Thursday, April 2, 2009

ஆறு மாதங்களில் இல்லாத அளவு பங்கு சந்தை முன்னேறியது

லண்டனில் இன்று துவங்கியிருக்கும் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ( ஜி 20 ) மாநாட்டில், பொருளாதார விஷயத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் நல்ல முடிவுகள் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருப்பதால், இன்று உலகம் முழுவதும் உள்ள பங்கு சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பாதிப்பு இந்திய பங்கு சந்தையிலும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவாக பங்கு சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்திருக்கின்றன. பகல் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 10,400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,200 புள்ளிகளுக்கு மேலும் சென்றது. இந்த நிலை இன்று முழுவதும் இருந்தது எனலாம். இந்திய பங்கு சந்தையின் இந்த அபரிவிதமான வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தது அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தான். அவர்கள்தான் இன்று பெருமளவில் பணத்தை சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லார்ஜ்கேப்பிலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஸ்மால் கேப் மற்றும் மிடில் கேப்பிலும் அதிகம் பங்குகளை வாங்கி குவித்தனர். இதன் காரணமாக வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 446.84 புள்ளிகள் ( 4.51 சதவீதம் ) உயர்ந்து 10,348.83 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 150.70 புள்ளிகள் ( 4.92 சதவீதம் ) உயர்ந்து 3,211.05 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

கே.ஜி.படுகையில் எரிவாயு உற்பத்தியை ஆர்.ஐ.எல்., துவங்கியது : இந்தியாவின் இறக்குமதி பில் பெருமளவு குறையும்

கே.ஜி.( கிருஷ்ணா - கோதாவரி ) ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமான இருக்கும் எண்ணெய் கிணற்றில் இருந்து எரிவாயு உற்பத்தி துவங்கியதை அடுத்து, இந்தியாவின் எரிவாயு இறக்குமதி பில் 9 பில்லியன் டாலர்கள் ( சுமார் 48,000 கோடி ரூபாய் ) வரை குறையும் என்று மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் ஆர்.எஸ்.பான்டே தெரிவித்தார். கே.ஜி. ஆற்றுப்படுகையில் உற்பத்தி துவங்கப்பட்டு விட்டதாக நேற்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எங்களிடம் தெரிவித்தது என்று ஆர்.எஸ்.பான்டே தெரிவித்தார். ஆரம்பத்தில் அவர்கள் நாள் ஒன்றுக்கு 2.5 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்கிறார்கள் என்றும், பின்னர் நாளையே அது 5 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்றும் பான்டே கூறினார். அங்கு, அவர்களுக்கு இருக்கும் 15 கிணறுகளில், முதல் கிணற்றில் இருந்து தான் இப்போது எரிவாயு எடுக்கப்படுகிறது. அதிலிருந்து முழு அளவிலான உற்பத்தி இன்னும் மூன்று அல்லது நான்களில் நடக்கும். இன்னும் 15 நாட்களில் அதன் கடைசி கிணற்றில் இருந்தும் உற்பத்தி துவங்கிவிடும் என்று ஆர்.ஐ.எல்., தெரிவித்திருக்கிறது. இன்னும் நான்கு மாதங்களில் அங்கிருந்து கிடைக்கும் மொத்த எரிவாயுவின் அளவு 40 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டராக இருக்கும் என்றும், இன்னும் ஒரு வருடத்தில் அது 80 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டராக இருக்கும் என்றும் ஆர்.ஐ.எல்., தெரிவித்ததாக பான்டே தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


பணவீக்கம் சிறிதளவு உயர்ந்து 0.31 சதவீதமாகியது

மார்ச் 21 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 0.31 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 0.27 சதவீதமாகத்தான் இருந்தது. மிக குறைந்த அளவான 0.04 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 7.8 சதவீதமாக இருந்திருக்கிறது. டீ, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், குளிர்பானங்கள், ஆயில்கேக், வாசனை திரவியங்கள் போன்ற உணவுப்பொருட்களும், ரப்பர், பிளாஸ்டிக், பி.வி.சி.பைப்கள் போன்றவைகளின் விலை உயர்ந்திருப்ப தால் பணவீக்கம், கடந்த வாரத்தை விட சிறிதளவு உயர்ந்து விட்டது என்கிறார்கள். கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் தேயிலையின் விலை 48 சதவீதமும், பாக்கெட் செய்யப்பட்ட தேயிலை விலை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் விலை 22 மற்றும் 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


