Showing posts with label காப்பீட்டு. Show all posts
Showing posts with label காப்பீட்டு. Show all posts

Saturday, August 21, 2010

மக்களின் வரிப்பணம்தானே...

கல்வியைத் தொடர்ந்து இப்போது மருத்துவத் துறையையும் முழுமையாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஆட்சியாளர்களின் எழுதப்படாத கொள்கைகளில் ஒன்று என்று தோன்றுகிறது. முதலில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தனியார் ஒத்துழைப்பு என்று தொடங்கி, இப்போது அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பைத் தனியாரிடம்விடும் அளவுக்குத் தனியார்மயக்கொள்கை செயலாக்கம் பெற்றிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழக அரசு மட்டுமே சுகாதாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்க முன்வந்திருப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். உண்மையில், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் ஏனைய மாநிலங்களைவிட சற்று அடக்கியே வாசிக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் வழிகாட்டுதலை இதுவரை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாகவே அரசு மருத்துவமனைகளையும், ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிடும் முயற்சி அகில இந்திய அளவில் முனைப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மக்கள் வரிப்பணத்தில், அரசு நிலத்தில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் முதல்கட்டமாக பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சுகாதாரத் துறை வற்புறுத்தி வருகிறது.

அடுத்தகட்டமாக, எக்ஸ்-ரே, ரத்தப்பரிசோதனை மையம் போன்றவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து நடத்துவது என்று தீர்மானிக்கக்கூடும். காலப்போக்கில் தனியாருக்கே அரசு நிறுவனங்களைத் தாரைவார்ப்பதுபோல இந்த ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் கொடுத்துவிடுவது என்பதுதான் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டம் என்று கருதவும் இடமிருக்கிறது. கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையங்களை ஏற்று நடத்த எந்தத் தனியார் மருத்துவமனைதான் தயங்கும்?

"கல்வி, மருத்துவம் போன்றவை அரசின் செயல்பாடுகள் அல்ல. இவைகளிலிருந்து அரசு முழுமையாக விடுபட்டாக வேண்டும்' என்கிற தனியார்மயவாதிகளின் கருத்து ஏற்புடையதல்ல. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையே இந்தியா ஒரு ஜனநாயக சமதர்ம அரசு மட்டுமல்ல, மக்கள் நலம்பேணும் அரசும்கூட என்பதுதான். கல்வி, சுகாதாரம் போன்றவை அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தனியாரிடம் விடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவைப் போன்ற வறுமைக்கோட்டுக்குக்கீழே பல கோடி மக்கள் வாழும் நாட்டில் தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பது என்பது மிகப்பெரிய அரசியல் சமூக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

நியாயமாகப் பார்த்தால், தமிழக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி. ஆனால், பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடிதான். மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 750 கோடி.

இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வாரி வழங்கும் அரசு, அதை அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதில் செலவிட்டால் அதனால் நிரந்தரமாகப் பயன் கிடைக்குமே என்கிற நியாயங்கள் ஆட்சியாளர்களின் காதில் விழாது. அப்படிச் செய்தால் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்று ஆட்சியின் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், தேர்தலில் வாக்குவேட்டை ஆடவும் முடியாதுதானே..

சென்னையிலுள்ள பொது மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். மாதந்தோறும் ஏழு லட்சம் ரூபாயையும் வாங்கிக்கொண்டு அந்தத் தனியார் நிறுவனம் பெரிதாக எதையும் சாதித்துவிடவும் இல்லை. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரும் அந்தத் தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்திருக்கும் நிலையில், நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

"சென்னை பொது மருத்துவமனையைப்போல, சென்னையிலுள்ள ஏனைய அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணியையும் தனியாரிடம் கொடுக்க இருக்கிறோம். முறையாகச் செயல்படாவிட்டால் அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.

