Tuesday, August 31, 2010

தூக்கில் தொங்கும் தீர்ப்புகள்!

தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது நாட்டின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்க முடியும். நாட்டுநடப்புகள் நன்றாக இல்லை என்று யாராவது அழுதுபுலம்பினாலோ, முணுமுணுத்தாலோ அதற்குக் காரணம் அவர்கள் பிறந்த பொன்னாட்டை வெறுப்பதால் அல்ல. தவறுகள் திருத்தப்படாதா, நான் பிறந்த நாடு போற்றுதலுக்கு மட்டுமே உரிய நாடாக மாறிவிடாதா என்கிற ஏக்கமும் ஆதங்கமும்தான் காரணமே தவிர, அது நாட்டுப்பற்று இல்லாமையால் அல்ல. 63 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சம்பளமாக விழுங்கும் நிர்வாக இயந்திரமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இருந்தும் முக்கியமான பிரச்னைகளில் முடிவெடுக்கக்கூடத் துணிவில்லாத அல்லது மனமில்லாத நாடாக இந்தியா தொடர்கிறதே என்று ஆதங்கப்படுவது தவறா என்ன?

2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தீவிரவாத சக்திகளால் தாக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அப்படி இந்திய நாடாளுமன்றத்தையே தகர்த்தெறியும் திட்டத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரான அப்சல் குரு என்பவர் பிடிபட்டார். இது சர்வாதிகார நாடாக இருந்தால், அடுத்த சில நாள்களிலேயே அப்சல் குரு சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்.

நாடாளுமன்றத்தைத் தாக்கிய குற்றத்துக்கான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து, 2002-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி குற்றவாளியான அப்சல் குருவுக்குத் தூக்குத்தண்டனை அளிப்பது எனத் தீர்ப்பும் வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாலேயே விஷயம் முடிந்துவிடாதே; மேல்முறையீடு செய்வதற்காக, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைப்பது என்று 2005 ஆகஸ்ட் 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு இதற்குள் 3 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

2006-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி, உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான தடை விலக்கப்பட்டு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டு, தூக்கிலிடுவதற்கான நாளும் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது, அப்சல் குருவின் மனைவி தபாசம், குடியரசுத் தலைவருக்கு ஒரு கருணை மனுவைச் சமர்ப்பிக்கிறார். இதுபோன்ற கருணை மனுக்களின் மீது குடியரசுத் தலைவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவிட முடியாது. அவர், தனக்கு ஆலோசனை வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அந்தக் கருணை மனுவை அனுப்புகிறார்.

இதெல்லாம் நடந்தது 2006-ம் ஆண்டில். மத்திய உள்துறை அமைச்சகம், குற்றவாளி அப்சல் குரு தொடர்பான கோப்புகளை தில்லி மாநில அரசுக்கு அனுப்பி அந்த அரசின் கருத்தைக் கோருகிறது. தில்லி அரசுக்குப் போன அப்சல் குருவின் கருணை மனு தொடர்பான கோப்பு கிணற்றில் போடப்பட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. பத்திரிகைகள் பக்கம்பக்கமாக எழுதின. பொதுநல சங்கங்கள் ஊர்வலங்கள் நடத்தின. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஊஹூம், அந்தக் கோப்பைப் பற்றிய பேச்சுமூச்சே காணோம்.

மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் திடீரென்று விழித்துக்கொண்டு தில்லி மாநில அரசுக்கு கோப்புப் பற்றி நினைவூட்டும். ஒருமுறை இருமுறை அல்ல, 16 முறைகள் மத்திய உள்துறை அமைச்சகம் குற்றவாளி அப்சல் குருவின் கருணை மனு மீதான தில்லி அரசின் கருத்தைக் கேட்டும் தில்லி அரசு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே இருந்திருக்கிறது.

இதுவே எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலமாக இருந்தால் இந்தக் காரணத்துக்காகவே அந்த ஆட்சியைக் கலைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் 16 கடிதங்களை தில்லி அரசு பார்த்தும் பார்க்காமலும் இருந்தது என்றால், அதுவே நம்பும்படியாக இல்லை.

கடந்த மே மாதம் 18-ம் தேதி தில்லி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சில விளக்கங்களைக் கேட்டு ஒரு கடிதம் அனுப்புகிறார். விளக்கங்கள் கிடைத்ததும் உடனடியாக தில்லி அரசு முடிவெடுத்ததா என்றால் அதுவும் இல்லை. இரண்டு வாரத்துக்கு முன்புதான் சற்று மனம்இறங்கி, குற்றவாளி அப்சல் குரு சம்பந்தப்பட்ட கோப்புகளைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் தில்லி துணைநிலை ஆளுநர் தேஜேந்தர் கன்னா.

அப்சல் குருவைத் தூக்கிலிடுவது என்கிற தீர்ப்பில் தங்களுக்கு எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது என்று கூறியதுடன் அவர் நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. "அப்சல் குருவைத் தூக்கிலிடுவதால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை பற்றி நன்றாக மறுபரிசீலனை செய்துவிட்டு முடிவெடுக்கவும்' என்று அவர் பரிந்துரைத்திருப்பதுதான் விந்தையிலும் பெரிய விந்தை.

அப்சல் குரு இந்திய நாடாளுமன்றத்தையே தகர்க்க முயன்ற நாசகாரக் கும்பலைச் சேர்ந்தவர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர். அவரைத் தூக்கிலிடுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்கிறாரே தில்லி துணைநிலை ஆளுநர், அப்படி சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துபவர்கள் யார் என்றும் குறிப்பிட்டிருக்கலாமே...

இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சகோதரர்கள் அப்சல் குருவுக்காக வருத்தப்படுவார்கள் என்றோ குரல் கொடுப்பார்கள் என்றோ யாராவது நினைத்தால், அப்படி நினைப்பவர்கள்தான் தேசத் துரோகிகள். இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களைக் களங்கப்படுத்துவதும், அவர்களது தேசபக்தியைக் கொச்சைப்படுத்துவதும்தான் இப்படிக் கூறுபவர்களின் உள்நோக்கம். குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

குற்றவாளியாகவே இருந்தாலும்கூட தூக்கிலிடுவதற்கு முன்னால் தீர யோசித்து முடிவெடுப்பதில் தவறில்லை. ஆனால், தவறான காரணத்தைக் காட்டி தீர்ப்பைத் தள்ளிப்போடுவது ஏற்புடையதல்ல. கருணை மனுவை காலவரையில்லாமல் ஒத்திபோடுவது நீதிக்கும் இழுக்கு, சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கும் இழைக்கப்படும் அநீதி.

தேசத்தை நேசிப்பதால் கோபம் வருகிறது. தூக்கிலிடப்பட வேண்டியது அப்சல் குருவையா, இவர்களையா? இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால், இந்திய மக்களே கொதித்தெழுந்து நாடாளுமன்றத்தைத் தகர்த்தெறிந்து விடாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை மேலெழுகிறது...
நன்றி : தினமணி

Monday, August 30, 2010

பாகிஸ்தான் - சீனா பாய்.. பாய்...!

இந்தியாவைச் சீண்டுவதும் பிறகு கைகுலுக்கிச் சமாதானம் பேசுவதும் சீனாவுக்கு வாடிக்கையாகிவிட்டது. அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொண்டாக வேண்டும் என்கிற நல்லெண்ணத்தால், நாமும் நமது அண்டை நாடுகள் நமக்கு இழைக்கும் துரோகங்களையும், அவமானங்களையும் தொடர்ந்து மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறோம். இதற்குப் பெயர்தான் ராஜதந்திரம் என்றோ, இதுதான் சாதுர்யமான வெளிவிவகாரக் கொள்கை என்றோ நமது ஆட்சியாளர்கள் கருதுவார்களேயானால், அதன் விளைவுகள் விளைவிக்க இருக்கும் பாதகங்கள் அளப்பரியது என்று நாம் எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தியாவிலிருந்து உயர்நிலை ராணுவ அதிகாரிகளின் குழு ஒன்று பெய்ஜிங்குக்குச் செல்வதாக இருந்தது. அந்தக் குழுவில் இந்திய ராணுவத்தின் வடஎல்லையின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ஜஸ்வாலும் இடம்பெற்றிருந்தார். ஆனால், எந்தவிதக் காரணமும் குறிப்பிடாமல் அவருக்கு மட்டும் நுழைவு அனுமதி (விசா) வழங்க பெய்ஜிங் மறுத்து விட்டிருக்கிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கிழக்கு எல்லையில் பிரச்னைகள் இருப்பது உலகறிந்த உண்மை. அருணாசலப் பிரதேசத்தில் தொடங்கி நமது வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த பல பகுதிகளை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. இப்போது இந்தியாவின் தலைமை ராணுவத் தளபதியாக இருப்பவர் முன்பு கிழக்கு கமாண்டின் தலைமைத் தளபதியாக இருந்தபோது, சீனாவுக்குச் சென்று வந்திருக்கிறார். எல்லைப் பிரச்னைக்காக நுழைவு அனுமதி வழங்காமல் இருப்பதாக இருந்தால் அவருக்கு அனுமதி மறுத்திருக்க வேண்டும்.

