சாப்பிடுகிறார்கள் என்கிறது புள்ளி விபரம்.
நன்றி : தினமலர்


புதிய 50 ரூபாய் நோட்டு

கடந்த 2005ல் வெளியிடப்பட்ட 50 ரூபாய் நோட்டில், சிறு மாற்றம் செய்து புதிய நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இதுகுறித்து, இந்திய ரிசர்வ் வங்கியின் பொதுமேலாளர் எம்.எம். மாஜி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி.சுப்பாராவ் கையெழுத்திட்ட, மகாத்மா காந்தி வரிசை 2005ம் ஆண்டைச் சேர்ந்த ரூபாய் நோட்டுகளில் இரு வரிசை எண்களுக்கும் நடுவே உட்பொதிந்த ஆங்கில எழுத்து இல்லாத 50 ரூபாய் நோட்டுகளை ஆர்.பி.ஐ., விரைவில் வெளியிட உள்ளது. இந்த மாற்றம் தவிர, இப்போது வெளியிடப்படும் நோட்டுகளின் வடிவம் ஆகஸ்ட் 24, 2005ல் வெளியிடப்பட்ட கூடுதலான, புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளை எல்லா விதத்திலும் ஒத்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி, இதற்கு முன் வெளியிட்ட அனைத்து 50 ரூபாய் நோட்டுக்களும் சட்டப் படி செல்லத்தக்கவையே.
நன்றி : தினமலர்


கற்றதனால் ஆய பயன் என்கொல்...

கல்வித்துறையில் மிகப்பெரிய மாறுதல்கள் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்த பின் பல விவாதங்கள் உருவாகியுள்ளன. பள்ளிக் கல்வியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவை இல்லை எனும் அதிரடி அறிவிப்பு முதல் உயர்கல்வியில் பல சீர்திருத்தங்கள் குறித்த யஷ்பால் கமிட்டி அறிக்கையின் பல பரிந்துரைகள்வரை பல முக்கியமான முடிவுகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.

ஒரு தேசத்தின் நலன் அதன் பொருளாதார முன்னேற்றத்திலும், அவ்வாறான முன்னேற்றத்தினால் கிடைக்கும் அபரிமிதமான தேச வருமானம் எல்லா மக்களுக்கும் சென்றடையச் செய்வதிலும், அவ்வாறு வருமானம் பெற்ற மக்கள் வளமுடனும் எல்லா வசதிகளுடனும் வாழ்க்கையை நடத்திச் செல்வதிலும் அடங்கும்.

ஆனால், தேசநலன் என்பதே கல்வியினால்தான் உருவாக்கப்பட முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு ஆராய்ச்சியுடன்கூடிய உயர்கல்வி, திறமையான பொறியாளர்கள், நிதித்துறை மற்றும் நிர்வாகத்திறன் பெற்ற மேலாளர்கள் முதல் கணினிப் பொறியாளர்கள்வரை கல்வி நிலையங்களிலிருந்து உருவாகி வரவேண்டும். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழிலாளிகளின் உற்பத்தியை பல பள்ளிகளும், ஐ.டி.ஐ. போன்ற தொழிற்கல்வி நிலையங்களும் செய்கின்றன.

வேலைவாய்ப்புப் பெருகி மக்களிடம் வருமானம் அதிகரிக்கும்போது வளமான வாழ்க்கைத் தரம் உருவாக சுகாதாரமும் சுகாதாரத்துறைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் மருந்தாளுநர்கள் வரை சுகாதாரக் கல்வியினால் பெற முடிகிறது.

ஒரு நாட்டின் சமூக அமைப்பும் அரசும் இரண்டறக் கலந்து கல்விக் கட்டமைப்பை உருவாக்கி மூன்று தேவைகளை எதிர்கொள்ளும்.

ஒன்று, நாட்டின் பொருளாதார நடவடிக்கையில் கல்வியின் பங்கேற்பு எத்தகையது என்பது பற்றியது. இந்தியா காலனி அரசிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் நமது பொருளாதார நடவடிக்கை என்பது நாட்டின் இயற்கை வளத்தைச் சுரண்டி இங்கிலாந்திற்கு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்து, அங்கே பல பொருள்கள் பெரிய தொழிற்சாலைகளில் உருவாகி பின் அவை இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது. இச்சூழ்நிலையில் நமது மக்கள் கல்வி கற்று பெரிய தொழிற்சாலைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. எனவே நிறையப் பேர் கல்வி கற்க வேண்டிய அவசியமும் உருவாகவில்லை. அதனால் அதிக கல்வி நிலையங்களும் கிடையாது.

