Monday, August 3, 2009

மைக்கேல் ஜாக்ஸனுக்கு மயக்க மருந்தை கொடுத்தது டாக்டர் அல்ல; உதவியாளர்தான் : புது தகவல்

மைக்கேல் ஜாக்ஸனின் உயிர் போவதற்கு காரணமானது என்று சொல்லப்பட்ட வலி நிவாரண மருந்தான டெமராலை கொடுத்தது அவரது தனி மருத்துவர் டாக்டர் கான்ராட் முர்ரே என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வந்தது. இப்போது அந்த மருந்தை கொடுத்தது டாக்டர் அல்ல என்றும், அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது மைக்கேலின் உதவியாளர்தான் அந்த மருந்தை ஜாக்ஸனுக்கு கொடுத்திருக்கிறார் என்றும் தெரிய வந்திருக்கிறது. லண்டனில் இருந்து வெளியாகும் சன் பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. ஏற்னவே மைக்கேல் ஜாக்ஸனுக்கு டாக்டர் முர்ரே, புரோபோஃபோல் என்ற மயக்க மருந்தை ( ஆபரேஷன் நடக்கும்முன் கொடுக்கும் ) கொடுத்திருக்கிறார். அதை போட்டு விட்டு டாக்டர் தூங்க போய் விட்டார். மைக்கேல் ஜாக்ஸனும் தூங்கியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் நேரத்திலேயே மைக்கேல் ஜாக்ஸன் எழுந்து விட்டார். எழுந்ததும் அவர் வலி நிவாரண மருந்தை கேட்டிருக்கிறார். அப்போது டாக்டர் முர்ரே தூங்கிக்கொண்டிருந்ததால், மைக்கேலின் உதவியாளர் ஜாக்ஸனுக்கு டெமரால் என்ற மருந்தை கொடுத்திருக்கிறார். ஏற்கனவே கொடுத்த புரோபோஃபோலும் இப்போது கொடுத்த டெமரோலும் கலந்து அவருக்கு கடுமையான மாரடைப்பை உண்டாக்கி விட்டது என்கிறார்கள். ஜாக்ஸன் மரணம் குறித்து விசாரித்து வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாரிடம் டாக்டர் முர்ரே இந்த தகவலை தெரிவித்திருக்கிறார். மைக்கேலுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டபோது டாக்டர் முர்ரே தூங்கிக்கொண்டிருந்ததால் உடனடியாக முதலுதவி எதையும் செய்ய முடியாமல் போனதாகவும், டாக்டர் எழுந்து பார்த்தபோது மைக்கேல் ஜாக்ஸனின் உயிர் பிரிந்து விட்டிருந்தது என்றும், இருந்தாலும் எவ்வளவோ முயன்று பார்த்து மீண்டும் இருதயத்தை இயங்க வைக்க முயற்சித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. வழக்கமாக, மைக்கேல் ஜாக்ஸனுக்கு டெமரால் என்ற வலி நிவாரணியை தேவைப்படும் போதெல்லாம் டாக்டர் முர்ரே ஒழுங்காக கொடுத்து வந்திருக்கிறார். ஆனால் அன்றைய தினம் அவர் தூங்கி விட்டதால் உதவியாளரிடம் அவசரமாக மைக்கேல் ஜாக்ஸன்கேட்டிருக்கிறார். அவரும் கொடுத்திருக்கிறார். அதுவே மாரடைப்பிற்கு வழி வகுத்து விட்டது.
நன்றி : தினமலர்


ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்...