லெப்டினன்ட் ஜெனரல் ஜஸ்வாலுக்கு அனுமதி மறுத்திருப்பதற்குக் காரணம் என்ன என்று விசாரித்தபோது, இதற்குக் காரணம் பாகிஸ்தான் என்பது தெரிகிறது. சமீபகாலமாகவே, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு நாளும் பொழுதும் பலமடைந்து வருகிறது. பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதிகளை சீனாவின் பாதுகாப்பில் விடுவதற்கான ஆலோசனை பாகிஸ்தானின் ராணுவத்தால், அந்த நாட்டு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக சில நாள்களுக்கு முன்னால் அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்திருந்ததை நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.

மேல்நாட்டு வல்லரசுகளும் சரி, சீனாவும் சரி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டுவிடாமல் காஷ்மீர் பிரச்னை தீர்ந்துவிடாமல் பாதுகாப்பதற்கு ஒரு காரணம் உண்டு.

காஷ்மீரைத் தனி நாடாக்கி அங்கே தங்களது ராணுவத் தளத்தை நிறுவிவிட்டால் எண்ணெய் வளம் கொழிக்கும் மேற்காசியாவையும், பாரசீக வளைகுடாவையும், ரஷியாவையும், இந்தியாவையும், சீனாவையும் ஒருசேரக் கண்காணிக்கும் வகையில் செயல்பட முடியும் என்பதால்தான், எல்லா நாடுகளுக்குமே காஷ்மீர் மீது ஒரு கண்.

ஒருபுறம் தலிபான்களும் மற்றொருபுறம் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் மோதிக்கொள்ளும் நிலையில், தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ள பாகிஸ்தான், தனக்குக் கிடைக்காவிட்டாலும் காஷ்மீர் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதில் நிச்சயமாகக் குறியாக இருக்கும். அதனால்தானோ என்னவோ, இப்போது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் சீனப் படைகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கும் திட்டமும் சீனாவால் முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் மேலைநாட்டுப் பத்திரிகைகளில் கசிந்தவண்ணம் இருக்கின்றன. பாகிஸ்தானின் ராணுவத்துக்கு சீனா உதவுகிறது என்பதும், பாகிஸ்தானின் அணு ஆயுதச் சோதனைகளுக்கு சீனாதான் பக்கபலமாக இருந்து உதவியது என்பதும் புதிய செய்தி ஒன்றுமல்ல.

லெப்டினன்ட் ஜெனரல் ஜஸ்வாலின் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் அதற்கு ஒரே ஒரு விடைதான் கிடைக்கிறது. இந்தியாவின் வடமேற்கு எல்லையில் பாகிஸ்தானும் சீனாவும் கைகோத்து செயல்படுவதைப் பற்றிய கேள்விகளை எழுப்பி அவர் சீன ராணுவ அதிகாரிகளைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால்தான் சீனா இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்.

பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை என்று இந்தியாவைச் சுற்றியுள்ள எல்லா அண்டை நாடுகளையும் தனது நட்பு வளையத்துக்குள் சீனா கொண்டு வந்திருக்கிறது என்கிற உண்மையைப் பலமுறை நாம் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். சமீபகாலமாக, இந்துமகா சமுத்திரத்தில், குறிப்பாக டீகோ கார்சியா உள்பட பல சிறிய நாடுகளில் சீனக் கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து வருவதையும் நாம் எச்சரிக்கையுடன் கவனித்தாக வேண்டும்.

ஒருபுறம் சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளைக்கூடத் துச்சமாக மதிக்கும் ஆணவம் சீனாவிடம் சமீபகாலமாகக் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் "வீட்டோ' சக்தியுடனான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்ட சீனா, மேலாதிக்கம் செலுத்தும் எண்ணத்துடன் செயல்படக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் நிறையவே காணப்படுகின்றன.

சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நேசக்கரம் நீட்டுவதெல்லாம் சரி. நமது பாதுகாப்பையும், ஒருவேளை ஆக்கிரமிப்புக்கு சீனாவோ, பாகிஸ்தானோ முனைந்தால் அதை எதிர்கொள்ள வியூகங்களையும் நாம் வகுத்துக் கொண்டிருக்கிறோமா?

நயவஞ்சகத்தை நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர்களை மீண்டும் ஒருமுறை நம்பி மோசம் போய்விடுவோமோ என்று பயமாக இருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா மீது இருக்கும் நம்பிக்கைகூடத் தங்கள் மீது இல்லையோ என்கிற நமது நியாயமான சந்தேகம்தான் அதற்குக் காரணம்!
நன்றி : தினமணி

Saturday, August 28, 2010

போதுமே போலித்தனம்!

இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.

அணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளாதாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.

உலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே! இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.

இந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த "கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.

இவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன்படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில் நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும்,

இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா?

ஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?

எதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது? ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும்பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதைவாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர் அனில் அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக்கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு?

தீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா?

ஒன்று, "நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா!
நன்றி : தினமணி

தன்னார்வக் குளறுபடிகள்...

அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. 19 வயதில் கன்னியாஸ்திரியாக கொல்கத்தா வந்து சேர்ந்த தெரசாவின் சேவையும் புகழும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்தவேளையில், இந்தியாவில் அனைவருக்குமான ஒரு கேள்வியை அன்னை தெரசாவின் வாழ்க்கை முன்வைக்கிறது: அன்னை தெரசா போன்று இத்தகைய சேவையைச் செய்பவர்கள் இந்தியாவில் பரவலாக உருவாகவில்லையே, ஏன்?

இந்தியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எனப் பதிவுபெற்ற சேவை நிறுவனங்கள் 33 லட்சம் இருப்பதாக அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்ட ஓர் ஆங்கிலப் பத்திரிகை, இதன்படி 400 இந்தியருக்கு ஒரு சேவை அமைப்பு இருப்பதாகக் கணக்கிட்டுக் காட்டியுள்ளது. இந்தச் சேவை அமைப்புகள் உண்மையாகவே தொண்டு செய்திருக்குமானால், இந்தியாவில் இப்போது நிலவும் அறியாமை, வறுமை, கல்லாமை எதுவுமே இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியேதும் நடந்துவிடவில்லை.

இதற்குக் காரணம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நமது அரசின் நடைமுறைகளும்தான். இவை யாவுமே இந்தியாவில் மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாக இருக்கின்றன; மிக எளிதாக, வியர்வை சிந்தாமல் உண்டு கொழுப்பதற்கான தொழிலாகத் தன்னார்வத் தொண்டு மாறிக்கிடக்கிறது.

கல்வி விழிப்புணர்வு என்றாலும், எய்ட்ஸ் விழிப்புணர்வு என்றாலும், காசநோய் ஒழிப்பு என்றாலும், முதியோர் காப்பகம் அல்லது மூளைவளர்ச்சியில்லாத குழந்தைகள் காப்பகம், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் எதுவென்றாலும் எல்லாவற்றையும் அரசு நிர்வகிப்பதில்லை. 99 விழுக்காடு தொண்டு நிறுவனங்களால்தான் இவை நடத்தப்படுகின்றன, நிர்வகிக்கப்படுகின்றன. அவற்றின் செயல்பாடுபற்றி எந்தவிதமான கவலையும் இல்லாமல் பணத்தை மட்டும் அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்குவதும், இந்த நடவடிக்கைகளில் கையூட்டும், போலி கணக்குகளுமே நிறைந்திருப்பதும்தான் இதற்குக் காரணம்.

ஆழிப் பேரலையில் தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். வீடிழந்தார்கள். அவர்களுக்கு வீடு கட்டித் தருகிறேன் என்று பணம் வசூலித்த தன்னார்வ அமைப்புகள் பல உண்டு. அவை கட்டித் தந்த வீடுகளுக்கு பெற்ற பணம் எவ்வளவு? அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு? இதில் வீடு கட்டித் தராமல் பணத்தை கோடிகோடியாக வங்கியில் போட்டுக்கொண்ட அமைப்புகள் எத்தனை? அரசு அம்பலப்படுத்தவில்லை. அவர்களுக்கு நிதி வழங்கிய வெளிநாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் வந்து பார்த்து அதிருப்தி தெரிவித்ததால், நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு வெளிச்சத்துக்கு வந்த மோசடிகள் மிகச் சிலவே.