தனியார் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்ந்து மருத்துவமனைகளின் பராமரிப்பிலும், தனியார் நிறுவனங்களின் காட்டில் மழை. மக்கள் வரிப்பணம்தானே, சொந்த முதலா மோசம் போகிறது..!
நன்றி : தினமணி

Friday, January 22, 2010

போஸ்ட்ஆபீசில் பெறலாம் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியை

தமிழகத்தில் உள்ள போஸ்ட் ஆபீசில், ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியலின் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக தபால் துறையுடன் ஐ.சி.ஐ.சி.ஐ., புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல். இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல் விற்பனை பிரிவு மூத்த துணைத் தலைவர் அனுப் ராவ் கூறும்போது, இந்த ஒப்பந்தப்படி தமிழகத்தில் உள்ள 12,179 போஸ்ட் ஆபீஸ்களில் ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியில் சேரலாம். ஏற்கனவே பாலிசியில் சேர்ந்துள்ளவர்கள், இணைய தளம் மூலம் இணைக்கப்பட்டுள்ள 1,129 போஸ்ட் ஆபிஸ்களில் பிரீமியம் செலுத்தலாம் என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Sunday, January 10, 2010

ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் : 17 காப்பீடு திட்டங்கள் அறிமுகம்

ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வகையில் புதிதாக 17 காப்பீடு திட்டங்களை அறிமுகப் படுத்த உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய பங்குச்சந்தை முதலீடு வாயிலாக அதிக லாபத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற முறையிலும், அவர்களது தேவையை பூர்த்தி செய்யும் விதத்திலும் புதிய காப்பீடு திட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட உள்ளன. பிரிமியம் செலுத்தும் வகையில் யூலிப் காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். யூனிட் லிங்கிடு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி என்ற காப்பீடு திட்டம் சுருக்காமாக யூலிப் என்று அழைக்கப்படுகிறது. இந்த காப்பீடு திட்டங்களில், காப்பீடு செய்து கொண்டவர்கள் செலுத்தும் பிரிமியம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், நிதி சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.
நன்றி : தினமலர்


Tuesday, December 15, 2009

தேசம் விலை​போ​கி​றதே...!

அது மன்​ன​ராட்சி ஆனா​லும்,​​ மக்​க​ளாட்சி ஆனா​லும்,​​ ஏன் சர்​வா​தி​கார ஆட்​சியே ஆனா​லும் அந்த நாட்​டை​யும்,​​ மக்​க​ளை​யும்,​​ அவர்​க​ளது நல​னை​யும் பாது​காப்​ப​து​தான் அடிப்​ப​டைக் கடமை.​ நல்ல பல திட்​டங்​க​ளின் மூலம் மக்​க​ளது நல்​வாழ்​வுக்கு ஓர் அரசு உத்​த​ரவு தரு​கி​றதோ இல்​லையோ,​​ அன்​னி​யர்​கள் தேசத்தை ஆக்​கி​ர​மிக்​கா​மல் பாது​காப்​ப​தும்,​​ சுரண்​டா​மல் பார்த்​துக் கொள்​வ​தும் எந்த ஓர் அர​சுக்​கும் அடிப்​ப​டைக் கடமை.​ இந்த அடிப்​ப​டைக் கட​மை​யைக்​கூட மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி செய்​யத் தவ​று​கி​றதோ என்​கிற ஐயப்​பாடு சமீ​ப​கா​ல​மா​கத் தோன்​றி​யி​ருக்​கி​றது.​

இந்​தியா மிகப்​பெ​ரிய மின் பற்​றாக்​கு​றை​யைச் சந்​திக்க இருக்​கி​றது என்​பதை யாரும் மறுக்​க​வில்லை.​ இந்​தி​யா​வின் எரி​சக்​தித் தேவையை எப்​படி எதிர்​கொள்​வது என்​ப​தில் அனை​வ​ரும் கைகோர்த்து,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நல​னை​யும் கருத்​தில்​கொண்டு செயல்​பட வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்து இருக்க முடி​யாது.​ இந்​தப் பிரச்​னை​யில் மக்​கள் கருத்தை முறை​யா​கக் கணிக்​கா​ம​லும்,​​ பொது​வான அணு​கு​மு​றை​யைக் கடைப்​பி​டிக்​கா​ம​லும் அமெ​ரிக்​கா​வு​டன் பல்​வேறு சம​ர​சங்​க​ளைச் செய்​து​கொண்டு அணு​சக்தி ஒப்​பந்​தம் செய்து கொண்​டது இந்​திய அரசு.​

அது​வும் போதா​தென்று,​​ இந்​தி​யா​வின் உரி​மை​களை அடகு வைக்​கும்,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நியா​ய​மான பாது​காப்பை நிர்​மூ​ல​மாக்​கும் ஒரு நட​வ​டிக்​கை​யி​லும் இப்​போது மன்​மோ​கன் சிங் தலை​மை​யி​லான அரசு இறங்கி இருப்​பது அதிர்ச்சி அளிக்​கி​றது.​