வசதி படைத்தவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் பென்சில்கள், அழிப்பான்கள்வரை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட காலம் அது. மேலும் இங்கு கல்வி நிலையங்கள் அதிகம் உருவாகி இந்தியர்களின் கல்வியறிவு பெருகி அறிவு முதிர்ச்சியின் காரணமாக நம் நாடு ஏன் அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படலாம் என்ற காரணத்தினால் கல்வி வளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொண்டது அன்னியர் ஆட்சி. உலகின் வேறு பல அடிமை நாடுகளிலும் இதுதான் நிலைமை.

இரண்டாவதாக, கல்வியின் மூலம் ஏற்படும் முன்னேற்றம், வளர்ச்சித் திட்டங்களின் தன்மையைப் பொருத்து நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். உதாரணமாக, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் அடித்தளத்திற்கு வித்திட்ட பாரதப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நமது நாட்டிலேயே கனரக தொழிற்சாலைகளை அரசுத் துறையில் நிறுவி பல பெரிய இயந்திரங்கள், ரயில் எஞ்ஜின்கள், ரயில் பெட்டிகள், லாரிகள், பஸ்கள், லேத் மிஷின்கள், நூற்பாலை இயந்திரங்கள், மின்னுற்பத்தி இயந்திரங்கள் என நூற்றுக்கணக்கான முதலீட்டு இயந்திரங்களை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்தினார். இதன் விளைவு வேலைவாய்ப்பும், சிறுதொழிலும், நம் நாட்டில் பல்கிப் பெருகி உற்பத்தி வருமானம் வெளியே சென்று விடாமல் அதன் முழுப்பலனும் நம் தேசத்திற்கே கிடைத்தது.

இதுபோன்ற ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கி அகில உலகிலும் வளர்ச்சி பெறாத ஏழை நாடுகளுக்கும் முன்மாதிரியாக இந்தியப் பொருளாதாரம் திகழ்ந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் ஐ.ஐ.டி. முதல் பல தொழிற்கல்வி நிலையங்களும், பல கல்லூரிகளும் பள்ளிகளுமே ஆகும். தொழில் வளர்ச்சியின் தன்மையைப் பொருத்துத்தான் நமது கல்வி வளர்ச்சியின் பலன் நம்மாலேயே உருவாக்கி உபயோகப்படுத்த முடிந்தது.

மூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சியுடன் சேர்ந்து சமூக நீதி அடிப்படையில் கல்வியும் அரசின் வேலைவாய்ப்பும் சமூகத்தில் எல்லா பிரிவினருக்கும் சென்றடையும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் உருவாயின. பெருவாரியான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரும் கல்வி நிலையங்களை நாடும் சூழ்நிலை உருவாகி கிராமங்கள்தோறும் பள்ளிகளும் சிறு நகரங்களில் கல்லூரிகளும் உருவாயின.

மேலே கூறப்பட்ட மூன்று நிலைப்பாடுகளுக்கும் வித்திட்ட காலம் நேரு சகாப்தம் என மேலைநாட்டு பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் ஹடேகர், டோங்க்ரே ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் நேரு சகாப்தம் எனக் கூறும் காலம் 1950 முதல் 1964 வரை. அதாவது இந்திய திட்டக்கமிஷன் உருவாகியதிலிருந்து நேரு மறைந்தது வரை. அப்போது இடப்பட்ட அடித்தளத்தில் உருவான கல்வி, பொருளாதாரக் கட்டமைப்பு நமது நாட்டை இன்றுவரை உலகப் பொருளாதாரப் பின்னடைவு தாக்காத வகையில் பாதுகாக்கிறது எனலாம்.

இதே காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்த பல நாடுகள் கனரக இயந்திரங்களின் தயாரிப்பில் ஈடுபடாமல் பெரிய தொழிற்சாலைகளை நிறுவாமல் வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்தன. இதனால் இந்தியாவிற்கு கிடைத்தது போன்ற பரவலான பொருளாதார வளர்ச்சியும் கல்வித்துறையின் அபிரிமிதமான வளர்ச்சியும் அந்நாடுகளுக்குக் கிடைக்காமல் போயிற்று. இந்தச் சாதனையை இன்றளவும் நாம் பெருமையுடன் பேசிக்கொள்வதுடன் அதன் பலனையும் அனுபவித்து வருகிறோம்.