இந்த வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களும் சரி, இன்று பிணையில் வெளியே வந்து, மக்களோடு மக்களாக சகல வசதிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆழிப்பேரலையில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு வாழ்வளிப்பதாகக் கூறிக்கொண்டு தோன்றிய புதுப்புது தொண்டு நிறுவனங்கள் தின்று கொழுத்தன. குழந்தைகள்தான் வற்றிப்போனார்கள்.

எல்லா தொண்டு நிறுவனங்களும் மோசடியானவை அல்ல. ஆனால், மோசடி நிறுவனங்களால் மட்டுமே அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்ளவும், பணத்தைப் பெறவும் முடிகிறது என்பதுதான் துரதிருஷ்டம். குறைந்தபட்சம், கிடைக்கும் பணத்தில் பாதியைச் செலவிட்டாலும்கூட அவர்களை கைகூப்பித் தொழலாம் என்பதே பெருவாரியான இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பற்றிய கருத்தாக இருக்கிறது.

தொண்டு நிறுவனங்கள் எவ்வாறெல்லாம், எதற்காகவெல்லாம் உலகம் முழுவதிலுமிருந்து நிதி பெற முடியும்; அத்தகைய நிதியை நேரடியாகப் பெறுவதற்கு இந்தியாவில் எந்த முகவர்கள் அல்லது மதஅமைப்புகள் மூலம் விண்ணப்பிக்கலாம், எந்தச் சேவையைச் சுட்டலாம்; அரசு மூலமாக நிதியைப் பெற என்ன செய்ய வேண்டும்? என்பதை விளக்கவும், இதற்கான புராஜக்ட் ரிபோர்ட் தயாரித்து, பத்திரிகைகளுக்கு தீனி போட்டு, செய்தி நறுக்குகளையும் விடியோ காட்சிகளையும் அனுப்பி வைத்து, நிதியைப் பெற்றுத்தருவதற்கென்றே தரகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான், இந்தியாவில் சேவை என்பதற்கும் சேமியா என்பதற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.

முன்னாள் எம்.பி.க்கள், இன்னாள் எம்.பி.க்கள் தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எத்தனை என்பதைப் பட்டியலிட்டால் தலைசுற்றும். பல முன்னாள் பிரதமர்களும், அமைச்சர்களும் தங்களைத் தலைவர்களாகக் கொண்ட இதுபோன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பெயரில் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகள் ஏராளம்.. ஏராளம். சுமார் 60 விழுக்காடு எம்.பி.க்களின் உறவினர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி சேவை புரிகிறார்கள். அவர்களுக்கு நிதியை அரசு வாரி வழங்கவும் செய்கிறது.

அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நவீன் சாவ்லா, அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், ""தவறான வழியில் வரும் நிதியை அன்னை தெரசா ஏற்றுக்கொள்கிறார் என்ற புகார் குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் கூறிய விளக்கம், "நான் அரசிடமிருந்து எந்த உதவியும், மானியமும் பெறவில்லை. மக்கள் கொடுக்கும் பணத்தை மக்களுக்கே கொடுக்கிறேன்' என்பதுதான்.

சேவை என்பது மதம் சார்ந்தது அல்ல. அது மனிதம் சார்ந்தது என்பதை அரசும் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ளாதவரை சேவை என்ற பெயரில் மோசடிகள் நடக்கவே செய்யும்.

"அயலானை நேசி' என்பதற்கும், "அதிதி தேவோ பவ' என்பதற்கும் அடிப்படை அன்புதான். அன்பே சிவம் என்ற அடிப்படை தத்துவம் கிளைத்தெழுந்த மண்ணில், ஏன்,எதனால் கருணை (புதுமைப்பித்தன் சொல்வதைப்போல) கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டது! இதற்கு ஆளுக்கொரு விடை இருக்கலாம். ஒரு முறையாவது அதை விவாதிக்க வேண்டிய அவசியம் அன்னை தெரசாவின் நூற்றாண்டில் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது.

வழிகாட்டிகளாக அண்ணல் காந்தியடிகள் இருந்தும் அவரைப் பின்பற்ற மனமில்லாத அரசியல்வாதிகள். வாழ்ந்து காட்டிய அன்னை தெரசா முன்னுதாரணமாக இருந்தும் அவரைப்போல சேவையே குறிக்கோளாக இல்லாத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே, நீர் எங்களைக் காப்பாற்றுவீராக!
நன்றி : தினமணி

Friday, August 27, 2010

அதிகாரச் சதுரங்கத்தில் ஆட்டம்போடும் மத்திய அரசு

சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று உலக அளவில் முதல் இடத்தைப் பெற்றிருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த். சதுரங்கம் என்பது கடந்த 25 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் உருவான ஒரு விளையாட்டு ஆகும். 64 கட்டங்களைக்கொண்ட அட்டையில் இரண்டு பேர்கள் விளையாடுவதில் வெள்ளை - கறுப்பு ஆகிய வண்ணங்களில் யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நான்கு வகைப் படைகளையும் களத்தில் நிறுத்திப் போராடுவதால், அது சதுரங்கம் என்ற பெயரைப் பெற்றது. எதிரி அரசனைச் சுற்றி வளைத்து மேலும் நகர முடியாமல் கட்டுப்படுத்துவதுதான் வெற்றியின் அறிகுறி.

இந்தியாவிலிருந்து பாரசீகம் சென்று, அரபு நாடுகளில் புகுந்து, பிறகு ஐரோப்பிய நாடுகளிலும் சதுரங்க விளையாட்டு நால்வகைப் படைப் பிரிவுகளுடன் இந்தியா வகுத்த முறையில் பரவியது, ஒவ்வொரு நாட்டிலும் சதுரங்க விளையாட்டில் பிரசித்தி பெற்றவர்கள் அரண்மனை மண்டபங்களில் மன்னர்களால் பாராட்டப்பட்டனர்.

1886-ம் ஆண்டு முதல் உலக சதுரங்க அமைப்பு என ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, அதன் கீழ் பல நாடுகளில் உள்ள சதுரங்க வல்லுநர்கள் போட்டியிட்டுப் படிப்படியாக முன்னேறி, கடைசியாக இருவர் ஆடும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் உலகச் சதுரங்க முதன்மையானவராகப் பட்டம் சூட்டப்பட்டார்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின், 1948-1972 காலத்தில் ரஷியர்கள் முதலிடத்தை வகித்தனர். ஆதன் பிறகு அமெரிக்காவின் பாபி பிஷர் மூன்றாண்டுகள் முதலிடம் பெற்றார். 1975 முதல் 2000 வரை ரஷியாவைச் சேர்ந்தவர்கள் மீண்டும் முதலிடத்தைப் பெற்றனர்.

2000-ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் உலகச் சதுரங்கப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றார். இந்தியாவில் தொடங்கிய சதுரங்க விளையாட்டில் இந்தியாவைச் சேர்ந்தவர் உலக முதலிடத்தைப் பெற்றது ஆனந்த் மூலமாகத்தான்.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் 1969 டிசம்பர் 11-ல் விஸ்வநாதன் - சுசீலா தம்பதியரின் மகனாக ஆனந்த் பிறந்தார். சிறு வயதிலேயே அவருடைய தாய் சதுரங்க ஆட்டத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பள்ளிப் பருவத்திலேயே சதுரங்க விளையாட்டில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றவராக, கடுமையான போட்டிகளில் எளிதாகப் பரிசுகள் பலவற்றை அவர் தட்டிச் செல்ல ஆரம்பித்தார்.

சென்னையில் டான் பாஸ்கோ பள்ளியிலும், பிறகு லயோலா கல்லூரியிலும் அவர் படித்தார். அப்பொழுதும் அவருடைய சதுரங்க விளையாட்டுத் திறமை பலரும் பாராட்டும் அளவுக்கு வளர்ந்து வந்தது. 15-ம் வயதில் உலக முதல்வர் என்ற தகுதியைப் பெற்றார், 16-வது வயதில் இந்திய தேசிய சதுரங்கப் போட்டியில் முதலிடத்தை அடைந்தார், 1987-ல் 17-வது வயதில் உலக இளைஞர் (ஜூனியர்) சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டில் உலக அளவில் மாமுதல்வர் என்ற பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியராக அவர் ஆனார்.

1993 முதல் 2000 வரை உலகச் சதுரங்கப் போட்டிகளில் பிரசித்திபெற்ற சதுரங்க மேதைகள் பலரை அலைமோதச் செய்யும் அளவுக்கு ஆனந்த்தின் திறமை வேகமாக வளர்ந்துவிட்டது.