அது இந்​திய நிறு​வ​னமோ,​​ பன்​னாட்டு நிறு​வ​னமோ எது​வாக இருந்​தா​லும்,​​ தாங்​கள் தொழில் செய்து லாபம் சம்​பா​திப்​ப​தற்​கா​கச் சுற்​றுச்​சூ​ழ​லைப் பாதிப்​ப​தும்,​​ தொழி​லா​ளர்​கள் மற்​றும் அந்​தத் தொழிற்​சா​லை​யைச் சுற்றி வாழும் மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​கும்,​​ ஆரோக்​கி​யத்​துக்​கும் பாதிப்பு ஏற்​ப​டுத்​து​வ​தும் ஏற்​பு​டை​ய​தல்ல.​ நமது அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் 21-வது பிரி​வின்​படி வாழ்​வு​ரிமை என்​பது ஒவ்​வோர் இந்​தி​யக் குடி​ம​க​னுக்​கும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.​

நமது உச்ச நீதி​மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் மேலும் ஒரு​படி சென்று,​​ வாழும் உரிமை என்​பது உயி​ரு​டன் வாழ்​வது என்​பது மட்​டு​மல்ல,​​ சுய​ம​ரி​யா​தை​யு​டன் வாழ்​வது என்​ப​தும் அடிப்​ப​டைத் தேவை​க​ளான உண்ண உணவு,​​ உடுக்க உடை,​​ இருக்க வீடு இவை​க​ளு​டன் வாழ்​வது என்​ப​தும்​தான் என்று பல தீர்ப்​பு​க​ளின் மூலம் உறுதி செய்​தி​ருக்​கி​றது.​ அதை மேலும் விரி​வு​ப​டுத்தி,​​ மனித உரி​மை​யு​ட​னும்,​​ கௌ​ர​வத்​து​ட​னும் வாழ்​வது என்​பது,​​ பாது​காக்​கப்​பட்ட சுற்​றுச்​சூ​ழ​லு​ட​னும்,​​ நச்​சுக் கலப்​பில்​லாத காற்று மற்​றும் தண்​ணீ​ரு​ட​னும் வாழ்​வது என்​று​கூ​டத் தீர்ப்பு வழங்கி இருக்​கி​றது.​

உல​கி​லுள்ள ஏனைய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டங்​களை எல்​லாம்​விட,​​ இந்​திய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் சுற்​றுச்​சூ​ழ​லுக்கு மிக அதி​க​மான முன்​னு​ரி​மை​யும் முக்​கி​யத்​து​வ​மும் அளித்​தி​ருக்​கி​றது.​ இயற்​கைச் சூழ​லைப் பேணு​வது மற்​றும் அதி​க​ரிப்​பது என்​பதை அர​சி​யல் சட்​டப்​பி​ரிவு 51-அ,​​ அடிப்​படை உரி​மை​யா​கவே நமக்கு அளித்​தி​ருக்​கி​றது.​

உச்ச நீதி​மன்ற பல்​வேறு தீர்ப்​பு​கள் வலி​யு​றுத்​தும் கருத்து,​​ எந்த ஒரு தொழில் நிறு​வ​ன​மும் அத​னால் ஏற்​ப​டும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​க​ளுக்கு முழுப் பொறுப்​பும் ஏற்​றாக வேண்​டும் என்​ப​தைத்​தான்.​ தங்​க​ளது ஊழி​யர்​க​ளுக்கு மட்​டு​மல்ல,​​ அந்த நிறு​வ​னத்​தின் கழி​வு​கள்,​​ வாயுக் கசி​வு​கள் மற்​றும் நச்​சுத்​தன்மை போன்​ற​வற்​றால் சுற்​றி​லும் வாழும் பொது​மக்​க​ளுக்​கும்,​​ உயி​ரி​னங்​க​ளுக்​கும் ஏற்​ப​டும் பாதிப்​பு​கள் அனைத்​துக்​கும்​கூட நிறு​வ​னம் பொறுப்​பேற்​றாக வேண்​டும்.​