2016ம் வருடத்துடன் மாருதி 800, ஆம்னி தயாரிப்பது நிறுத்தப்படும்

இந்தியாவில் தனியார் வாகன சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தொடர்ந்து அதிகம் விற்கும் கார் என்ற பெயரை தக்க வைத்திருக்கும் மாருதி 800 கார், 2016ம் வருடத்திற்கு பிறகு கிடைக்காது. அடுத்த வருடத்தில் இருந்து அதன் தயாரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு, 2016ம் வருடத்துடன் அது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வாகனங்கள் வெளியிடும் புகை குறித்த புதிய வரைமுறைகள் அப்போது இந்தியாவில் தீவிர நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதால், இந்த காரின் தயாரிப்பது நிறுத்தப்படும் என்று மாருதி சுசுகி இந்தியா தெரிவித்திருக்கிறது. மாருதி 800 காருடன், அவர்களது இரண்டாவது பழைய வாகனமான ஆம்னி தயாரிப்பும் நிறுத்தப்படுகிறது. அடுத்த வருடத்தில் இருந்தே இந்தியாவில் 11 நகரங்களில் மாருதி 800 மற்றும் ஆம்னி வேன்கள் கிடைக்காது. அடுத்த வருடத்தில் இருந்து வாகனங்கள் புகை வெளியிடுவது குறித்து மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ' பாரத் ஸ்டேஜ் - 4 எமிஸன் ' வரைமுறை ( இது யூரோ - 4 எமிஸன் வரைமுறைக்கு நிகரானது ) டில்லி, மும்பை, ஐதராபாத், பெங்களுரு உள்பட 11 நகரங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த 11 நகரங்களிலும் மாருதி 800 மற்றும் ஆம்னி வேன்கள் விற்பனை நிறுத்தப்படுகிறது. அடுத்த வருடம் 11 நகரங்களில் மட்டும் நடைமுறைப் படுத்தப்படும் யூரோ - 4 எமிஸன் வரைமுறை, 2015 - 16 வாக்கில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது. அப்போது மாருதி 800 மற்றும் ஆம்னி வேன்களின் விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விடும் என்றார் மாருதி சுசுகி இந்தியாவின் சேர்மன் ஆர்.சி.பார்கவா.
நன்றி : தினமலர்


ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று திடீரென தீ பிடித்துக்கொண்டது. இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, இது லேசான தீ விபத்து தான் என்றும், தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது என்றும், இதனால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். அங்கு உற்பத்தி வழக்கம்போல் நடந்து வருவதாகவும், ஏற்றுமதியும் வழக்கம் போல் நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நாள் ஒன்றுக்கு 5,80,000 பேரல்கள் எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறன் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த டிசம்பர் 2008 ல் தான் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. முற்றிலும் ஏற்றுமதிக்காக இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கச்சா எண்ணெய்யை எரிபொருளாக மாற்றும் இடத்தை கோக்கர் என்கிறார்கள். அந்த இடத்தில் தான் நேற்று தீ பிடித்தது. கோக்கர் தான் கச்சா எண்ணெய்யை எரிபொருளாக, அதாவது பெட்ரோலாக, டீசலாக, நாப்தாவாக மாற்றும்.
நன்றி :தினமலர்


தங்கம் இறக்குமதி கணிசமாக குறைவு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு, அதிகரிக்கும் விலை ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்திய சந்தையில் தங்கம் இறக்குமதி செய்யப்படவில்லை. இந்திய தங்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர் வட்டாரங்கள் கூறியதாவது: சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்கு தயங்குகின்றனர். தற்போது வாங்குவதை விட, இன்னும் சில மாதங்கள் கழித்து தங்கம் வாங்கலாமென மக்கள் நினைக்கின்றனர். இது போன்ற காரணங்களால் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு டன் தங்கம் கூட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வில்லை. கடந்தாண்டின் இதே மாதத்தில் 21 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரியிலும் ஒரு டன் தங்கம் கூட இறக்குமதி செய்யப்படவில்லை. இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், 1.9 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 55 டன் இறக்குமதி செய்யப்பட்டது. ஏற்றுமதியைப் பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச்சில் ஒன்பது டன் தங்க நாணயங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இறக்குமதி செலவை விட, உள்நாட்டில் தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக உள்ளது. இதன் காரணமாக, சில வியாபாரிகள் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தை வாங்கி, அவற்றை நாணயங்களாக மாற்றி ஏற்றுமதி செய்கின்றனர். இருந்தாலும், மார்ச் மாதத்தில் தங்க நாணயங்களின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.
மாறாக பழைய தங்கம் விற்பனை அதிகரித்திருக்கிறது. மும்பையில் மட்டும் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தலா ஏழு டன்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் அந்த விற்பனையும் குறைந்துள்ளதோடு, உள் நாட்டில் அதன் தேவையும் குறைந்துள்ளது. தற்போது 10 கிராம் 15,000 ரூபாய் என்பதைத் தாண்டி இருப்பதாலும், விலை அதிகரிக்கும் என்ற கருத்திலும் பழைய தங்கத்தை விற்பதில் ஆர்வமும் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தங்கம் வாங்குவதை தள்ளிப் போட்டிருக்கும் மக்களின் மனோபாவம் காரணமாக, இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர் வேலைவாய்ப்பு குறையும் என்றும் கருதப்படுகிறது
நன்றி : தினமலர்