2000-ம் ஆண்டு டெஹ்ரான் நகரில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ரஷியக் கூட்டாட்சியைச் சேர்ந்த லாட்வியா பகுதியில் பிறந்து பிறகு ஸ்பெயின் நாட்டுக் குடிமகனாக ஆன அலெக்சி ஷிராவ் என்பவருடன் இறுதிக் கட்டத்தில் ஆனந்த் விளையாடினார். எதிர்ப்பட்ட அலெக்சி ஷிராவை 3.5 - 0.5 என்ற வலிவான முறையில் தோற்கடித்து, உலக சதுரங்க முதன்மையாளராக ஆனந்த் ஆனார். சதுரங்கப் போட்டியில் உலக முதன்மையாளர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஆனந்த் அடைந்தார்.

ஆயினும், 2002 உலகச் சதுரங்கப் போட்டியில் அரையிறுதிக் கட்டத்தில் ஆனந்த் தோல்வி அடைந்தார், இருப்பினும் மனம் தளராமல், தொடர்ந்து ஊக்கத்துடன் வளர்ச்சி அடைந்து, 2007-ல் உலகச் சதுரங்க முதன்மையாளராக ஆனந்த் ஆனார்.

2008-ல் நடைபெற்ற போட்டியில் ரஷியாவைச் சேர்ந்த விளாடிமிர் கரமிக்கைத் தோற்கடித்து தமது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 2010-ல் நடைபெற்ற உலகப் போட்டியில் பல்கேரியாவின் வெசலின் டோபலாவைத் தோற்கடித்து, உலகச் சதுரங்க விளையாட்டு அரங்கில் தனிப்பெரும் மாமன்னராக முதலிடத்தில் ஆனந்த் இருக்கிறார்.

சதுரங்க ஆட்டத்தில் உலகப் புகழும் முதலிடமும் பெற்ற ஆனந்தைப் பாராட்டும் வகையில் சிறப்பு டாக்டர் பட்டம் தர, ஐதராபாத் பல்கலைக் கழகம் முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை கடந்த ஓராண்டு காலமாக மேற்கொண்டது. ஆனந்த்தின் ஒப்புதலையும் பெற்று, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், நிர்வாக மேற்பார்வை அமைப்பினர்களும், ஆனந்த்துக்கு 2010 ஆகஸ்ட் 23-ல் ஒரு சிறப்புப் பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடும் செய்துவிட்டனர். ஆனால், இதற்கு இடையில் எதிர்பாராத ஓர் இடையூறு குறுக்கிட்டது.

ஐதராபாத் பல்கலைக் கழகம் ஒரு மத்தியப் பல்கலைக் கழகமாக மத்திய அரசாங்கத்தினரால் உருவாக்கப்பட்டது. அதனால், சிறப்புப் பட்டங்களைத் தருவதற்கான ஏற்பாட்டுக்கு மத்திய கல்வி அமைச்சகரத்தின் அனுமதியைப் பெற வேண்டும். உலகப் புகழ்பெற்ற ஆனந்த்துக்கு டாக்டர் பட்டம் தருவதற்கான விவரங்களை மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய கல்வி அமைச்சரகத்துக்கு ஐதராபாத் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அனுப்பிவிட்டார். அனுமதி கிடைப்பதில் சிக்கல் எதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் முறையான அனுமதியை விரைவுபடுத்தும்படி பல்கலைக் கழகம் கடிதங்களையும், வேண்டுகோள்களையும் அடிக்கடி அனுப்பியபடி இருந்தது.

இடையில் மத்திய கல்வி அமைச்சரக அதிகாரி ஒருவருக்கு ஓர் ஐயப்பாடு தோன்றியதாம். விஸ்வநாதன் ஆனந்த் இந்தியரா என்ற கேள்வி எழுந்தது. உடனே அங்கிருந்த கல்வி நிபுணர்கள் அது பற்றி ஆராய ஆரம்பித்தார்கள். வெளிநாட்டுக்காரருக்குப் பட்டம் தருவதென்றால், வெளிவிவகார அமைச்சரகத்தின் ஒப்புதலையும் வாங்கவேண்டும் என்று மற்றோர் அரசாங்க விதிமுறை உள்ளது.

இந்தியக் குடியுரிமை பற்றிய விவகாரம் எழுந்ததும், ஆனந்தின் மனைவி அருணா ஆனந்த், கணவரின் பாஸ்போர்ட் பக்கங்களின் நகல்களை அனுப்பி வைத்தார். அத்துடன் உலகக் கணித மாநாடும் ஐதராபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனந்த்துடன் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியர் டேவிட் மம்போர்டுக்கும் சேர்த்து சிறப்பு டாக்டர் பட்டங்களை அளிக்க ஐதராபாத் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்தது. அதில் கலந்துகொள்ளும் கணிதப் பேராசிரியர்கள் 40 பேருடன் தொடர்ச்சியாக ஆனந்த் சதுரங்கம் ஆடுவதற்கும் நாள் ஒதுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 23 ஞாயிறு அன்றே ஆனந்த், மம்போர்டு இருவரும் ஐதராபாத் வந்துவிட்டனர். மறுநாள் பல்கலைக் கழகச் சிறப்பு டாக்டர் பட்டங்களை வழங்க ஐதராபாத் பல்கலைக் கழகம் தயாராகிவிட்டது, பட்டம் பெறுபவர்களும் வந்துவிட்டனர். ஆனால், ஞாயிறு இரவு வரை மத்திய கல்வி அமைச்சரகத்தின் அனுமதி மட்டும் வரவில்லை. தில்லியில் ஞாயிறு. பிறகு திங்கள் (ஓணம்,) செவ்வாய் (ரக்ஷô பந்தன்) விடுமுறை நாள்கள். மூன்று மாதங்கள் தூங்கிக் கிடந்த அமைச்சரகம் மூன்று நாள்களில் விழித்துக் கொள்ளுமா? அனுமதி வரவில்லை என்பதால், சிறப்புப் பட்டம் அளிப்பது நின்றது. திங்கள்கிழமை தனது விடுதியில் ஆனந்த் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

எதனையும் பொருள்படுத்தாமல், தாம் ஏற்றுக்கொண்டபடி 40 கணிதப் பேராசிரியர்களுடன் ஒருங்கிணைந்த தொடர் சதுரங்க ஆட்டங்களை செவ்வாய்க்கிழமை அன்று ஆனந்த் நடத்தினார்.

ஆனந்த்துக்குச் சிறப்புப் பட்டம் வழங்கும் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தி நாடெங்கும் பரவியது. பரவலாகக் கண்டனக்குரல்கள் எழுந்தன.

வெளியில் கிளம்பிய கூக்குரல்களின் ஓசை கேட்டு, உறங்கிக்கிடந்த கல்வி அமைச்சரகம் கண்விழித்தது. நடந்த தவற்றுக்கு மன்னிக்கும்படி மத்திய கல்வி அமைச்சர் கபில்சிபல், ஆனந்த்திடம் மன்னிப்புக் கேட்டார். ஏதோ நடந்தது நடந்துவிட்டது அதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் ஆனந்த் அமைதியாக இருந்தார்.

ஆனந்த்திடம் மட்டுமல்ல, இந்திய மக்களிடமும் மத்தியக் கல்வி அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும். நீங்கள் அவமதித்தது தனிப்பட்ட ஒருவரை மட்டுமல்ல; கோடானு கோடி இந்திய மக்களை, இந்தியாவை!

ஆனந்த் இந்தியரா என்ற கேள்வி ஏன் எழுந்தது என்பது தெரியவில்லை. சதுரங்கச் சக்ரவர்த்தி ஆனந்த் பற்றி கணிப்பொறியில் ஒரு தட்டுத் தட்டினால் அவருடைய வாழ்க்கை வரலாறு பல பக்கங்களுக்கு வருகின்றனவே! அவர் பிறந்த இடம், படித்த இடம் எல்லாம் தமிழ்நாட்டில்தானே! தமிழ்நாட்டையே வேறு நாட்டாருக்குத் தாரை வார்த்து விட்டார்களா?

1987-ல் ஆனந்துக்கு பத்மஸ்ரீ பட்டத்தை இந்திய அரசாங்கம் வழங்கியது. 1991-ல் அவருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 2000-ம் ஆண்டில் பத்மபூஷண் வழங்கியது.

தாம் கலந்துகொள்ளும் ஓவ்வோர் உலகப் போட்டியிலும் இந்திய தேசியக் கொடியை முன்வைத்து இந்தியாவுக்காக வெற்றிகளைக் குவித்தவர். அவருக்கு இந்திய அரசாங்கம் செய்த பெருமை, மரியாதை இவ்வளவுதான்.

சிலருக்குப் பட்டம் கிடைப்பதால் பெருமை வரலாம். ஆனால், சிலருக்குப் பட்டம் தருவதால், தரும் அமைப்புக்குப் பெருமை கிடைக்கலாம். அந்தப் பெருமையை அடைய விரும்பிய ஐதராபாத் பல்கலைக் கழகத்தை மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது.