கல்வியின் முக்கியமான இரண்டு அம்சங்கள் எல்லோருக்கும் கல்வி என்பதும், தரம் வாய்ந்த கல்வி என்பதுவுமாகும். நிறைய பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்போது கல்வி விரிவாக்கம் உருவாகிறது. ஆனால், பாடத்திட்டங்களிலும், பயிற்சி முறையிலும் தரம் உயரும்போதுதான் நமது கல்வி தனது சீரிய பணியை நாட்டின் முன்னேற்றத்திற்கு வழங்க முடியும். தரமான கல்வியில் அறிவு வளர்ச்சியும், புத்திசாலித்தனமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது வளர்ந்துவிட்ட நாடுகளில் உள்ள நடைமுறை. ஆனால் நமது நாட்டில் அறிவும் புத்திசாலித்தனமும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஊட்டப்படுகின்றனவா எனும் கேள்வி எழுகிறது.

இதுபற்றிய கருத்தரங்கு ஒன்றில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நான் கலந்துகொண்டபோது இரண்டு விஷயங்களைப் பற்றி பேசிய ஞாபகம் இருக்கிறது. இன்றைய பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்கும் போதனை முறைகள், பரீட்சை ஆகியன அறிவு வளர்ச்சிக்கு உதவுமா என்ற கேள்வியை எடுத்து விவாதித்தோம்.

உதாரணமாக, ஒரு பட்டப்படிப்பு படிக்கும் மாணவன் விஞ்ஞானப் பிரிவில் விலங்கியல் பாடத்தில் மூன்று ஆண்டுகள் படிக்கிறான். அவனுக்கு ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் போதிக்கும் பாடங்களை மூன்று மணி நேரத்தில் ஒரு பரீட்சையில் அவன் கேள்விகளுக்கு எழுதும் விடையை வைத்து அவனைச் சோதிக்கிறது இன்றைய பரீட்சை முறை.

அதிலும் பாடம் போதித்த ஆசிரியர்கள் வேறு, பரீட்சைக்கு கேள்விகளை உருவாக்கும் ஆசிரியர் வேறு. மாணவன் பரீட்சையில் எழுதிய விடைகளைத் திருத்துபவர் வேறொரு ஆசிரியர். கண்ணுக்குத் தெரிந்த ஆசிரியர் போதித்த பாடங்களைக் கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் உருவாக்கிய கேள்வித்தாள்கள் மூலம் விடையளித்து, அவ்விடைகளை கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் மதிப்பீடு செய்யும் இன்றைய பரீட்சை முறையில் ஒரு மாணவனின் அறிவு வளர்ச்சியை மதிப்பீடு செய்ய முடியுமா? மாணவனின் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறமையை வேண்டுமானால் மதிப்பீடு செய்ய முடியும் என்பதுதான் அந்த விவாதத்தில் கண்டறிந்த முடிவு.

அடுத்து, நாம் பாடங்களைப் போதிக்கும்போது முழுமையாக எல்லா விஷயங்களும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனவா அல்லது மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேயும் தன்மையில் பாடபோதனைகள் உள்ளனவா எனும் கேள்வி எழுந்தது.

அதுசமயம், ஒரு அறிவியல் ஆசிரியர் நல்லமுறையில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன எனப் பதில் அளிக்க, அவரிடம், "ஐயா, நீங்கள் எம்.எஸ்ஸி. படித்தவர். அந்தப் பட்டமாகிய, மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் என்பதில் உள்ள சயின்ஸ் (விஞ்ஞானம்) என்றால் என்ன என்பதைக் கூற முடியுமா?'' எனக் கேட்க, அவர் கொஞ்சம் தயங்கினார்.

""பரிசோதனைகளின் மூலம் நிரூபித்துக் காட்டக்கூடிய பல விஷயங்களையும் விதிமுறைகளையும் உள்ளடக்கியது சயின்ஸ்'' எனும் கிரேக்கர் காலத்து கூற்றினை நான் கூறியபோது உள்ளபடியே அந்தக் கூட்டத்தில் இருந்த எல்லோருக்கும் நமது கல்வி முறையில் ஆழமான, விரிவான போதனைகள் இல்லை என்ற ஆதங்கம் உருவானது. எல்லா பொருளையும் முழுமையாகக் கற்பிக்கும் திறன் ஆசிரியர்களுக்கு வேண்டும் என கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.