சட்​ட​மும் அர​சி​யல் சட்​ட​மும் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ தார்​மிக ரீதி​யா​கப் பார்த்​தா​லும்,​​ தாங்​கள் லாபம் கரு​திச் செய்​யும் தொழில் அடுத்​த​வ​ரைப் பாதிக்​கக்​கூ​டாது என்​ப​தும் அப்​ப​டிப் பாதிப்பு ஏற்​பட்​டால் அதற்​கான நஷ்ட ஈடும் பரி​கா​ர​மும் செய்ய வேண்​டும் என்​ப​தும் சட்​டம் இருந்​தா​லும் இல்​லா​விட்​டா​லும் மனித நாக​ரி​கம் ஏற்​றுக்​கொள்​ளும் கட​மை​யும்​கூட.​ நிலைமை இப்​படி இருக்​கும்​போது,​​ நமது மத்​திய அரசு விசித்​தி​ர​மான ஒரு சட்​டத்​தின் மூலம்,​​ அன்​னி​யப் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் நஷ்ட ஈட்​டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்​க​ளுக்​குப் பாது​காப்பு அளிக்​கத் தயா​ராகி இருப்​ப​து​தான் வெட்​கக் கேடாக இருக்​கி​றது.​

அமெ​ரிக்​கா​வில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடு​க​ளு​டன் இந்​தியா கையெ​ழுத்​திட்ட அணு எரி​சக்தி ஒப்​பந்​தங்​க​ளுக்​குப் பிற​கும் அந்த நாட்டு நிறு​வ​னங்​கள் இன்​னும் அணு மின் நிலை​யங்​க​ளைத் தொடங்க ஆர்​வத்​து​டன் முன்​வ​ரா​தது ஏனாம் தெரி​யுமா?​ அந்த அணு மின் நிலை​யங்​க​ளில் ஒரு​வேளை கசிவு ஏற்​பட்டு அத​னால் பாதிப்பு ஏற்​பட்​டால்,​​ அதற்கு அந்​தப் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் முழுப் பொறுப்பு ஏற்​றாக வேண்​டுமே என்​ப​தால் அவர்​கள் தயங்​கு​கி​றார்​க​ளாம்.​ எப்​படி இருக்​கி​றது கதை.​ அணு மின் நிலை​யங்​க​ளில் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து லாபம் அடைய மட்​டும்​தான் தயா​ராம்!​ ​

நமது இந்​திய அரசு உடனே என்ன செய்ய இருக்​கி​றது தெரி​யுமா?​ அணு​மின் எரி​சக்தி பாதிப்​புச் சட்​டம் ​(சிவில் நியூக்​ளி​யர் லயபி​லிட்டி பில்)​ என்​றொரு சட்​டம் இயற்றி,​​ இந்த அணு​மின் நிலை​யங்​க​ளால் பாதிப்பு ஏற்​பட்​டால் அந்த நிறு​வ​னங்​க​ளின் அதி​க​பட்ச நஷ்ட ஈட்​டுத் தொகை 450 மில்​லி​யன் டாலர் என்று பாது​காப்​புத் தர முன்​வந்​தி​ருக்​கி​றது.​ அதற்கு மேலான பாதிப்​பு​க​ளுக்கு இந்​திய அரசே பொறுப்பு ஏற்​றுக் கொள்​ளு​மாம்.​

என்ன அயோக்​கி​யத்​த​னம் என்று யாரும் கேட்​டு​வி​டக் கூடாது.​ தேசப்​பற்​று​மிக்க ஓர் அரசு,​​ இந்​தி​யாவை ஓர் அமெ​ரிக்​கா​வாக மாற்​ற​வும்,​​ பன்​னாட்டு முத​லீ​டு​க​ளைப் பெறு​வ​தற்​கா​க​வும் இப்​படி ஒரு "சலுகை' அளிக்க இருக்​கி​றது.​ நாளைய தலை​மு​றை​யின் நல்​வாழ்வு முக்​கி​யமா,​​ இந்​திய மக்​க​ளின் பாது​காப்பு முக்​கி​யமா இல்லை பன்​னாட்டு முத​லீ​டும்,​​ ஆபத்​தான அணு மின்​சக்​தி​யும் முக்​கி​யமா?​

தேச​ந​லன் விலை​போ​கி​றது -​ ​ வியா​பா​ரி​க​ளால் அல்ல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளால்!​ வந்தே மாத​ரம்!
நன்றி : தினமணி

Saturday, November 21, 2009

மூன்றாம் பால்

அரவானிகள் விரும்பினால், வாக்காளர் பட்டியலில் தங்களை "மற்றவர்' என்று தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை முதன்முறையாக அறிவித்துள்ளது. அரவானிகளின் பத்தாண்டுகளுக்கும் மேலான கோரிக்கைக்குத் தேர்தல் ஆணையம் முதன்முதலாக செவி சாய்த்திருக்கிறது. இதற்காகத் தேர்தல் ஆணையம் பாராட்டப்பட வேண்டும்.