இந்தியா என்ற பாரத் என்ற உத்தரப்பிரதேசம் என்று முன்பு பலர் கூறியிருக்கிறார்கள். இப்பொழுது அதையும் தாண்டி இந்தியா என்ற பாரத் என்ற உத்தரப்பிரதேசம் என்ற டெல்லி என்று ஆகிவிட்டதா? தெற்கு வாழ்கிறது. அதைச் சகிக்க வடக்கு மறுக்கிறது. இந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்டால் மட்டும்போதாது. அமைச்சர் கபில் சிபிலும் அவரது அமைச்சரகத்தின் பொறுப்பான உயர் அதிகாரிகளும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரவர் மனசாட்சியையே கேட்டுக் கொள்ளட்டும்!
கட்டுரையாளர் : இரா.செழியன்
நன்றி : தினமணி

Thursday, August 26, 2010

பாவம், கறவை மாடுகள்

இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு இலவசமாக அளித்துவிடலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது. அதற்கு மத்திய அமைச்சர் சரத் பவார் மறுப்புத் தெரிவிக்கிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் யெச்சூரி காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, இதை மனிதர்களுக்குக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் கறவை மாடுகளுக்காவது கொடுத்துவிடுங்களேன் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஏனென்றால், வைக்கோல் போன்ற உலர் தீவனங்களில் 40 விழுக்காடும், புல் போன்ற பசுந்தீவன வகைகளில் 36 விழுக்காடும், பிண்ணாக்கு போன்ற தீவன வகைகளில் 57 சதவீத விழுக்காடும் பற்றாக்குறை நிலவுகிறது என்று கால்நடைத் துறை தரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டனர். இந்தியாவில் உள்ள கறவை மாடுகளுக்குக் கிடைக்கும் தீவனம் போதுமானதாக இல்லை. மேலும், இவை தரமானதாகவும் இல்லை. ஆகவே, கறவைமாடுகள் குறைவாகப் பால் தருகின்றன என்பதுதான் அந்தக் கருத்து.

இந்தியாவில் பால் உற்பத்தி தற்போது ஆண்டுக்கு 10 கோடி டன்னாக உள்ளது. இந்த அளவினை 2022-ம் ஆண்டில் 17.2 கோடி டன்னாக உயர்த்த வேண்டும் என்று (அதாவது ஆண்டுதோறும் 4 விழுக்காடு வளர்ச்சி) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தீவனம் தொடர்பான எந்தவிதமான அக்கறையும் இல்லாததால், கறவை மாடுகள் பால் குறைவாக கொடுக்கும் நிலைதான் நீடிக்கிறது.

பால் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் 70 சதவீதம் தீவனத்துக்கே சென்றுவிடுகிறது என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், தீவனத்தின் விலையோ அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அண்மையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஈரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி, தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால், போதுமான தீவனம் வழங்குவதுடன் பால் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

பால் ஒரு வணிகப் பொருளாக உருமாறும் முன்பு, வயல்களில் அறுவடை செய்தால், அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்பதாக இருந்தது. அதாவது தானியம் வீட்டுக்கு வரும். வைக்கோல் மாட்டுக்குப் போய், சாணமாக மீண்டும் உரமாகும். அறுப்புக்குப் பிறகு காட்டிலேயே இருக்கும் அடிப்பகுதி அடுத்த சாகுபடிக்கு மடக்கிப்போட்டு உழப்படும். இதனால் விவசாயிக்கு தீவனம் வாங்க வேண்டிய செலவு இல்லை. சாண உரமும் கிடைத்தது. வீட்டுக்குப் பாலும் கிடைத்தது.

பால் எப்போது வணிகப் பொருளாக மாறியதோ அப்போது செலவுகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணம் செலவிட்டு தீவனம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் தீவனம் விலை உயர்ந்துவிட்டதோடு, போதுமான அளவு கிடைப்பதும் இல்லை. இதற்கு அரசின் வர்த்தகக் கொள்கைகளும் காரணம்.

எண்ணெய் எடுக்கப்பட்ட பிண்ணாக்கில் 30 விழுக்காடு புரதம் இருக்கிறது. பசுக்களுக்கு இது போதுமானது. ஆனால், மத்திய அரசு எண்ணெய் பிழியப்பட்ட பிண்ணாக்கு ஏற்றுமதிக்கு 7 சதவீதம் ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிக்கிறது. 2009-ம் ஆண்டில் ஏறக்குறைய 5,000 கோடிக்கு பிண்ணாக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. பிறகு மாடுகளுக்கு பிண்ணாக்கு எப்படி கிடைக்கும்?

மாட்டுக்கு ஏற்ற உணவுதான் தவிடு. ஆனால், தவிட்டு எண்ணெய்க்காக அரிசி ஆலைகளிலிருந்து நேரடியாக எண்ணெய் பிழிவுக் கூடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன தவிடு மூட்டைகள். தவிட்டு எண்ணெய்க்கு மேற்கு வங்கம், சீனா, இந்திய தொழிற்சாலைகளில் வரவேற்பு அதிகம். ஆகவே, தவிடும் கிடைப்பதில்லை.

வைக்கோலை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு ஏற்றிச் செல்வதற்கான கூலியே இதன் விலையை உயர்த்திவிடுகிறது. ஒரு லாரியில் 4 டன்னுக்கு மேலாக ஏற்ற முடிவதில்லை. இதை தொழில்நுட்பத் திறனுடன் செங்கல்போன்ற வில்லைகளாக அழுத்தி ஏற்றினால் 10 டன் வரை லாரியில் ஏற்ற முடியும். ஆனால், இதெல்லாம் கட்டுப்படியாகவில்லை.

ஒவ்வொரு மாநில அரசும் பசுக்களின் தீவனத்துக்கான தனி நிதிஒதுக்கீடு செய்து, இதில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கறவை மாடுகளுக்குப் போதுமான தீவனம் கிடைக்கிறதா என்பதை அறியவும், அதற்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப தீவனத்தைப் பரிந்துரை செய்யவும் பால்வளத் துறையில் ஊட்டச்சத்து அலுவலர்கள் இல்லை.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், தனது உறுப்பினர்களுக்காக தீவன உற்பத்தியைச் செய்கிறது என்றாலும் அது போதுமானதாக இல்லை. சுமார் 8000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் சங்கங்கள் இருக்கின்றன. அதன் தேவைக்கும், தீவன உற்பத்திக்கும் பெரும் இடைவெளி தமிழ்நாட்டிலும் இருக்கவே செய்கிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவுப் பால் உற்பத்திச் சங்கங்கள் மூலமாக நாளொன்றுக்கு 22.5 லட்சம் லிட்டர் பால் கிடைக்கிறது. இதுவே நல்ல தீவனம் கிடைக்கச் செய்தால், இதே எண்ணிக்கை கறவை மாடுகளிடம் இன்னும் கூடுதலாக பால் கிடைக்கும்.

இந்தியாவில் பால் தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தீவனப் பற்றாக்குறையைப் போக்கி, குறைந்த விலையில் தீவனம் கிடைக்கச் செய்தால், இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதுடன் அதிகமாகவே பால் உற்பத்தி பெருகிட வழியுண்டு. விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். ஆனால், அரசு இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய 30 ஆயிரம் டன் பால் பவுடரை சுங்கவரி விலக்கு அளித்து இறக்குமதி செய்கிறது. அதேநேரத்தில், பிண்ணாக்குக்கு ஊக்கத்தொகை அளிப்பதோடு, எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் 4 விழுக்காடு ஊக்கத்தொகை தருகிறது.

என்னத்த சொல்ல! "மாட்டைக் கடிச்சி மனுஷனையும் கடித்த கதை' என்கிற பழமொழியைக் கொஞ்சம் மாற்றிப் போடத்தான் வேண்டியிருக்கிறது.
நன்றி : தினமணி

Wednesday, August 25, 2010

முதல்வரின் மனு நீதி

இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி லண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இந்திய வைசிராயின் நிர்வாகக்குழு, மாநில ஆளுநர்களின் நிர்வாகக் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தலைமைச் செயலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற உயர் பதவிகளுக்கு இவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இவர்களின் கீழ் உள்ள வேலைகளுக்குத் தேவையானவர்களை இங்கிலாந்திலிருந்து கொண்டுவர முடியாது. எனவே அதற்கேற்றவர்களை இந்தியாவில் உருவாக்குவதற்காகத்தான் மெக்காலே கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதலாம் உலகப் போர் வரை இந்தியர்கள் யாரும் ஐ.சி.எஸ். படிக்க அனுமதிக்கப்பட்டதில்லை. அதற்குப் பிறகே இந்தியர்கள் இப்பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், மிக உயர்ந்த அதிகாரப் பொறுப்பில் ஆங்கிலேயர்கள் மட்டுமே நீடித்தார்கள்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பாதுகாப்பதற்கும், அரசுக்கெதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கும் இவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றிருந்தனர். ஆனாலும் இந்தியா முழுவதிலும் முழுமையான நிர்வாக இயந்திரம் டெல்லி முதல் குக்கிராமம் வரை பிசிரின்றி இயங்கியது. வெள்ளையர்கள் வெளியேறும் போது இந்த நிர்வாக இயந்திரம் சீராக இயங்கியதால்தான் இளம் சுதந்திர அரசு சிக்கலின்றி செயல்பட முடிந்தது.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நாட்டின் பல பகுதிகளில் மூண்டெழுந்த மதக் கலவரங்கள், 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சி, ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் திறன் போன்ற முக்கியமான பிரச்னைகளை இந்த நிர்வாக இயந்திரத்தின் துணைக்கொண்டு சுதந்திர இந்திய அரசும், மாநில அரசுகளும் வெற்றிகரமாக சமாளித்தன.

