Monday, August 10, 2009

ஐரோப்பிய நாடுகளில் கார்களுக்கான டிமாண்ட் குறையும் அபாயம் : மாருதி, ஹூண்டாய் பாதிக்கும்

பழைய கார்களை தூர எறிந்து விட்டு புதிய கார்களை வாங்குபவர்களுக்கு கொடுத்து வந்த உதவி தொகையை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி விட்டதால் அந்நாடுகளில் புதிய கார்களுக்கான டிமாண்ட் குறைந்து விடும் அபாயம் இருக்கிறது. எனவே இந்தியாவின் மிகப்பெரிய கார் கம்பெனிகளான மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என்று தெரிகிறது. பழைய மற்றும் அதிகம் புகையை கக்கும் கார்களை தூக்கி எறிந்து விட்டு புதிய மற்றும் அதிகம் புகையை கக்காத, அதிகம் மைல் போக்கூடிய கார்களை வாங்குபவர்களுக்கு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஊக்க தொகை கொடுக்கப்பட்டு வந்தது. அரசாங்கம் கொடுக்கும் இந்த ஊக்க தொகை நாட்டுக்கு நாடு வேறுபடும். பிரிட்டனில் 1999 ஆகஸ்டுக்கு முன் வாங்கிய கார்களை தூர எறிபவர்களுக்கு 2,000 பவுண்ட்கள் ( சுமார் ரூ.1,60,000 ) ஊக்க தொகை கொடுத்தார்கள். இப்போது ஜெர்மனி, பிரான்ஸ், இத்தால், ருமேனியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சைப்ரஸ் மற்றும் லக்ஸம்பர்க் ஆகிய நாடுகள் ஊக்க தொகை கொடுப்பதை நிறுத்தி விட்டன. பிரிட்டன் மட்டும் இன்னமும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து மாருதி சுசுகியும் ஹூண்டாயும் அதிக அளவில் சிறிய கார்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஹூண்டாய் நிறுவனம் 66,500 கார்களை அங்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இது, கடந்த வருட முதல் காலாண்டை விட 26.54 சதவீதம் அதிகம். ஐ 10 மற்றும் ஐ 20 கார்கள் அங்குதான் அதிகம் ஏற்றுமதி ஆகிறது. ஊக்க தொகை நிறுத்தப்பட்டிருப்பதால் இவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் ஒரு காலாண்டுக்கு ஏற்கனவே ஆர்டர்கள் வந்து விட்டதாங் பாதிப்பில்லை என்றும் அதற்கு அடுத்த இரண்டு காலாண்டுகளில் தான் பாதிப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்ப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் அர்விந்த் சேக்ஸானா தெரிவித்தார்.மாருதி சுசுகி நிறுவனம் கடந்த வருட முதல் காலாண்டை விட இந்த வருட முதல் காலாண்டில் இரண்டு மடங்கு கார்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