இதுநாள்வரையிலும் அரவானிகளில் பெரும்பாலோர் வாக்களித்து வந்தாலும்கூட, அவர்கள் ஆண் அல்லது பெண் என்றே பால் பாகுபாடு செய்யப்பட்டு வந்தனர். வேலைவாய்ப்புகள், கடவுச்சிட்டை (பாஸ்போர்ட்) உள்ளிட்ட ஆவணங்களிலும்கூட இந்த பாகுபாடு ஆண் அல்லது பெண் என்றாக மட்டுமே இருந்து வருகிறது. தற்போது தேர்தல் ஆணையம் தொடங்கி வைத்துள்ள இந்த நல்ல நடைமுறை, அனைத்து துறைகளுக்கும் பரவும் என்பதில் சந்தேகமில்லை.

அரவானிகளில் சிலர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் போட்டியிடவும் செய்தார்கள். ஆனால், வடஇந்தியாவில் சில நகராட்சித் தேர்தல்களில் அரவானிகள் சிலருக்கு கிடைத்த வெற்றியைப் போல தமிழ்நாட்டில் பெற இயலவில்லை.

தேர்தலில் போட்டியிடும்போது அவர்கள் தங்களை ஆண் அல்லது பெண் என்ற ஏதோ ஒரு பாலினத்தைத் தேர்வு செய்துதான் போட்டியிட முடிந்தது. ஆனால் இப்போது மற்றவர்கள் என்பதைத் தேர்வு செய்து போட்டியிட முடியும். பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் தொகுதிகளில் மற்றவர்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்பது இப்போதைக்கு தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் இதற்கான தனி வரையறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்கும் என்பது நிச்சயம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கிராமத்தில் அரவானிகள் நடத்தும் திருவிழாவுக்கும் அழகிப் போட்டிக்கும் சமூகமும் அரசும் கொடுத்த முக்கியத்துவம் அவர்களது கோரிக்கைகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. காரணம், இவர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்ற கருத்து உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சம் 2 லட்சம் பேர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது மற்றவர்கள் எண்ணிக்கை வரும்போது இவர்களது சரியான எண்ணிக்கை தெரியவரும். இவர்களுக்கென ஒரு வாக்குவங்கி இருப்பது தெரிந்தால் ஒருவேளை அரசியல் கட்சியினரும் இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதிகளை அளிப்பார்கள்.

பிறப்பிலேயே அரவானிகளாக இருப்போர் எண்ணிக்கையைவிட, வளரும் காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உளவியல் மாற்றங்களால் தங்களை அரவானிகளாக மாற்றிக்கொள்வோர் எண்ணிக்கை அதிகம். இவர்கள்தான் தங்களை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களில் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு பாலின மாற்றுச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல்களும், புகார்களும் இருந்து வருகின்றன. இவர்கள் பிறப்புச் சான்றிதழில் பாலினத்தை மாற்றிப் பதிவு செய்வதிலும் சிக்கல்கள் இருந்து வருகின்றன.

அரவானிகளுக்கு தமிழக அரசு எப்போதும் கனிவாகவே நடந்து வந்திருக்கிறது. அரவானிகளின் பாலினமாற்று அறுவைச் சிகிச்சைக்கு மும்பை செல்லும் நிலைமையை மாற்றி, தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அரவானிகளுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கிடப் புகைப்படங்கள் எடுக்கும்பணி சென்னையில் நடைபெற்றுள்ளது. அரவானிகள் சிலர் தங்களுக்குக் குடும்ப அட்டைகள் கேட்டு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். இவை யாவும் அவர்களுக்கு ஆதரவாக அமையும்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தரம் தாழ்த்திக் கொள்ளாமல் தனித்து வாழ உதவியாக இருக்கும்.

கடைவீதியிலும், ஓடும் ரயில்களிலும் அரவானிகள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து வெறுப்பு ஏற்படுவது இயற்கையே. அவர்களது நிலையைப் புரிந்துகொண்டால் இந்த வெறுப்பு மறையும். மேலும் அரவானிகளும் பெருகி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு சமூகம் வெறுக்கும் இந்தப் பழக்கவழக்கங்களை விட்டுவிடும்போது அவர்களைப் பற்றிய மதிப்பு கூடும். ஒரு தொலைக்காட்சியில் "இப்படிக்கு ரோஸ்' தொடர் மூலம் அரவானிகள் பற்றிய எண்ணத்தை ஒரு அரவானி மாற்ற முடிகிறதென்றால், இதை நிச்சயமாக எல்லா அரவானிகளாலும் செய்ய முடியும்.