மத்திய உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் இருந்த காலத்தில் ஐ.சி.எஸ்.க்குப் பதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சிக் கல்லூரிகளைத் தொடங்கி சுதந்திர இந்தியாவில் புதிய சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்தே ஆங்கிலேய அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவில் உள்ள சகல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றவற்றில் தேர்ச்சி பெற்று அதிகாரிகளாகப் பொறுப்பேற்றனர்.

அதே வேளையில் மத்திய அரசிலும், மாநில அரசிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். நாடாளுமன்ற ஜனநாயக முறையில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் இடம் பெற்றார்கள். இந்த புதிய சூழ்நிலையில் அதிகார வர்க்கத்கும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையே உள்ள உறவு குறித்து சிக்கல் ஏற்படாத வகையில் செயல்படவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. பிரதமராக இருந்த நேரு அவர்களும், தமிழக முதலமைச்சர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அரசு நிர்வாகத்தில் கட்சியினர் தலையீடு செய்வதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை. சில வேளைகளில் கட்சியினர் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்தபோது உடனடியாகத் தலையிட்டு அவர்களைத் தண்டிக்கத் தவறியதில்லை.

மக்கள் பிரச்சனைக்களுக்காக அதிகாரிகளை அணுகுவதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பானதும், நியாயமற்றதுமான பரிந்துரைகளுக்காக அதிகாரிகளை அணுகுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

எடுத்துக்காட்டாக சென்னையில் பருத்திச் சூதாட்டம் என்ற பெயரில் ஏழை அப்பாவி மக்கள் மோசடி செய்யப்பட்டதையும், கோவையில் பெரும் தொழிலதிபர் ஒருவர் கள்ளநோட்டு அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதையும் குறித்து உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த எப்.வி. அருள் மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மிகமிகச் செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்தும் கொஞ்சமும் தயங்காது அவர்களைக் கைது செய்தார். முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதிலும் அவர் அருள் எடுத்த நடவடிக்கைகளில் கொஞ்சமும் தலையிடவில்லை. முதலமைச்சரின் நேர்மை அவரின் கீழிருந்த அதிகாரிகளையும் நேர்மையாக்கி திறமையுடன் செயல்பட வழிவகுத்தது.

இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆனால், இன்று நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். அறிவாற்றலும் திறமையும் நிறைந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், தேர்வுகளில் கலந்து கொண்டு மிகக் கடுமையாக வடிகட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகளாக வருகிறார்கள். ஆனால் அவர்களை அரசியல் மலைப் பாம்புகள் சுற்றி வளைத்து மிரட்டுகின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நிர்வாகம் முழுமையாகக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் - தங்கள் விரும்பியபடியெல்லாம் அரசு அலுவலர்களை ஆட்டிப் படைக்கின்றனர்.

முதலமைச்சரின் குடும்பத்திலிருந்தும், அமைச்சர்களின் குடும்பங்களிலிருந்தும் பல அதிகார மையங்கள் அதிகாரிகளை ஆட்டிப் படைக்கின்றன. இதன் விளைவாக அரசு நிர்வாக இயந்திரம் சீரழிந்து போய்க் கிடக்கிறது. இதன் காரணமாக பல அதிகாரிகள் அமைச்சர்களின் விசுவாசிகளாக கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறியதன் விளைவாக நிர்வாக இயந்திரம் பிளவுபட்டுக் கிடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வு, வேலை மாறுதல் போன்றவை முறைப்படி நடைபெறுவதில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நடைபெறுவதால் பெரும்பாலான அதிகாரிகள் எதிர்த்து நிற்க முடியாமல் பணிந்து விடுகிறார்கள். ஊழலுக்குத் துணைபோகிறார்கள். நாளடைவில் அவர்களும் ஊழல்வாதிகளாக ஆகிவிடுகின்றனர். நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அதிகாரிகள், முதுகெலும்பில்லாமல் வளைந்து கொடுக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.

ஊழலுக்குத் துணை நிற்காத அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக உமாசங்கர், ஐ.ஏ.எஸ். திகழ்கிறார். மதுரை மாவட்டத்தில் 1991-1996 வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது கிராமங்களில் சுடுகாட்டுக் கூரைகள் அமைக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடைபெற்று இருப்பதை அப்போதைய துணைக் கலெக்டரான உமாசங்கர் கண்டுபிடித்தார். இந்த ஊழலில் அப்போது அமைச்சர்களாக இருந்த செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, ஊரகவளர்ச்சித் துறைச் செயலர் ஆச்சாரியலு மற்றும் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இந்த ஊழலைக் கண்டுபிடித்த உமாசங்கரைப் பாராட்டிப் பரிசு வழங்க வேண்டிய தி.மு.க. அரசு அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தாற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் தி.மு.க. அரசின் பல துறைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை இவர் கண்டுபிடித்ததால் அடிக்கடி வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்க முயன்றது. எந்தத் துறைக்கு மாற்றினாலும் அத்துறையில் ஊழல்களை அம்பலப்படுத்தும் பணியினை இவர் தொடர்ந்தார். எனவே வேறு வழியில்லாமல் இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்க அரசு முற்பட்டுள்ளது.

சுடுகாட்டுக்கூரை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செல்வகணபதி இப்போது தி.மு.க.வில் தஞ்சம் புகுந்து தி.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான உமாசங்கர் மீதே ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டால் அவரது சாட்சியம் நம்பத்தகாதது ஆகிவிடும் என்பதற்காக இந்தப் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கக்கூடும்.

மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமான ஊழல் குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப்படுகிறார் என வக்காலத்து வாங்கும் முதல்வர் கருணாநிதி தனது அரசின் ஊழலை மறைக்க தலித் அதிகாரியான உமாசங்கரை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?

சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், மிகக் கொடுமையான முறையில் தாக்கிய காவலர்களை ஏவிய சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரைப் பதவி இடைநீக்கம் செய்யவேண்டுனெ உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனுமதித்துள்ள முதலமைச்சர், குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படாத நிலையில் உமாசங்கரை மட்டும் இடைநீக்கம் செய்தது ஏன்?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உள்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலப் பதிவேடு மத்திய உள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே உமாசங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், தமிழக அரசு மீது உமாசங்கர் சாற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் முன்வர வேண்டும். அதற்குரிய துணிவும், நேர்மையும் அவருக்கு இருக்குமா? கூட்டணி நிர்பந்தங்கள் மத்திய அரசின் கண்ணை மறைக்காமல் இருக்குமா?

தன்னை நல்லாட்சிக்குச் சரித்திரம் படைத்த சோழப் பேரரசர்களுடன் ஒப்பிட்டு தனக்குத்தானே புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, உண்மையிலேயே மனுநீதிச் சோழனாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது கட்சியினருக்கும் ஒரு நீதியும், மற்றவர்களுக்கு வேறொரு நீதியும் வழங்கிச் சரித்திரம் படைத்திருப்பார் என்று நம்பலாம். பாருங்களேன், கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதி, தனது குடும்பத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தொந்தரவாக இருந்த "தலித்' அதிகாரி உமாசங்கருக்கு ஒரு நீதி என்பதுதானே தமிழக முதல்வரின் மனு நீதி...?
கட்டுரையாளர் : பழ.நெடுமாறன்
நன்றி : தினமணி

எதிர்ப்பு தேவைதானா?

அடுத்த கல்வியாண்டு முதலாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட வேண்டும் என்கிற முடிவு, மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொண்ட போதிலும், தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட எதிர்ப்பினால், இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்பிய திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஒருமித்து நின்று ஆச்சரியத்தை அளித்தன. அதைவிட ஆச்சரியம், பொதுத்தேர்வை அனுமதித்தால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும், தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் விளைவுதான் இந்த நடவடிக்கை என்று தமிழக முதல்வர் கருணாநிதியும், யாரால் நடந்தது என்பதில் பெயர் தட்டிச் செல்ல போட்டி போடத் தொடங்கிவிட்டனர்.