இந்திய ஹோட்டல் தொழில் கடும் நெருக்கடியில் இருக்கிறது : ரத்தன் டாடா

இந்த வருடம் இந்திய ஹோட்டல் தொழிலுக்கு கடும் நெருக்கடியான வருடமாக இருப்பதாக இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ரத்தன் டாடா தெரிவித்திருக்கிறார். தாஜ் ஹோட்டல்களை நிர்வகிக்கும் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசிய ரத்தன் டாடா இதனை தெரிவித்தார். இதையே தான் ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் தலைவர் பி.ஆர்.எஸ்.ஒபராயும் சில நாட்களுக்கு முன் சொல்லியிருந்தார். ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸின் 59 வருட சரித்திரத்தில் இம்மாதிரியான மோசமான பாதிப்பு இதற்கு முன் வந்ததில்லை என்றார் அவர். ஓபராய் ஹோட்டல்களை நிர்வகித்து வரும் ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸ் நிறுவனம் இனி வரும் காலாண்டுகளிலும் மோசமான ரிசல்ட்டை தான் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய ஹோட்டல் குரூப்களான இந்தியன் ஹோட்டல்ஸ் மற்றும் ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸ் ஆகியவை, அவர்களின் முதல் காலாண்டு நிதி அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. அதில் ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸின் நிகர லாபம் 22 சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்தியன் ஹோட்டல்ஸின் நிகர லாபம் 73 சதவீதம் குறைந்திருக்கிறது. அதன் மொத்த வருமானமும் 24 சதவீதம் குறைந்திருக்கிறது. வருமானமும் நிகர லாபமும் குறைந்ததற்கு முக்கிய காரணம், கடந்த வருடம் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், தாஜ் பேலஸ் ஹோட்டல் மற்றும் டவர் ஹோட்டலில் 287 ரூம்களை மூட வேண்டியதாகி விட்டது. மும்பையில் தாஜ், ஓபராய் தவிர மொத்தமாக வட மும்பையில் 36 சதவீதமும் தெற்கு மும்பையில் 35 சதவீதமும் ஹோட்டல் தொழிலில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. மும்பை தவிர பெங்களுருவில் ஹோட்டல் தொழில் 40 சதவீதம்,பூனேயில் 49 சதவீதம், ஐதராபாத்தில் 37 சதவீதம், சென்னையில் 32 சதவீதம், டில்லி, கோல்கட்டாவில் 27 சதவீதம், அகமதாபாத்தில் 25 சதவீதம் சரிவு ஏற்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


நோய்க்கு மூலகாரணம்

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளுக்காக ரூ. 20 கோடி மருந்துகள் வாங்கும் உத்தரவை வழங்க ரூ. 8.53 லட்சம் லஞ்சம் பெற்றதாக ஊரக மருத்துவப் பணிகள் மற்றும் திட்ட இயக்குநர் எழிலரசியை தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் கைது செய்தனர். இதில் இதுவரை இல்லாதவகையில் பாராட்டக்கூடிய நடைமுறை என்னவென்றால், லஞ்சம் கொடுத்த மருந்து நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் கைது செய்திருப்பதும், தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் இதை நடத்தியிருப்பதும்தான்.

லஞ்சம் கொடுத்த மருந்து நிறுவனங்களின் பெயர்களும், அவர்களது பிரதிகளின் பெயரும் தெரிவிக்கப்பட்டபோதிலும் ஊடகங்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை என்பதும், அரசும் இந்த மருந்து நிறுவனங்களின் மற்ற வியாபாரம், இவர்கள் ஏற்கெனவே விநியோகிக்கும் மருந்துகளின் தரம் ஆகியவற்றை உடனடியாக ஆய்வு செய்யாதிருப்பதும்தான் ஏமாற்றம் அளிக்கிறது.

வரிஏய்ப்பு, கடத்தல், போலிச் சான்றிதழ் போன்ற லஞ்ச ஊழல்களில் நாட்டின் வருவாய்க்கு கேடு விளையும். சில விஷயங்கள் நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகமாக அமையும். ஆனால் உணவுக் கலப்படம், மருந்துகளில் லஞ்ச ஊழல் என்பது அப்பாவி மக்களின் உயிருக்கே கேடு விளைவிக்கும். இந்த மிகக் கொடிய செய்கையை இந்தியாவில் நிகழ்த்திக் கொண்டிருப்பவை பெரும்பாலான மருந்து நிறுவனங்கள்தான். இவர்களை அரசு எந்த அளவுக்குக் கண்காணித்து, கட்டுக்குள் வைக்கிறதோ அந்த அளவுக்கு மக்களின் மருத்துவச் செலவும் குறைவாக இருக்கும்.

நிகழாண்டில், ஒரு ஆங்கில மாதஇதழின் ஆசியப் பதிப்பில் வெளியான செய்தி, ""94 சதவீத டாக்டர்கள் மருந்துக் கம்பெனிகள் தரும் பரிசுப் பொருள்களை வாங்கிக்கொண்டு, அவர்கள் சொல்லும் மருந்துகளை நோயாளிக்கு எழுதித் தருகிறார்கள்'' என்று சொல்கிறது.