கவிஞர் நா. காமராஜன் கவிதையில், அரவானி தன்னைப் பற்றி சொல்லும் கவிதை வரி இது: "சந்திப் பிழை போல நாங்கள் சந்ததிப் பிழைகள்'. அவர்கள் சந்திப்பிழை அல்ல. தனிச்சொல். எல்லாச் சொல்லும் பொருளுடைத்து!
நன்றி : தினமணி

Sunday, November 15, 2009

புதிய சலுகைகளை வழங்க ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் திட்டம்

அடுத்த ஆண்டிற்குள் புதிய சலுகைகளை வழங்க ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், மிக சிறந்த மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின், முதல் பத்து இடத்திற்குள் வந்து விட வேண்டும் என்ற இந்நிறுவனத்தின் இலக்கே இந்த சலுகைகளை வழங்க காரணமாகும்.

மிக சிறந்த பத்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதலீட்டாளர்களை கவரும் விதமாக பல்வேறு புதிய சலுகைகளை அளிக்க இருப்பதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என்றும் ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Wednesday, November 11, 2009

ஆயுள் காப்பீடு நிறுவனத்தை தொடங்கியுள்ள வங்கிகள்

பொதுத்துறை வங்கிகள் இணைந்து ஆயுள் காப்பீடு நிறுவனத்தை தொடங்கி உள்ளன. பேங்க் ஆப் பரோடா, ஆந்திரா வங்கி, பிரிட்டனைச் சேர்ந்த லீகல் அன்ட் ஜெனரல் உள்ளிட்ட வங்கிகள் கூட்டாக இணைந்து ஆயுள் காப்பீடு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாகவும், இந்தியா பர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் என்ற பெயரில் இந்த நிறுவனம தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கூட்டு நிறுவனத்தில் பேங்க் ஆப் பரோடா 44 விழுக்காடு பங்குகளையும், ஆந்திரா வங்கி 30 விழுக்காடு பங்குகளையும், லீகல் அண்டு ஜெனரல் நிறுவனம் 26 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்கும்.
இந்த கூட்டு நிறுவனம் ரூ.200 கோடி மூதலீட்டுடன் தொடங்கப்பட உள்ளது. இதன் முதலீட்டு அளவை அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.2,500 கோடியாக அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

இந்நிறுவனம் ஆரம்பத்தில் இர்டாவிடம், நான்கு ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு அனுமதிக்கு விண்ணப்பித்து உள்ளது. இதில் மூன்று பங்கு சந்தை சார்ந்த காப்பீடு திட்டங்களாக இருக்கும். இத்திட்டங்களை அறிமுகம் செய்வதற்கான அனுமதி கிடைத்தவுடன் நிறுவனம் அதன் செயல்பாடுகளைத் தொடங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

வாகன இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை குறைப்பது எப்படி?

இன்சூரன்ஸ் என்பது கட்டயமாக்கப்பட்ட ஒன்று. போலீஸார் சோதனை நடத்தும் போது, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கண்டிப்பாக ஆய்வு செய்வார்.
எனவே, கார் மற்றும் பைக்குக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை வாகன ஓட்டிகள் நன்கு உணர்ந்து இருப்பர். ஆனால், பெரும்பான்மையானோர் சோம்பறிதனத்தினால், வாகனத்துக்கு இன்சூரன்ஸை ஆண்டுக்கு ஆண்டு புதுப்பிக்க மறந்து விடுவர். வாகனம் விபத்தில் சிக்கும் போது தான், இன்சூரன்ஸின் உண்மை நிலை அவர்கள் உணர தொடங்குவர்.

வாகன இன்சூரன்ஸ் கட்டயமாக்கப்பட்ட ஒன்று என்றாலும், அதற்கான பிரிமியம் தொகையை பல வகையிலும் குறைக்க முடியும். அதற்கு முத்தான 10 வழிகள் இதோ.

1. வாகனத்தின் மாடல் மற்றும் வகை: கார் அல்லது பைக்கை பல நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் வாகனம், அடிக்கடி விபத்துக்குள்ளாவது, விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் வடிவமைப்பு இருப்பது போன்ற காரணத்துக்காக அந்த வாகனத்துக்கும் மட்டும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூடுதல் பிரிமியம் வசூலிப்பர். எனவே, எந்த மாடல், எந்த வகை வாகனத்துக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டால், பிரிமியம் தொகை குறையும். சில மாடல் வாகனங்கள், பராமரிப்பு செலவு குறைந்ததாக இருக்கும். அந்த வாகனங்களுக்கும் குறைந்த பிரிமியம் தான் வசூலிக்கப்படுகிறது.