இந்தப் பொது நுழைவுத் தேர்வு கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள்:

ஒன்று: ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், அவர்களால் இதற்கான பயிற்சி பெறும் வசதிகள் கிடையாது.

இரண்டு: 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படும். சமூக நீதி பாதிக்கும்

மூன்று: மற்ற மாநிலங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அப்படியானால் 50 சதவீத மாணவர்கள் இங்கே வந்து படித்துவிட்டுத் தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.

இவர்கள் சொல்லும் இந்த 3 வாதங்களும் எந்த அளவுக்குச் சரியானவை?
முதலாவதாக, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1,398 மாணவர்கள், கலந்தாய்வின் மூலம் சேர்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் ஏழைகள்? குறைந்தது 10 பேர் இருப்பார்களா? இவர்களில் எத்தனை பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள்? ஒவ்வொரு தனியார் பள்ளியும் தன் நிறுவனத்தில் படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களைப் படத்துடன் விளம்பரமாக வெளியிடுகின்றனவே, அரசு இந்த ஏழை மாணவர்களைப் பாராட்டும்விதமாக, மற்ற ஏழைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களது படங்களுடன் பெயர்ப் பட்டியலை விளம்பரமாக வெளியிடலாமே! முடியாது. ஏனென்றால், இவர்கள் சொல்வது உண்மையல்ல.

கலந்தாய்வில் "கட்-ஆஃப்' மதிப்பெண் 197-க்குள்ளாகவே அரசு ஒதுக்கீடு அனைத்தும் - தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடு உள்பட- முடிந்துபோகிறது என்பதே உண்மை. இவ்வாறு, உயர்ந்த கட்ஆப் மதிப்பெண்களுடன் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களில் ஏழைகள் என்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்குக் குறைந்தது 2.5 லட்சம் கட்டணம். இவ்வளவு அதிக கட்டணத்தைச் செலுத்திப்படிக்கவும்கூட, கிராமப்புற மாணவர்களால், ஏழைகளால் அந்த அளவுக்கு கட்ஆப் மதிப்பெண் பெற முடிவதில்லை.

இரண்டாவதாக, 69 விழுக்காடு ஒதுக்கீடு பாதிக்கப்பட்டு சமூகநீதி பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே அமலில் உள்ளது. அரசியல் நிர்ணயச் சட்டத்தை மீறி கல்வியில் 69 விழுக்காடு என்பது தமிழகத்தில் மட்டுமே. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் உயர் நீதிமன்றத்தில், பொதுப்பிரிவினர் பாதிக்கப்படும் 19 இடங்களை அதிகரித்துத் தருகிறோம் என்று உறுதிமொழி அளித்துதான் இந்த சிக்கலை சமாளித்து வருகிறது. அதாவது 100 இடங்களுக்கு 119 இடங்களை உருவாக்கி, பொதுப்பிரிவினருக்கு பாதிப்பு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது இதன் பொருள். இப்போதே இதுதான் நடைமுறை. இப்போது பாதிக்கப்படாத சமூகநீதி, பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் மட்டும் பாதிக்கப்பட்டுவிடுமா?

50 விழுக்காடு மாணவர்கள் வெளிமாநில மாணவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வை தமிழகம் ஒப்புக்கொள்ளுமானால் ஒவ்வொரு மாநிலத்தின் ஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்கள் 5 சதவீதமாகிலும் இடம் பிடித்து மருத்துவம் படிப்பார்கள். இதனால் தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசுக் கட்டணத்தில் மருத்துவம் படிக்கும் 35,000 மாணவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை இப்போதுள்ளதைவிட இரு மடங்கு உயருமே தவிர, குறையாது.
இப்போது மருத்துவக் கல்விக்கு ஒவ்வொரு மாநிலமும் நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. தமிழ்நாட்டில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, புதுவையில் ஜிப்மர் போன்று தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடக்கின்றன. இதில் முறைகேடுகளும், பாரபட்சங்களும் இருக்கவே செய்கின்றன. அப்படியிருக்க, ஏன் ஒரேயொரு தேர்வை இந்தியா முழுவதிலும் நடத்தக்கூடாது?

இதற்குப் பதிலாக, பொது நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்த வேண்டிய மூன்று நிபந்தனைகள் உண்டு. அவை:
ஒன்று - பிளஸ்-2 தேர்வு மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து "கட்-ஆஃப்' மதிப்பெண் வரையறுக்கப்பட வேண்டும் என்பதோடு, இந்த இரு தேர்வுகளும் ஒரே கல்வியாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.
இரண்டு - அரசு மருத்துவக் கல்லூரியின் செலவினத்தில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும். மாநில அரசின் செலவில் கல்லூரிகளை அமைத்துப் பராமரிக்க, அதில் தேசிய அளவிலான தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்க்கும்போது, மத்திய அரசு பாதிக்குப் பாதி பராமரிப்புச் செலவையும் ஏற்பதுதானே சரியாக இருக்கும்.

மூன்று - நுழைவுத் தேர்வு மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வெளிமாநில மாணவர்கள், தாங்கள் படிக்கும் மாநிலத்தின் ஊரகப் பகுதியில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, அவர்கள் மேற்படிப்பு படிக்க வாய்ப்பளிக்கப்படும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
இந்த மூன்று நிபந்தனைகளை வலியுறுத்தினால் தமிழக அரசியல்வாதிகள் உண்மையாகவே பிரச்னையை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டாகும்.

மேலே சொன்ன நிபந்தனைகளுடன் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டால், அது மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதுகாப்பதாகவும் அமையும்!
நன்றி : தினமணி

Tuesday, August 24, 2010

இது நல்லதற்கல்ல...

ஏறத்தாழ 110 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையை உடைய நாடு இந்தியா. இந்த நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் கடந்துவிட்டன. 15 பொதுத் தேர்தல்களை நடத்திவிட்டிருக்கிறோம். உலகளாவிய அளவில் ஒரு பொருளாதார வல்லரசாக அடுத்த பத்து ஆண்டுகளில் கோலோச்சும் வாய்ப்புடைய நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று என்கிற நிலையையும் அடைந்துவிட்டோம். ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் நாம் மிகவும் கவனக் குறைவாகவும், எச்சரிக்கை இல்லாமலும் இருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அணு ஆயுதச் சோதனை நடத்தி விட்டோம் என்பதாலேயே பாதுகாப்புத் தேவைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகக் கருதிவிட முடியுமா, என்ன? ராணுவத்துக்கும், கப்பற்படைக்கும், விமானப்படைக்கும் தளவாடங்கள் வாங்குவதிலும், ராணுவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருப்பதிலும்தானே நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது.

இந்திய ராணுவத்துக்கு சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, நவீன பீரங்கிகள் வாங்கி 26 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நமது ராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியுமா?

26 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழலைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட ராணுவத் தளவாடக் கொள்முதல் முயற்சி, இந்திய ராணுவத்தை முடக்கிவிட்டிருப்பதைப் பற்றி நமது ராணுவ அமைச்சகமோ, ஆட்சியாளர்களோ கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஆனால், ராணுவ அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள். வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் புழுங்குகிறார்கள்.

போபர்ஸ் பிரச்னையில் ஊழலைப் பற்றிய விசாரணை முடிவுக்கு வரவில்லை என்பதும், யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் போயிற்று என்பது தெரியவில்லை என்பதும், இந்த விவகாரத்தில் முக்கியப் புள்ளியான குவாத்ரோச்சியை அரசே தப்பவிட்டதுடன், பிடிக்கும் முயற்சியையும் அநேகமாகக் கைவிட்டு விட்டது என்பதும் ஒரு தனிக்கதை. போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் நடைபெற்ற ஊழல் ஒருபுறம் இருந்தாலும், போபர்ஸ் பீரங்கிகள் தரத்தில் குறைந்தவை அல்ல என்பதை, கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவத்தினர் உறுதிப்படுத்தினார்கள். மலை உச்சிகளில் இருந்து இந்திய ராணுவம் போரிட மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னவோ போபர்ஸ் பீரங்கிகள்தான்.

கடந்த எட்டு ஆண்டுகளாகவே, இந்திய ராணுவம் தனது தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் முனைப்பாக ஈடுபட்டு, அதற்காக மத்திய ராணுவ அமைச்சகத்துக்கு நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறது. ராணுவத்துக்காகத் தளவாடங்களை வாங்கப்போய் அது ஊழல் குற்றச்சாட்டில் முடிந்துவிடுமோ என்கிற பயத்தில், ராணுவ அமைச்சகமோ ஏதாவது காரணம்காட்டித் தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது.