முன்பெல்லாம், மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகளை நோயாளிகள் கடைகளில்தான் வாங்கி வந்தனர். இப்போதெல்லாம் பெரும்பாலான டாக்டர்கள் தங்களிடமே மருந்தை வாங்கச் சொல்கிறார்கள். அவர்களே மருந்துக் கடை நடத்துகிறார்கள். இதற்குக் காரணம் மருந்து நிறுவனங்கள் டாக்டர்கள் மனதில் விதைத்திருக்கும் விஷ விதைதான்.

"மருந்தை நீங்களே விற்கலாமே', "ஸ்கேன் இயந்திரத்தை நீங்களே வாங்கிப் போட்டுக்கொள்ளலாமே', "இசிஜி நீங்களே வைத்துக் கொள்ளலாமே' என்று ஒவ்வொரு கருவியாகக் கொண்டுவந்து திணிக்கிறார்கள். அவர்களே அதற்கான தவணையைத் தீர்மானிக்கிறார்கள். போட்ட முதலையும் நூறு சதவீத லாபத்தையும் இரு ஆண்டுகளில் பெறுவது எப்படி, அதற்கு ஒரு நாளைக்கு எத்தனை நோயாளிகளை கட்டாயமாக இந்தக் கருவியின் பயன்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும், எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அட்டவணை போட்டுத் தருகிறார்கள்.

இன்றைய மருத்துவச் செலவு அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம் கொள்ளை லாபம் அடையும் மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள்தான்.

அரசு மருத்துவமனைக்கு விற்கப்படும் ஒரு பாராசிட்டமால் விலை அதிகபட்சம் 10 காசுகள்தான். ஆனால் மருந்துக் கடைகளில் இதன் விலை ஒரு ரூபாய்க்குக் குறையாது. இதே நடைமுறைதான் எல்லா வகை மருந்துகளிலும்!. ஒரே அடிப்படை மூலக்கூறினை இவர்கள் வெவ்வேறு பெயர்களில் மாற்றி, மாற்றிப் பெயர் வைத்து விற்க இந்திய அரசு அனுமதிக்கிறது. அது போதாதா? புதிய புதிய பெயர்களில் மருந்துகளை வேறு சில மூலக்கூறுகளைச் சேர்த்து, அல்லது நீக்கித் தயாரித்து, அதையே நோயாளிக்கு எழுதித் தரும்படி மருத்துவர்களை வசியம் செய்கிறார்கள்.

இதற்காக மருத்துவர்களுக்குப் பரிசுகள் தரப்படுகின்றன. மாதம் ஒருமுறை ஓய்வான சந்திப்பு என்ற பெயரில் விருந்து கொடுக்கிறார்கள். சில நேரங்களில் மருத்துவர் சங்க மாதாந்திரக் கூட்டச் செலவு, கருத்தரங்கச் செலவு, பயிற்சிமுகாம் செலவு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது மட்டுமா? ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடைவாசஸ்தலங்களில் ரிசார்ட்களை ஆண்டு முழுமைக்கும் வாடகைக்கு எடுத்து, அவர்களை குடும்பத்துடன் வந்து தங்கியிருக்கச் செய்யும் சேவையையும் இந்த மருந்து நிறுவனங்கள் செய்கின்றன.

""டாக்டர் சார், ஒரு ஆஞ்சியோகிராம் செய்து பாத்துடுவோமா?'' என்று நோயாளியே கேட்டாலும், ""தேவையில்ல, ரெண்டு மாடி சிரமமில்லாம ஏறி வர முடியுதே, உங்களுக்கு ஒண்ணுமில்ல'' என்று சொன்ன தெய்வங்கள் வாழ்ந்த இந்திய மருத்துவ உலகை, பணப்பேய்களின் கூடாரமாக்கிய பெருமை இந்த மருந்து நிறுவனங்களுக்கே உரித்தானது. மருத்துவ உலகின் மோசமான வைரஸ்- மருந்து, மருத்துவக் கருவி தயாரிக்கும் நிறுவனங்கள்தான்.