2. டிரைவரின் பாலினம்: வெளிநாடுகளில், வாகனத்தை ஓட்டுபவர் ஆணா பெண்ணா? என்று பார்த்து அதற்கு ஏற்றவாறு பிரிமியம் தொகை வசூலிக்கின்றனர். ஆண் என்றால், குறைந்த பிரிமியம், பெண் என்றால் அதிக பிரிமியம் தொகை என்ற நிலைமை பல நாடுகளில் காணப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறை இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை. எனினும், பஜாஜ் அலியான்ஸ் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஆண் டிரைவர்களை விட பெண்கள் சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றனர் என்று கருதுகின்றனர். எனவே, பெண்கள் பெயரில் இன்சூரன்ஸ் பதியும் போது சில சலுகைகளை அளிக்கின்றனர்.

3. வாகனம் ஓடும் நகரம்: வாகனம் எந்த நகரத்தில் பதிவு செய்யப்பட்டது, எந்த நகரில் ஓடுகிறது என்பதையும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கவனிக்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் உள்ள நகரத்தில், வாகனங்களுக்கு உரசி செல்வதால் ஏற்படும் சிறிய சேதங்கள் தான் ஏற்படும். ஆனால், நெடுஞ்சாலைகளில் செல்லும் போது ஏற்படும் விபத்தில் வாகனங்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகும். எனவே, இன்சூரன்ஸ் புக் செய்யும் போது எந்த நகரத்தில் ஓடுகிறது/ ஓடப்போகிறது என்பதை தெளிவாக குறிப்பிட்டால், அதற்கு ஏற்றவாறு, பிரிமியம் தொகை கணக்கிடப்படும். பெரிய நகரங்கள் என்றால், பிரிமியம் தொகை குறைய வாய்ப்பு உள்ளது.

4. வாகனம் ஓட்டுபவரின் பணி: கார் அல்லது பைக்கை ஓட்டுகிறவர் என்ன பணி செய்கிறார் என்பதை பொருத்தும் பிரிமியம் தொகை குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். தினமும் அலுவலகம் செல்பவர் என்றால், அலுவலகம் மற்றும் வீட்டுக்கு செல்லத் தான் அந்த வாகனத்தை பயன்படுத்துவார். ஆனால், சிறு வணிகம் செய்பவர் என்றால், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் வாகனத்தை செலுத்துவார். எனவே, வாகனம் ஓட்டுபவர் என்ன பணி செய்கிறார் என்பதை பொருத்தே பிரிமியம் தொகையும் கணக்கிடப்படுகிறது.

5. கிளைம் செய்யாவிடில் போனஸ்: வாகன இன்சூரன்ஸ் செய்து இருப்பவர், அந்த வாகனம் சிறு சிறு விபத்துக்களில் சிக்கும் போது ஆகும் செலவை, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கிளைம் செய்யாவிடில், ஆண்டுதோறும் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது, 'நோ கிளைம் போனஸ்' என்ற பெயரில் பிரிமியம் தொகையில் சிறிதளவு குறைக்கப்படுகிறது. ஆனால், இன்சூரன்ஸை புதுபிக்கும் போது எவ்வித தாமதத்தையும் காட்டாமல், உடனுக்கு உடன் புதுப்பித்தால், இந்த தள்ளுபடி சலுகை பெறாலம். கிட்டத்தட்ட பிரிமியம் தொகையில் 35 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

7. பாதுகாப்பு சாதனங்கள்: கார் அல்லது பைக், திருடு போகாமல் இருக்க, விபத்தின் போது பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்களை பொருத்தி இருந்தால், அதற்கு ஏற்றவாறு பிரிமியம் தொகை குறையும்.

8. வாகனத்தின் உரிமையாளர் ஆட்டோமொபைல் சங்க உறுப்பினராக இருந்தால், 5 சதவீதம் வரை, பிரிமியம் தொகையில் குறைக்கப்படும்.

9. குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் முதல், சில காலம் வரை வாகனம் பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டு இருந்தால், இன்சூரன்ஸ் காலத்தை நீட்டிக்க செய்யலாம் அல்லது இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் போது சில தள்ளுபடி சலுகை பெறலாம். எனினும், குறிப்பிட்ட காலத்துக்கு வாகனத்தை பயன்படுத்த போவதில்லை என்பதை, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் இந்த சலுகை கிடைக்கும்.

10. ஆன் லைனில் பதிவு: ராயல் சுந்தரம், பஜாஜ் அலியான்ஸ் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஆன் லைன் மூலம் வாகன இன்சூரன்ஸ் மேற்கொள்ளும் நபர்களுக்கு பிரிமியம் தொகையில் தள்ளுபடி சலுகை அளிக்கின்றனர்.

இவ்வாறு, பத்து வழிகளை பின்பற்றினால், வாகன இன்சூரன்ஸின் பிரிமியம் தொகையை ஓரளவுக்கு குறைக்க முடியும்.
நன்றி : தினமலர்

Tuesday, October 20, 2009

பாதுகாப்பான டிரைவிங் பிரிமியம் ரேட் குறையும்

இன்சூரன்ஸ் கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்களால், பல ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, தற்போது கார் இன்சூரன்சில் பல பயன்கள் உள்ளன. பாதுகாப்பாக, வாகனங்கள் ஓட்டுபவர்கள், சில ஆதாயங்கள் பெறும் வகையில், ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு, புதிய திட்டம் ஒன்றை சோதனை திட்டமாக துவங்கி உள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, காரில், டிராக்கிங் கருவி ஒன்று பொருத்தப்படும். அந்த கருவி, காரின் வேகம், 60 கி.மீ.,க்கு மேல் செல்கிறதா, போக்குவரத்து விதிகள் மீறப்படுகிறதா மற்றும் இரவு 10 மணிக்கு மேல் கார் ஓட்டப்படுகிறதா என்பதை கண்டறியும். இதன் மூலம் காரின் பயன்பாடு கண்டறியப்படும்.
முன், 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட, டிராக்கிங் கருவியின் தற்போதைய விலை ஐந்தாயிரம் ரூபாய். வாடிக்கையாளர்கள் தங்கள் கார் பயன்பாடு குறித்து, அறிய விருப்பம் தெரிவிக்க வேண்டும். அதுவே இந்த கருவி பொருத்துவதில் இருக்கும் ஒரே பிரச்னை.
இதுகுறித்து ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,'டிராக்கிங் கருவி மூலம் சேகரிக்கப்படும், விஷயங்கள் பிரீமியம் கணக்கிடுவதற்கே பயன்படுத்தப்படும். இந்த கருவி, இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற உள்ளது' என்றார்.
நன்றி : தினமலர்


Friday, April 3, 2009

11 மாதங்களில் ஆயுள் காப்பீட்டுத்துறை வளர்ச்சி வெறும் 0.06 சதவீதம்தான்

பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியாவில் பல துறைகளில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் ஆயுள் காப்பீட்டு துறையும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான தகவல் அதனை உறுதி படுத்துகிறது. கடந்த 2008 ஏப்ரலில் இருந்து 2009 பிப்ரவரி வரையில் எடுத்த கணக்கெடுப்பில், ஆயுள் இன்சூரன்ஸ் துறை வெறும் 0.06 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது. ஏப்ரல் - பிப்ரவரி 11 மாதத்தில் அந்த துறையில் வந்த பிரீமியம் தொகை ரூ.72,017.17 கோடி மட்டுமே. இது அதற்கு முந்தைய வருட காலத்தில் ரூ.71,971 கோடியாக இருந்தது. 0.06 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த 11 மாத காலத்தில் அதிகம் நஷ்டமடைந்திருப்பது பஜாஜ் அலியான்ஸ் நிறுவனம்தான். அதன் வளர்ச்சி 28.29 சதவீதம் குறைந்திருக் கிறது. அதற்கு அடுத்ததாக அவிவா 27 சதவீதம், ஐசிஐசிஐ புருடென்ஷியல் 12.4 சதவீதம், ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்டு லைஃப் 6.34 சதவீதம், எல்.ஐ.சி.,4.03 சதவீதம் குறைந்திருக்கிறது. பொதுவாக இன்சூரன்ஸ் துறையில் அதிகம் வர்த்தகம் நடப்பது நிதி ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில்தான். ஆனால் இந்த நிதி ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் எதிர்பார்த்த வர்த்தகம் நடக்கவில்லை. எனவே மார்ச்சிலும் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள்.

நன்றி : தினமலர்