முடிவுக்கு வந்தது மோசமான நிதி ஆண்டு

கடந்த வாரம் தொடர்ந்து ஐந்து நாட்கள் மேலேயே சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை திங்களன்று ஒரேயடியாக கீழே விழுந்தது. இரண்டு காரணங்கள்... ஒன்று, உலகளவில் பங்குச் சந்தைகள் கீழே விழுந்தது, இரண்டாவது, லாபம் பார்க்கும் நோக்கில் முதலீட்டாளர்கள் விற்றது. அங்குள்ள மிகப்பெரிய கார் தயாரிக்கும் கம்பெனிகள் மூழ்கும் நிலையில் இருப்பதால், அவைகளைக் காப்பாற்ற சலுகைத் திட்டங்களை அறிவித்தது. ஆனால், அப்படி சலுகைகள் கொடுத்தாலும் அந்தக் கம்பெனிகள் மறுபடியும் பழைய நிலைக்கு வரும் என்ற உத்திரவாதம் இல்லாததால், அந்தச் சலுகைகளை அமெரிக்க அரசு நிராகரித்துவிட்டது. அதனால், அங்கு சந்தைகள் கவிழ்ந்தன. அதையடுத்து, திங்களன்று துவங்கிய ஆசிய சந்தைகளும் கவிழ்ந்தன. லாப நோக்கில் விற்றவர்கள் வேறு. கேட்கவா வேண்டும்... இந்திய சந்தைகள் 5 சதவீதம் விழுந்தன.
இந்தப் பங்கு தான் என்று இல்லை; எல்லா பங்குகளும் கீழ் நோக்கியே சென்றன. வீட்டு உபயோகப்பொருட்கள் துறையைத் தவிர மற்ற எல்லாத் துறைகளும் கீழே விழுந்தன. நேற்று முன்தினம் மார்ச்சின் கடைசி நாள். பங்குச் சந்தை மிகவும் கடுமையான பைனான்சியல் ஆண்டை (கடந்த ஏப்ரல் முதல் இந்த மார்ச் வரை) சந்தித்தது பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் தடவை. மார்ச்சின் கடைசி தினம் சுபமாகவே முடிந்தது. பல காலாண்டுகளுக்குப் பின் பங்குச் சந்தை ஒரு காலாண்டு முடிவில் லாபங்களுடன் முடிந்திருக்கிறது. மார்ச்சில் மட்டும் பங்குச் சந்தை 9.2 சதவீத லாபம் தந்துள்ளது. நேற்று முன்தினம் காலை அல்லாடிய பங்குச் சந்தை முடிவில் 140 புள்ளிகள் லாபத்துடன் முடிவடைந்தது. மியூச்சுவல் பண்டுகள் தங்களது மதிப்பைக் கூட்டுவதற்காக பங்குகளை சந்தையில் வாங்கியதாலும் சந்தை மேலே சென்றது. சந்தைகள் மேலே சென்றதால் டாலருக்கு எதிராக ரூபாயும் வலுவடைந்தது; 44 பைசாக்கள் வலுவடைந்து 50.73 அளவில் வந்தது.
மார்ச் முழுவதும் டாலர் ரூபாய் விளையாட்டு காட்டிக் கொண்டு தான் இருக்கிறது; மேலே ஏறுவதும், கீழே இறங்குவதுமாக. ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் எப்படி போகும் என்று யோசிக்கும் நிலைமை வந்து விட்டது.
உற்பத்தித் துறை இந்தக் காலாண்டில் சிறிது தெம்பு காட்டியதால் சந்தை நேற்று மேலே சென்றது. வியாபாரங்கள் சரியில்லாததால் கடன்கள் வாங்குவது பெருமளவு குறைந்திருந்தது. ஆனால், கடந்த காலாண்டில் கம்பெனிகள் பாண்ட்கள் மூலம் மட்டுமே 37 ஆயிரத்து 800 கோடி ரூபாய்களை கடனாகத் திரட்டியுள்ளன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 193 புள்ளிகள் கூடி 9,901 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 39 புள்ளிகள் கூடி 3,060 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இந்த நிதி ஆண்டில் தங்கம் தான் மின்னியிருக்கிறது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் 28 சதவீதம் லாபம் கண்டிருப்பர். அதேசமயம், வங்கியில் நிரந்தர வைப்புத் திட்டங்களில் போட்டவர்களுக்கு 8 முதல் 10 சதவீதம் வரை கிடைத்திருக்கும். பங்குச் சந்தை 38 சதவீத நஷ்டத்தைக் கொடுத்துள்ளது.
தங்கம் விலை கூடிக்கொண்டே செல்வதால் தேவை குறைந்து வருகிறது. அதனால், இறக்குமதி இல்லை என்றே சொல்லலாம். 2009ம் ஆண்டு ஜனவரியில் 20 டன்னுக்கு மேலேயும், 2007ம் ஆண்டு ஜனவரியில் 65 டன்னுக்கும் மேலாகவும் இறக்குமதி செய்துள்ளோம். 2009ம் ஆண்டு ஜனவரியில் கிட்டதட்ட ஒன்றுமே இறக்குமதி செய்யப்படவில்லை (ஒரு டன் அளவில் தான் இருக்கும்). வரும் மாதங்களில் தேவை கூடும் என்பதால் இறக்குமதி அதிகரிக்கலாம்.
நன்றி : தினமலர்