குற்றம் புரிபவர்களைச் சமுதாயம் ஒரு சுமையாகவே பார்க்கிறது. குற்ற நிகழ்வுக்குச் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் காரணமாகிறோம் என்பதை மறந்து விடுகிறோம். குற்றவாளிகளைச் சிறை என்ற கூண்டில் அடைப்பதோடு நாம் திருப்தி அடைந்துவிட முடியுமா? குற்றம் புரிபவர்களை நல்வழிப்படுத்தி மாற்றுப்பாதை வகுப்பதில் சிறை நிர்வாகத்திற்கு மட்டுமன்றி சமுதாயத்திற்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

சிறைவாசம். அது ஓர் அலாதியான வாசம். அங்கு அடிக்கக்கூடிய காற்று, குரோதம், துவேஷம், விரோதம் இவற்றின் கலவை. அங்கு பணியில் இருக்கும் காவலர்களுக்கும், அவர்கள் பாதுகாக்கும் இல்லவாசிகளுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை. நிர்வாகத்தால் ஒருசாரார் பராமரிக்கப்படுகின்றனர். மற்றொருவர் சம்பளம் பெறுகின்றனர். உண்மை, நேர்மை என்பதற்கு இடமில்லை. சிறைக்கு வருபவர்களைக் கொடுமைப்படுத்துவதில் அலாதி இன்பம், தவறு செய்தவரை பிரம்பால் அடித்து கை வலிக்கிறது என்று சலிப்போடு தற்பெருமை அடித்துக் கொள்ளும் வீரர்கள், இத்தகைய நிர்வாகத்தைச் சீர்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு 1832 முதல் பல சிறை சீர்திருத்த கமிஷன்கள் ஏற்படுத்தப்பட்டு சிறை நிர்வாகம் குற்றவாளிகளைத் திருத்த வேண்டும் "தவறு செய்தவன் வருந்தியாகணும், தப்பு செய்தவன் திருந்தியாகணும்' என்ற அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு நிர்வாகத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுப்பது பொறுப்புள்ளவர்களின் கடமை. எந்த ஒரு மாறுதலுக்கும் தடங்கல் இருக்கத்தான் செய்யும். பொதுவாக மாறுதலை விரும்பாது இருந்த இடம் பள்ளம் என்று பழகிப்போனதில் சுகமும், பாதுகாப்பும் நாடுவது மனித இயல்பு. மாற்றுப்பாதையில் என்னென்ன சவால்களைச் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம், புதிய நுட்பங்களை அறிவதில் எடுக்கவேண்டிய முயற்சிகளை எண்ணி சோம்பிக்கொண்டு தவிர்க்கும் மனப்பான்மை என்று மேம்படுத்துதலுக்கு தடைக்கற்கள், பட்டியல் கணக்கில் அடங்காதது. பல சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருத்தலுக்கும், எடுக்க எத்தனித்தாலும் முடிக்காமல் போவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

குற்றம் புரிபவர்களைத் திருத்த முடியாது, நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று அசையாத நம்பிக்கை கொண்டவர்கள் பலர், குற்றம் புரிந்தவர்கள் வருத்தத்தை அனுபவிக்க வேண்டும் என விரும்புபவர்கள் சிலர். குற்றவாளிகள் கொடுமைக்கு உட்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்போர் சிலர். குற்றவாளிகளுக்கு ஏன் சலுகைகளும் அடிப்படை வசதிகளும் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்புபவர்கள் ஒருசாரார். தாம் முயற்சி எடுத்து குற்றம்புரிந்தவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றவர் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் காவல்துறை. அவர்களும் மனிதர்கள், அவர்களது மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மாற்றுப் பாதை அமைத்து சமுதாயத்தோடு இணைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லுணர்வோடு உள்ளவர்கள் வெகு சிலரே.

குற்றங்கள் நிகழ்வதற்கான காரணம், குற்றங்களில் ஏன் சிலர் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு உளவியல் பொருளாதாரரீதியாக பல அனுமானங்களை முன்வைக்கலாம். மேலைநாடுகளில் வசதி இருந்தும் குற்றங்களில் ஈடுபடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் பலர். ஆனால் நமது நாட்டில் போதாமையினால் தான் பலர் குற்றங்களில் உழல்கின்றனர். படிப்பறிவில்லாததினால் நல்லது கெட்டது தெரிய வாய்ப்பின்றி சுலபமாக குற்றப்பாதையில் ஈர்க்கப்படுகின்றனர். ஏழை மக்கள், சமுதாயத்தில் நலிந்த பிரிவினர் குற்றவலையில் சிக்கி சிறையிலிடப்படுகின்றனர். சட்டம் தனது கடமையை இத்தகைய மக்கள்மீது மட்டும் எவ்வாறு குறைவில்லாமல் செய்கிறது?