அடுத்து, அறிவும் புத்திசாலித்தனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விஷயங்கள் எனும் உண்மை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதே கருத்தரங்கில், புத்திசாலித்தனம் எனும் வார்த்தைக்கு என்ன விளக்கம் எனக் கேட்க, பலரும் தயங்க, ""அனுபவத்தின் மூலம் நிறைய விஷயங்களைக் கற்று, அவற்றை மனதில் தேக்கி வைத்துக் கொள்ளும் திறமையும், தேவையானபோது அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்து அன்றாடம் உபயோகிக்கும் திறமையே புத்திசாலித்தனம்'' எனக் கூறினோம். புத்திசாலித்தனத்திற்கு பட்டப்படிப்பு தேவையில்லை, ஆனால் வெகுவாக உதவி செய்யலாம் என விவாதம் தொடர்ந்தது.

அறிவு வளர்ச்சி என்பது கல்லூரிப் படிப்புடன் முடிந்துவிடுவதில்லை. படிப்பு தொடர்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. நம்மில் பலர் பட்டம் பெற்று ஒரு வேலையில் சேர்ந்தபின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாடச் செய்திகளைக்கூடப் படிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களின் அறிவு அதற்குமேல் வளர்வதில்லை என்பதை ஹஸ்லிட் எனும் அறிஞர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: ""இவர்கள் இறந்தபின் இவர்களது கல்லறையில் நான் எழுத விரும்புவது - 30 வயதில் இறந்த இவரை 60 வயதில் இங்கே அடக்கம் செய்துள்ளோம்''.

இதுபோன்ற அடிப்படைக் கருத்துகளை உள்ளடக்கி கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா? அப்படி ஒரு கல்விக் கொள்கை தீர ஆலோசித்தும் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்டால் மட்டுமே, நாம் எதிர்பார்ப்பதுபோல, உலக அரங்கில் நாம் வளர்ச்சி அடைந்த நாடுகளைப்போலத் தரமான கல்வியை அளிக்கும் நாடு என்கிற பெயர் பெற முடியும். கல்வித்துறையில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அந்த மாறுதல்கள் எப்படிப்பட்டவை என்பதுதான் கேள்வி!

கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி

Monday, July 27, 2009

வளைகுடா நாடுகளிலேயே யூ.ஏ.இ., தான் இந்தியர்களின் விருப்ப நாடாக இருக்கிறது

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு, அங்குள்ள ஐக்கிய அரபு குடியரசு ( யு.ஏ.இ.,) தான் இன்னமும் மிகவும் விருப்பமான நாடாக இருக்கிறது. அங்கு சுமார் 15 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக சென்றிருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய அரபு குடியரசில் இந்திய தூதராக இருக்கும் வேனு ராஜாமணி இது குறித்து கருத்து தெரிவிக்கையில் சுமார் 15 லட்சம் இந்தியர்கள் இங்கு இருக்கிறார்கள். அதில் சுமார் 12 லட்சம் பேர் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தென் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திய பிரதேஷில் இருந்து வந்தவர்கள் என்றார் அவர். ' வளைகுடா நாடுகளின் பொருளாதார சீர்குழைவால் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்வர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ' என்பது குறித்து, சமீபத்தில் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ( சிடிஎஸ் ) நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய வேனு ராஜாமணி இவ்வாறு தெரிவித்தார். அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களிடையே ஐக்கிய அரபு குடியரசு தான் ஒரு விருப்பமான நாடாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. அதற்கு அடுத்ததாக சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், மலேஷியா மற்றும் பஹ்ரெய்ன் நாடுகள் இருக்கின்றன. ராஜாமணி மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, 2007 ஐ விட 2008 ல் 11.87 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


மாணவர்களுக்குத் தலைமை தேவை!

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், கல்வியியல் என ஆயிரக்கணக்கான கல்லூரிகள் உள்ளன. இதில், பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, அரசுக் கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்களும், தமிழ் மன்றம், துறைவாரியான மன்றங்களுக்குத் தேர்தல்களும் நடத்தப்பட்டு வந்தன.
தேர்தல் தொடர்பாக மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்னைகள், பூசல்களைக் காரணம் காட்டி பல கல்லூரிகளில் தேர்தல் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது.

அரசு நிதியுதவி, சுயநிதிக் கல்லூரிகளில் சிலவற்றில் மட்டும் இத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. பல கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் அல்லது கல்லூரி நிர்வாகத்துக்கு நெருக்கமானவர்களின் வாரிசுகளை பேரவை நிர்வாகிகளாக அறிவித்து விடுகின்றனர்.