ஓக்ஸ் வேகன் நிறுவனத்தில் கார் தொழிற்சாலை: 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் புனேயில் துவக்கம்

ஜெர்மனியைச் சேர்ந்த ஓக்ஸ் வேகன் கார் தயாரிப்பு நிறுவனம், 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலையைத் துவக்கியுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஓக்ஸ் வேகன் கார் தயாரிப்பு குழுமத்தின் புதிய கார் தயாரிப்புத் தொழிற் சாலை, மகராஷ்டிர மாநிலம் புனேவை அடுத்த சகான் தொழில் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. 575 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையை, மகாராஷ்டிர கவர்னர் ஜமீர் திறந்து வைத்தார். விழாவில், ஓக்ஸ் வேகன் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோசம் ஹிஸ்மேன் பேசியதாவது: எங்களது நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலைகள், உலகின் 60 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இது 61வது தொழிற்சாலை. எங்கள் குழுமம், ஒன்பது வகையான கார்களைத் தயாரித்து, 150 நாடுகளில் விற்பனை செய்கின்றன. ஓக்ஸ் வேகன் குழுமத்தின் 66 சதவீத உற்பத்தி, ஜெர்மனியைத் தவிர இதர நாடுகளில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் தற்போது 120 டீலர்கள் உள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு அவுரங்கபாத்தில் அமைக்கப்பட்டுள்ள எங்களது தொழிற்சாலையில் இருந்து ஸ்கோடா, ஓக்ஸ் வேகன் மற்றும் ஆடி வகை கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக புனே கார் தயாரிப்பு தொழிற்சாலை 3,800 கோடி ரூபாய்(580 மில்லியன் யூரோ) முதலீட்டில் நிறுவப்பட்டுள்ளது.
ஜெர்மனிய நிறுவனங்கள் சார்பில், இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் இந்த முதலீடு தான் அதிகமானதாகும். புனே தொழிற்சாலையில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும்; 2,500 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர்.
இந்தியா மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நாட்டை முன் னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென இந்திய மக்கள் நினைக் கின்றனர். அதற்காக உழைக்கவும் துவங்கி விட்டனர். இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், தங்களுக்கென்று சொந்தமாக ஒரு கார் இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். இதனால், இந்தியாவின் ஆட்டோ மொபைல் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில், ஆண்டுக்கு 20 லட்சம் கார்கள் தேவையாய் இருக் கும். ஜெர்மனிய தொழில் நுட்பமும், இந்திய திறமையும் இணையும் இந்தத் தொழிற்சாலை மிகப் பெரிய வெற்றியைப் பெறும். ஓக்ஸ் வேகன் நிறுவன தலைவர் ஜெயெர்க் முல்லர், துணைத் தலைவர்கள் டெட்லெப் விட்டிங், கே.கே.சுவாமி, நிர்வாகக் குழு உறுப்பினர் அல்ரிச் ஹெகன் பெர்க் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர்