Tuesday, August 26, 2008

கிராமங்களை தேடி செல்கிறது ஹெச்.டி.எஃப்.சி பேங்க்

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியான ஹெச்.டி.எஃப்.சி., கிராமங்களில் அதன் கிளைகளை அதிக அளவில் துவக்க திட்டமிட்டிருக்கிறது. இதுவரை பெரிய நகரங்களில் மட்டுமே கிளைகளை வைத்திருந்த ஹெச்.டி.எஃப்.சி., வங்கி இப்போது கிராமங்களை தேடி செல்வதற்கு காரணம், அங்கிருக்கும் விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களால் பெரிய அளவில் பேங்கிங் வேலைகள் நடக்கின்றன என்பதால்தான். அவர்களை தன் பக்கம் இழுக்கவே கிராமங்களில் கிளைகளை துவங்க அந்த வங்கி முன் வந்திருக்கிறது. மெட்ரோபாலிடன் நகரங்களில் இருப்பதுபோலவே கிராம கிளைகளும் கோர் பேங்கிங் வசதியால் இணைக்கப்பட்டிருக்கும் என்று ஹெச்.டி.எஃப். சி.,யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அடுத்த நிதி ஆண்டில் நாங்கள் இந்தியா முழுவதும் 200 புதிய கிளைகளை திறக்க இருக்கிறோம். அதில் 100 க்கும் அதிகமான கிளைகள் கிராமப்புறங்களில் திறக்கப்படும் என்று ஹெச்.டி.எஃப்.சி., பேங்கின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ஜி.எஸ்.கோபிநாத் தெரிவித்தார். கிராமப்புறங்களில் நாங்கள் கிளைகள் துவங்குவதன் முக்கிய நோக்கமே அங்குள்ள விவசாயிகளையும், சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களையும் வங்கிகளை பயண்படுத்த வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றார் அவர். இப்போது தென் இந்தியாவில் அவர்களுக்கு இருக்கும் 325 கிளைகளில் 125 கிளைகள், கிராமப்புறங்களிலும் செமி அர்பன் ஏரியாவிலும் இருக்கிறது.
நன்றி :தினமலர்


சிறிது உயர்ந்து முடிந்தது பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சென்செக்ஸ் குறைந்துகொண்டுதான் இருந்தது. மாலை வர்த்தகம் முடிய 10 நிமிடங்கள் இருக்கும் வரை இதே நிலைதான் நீடித்தது. ஆனால் கடைசி 10 நிமிடங்களில் இழந்த புள்ளிகள் மீட்கப்பட்டு, நேற்றைய நிலையில் இருந்து கொஞ்சம் உயர்ந்து சந்தை முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 31.87 புள்ளிகள் மட்டும் ( 0.22 சதவீதம் ) உயர்ந்து 14,482.22 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2.15 புள்ளிகள் மட்டும் ( 0.05 சதவீதம் ) உயர்ந்து 4,337.50 புள்ளிகளில் முடிந்தது. பேங்கிங், கேப்பிடல் குட்ஸ், பவர், சிமென்ட் மற்றும் குறிப்பிட்ட சில டெக்னாலஜி துறை பங்குகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஹெச்.டி.எஃப்.சி., வங்கி 3.92 சதவீதம், சத்யம் 3.25 சதவீதம், ஹெச்.சி.எல்.,டெக் 2.77 சதவீதம், விப்ரோ 2.25 சதவீதம், பெல் 1.96 சதவீதம் உயர்ந்திருந்தது.

நன்றி : தினமலர்


Technorati Profile

ரூ.3,300 கோடிக்கு பிரிட்டன் கம்பெனியை வாங்குகிறது இன்ஃபோசிஸ்

பெங்களுருவை சேர்ந்த பிரபல சாப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், ரூ.3,300 கோடி ரொக்கமாக கொடுத்து பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸான் குரூப்பை வாங்குகிறது. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் எடுத்துள்ள மூன்றாவது மிகப்பெரிய விரிவாக்க முயற்சி இது. ஜூன் 30,2008ம் தேதியுடன் முடிந்த காலத்தில் இன்ஃபோசிஸிடம் ரூ.7,500 கோடி உதிரி பணம் கையிருப்பு இருந்ததால் ஆக்ஸான் நிறுவனத்தை பணமாக கொடுத்து வாங்க இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிறுவனம் நவம்பரில் வாங்கப்பட்டு விடும் என்கிறார்கள். அவ்வாறு வாங்கி விட்டால் இந்திய ஐ.டி.கம்பெனி ஒன்று அதிக விலை கொடுத்து வாங்கும் மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனமாக இதுவாகத்தான் இருக்கும். கடந்த வருடத்தில் விப்ரோ நிறுவனம், அமெரிக்க நிறுவனமான இன்ஃப்ரோ கிராஸிங்தை ரூ.2,400 கோடிக்கு வாங்கியிருந்தது. அதுதான் இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட நிறுவனமாக சொல்லப்பட்டு வருகிறது. ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனம் 2003ம் ஆண்டு ஆஸ்திரேலிய நிறுவனமான எக்ஸ்பர்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை 23 மில்லியன் டாலருக்கும், 2007ம் ஆண்டு பிலிப்ஸ் குலோபல் பிபிஓ நிறுவனத்தை 250 மில்லியன் டாலருக்கும் வாங்கியிருந்தது.

