Tuesday, March 31, 2009

நாளை முதல் எந்த ஏ.டி.எம். மிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் : கட்டணம் கிடையாது

சாதாரன மக்களுக்கு பெரிதும் பயன்படும் திட்டம் ஒன்றை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இதன்படி நாளை முதல் ( ஏப்ரல் 1 ) எந்த வங்கியின் ஏ.டி.எம்.மிலும் நீங்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம். அது உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்காக கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி சொல்லி விட்டது. இதுவரை நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கி, அல்லது அதனுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் வங்கிகள் ஆகியவற்றின் ஏ.டி.எம்.களில் மட்டுமே கட்டணம் ஏதுமின்றி பணம் எடுத்துக்கொள்ள முடியும். இது தவிர வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவைக்கும் குறைந்தது ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இப்போது அது நீக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பை அடுத்து, பல வங்கிகள் தங்களின் ஏ.டி.எம்.நெட்வொர்க்கை அதிகரிக்க திட்டமிட்டிருக்கின்றன. ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், புதிதாக 60 ஏ.டி.எம்.களை திறக்க உள்ளதாக அதன் எக்ஸிகூடிவ் டைரக்டர் சின்ஹா தெரிவித்தார்.ஆனால் கிரிடிட் கார்டை கொண்டு ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலோ, இந்தியாவுக்கு வெளியே இருக்கும் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினாலோ கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


கிரிடிட் கார்டை அறிமுகப்படுத்தியது எல்.ஐ.சி.

லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா, கிரிடிட் கார்டை நேற்று மும்பையில் அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் மும்பை மற்றும் புதுடில்லியில் மட்டும் குறைந்த அளவிலேயே இந்த கிரிடிட் கார்டு வினியோகிக்கப் படுகிறது. எல்.ஐ.சி.,யின் துணை நிறுவனமான எல்.ஐ.சி.,கார்ட்ஸ் சர்வீசஸ் லிமிடெட் ( எல்ஐசி சிஎஸ்எல் ) மூலமாக இந்த கார்டு வெளியிடப்படுகிறது. அதன் நிர்வாகத்தை கார்பரேஷன் பேங்க் கவனித்துக்கொள்ளும். விசா பிராண்ட்டை கொண்டிருக்கும் எல்.ஐ.சி.,கிரிடிட் கார்டை உலகம் முழுவதும் நாம் பயன்படுத்தலாம்.கார்டுக்கு சொந்தக்காரரின் போட்டோ மற்றும் டிஜிட்டலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கையெழுத்து போன்றவற்றால் அந்த கார்டு அதிக பாதுகாப்பானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட எல்.ஐ.சி.ஏஜென்ட்கள் மூலமாக வினியோகம் செய்யப்படும் இந்த கார்டு மூலமாக எல்.ஐ.சி.பிரீமியத்தையும் செலுத்த முடியும் என்று எல்.ஐ.சி.ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கப்படுகிறது.
நன்றி : தினமலர்

வாகன தொழில் வீழ்ந்து விடும் அபாயம் : அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி

அமெரிக்க வாகன தொழில் வீழ்ந்து விடும் அபாயம் அதிகரித்திருப்பதாலும், இன்னும் நிறைய வங்கிகள் கடன் சுமையால் மூடப்பட்டு விடும் நிலையில் இருப்பதாக வந்த செய்தியாலும், அமெரிக்க பங்கு சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. கடும் நிதி சிக்கலில் சிக்கி தவிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, அமெரிக்க அரசு மேலும் நிதி உதவி செய்ய வேண்டுமானால் ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரிக் வேகனர் பதவி விலக வேண்டும் என்று அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டிருந்தார். அதனையடுத்து வேகனரும் பதவி விலகி விட்டார். ஆனால் ஓபாமா அரசோ, அரசாங்கத்திடம் இருந்து அதிகம் நிதி உதவி கேட்கும் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிரைஸ்லர் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து, அதன்படி நடக்க ஒத்துக்கொண்டால்தான் நிதி தருவோம் என்று சொல்லி விட்டது. எனவே நேற்று ஜெனரல் மோட்டார்ஸின் பங்குகள் 25 சதவீதம் வரை குறைந்து விட்டது. அமெரிக்காவை சேர்ந்த இன்னும் பல பெரிய வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அவைகளும் அரசாங்கத்திடம் இருந்து அதிக அளவில் நிதி உதவியை எதிர்பார்க்கின்றன என்றும் அமெரிக்க நிதி அமைச்சர் திமோத்தி கெய்த்னர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேங்க் ஆஃப் அமெரிக்காவின் பங்குகள் 18 சதவீதமும், சிட்டி குரூப் மற்றும் ஜேபி மார்கன் வங்கிகள் முறையே 12 மற்றும் 9.3 சதவீதமும் சரிவை சந்தித்திருக்கின்றன. அங்குள்ள பங்கு சந்தைகளான டவ்ஜோன்ஸ் இன்டக்ஸ் 3.3 சதவீதமும், எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸ் 3.5 சதவீதமும், நாஸ்டாக் 2.8 சதவீதமும் குறைந்திருக்கின்றன.

நன்றி : தினமலர்


பொதுத்துறை நிறுவன அதிகாரிகளுக்கு மேலும் சம்பள உயர்வு : மத்திய அரசு ஒப்புதல்

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உள்பட, பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு, கடந்த வரும் அறிவித்த சம்பள உயர்வை விட மேலும் சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒத்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆறாவது சம்பள கமிஷன் பரித்துரையின்படி கடந்த வருடம் அவர்களது சம்பளம் உயர்த்தப்பட்டது. ஆனால் அந்த சம்பள உயர்வு போதாது என்றும் இன்னும் கூடுதலாக உயர்த்த வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அரசு அறிவித்திருக்கும் அகவிலைப்படியான, அடிப்படை சம்பளத்தில் 68.8 சதவீதம் என்றிருப்பதை 78.2 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டிருந்தனர். இந்த கோரிக்கையை இப்போது ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அதன்படி கொடுக்க முடிவு செய்திருக்கிறது. அகவிலைப்படி உயர்வை 2007 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு கொடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பிற்கு மத்திய அரசு, தேர்தல் கமிஷனிடம், ஆட்சேபனை ஏதும் இல்லை என்ற உத்தரவை பெற்றிருக்கிறது. இருந்தாலும் பொதுத்துறை அதிகாரிகள் கேட்டபடி, ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை சம்பளத்தை மாற்றி அமைக்க முடியாது என்று கூறிவிட்டது. இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், எங்களது ஒரு கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த சம்பள உயர்வினால் எங்களுக்கு வெறும் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே சம்பளம் உயரும். எனவே இன்னும் அதிகமான சம்பள உயர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
நன்றி :தினமலர்


மே 1-ந் தேதி முதல் அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் ஓய்வூதிய திட்டம் அறிமுகம்

அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத அனைத்து துறையினரும் பயன் பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டம் ஒன்று இவ்வாண்டு மே 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த ஒரு சில நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இனிமேல், பல சரக்கு கடை நடத்துபவர்கள், பிளம்பர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் முதல் அனைத்து குடிமக்களும் ஓய்வூதியம் பெறலாம். இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெற விரும்பும் பொதுமக்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000 முதலீடு செய்ய வேண்டும்.
சென்ற ஆண்டில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத அனைத்து துறை ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதன்படி, இத்திட்டத்தை ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எஃப்.ஆர்.டீ.ஏ) இவ்வாண்டு ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினால், அது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக, ஓய்வூதிய கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம், தேர்தல் கமிஷனின் அனுமதியை கோரியது. இதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, இத்திட்டம் மே 1-ந் தேதியிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதிய திட்டத்திற்காக திரட்டப்படும் நிதி, அரசு கடன்பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீடுகளை நிர்வகிப்பதற்காக, கட்டுப்பாட்டு அமைப்பு புதிதாக ஆறு நிறுவனங்களை நியமித்துள்ளது.
நன்றி : தினமலர்