இந்திய சிறைச்சாலைகளில் உள்ள சீர்குலைந்த நிலையைப் பார்த்து முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா, சிறைச்சாலைகள் குற்றவாளிகளைச் சீர்திருத்தும் மையம் என்ற உயர்ந்த நிலைப்பாடு சிதைந்துவிட்டது. சிறைச்சாலைக்கு வரும் புதுமுகக் குற்றவாளி தேர்ந்த முதுகலைப் பட்டதாரியாக வெளிவருகிறார் என்று மனம் வெதும்பி கூறியிருக்கிறார். எவ்வளவோ சீர்திருத்த நடவடிக்கைகள் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளால் சில மாநிலங்களில் எடுக்கப்பட்டிருந்தாலும் இது முழுமையாக நடைமுறையில் வரவில்லை. ""சாண் ஏறுதல் முழம் சறுக்கல்'' என்ற நிலையில் உள்ளது. அரசு நிர்வாகம், குற்றவியல் நிர்வாகம், சிறைத்துறை, காவல்துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமுதாய நலம் விரும்புவோர் என்று பலதரப்பட்டவரின் ஒத்துழைப்பின்றி சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் முழுமையடையாது.

சுதந்திரப் போராட்ட வீரர் குமரப்பா பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையிலிடப்பட்டிருக்கிறார். அவர் தனது சிறை அனுபவங்களைப் பற்றிக் கூறுகையில், ""சிறை அமைப்பு, சிறைப்பணியாளர்களின் அணுகுமுறை, நிர்ணயிக்கப்பட்ட பணிகள், நடைமுறைகள் இவையாவும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப்பட்டால்தான் சிறைச்சாலை என்ற அமைப்பு முழுமையடையும் சமுதாயத்திற்கு வலிமை சேர்க்கும்'' என்று விவரித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவில் ஜெயில் நிர்வாக நிபுணர் ரெக்லஸ் 1951-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து வந்து சிறை நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், குற்றவாளிகளைத் திருத்துவதற்குமான வழிமுறைகள் பற்றியும் கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படையில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

1956-ம் ஆண்டு அகில இந்திய ஜெயில் விதிகள் குழுமம் அமைக்கப்பட்டு இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பல நிலையாணைகள் மாற்றப்பட்டு சிறை நிர்வாகம் சீரமைக்க வழிவகுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தான் சிறைகள் விரிவாக்கம், சுகாதார சூழல், காற்று, தண்ணீர் வசதி, நிலையான உணவு, மருத்துவ வசதி மேம்படுத்தப்பட்டது.

1978-ம் ஆண்டு தமிழகத்தில் முன்னாள் ஐசிஎஸ் அதிகாரியும், ஓய்வுபெற்ற பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியுமான நரசிம்மன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் தீர்க்கமான பரிந்துரைகளை வழங்கியது. இந்தக் கமிஷனில் உறுப்பினராக முக்கியப் பங்கு வகித்தார் காவல்துறை ஐஜி டயஸ், குற்றவியல் மற்றும் சமூகவியல் நாட்டம் கொண்டவரும் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய டயஸ் பல முற்போக்குச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அதில் முக்கியமானது இல்லவாசிகளைச் சீர்திருத்துவது, மாற்று வாழ்க்கை அமைத்தல், தொழில் கல்வி கற்பித்தல் போன்றவை அடங்கும். சிறைகளில் பஞ்சாயத்து முறை கொண்டுவர வேண்டும், இல்லவாசிகளுக்கு ஜனநாயக உணர்வு புகட்ட வேண்டும் என்ற பரிந்துரையும் முக்கியமானது.

தமிழகத்தில் மத்திய சிறைகள் உள்பட 134 சிறை இல்லங்களில் 20,000 இல்லவாசிகளை வைப்பதற்கு இடம் இருக்கிறது. குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவதற்கும், புனர்வாழ்வு அளிப்பதற்கும் கல்வி அவர்களுக்கு உகந்த வேலைக்கான பயிற்சி ஆகிய இரண்டு ஏற்பாடுகள் தான் முக்கியமானது. கல்வி ஒன்றுதான் அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் உண்மையான சுயமரியாதையையும் அளிக்கவல்லது. இதைக் கருத்தில்கொண்டு கடந்த ஓராண்டு தமிழக சிறைகளில் கல்வியைப் பிரதானமாகக் கொண்டு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காவல்துறையினரே சமூக சீர்திருத்தவாதிகளாகப் பணிபுரிய வேண்டும் என்று விரும்பிய காந்தியடிகள் சிறைச்சாலைகள் நலம் பேணும் மருத்துவமனைகளாக உள்ளிருக்கும் இல்லவாசிகளை அன்போடும் பரிவோடும் பராமரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இல்லவாசிகளது மனநோய்க்குக் கல்வியைத் தவிர வேறென்ன சிறந்த மருந்து இருக்க முடியும்? தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைகளிலும், மூன்று விசேஷ பெண்கள் சிறைகளிலும் ஆரம்பப் பள்ளியும், இடைநிலைப் பள்ளியும் இயங்குகின்றன.

இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் மூலம் பல பாடங்களில் டிப்ளமோ பயிற்சியும், பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டம் வரை பயில்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பட்டப்படிப்புகளுக்கும், முதுகலைப்பட்டம் பெறுவதற்கும் பாளையங்கோட்டை சிறையில் பயிற்சி அளிக்கிறது.

நூதன முறையில் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் பாளையங்கோட்டை சிறையிலுள்ள 17 இல்லவாசிகளுக்கு சிறப்புப் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது. இந்த முதன்மை நிகழ்ச்சி மற்ற இல்லவாசிகளுக்கு உந்துதலாக அமைந்து சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பட்டப்படிப்பு, பட்டயப் பயிற்சிக்குப் பதிவு செய்தனர். அவர்களது மேல்படிப்பு பயிற்சிக்காக சுமார் ரூ. 7 லட்சம் சிறைத்துறை மூலம் செலவிடப்பட்டது.

கல்வி பயிற்றுவிக்கும் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டு அனைத்து இல்லவாசிகளும் பயில்வதற்கு ஏதுவாக நூற்றுக்கு நூறு கல்வித்திட்டம் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று கிளைச்சிறைகள் உள்பட 134 சிறை இல்லங்களிலும், கிளைச்சிறைகளில் 1500 இல்லவாசிகள், மத்திய சிறைகளில் 4500 என மொத்தம் சுமார் 6000 இல்லவாசிகள் இந்தக் கல்வி இயக்கத்தில் பயன் அடைகின்றனர்.

எண்ணும் எழுத்தும் இரு கண்கள் போன்றவை என்றார் திருவள்ளுவர். கைநாட்டு ஒன்றே போட்ட பலர் எண்ணையும் எழுத்தையும் படிக்க முடிகிறது என்று ஆனந்தம் கொண்டனர். விடுமுறையில் செல்லும்போது மற்றவர் உதவியை நாடாமல் பஸ் ஏறிச் செல்ல முடிகிறது என்பதே தனது வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை என்றார் ஓர் இல்லவாசி. சிறை அலுவலர்கள் அரட்டல் மிரட்டலை விட்டு ஆசிரியர்களாக இல்லவாசிகளுக்குக் கல்வி புகட்டுகின்றனர். கல்வித்துறையினரோடு தொடர்பு கொண்டு மத்திய சிறை தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது.

எட்டாம் வகுப்புத் தேர்வில் 76 இல்லவாசிகளும், பத்தாம் வகுப்புத் தேர்வில் 100 இல்லவாசிகளும் பங்குகொண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 84 சதவிகிதம் தேர்வு பெற்று சாதனை படைத்தனர். தினகரன் என்ற பாளையங்கோட்டை சிறை ஆயுள் தண்டனை இல்லவாசி 66 சதவிகிதம் மதிப்பெண் பெற்றது, எடுத்த முயற்சிகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. கோவில்பட்டி கிளைச் சிறை உதவி ஜெயிலர் சித்திரைவேல் தனிப்பட்ட முறையில் கல்வி பயிற்றுவிக்க சிறப்புப் படிவங்கள் அமைத்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த தமிழக மைய அதிகாரி ராஜன் தலைமையில் மிகச்சிறப்பாக சர்வசிக்ஷா அபியான்திட்டம் மூலம் உதவி அளிக்கின்றனர். இதுதான் முழுமையான உண்மையான சிறை சீர்திருத்தம் என்று பலரது பாராட்டையும் சிறைத்துறை பெற்றது.

சிறைச்சாலை ஒரு சிந்தனைக் கூடம் என்றார் அறிஞர் அண்ணா. அவர்கள் தனது சிறை அனுபவங்கள் அடங்கிய புத்தகத்தில் சிறையிலிருந்து வெளியே செல்பவர்களை "நல்லவர்களாக' மாற்ற வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியம் வெளியே உள்ளவர்கள் சிறைக்கு வரத் தேவையில்லாத நிலையை ஏற்படுத்துவது. குற்றம் செய்ய வேண்டிய நிலையையும் மனப்போக்கையும் மாற்றி அமைக்க சமூகத்தில் பெரியதோர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் தனக்கே உரிய நயத்துடன் சிறைப்பணியாளர்களின் மனப்போக்கையும், அவர்கள் பணிகள் செய்யும் விதத்தில் உள்ள முரண்பாடுகளையும் விவரிக்கின்றார். இந்த முரண்பாடுகள் களையப்படவும், அவர்கள் தலைநிமிர்ந்து பணிபுரியத் தொடர்ந்து அவர்களைச் செம்மையான சிறை சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபடுத்தவும் வேண்டும்.

குற்றவாளியைத் திருத்துதல் அவர்களுக்குச் சமுதாய நற்பண்புகள் பயிற்றுவித்தல், புனர்வாழ்வு அமைத்தல், சமுதாயத்தோடு இணைத்தல் இவையே குற்றங்களைக் களையவல்ல நான்குமுனை கணைகள். அவையே தான் சிறை சீர்திருத்தக் கட்டமைப்பைத் தாங்கவல்ல தூண்கள்.

கட்டுரையாளர் : ஆர். நடராஜ்
நன்றி : தினமணி

ஓ.என்.ஜி.சி.,யில் இருந்து ரூ.5,300 கோடிக்கு ஆர்டர் பெற்றது எல் அண்ட் டி

இந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் கம்பெனியான எல் அண்ட் டி., அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யிடமிருந்து ரூ.5,300 கோடிக்கு இரண்டு ஆர்டர்களை பெற்றிருக்கிறது. மும்பையில் செயல்படுத்த இருக்கும் ஆஃப்ஷோர் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் இரண்டு ஆர்டர்கள் எல் அண்ட் டி.,க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மும்பை ஹை நார்த் பிராசஸ் ஃபிளாட்ஃபார்ம் திட்டத்தில், அங்குள்ளவர்களுக்கு குடியிருப்பு கட்டும் திட்டம் ஆகியவற்றின் ஆர்டர் எல் அண்ட் டி.,க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பிராசஸ் கேஸ் கம்பரசன் மோடுல்ஸை சப்ளை செய்யவும் ஆர்டரை பெற்றிருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் செய்திருக்கின்றன. கடந்த 1990 ம் ஆண்டில் இருந்தே நாங்கள் ஆயில் கம்பெனிகளின் திட்டங்களையும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் செயல்படுத்தியும் வருகிறோம் என்றார் எல் அண்ட் டி.,யின் சிஎம்டி நாயக்.

நன்றி : தினமலர்



வீட்டு சிலிண்டரின் மானியம் நிறுத்தம்: வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு

ஓட்டல்கள், தொழிற்சாலைகளில் பயன் படுத்தப்படும் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை, நான்கு மாதத்தில் 218 ரூபாய் அதிகரித்து இருப்பது, வர்த்தக நிறுவனங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் சார்பில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர், வர்த்தக சிலிண்டர்கள் வினியோகம் செய்யப் பட்டு வருகின்றன. வீட்டு காஸ் சிலிண்டருக்கான 180 ரூபாய் மானியத்தை நிறுத்தி, சமையல் காஸ் சிலிண்டர்களை மானியத்துடன் தான் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என, எண்ணெய் நிறுவனங் களை மத்திய அரசு நிர்பந் தப்படுத்தி வருகிறது.
இதனால், எண்ணெய் நிறுவனங்கள், வர்த்தக காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், இவற்றை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன.
வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டரின் விலை கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. மே மாதத்தில் 745 ரூபாயிலிருந்த வர்த்தக சிலிண்டர், ஜூன் மூன்றாவது வாரம் 824.75 ரூபாய்க்கும், நேற்று முன்தினம் முதல் 103.35 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 928.10 ரூபாய்க்கு விற்கிறது. கடந்த நான்கு மாத காலத்தில், 218.10 ரூபாய் அதிகரித்து இருப்பது, ஓட்டல்கள், பெரிய தொழிற்சாலைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வர்த்தக சிலிண்டரின் விலை அதிகரிப்பால், ஓட்டல், கார்களில் வீட்டு சிலிண்டரை உபயோகிக்க துவங்கியுள்ளனர். வீட்டு சிலிண்டர் வெளி மார்கெட் விலை 500 ரூபாயில் இருந்து 750 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தனியார் நிறுவன காஸ் சிலிண்டர்களும் 20 சதவீதம் அதிகரிப்பு செய்துள்ளன.
இது குறித்து, ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, மளிகை சாமான்களின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், சமையலுக்கு பயன் படுத்தப்படும் சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளது. இது ஓட்டல் தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சாப்பாடு, டிபன் வகைகளை, வரும் 15ம் தேதிக்குப் பின் உயர்த்த திட்டமிட்டு இருந்த நாங்கள், இந்த வாரமே விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஓட்டல் உரிமையாளர் கூறினார்.
நன்றி : தினமலர்


ஐ.ஓ.பி., சர்வதேச வர்த்தகம் உயர்வு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மொத்த சர்வதேச வர்த்தகம், ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 670 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 2008ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 420 கோடி ரூபாயாக இருந்த மொத்த சர்வதேச வர்த்தகம், 2009ம் ஆண்டு, ஜூன் 30ம் தேதி ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 670 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில், 29 ஆயிரத்து 250 கோடி ரூபாய் (19.71 சதவீதம்) அளவிற்கு வர்த்தகம் உயர்ந்துள்ளது. மொத்த சர்வதேச டிபாசிட், 2008ம் ஆண்டில், 85 ஆயிரத்து ஒரு கோடி ரூபாயிலிருந்து, 2009ம் ஆண்டில், ஒரு லட்சத்து 806 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில் சர்வதேச டிபாசிட், 15 ஆயிரத்து 805 கோடி ரூபாய் (18.59 சதவீதம்) அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான மூன்று மாத காலத்திற்கான நிகர லாபம், 301 கோடியே 78 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மூன்றாண்டு காலத்தில் 255 கோடியே 97 லட்சம் ரூபாயாக இருந்தது. மூன்று மாத காலத்திற்கான மொத்த வருவாய், 2,808 கோடியே 51 லட்சம் ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மூன்று மாத காலத்தில் மொத்த வருவாய், 2,186 கோடியே 83 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது 28.43 சதவீதம் உயர்ந்துள்ளது. மூன்று மாத காலத்தில் வட்டி வருவாய், 2,577 கோடியே 85 லட்சம் ரூபாயாகவும், வட்டியில்லா வருவாய் 230 கோடியே 66 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. மொத்த செலவு 2,379 கோடியே 89 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கியின் அனைத்து கிளைகளும் 100 சதவீதம் கணினி மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்