பாசட் லாம்ப் யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 15 ரூபாய் விலையில், மின் சிக்கன பல்புகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சாதாரண பல்பு, 60 வாட் மின்சாரம் செலவிடுகிறது. மின்சிக்கன சி.எப்.எல்., பல்புகள் 12 வாட் மின் சாரத்தை செலவிடுகிறது; தொடர்ந்து 1,200 மணி நேரம் ஒளிவிடக்கூடியது. இது மட்டுமின்றி, சி.பி.எல்., பயன்படுத்துவதன் மூலம், கார்பன் வெளிவிடுவது 50 கிலோ குறைகிறது. கார்பன் வெளியாவதால், உலக வெப்பமயம் அதிகரிக்கிறது. இதை தடுப்பதற்காக கார்பன் மேம்பாட்டு நடவடிக்கையின் கீழ், கார்பன் சேர்க்கை திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. மின் சிக்கன சி.எப்.எல்., பல்பு மூலம், கார்பன் சேர்க்கையில் ஆண்டுக்கு 42 ரூபாய் வருவாய் ஏற்படுகிறது. இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் டில்லியில், நடத்தப்பட்ட சர்வதேச கார்பன் சேர்க்கை மாநாட்டில், இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. மத்திய, மாநில, தனியார் கூட்டு முயற்சியின் மூலம் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சாதாரணமாக, மின்சிக்கன சி.எப்.எல்., பல்புகள் ரூ.80 மதிப்பு கொண்டவை. மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மின் சிக்கன பல்புகள் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். மீதித் தொகை, கார்பன் சேர்க்கை மூலம் சரி செய்யப்படும். முதல் கட்டமாக ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்திலும், அரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பங்கேற்க, டெண்டர் விடப்பட்டது. இதில், 20 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இவற்றில் சில, சி.எப்.எல்., தயாரிக்கும் நிறுவனங்கள்; மற்றவர்கள் சி.எப்.எல்., பல்புகளை கொள்முதல் செய்து மொத்த விற்பனையில் விற்பனை செய்யும் நிறுவனங்கள்.
நன்றி : தினமலர்