நன்றி :தினமலர்



டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன் ?

ஏப்ரல் - ஜூலை மாதத்தில் இந்தியாவின் டீசல் தேவை ( டிமாண்ட் ) சராசரியாக 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மின் உற்பத்தி நிலையங்களில் டீசலுக்கான தேவை அதிகரித்திருப்பதால் தான் இந்த உயர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்தியாவில் டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. டீசலுக்கான தேவை அதிகரித்திருப்பதாலும் இந்தியாவில் கிடைக்கும் பெட்ரோலிய உற்பத்தி குறைந்திருப்பதாலும் நாம் 2008 - 09 ல் 4.14 மில்லியன் டன் டீசலை இறக்குமதி செய்ய வேண்டியதாகிறது. இதில் 1.267 மில்லியன் டன் டீசலை ஏப்ரல் - ஜூலையில் இறக்குமதி செய்திருக்கிறோம் என்று ஐ ஓ சி சேர்மன் புகாரியா தெரிவித்தார். மேலும் இப்போதுள்ள டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக, இப்போது லிட்டருக்கு ரூ.34.80 என்ற விலையில் விற்கப்படும் டீசலை, தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு விற்கும் போது, லிட்டருக்கு ரூ.57 என்ற விலையில் விற்கலாம் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன. எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக டீசலை வாங்கும் இந்திய ரயில்வே, மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ.57 என்று விலை வைக்கலாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய பெட்ரோலிய துறைக்கு பரிந்துரை செய்திருக்கிறது. மேலும் போக்குவரத்து துறை மற்றும் விவசாயத்துறைக்கு தள்ளுபடி விலையில் சப்ளை செய்யும் டீசலுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் பெட்ரோலிய அமைச்சர் முர்ளி தியோரவை சந்தித்து டீசல் தட்டுப்பாடு குறித்து விவாதித்த எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அப்போது, ஏப்ரல் - ஜூலை மாதங்களில் மட்டும் இந்தியாவில் டீசலுக்கான தேவை 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்த 18 சதவீததேவை அதிகரிப்பு பெரும்பாலும் மின்நிலையங்களால்தான் ஏற்பட்டிருக்கிறது என்றனர். போக்குவரத்து, விவசாயம் போன்ற துறைகளில் டீசலின் தேவை 10 - 12 சதவீதமும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் டீசலின் தேவை 30 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றனர்.
நன்றி : தினமலர்


ஏர் இந்தியாவுக்கு ரூ. 2,000 கோடி நஷ்டம்

'விமான எரி பொருளுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, ஏர் இந்தியாவுக்கு இந்த நிதி ஆண்டில், ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்படும்'என தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான போக்குவரத்து வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த சில மாதங்களாக விமானங்களுக்கு பயன்படுத்தும் எரி பொருளின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக, விமான பயண கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதிக வருவாய் இல்லாத வழித்தடங்களுக்கான விமான போக்குவரத்து குறைக்கப்பட்டது. விமான வழித் தடங்களும் மாற்றி அமைக்கப்பட்டன. இதனால், பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இது போன்ற பிரச்னைகளால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இந்த நிதி ஆண்டில், ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு விமான போக்குவரத்து வட்டாரங்கள் கூறின.ஏர் இந்தியா தலைவர் ரகு மேனன் கூறுகையில், 'எரி பொருள் விலை அதிகரித்துள்ளதால், பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், வருவாய் இழப்பு ஏற்படலாம். இருந்தாலும், செப்டம்பருக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடையும் என கூறப்படுவதால், இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். வருவாயை அதிகரிக்க, செலவினங்களை குறைக்கும் முயற்சியில் ஏர் இந்தியா முழு வீச்சில் ஈடுபடும்' என்றார்.'செலவினங்களை குறைப்பதன் மூலம் ரூ. 1,500 கோடி சேமிக்க முடியும்' என ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : தினமலர்