மாணவர்களைத் தலைமைப் பண்புக்குத் தகுதி அடையச் செய்தல், அவர்களின் தனித் திறன்களை வெளிப்படுத்துதல், கல்விசாராப் பணிகளில் ஆர்வத்தை உண்டாக்குதல், அவர்களின் பிரச்னைகளை அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றுக்காகவேதான் கல்லூரிகளில் மாணவர் பேரவைகள் உருவாக்கப்பட்டன.

இவை இன்று புறக்கணிக்கப்பட்டு, மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தப்படாமலும், கண்துடைப்புக்காக பேரவை நிர்வாகிகளை நியமித்தும் கல்லூரி நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக கல்வித் துறையோ அல்லது அரசோ கண்டும் காணாமலும் இருந்து வருகின்றன. தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட மாணவர் சக்தியே காரணமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வீழ்ந்து, 1967-ம் ஆண்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்க இந்தி எதிர்ப்புப் போராட்டமும், அதற்கு மாணவர்களும், இளைஞர்களும் அளித்த ஆதரவும் ஒரு காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.

அக்காலக்கட்டத்தின்போது, திமுகவைச் சேர்ந்தவர்கள் பல கல்லூரிகளில் மாணவர் பேரவைகளிலும், தமிழ் மன்றம் உள்ளிட்டவைகளிலும் தேர்தல்களின் மூலம் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் மூலமாக கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நடந்த விழாக்களில் கலந்துகொண்ட திமுக முன்னணித் தலைவர்கள் தங்களது கருத்துகளை மாணவர்கள் மத்தியில் பரப்பி, இயக்கத்தை வளர்த்தனர். அன்று திமுக ஆட்சிப் பொறுப்பேற்க மாணவர் சக்தியைத் திரட்டக் காரணமாக அமைந்தது கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அமைந்த மாணவர் பேரவைகளே.

இன்றோ தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் முறையாக மாணவர் பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினரும், மாணவர் அமைப்புகளும் விடுக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் தமிழக அரசு உள்ளது.

வட மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆண்டுதோறும் முறையாக மாணவர் பேரவைக்குத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இத்தேர்தல்களில் காங்கிரஸ் சார்பு மாணவர் அமைப்பான என்எஸ்யூஐ, பாஜக சார்பு மாணவர் அமைப்பான ஏபிவிபி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளான எஸ்எப்ஐ, ஏஐஎஸ்எப் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் அமைப்புகளின் சார்பில் பிரதிநிதிகளை நிறுத்துவர்.

பொதுத்தேர்தல்போல இத்தேர்தல்களுக்கும் பல்கலைக்கழகம், கல்லூரி வளாகங்களில் பிரசாரம் நடக்கும். ஆரோக்கியமான போட்டிகளுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் பேரவைகள், நற்பணிகள் பலவற்றை ஆற்றி வருகின்றன. இதோடு, பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகங்கள் திறம்படச் செயல்படவும், மாணவர் பிரச்னைகளை உடனுக்குடன் களையவும் அவை உதவி புரிகின்றன.

தமிழகத்திலோ ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே இத்தேர்தல் நடத்தப்படுகிறது. இச்சூழ்நிலை மாற வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் தேர்தல்கள் முறையாக, ஜனநாயக முறைப்படி நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

கல்லூரிகளில் அமைக்கப்பட்ட மாணவர் பேரவைகள் மூலம், பல்கலைக்கழக அளவில் மாணவர் பேரவைகளை உருவாக்கவும் வேண்டும்.

இப்பேரவைகளில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சிலரை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு செய்யும் மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் சூழ்நிலை தென்படுகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவியர் மன்றங்களும் உருவாக்கப்பட வேண்டும்.

அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தல் முறையாக நடைபெறவும், பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவை உருவாக்கப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை.

இந்த மாணவர் அமைப்புகள் அரசுக்கு எதிரான ஆதரவைப் பெற்றுவிடும் என்று ஆட்சியில் இருப்பவர்களும் இருந்தவர்களும் பயப்படுவதாலோ என்னவோ, கோரிக்கையை நமது ஆட்சியாளர்கள் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. அதற்கு பயம்தான் காரணமாக இருக்க முடியும்!

கட்டுரையாளர் :தி.நந்தகுமார்
நன்றி : தினமணி