இந்தியாவில் ஏழைக்கும் ஏற்கும் வகையில் மருத்துவச் செலவை குறைக்க வேண்டும் என்றால், இத்தகைய லஞ்சம் கொடுப்பதில் ஈடுபடும் மருந்து நிறுவனங்களின் அனைத்து குறுக்குவழிகளையும் அடைத்து, இவர்களது லாபவெறிக்கு விலங்கு போட்டால்தான் முடியும்!
நன்றி : தினமணி

25 வருடங்களில் 81 லட்சம் கார்கள் : மாருதி சுசுகி சாதனை

25 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்தபோது 800 கார்களை தயாரித்து, தனது பயணத்தை துவங்கிய மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை 81 லட்சம் கார்களை தயாரித்து விற்றிருக்கிறது; மற்றும் ஏற்றுமதி செய்திருக்கிறது. இப்போது இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மாருதி சுசுகி, 1983ம் வருடம் டிசம்பர் 14ம் தேதி அதன் முதல் தொழிற்சாலையை குர்காவ்ன் நகரில் நிறுவியது. அதன் பின மனேசர் நகரிலும் ஒரு தொழிற்சாலையை நிறுவி, அங்கேயும் தயாரிப்பை துவங்கிய அந்த நிறுவனம், இந்த வருடம் ஜூலை 31 ம் தேதியுடன் முடிந்த காலத்தில் மொத்தமாக 81,05,228 கார்களை தயாரித்திருக்கிறது. குர்காவ்ன் மற்றும் மனேசர் தொழிற்சாலையில் இருந்து வெளியிடப்பட்ட 14 மாடல் கார்களின் மொத்த தயாரிப்பு எண்ணிக்கைதான் இது. மாருதி சுசுகி இதுவரை வெளியிட்ட 14 மாடல்களில், ' மாருதி 800 ' மட்டுமே 27 லட்சம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த 27 லட்சம் கார்களில் 25 லட்சம் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை ஆகி இருக்கிறது. மீதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த மாருதி சுசுகி இந்தியாவின் சேர்மன் ஆர்.சி.பார்கவா, இந்தியாவின் ஆட்டோமொபைல் இன்டஸ்டிரியை நவீனமயமாக்கும் நோக்கத்தில்தான் நாங்கள் 25 வருடங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்தோம். அதை நிறைவேற்றியதுடன், பல புதிய சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்


துவங்கியாச்சு பண்டிகை காலம்: தங்க நகை விற்பனை ஜொலிக்குமா?

பண்டிகை காலம் துவங்கியுள்ளதை அடுத்து, இந்தியாவில் தங்க நகை விற்பனையாளர்கள் குஷி அடைந்துள்ளனர். இந்தியாவில் பண்டிகை காலம் கோலாகலமாக துவங்கி விட்டது. ரக்ஷா பந்தன் முடிவடைந்துள்ள நிலையில், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை மற்றும் தீபாவளி என, பண்டிகைகள் வரிசை கட்டி வரத் துவங்கி விடும். பண்டிகை காலங்களின் போது, தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு தங்க நகைகளை பரிசளிக்கும் வழக்கம் இந்தியாவில் உள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் தான் அதிக திருமணங்கள் நடக்கும். எனவே, தங்க நகைகளின் விற்பனை பண்டிகை காலங்களில் அதிகரிக்கும்.
தற்போது, பண்டிகை காலம் துவங்கியுள்ளதை அடுத்து, நகை விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மிக அதிக அளவில் வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகளில் குவிந்து விடுவர் என, அவர்கள் நினைக்கின்றனர். இதனால், விற்பனையாளர்கள் தங்க நகைகளை அதிகமாக வாங்கி இருப்பு வைத்துள்ளனர். உலகின் மொத்த தங்க நகை தேவையில், இந்தியாவின் பங்கு மட்டும் கடந்தாண்டு 20 சதவீதமாக இருந்தது. இதில், பெருமளவு நகைகள், பண்டிகை காலங்களிலேயே விற்பனையாகியுள்ளன. ஆனால், வட மாநிலங்களில் இந்தாண்டு எதிர் பார்த்த அளவு மழை பெய்யாததாலும், பருவமழை தாமதமாக துவங்கியதாலும், நகை விற்பனையாளர்களில் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர்.
நன்றி : தினமலர்