எட்டு ஆண்டு நச்சரிப்பின் பயனாக, இழுத்துச் செல்லும் வகையிலான 155 மி.மீ. பீரங்கிகளை வாங்குவதற்கான சோதனைத் தேர்வு கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. இந்த வகை பீரங்கிகளை வழங்குவதற்காகக் கோரப்பட்ட சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகளில் இரண்டே இரண்டு தயாரிப்பாளர்கள்தான் கலந்துகொண்டனர். அவர்களில் ஒன்று சுவீடன் நாட்டு பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் "நவீனமயமாக்கப்பட்ட' போபர்ஸ் பீரங்கி. இன்னொன்று, சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் கைனடிக்ஸ் என்கிற நிறுவனத்தின் பீரங்கி.

கடைசி நிமிடத்தில், சிங்கப்பூர் நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாக மத்தியப் புலனாய்வுத் துறை அறிவிக்க, ஒரே ஒரு ஒப்பந்தப்புள்ளி மட்டுமே உள்ள நிலையில், போபர்ஸ் பீரங்கிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மீண்டும் பீரங்கி வாங்கும் முயற்சி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

நியாயமாகப் பார்த்தால், சிங்கப்பூர் நிறுவனத்துக்கு இத்தனை தவணை சலுகைகள் வழங்கப்பட்டதே தவறு. பரிசோதனைக்கு அழைத்த பிறகு, தவிர்க்க முடியாத சூழ்நிலையைக் காரணம் காட்டி, ஒரு நிறுவனம் 15 நாள்கள் அவகாசம் கோர வழியிருக்கிறது. சிங்கப்பூர் நிறுவனமோ மூன்று முறை இதுபோலப் பரிசோதனைக்கு நாள்கள் அறிவிக்கப்பட்டு, கடைசி நிமிடத்தில் ஏதாவது சாக்குப்போக்குக் கூறி, சோதனையைத் தள்ளிப்போட்டு வருகிறது. 2008-லிருந்து இதுதொடர்ந்து வருவது போபர்ஸ் நிறுவனம் பீரங்கிகளை வழங்குவதைத் தடுப்பதற்காகக்கூட இருக்கலாம்.

பீரங்கியின் தரம் நன்றாக இருந்தால், போட்டிக்கு வேறு தளவாடம் இல்லாத நிலையிலும் அந்த பீரங்கியை வாங்கும் அதிகாரம் ராணுவத்துக்கு உண்டு. ஒரு நிறுவனத்திடம் நேரடியாக வாங்குவதைத் தடை செய்வதே, அதிகமான விலைக்கு ஒரு பொருள் வாங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விலை நிர்ணயம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில்தான் சோதனைக்கே அழைக்கிறார்கள் எனும்போது, சிங்கப்பூர் நிறுவனம் சி.பி.ஐ.யால் பிரச்னைக்குரியதாக, வேறு பல விஷயங்களில் தரமற்ற தளவாடத் தயாரிப்பு, லஞ்சம் கொடுக்க முயற்சி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்பட்டதாக அடையாளம் காட்டப்பட்ட நிலையில், போபர்ஸ் பீரங்கிகளையே வாங்கினால்கூடத் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.

அது போபர்ஸ் பீரங்கியா, வேறு ஏதாவது பீரங்கியா என்பதல்ல பிரச்னை. ஊழல் இல்லாமல், தரமான ராணுவத் தளவாடங்கள் பெறப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படைத் தேவை. எப்போதோ ஊழல் நடந்தது என்பதைக் காரணம் காட்டி, ராணுவத்துக்குப் புதிய தளவாடங்களே பெறப்படாமல், தேசத்துக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த முற்படுவது முட்டாள்தனம். குறைந்தபட்சம், 155 மி.மீ. பீரங்கியை உருவாக்கிட ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக(டிஆர்டிஒ)த்தின் முயற்சியை ஊக்கப்படுத்தவாவது வேண்டும்.

இன்றைய ஆட்சியாளர்கள் எதற்கெடுத்தாலும் ஹார்வர்ட் பல்கலைக் கழக நிர்வாக இயலின் கூறுகளைப் பற்றி சிலாகித்து மகிழ்பவர்கள். என்ன பயன்? தொலைநோக்குப் பார்வைக்கான கண்ணாடி எங்கேயாவது கிடைத்தால் நமது ஆட்சியாளர்களுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது...
நன்றி : தினமணி

Saturday, August 21, 2010

மக்களின் வரிப்பணம்தானே...

கல்வியைத் தொடர்ந்து இப்போது மருத்துவத் துறையையும் முழுமையாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஆட்சியாளர்களின் எழுதப்படாத கொள்கைகளில் ஒன்று என்று தோன்றுகிறது. முதலில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தனியார் ஒத்துழைப்பு என்று தொடங்கி, இப்போது அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பைத் தனியாரிடம்விடும் அளவுக்குத் தனியார்மயக்கொள்கை செயலாக்கம் பெற்றிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழக அரசு மட்டுமே சுகாதாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்க முன்வந்திருப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். உண்மையில், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் ஏனைய மாநிலங்களைவிட சற்று அடக்கியே வாசிக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் வழிகாட்டுதலை இதுவரை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாகவே அரசு மருத்துவமனைகளையும், ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிடும் முயற்சி அகில இந்திய அளவில் முனைப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மக்கள் வரிப்பணத்தில், அரசு நிலத்தில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் முதல்கட்டமாக பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சுகாதாரத் துறை வற்புறுத்தி வருகிறது.

அடுத்தகட்டமாக, எக்ஸ்-ரே, ரத்தப்பரிசோதனை மையம் போன்றவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து நடத்துவது என்று தீர்மானிக்கக்கூடும். காலப்போக்கில் தனியாருக்கே அரசு நிறுவனங்களைத் தாரைவார்ப்பதுபோல இந்த ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் கொடுத்துவிடுவது என்பதுதான் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டம் என்று கருதவும் இடமிருக்கிறது. கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையங்களை ஏற்று நடத்த எந்தத் தனியார் மருத்துவமனைதான் தயங்கும்?

"கல்வி, மருத்துவம் போன்றவை அரசின் செயல்பாடுகள் அல்ல. இவைகளிலிருந்து அரசு முழுமையாக விடுபட்டாக வேண்டும்' என்கிற தனியார்மயவாதிகளின் கருத்து ஏற்புடையதல்ல. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையே இந்தியா ஒரு ஜனநாயக சமதர்ம அரசு மட்டுமல்ல, மக்கள் நலம்பேணும் அரசும்கூட என்பதுதான். கல்வி, சுகாதாரம் போன்றவை அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தனியாரிடம் விடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவைப் போன்ற வறுமைக்கோட்டுக்குக்கீழே பல கோடி மக்கள் வாழும் நாட்டில் தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பது என்பது மிகப்பெரிய அரசியல் சமூக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

நியாயமாகப் பார்த்தால், தமிழக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி. ஆனால், பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடிதான். மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 750 கோடி.

இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வாரி வழங்கும் அரசு, அதை அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதில் செலவிட்டால் அதனால் நிரந்தரமாகப் பயன் கிடைக்குமே என்கிற நியாயங்கள் ஆட்சியாளர்களின் காதில் விழாது. அப்படிச் செய்தால் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்று ஆட்சியின் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், தேர்தலில் வாக்குவேட்டை ஆடவும் முடியாதுதானே..

சென்னையிலுள்ள பொது மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். மாதந்தோறும் ஏழு லட்சம் ரூபாயையும் வாங்கிக்கொண்டு அந்தத் தனியார் நிறுவனம் பெரிதாக எதையும் சாதித்துவிடவும் இல்லை. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரும் அந்தத் தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்திருக்கும் நிலையில், நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

"சென்னை பொது மருத்துவமனையைப்போல, சென்னையிலுள்ள ஏனைய அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணியையும் தனியாரிடம் கொடுக்க இருக்கிறோம். முறையாகச் செயல்படாவிட்டால் அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.

தனியார் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்ந்து மருத்துவமனைகளின் பராமரிப்பிலும், தனியார் நிறுவனங்களின் காட்டில் மழை. மக்கள் வரிப்பணம்தானே, சொந்த முதலா மோசம் போகிறது..!
நன்றி : தினமணி

Friday, August 20, 2010

இது ரசிகனின் குரல்...

சென்னையிலுள்ள திரையரங்குகளில் நடைபெறும் பகல் கொள்ளை ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறுகிறது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

மாநில மனித உரிமை ஆணையம் சமீபத்தில் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதன்படி, துணை ஆணையர் நிலையிலுள்ள அதிகாரி ஒருவரைக் கொண்டு திரையரங்குகளில் நடைபெறும் சுரண்டல்களையும் பகல் கொள்ளைகளையும் விசாரித்து அதன் அடிப்படையில் காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. குறிப்பாக, திரைப்படம் பார்க்கவரும் ரசிகர்கள் குடிதண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவற்றை வெளியிலிருந்தோ தங்களது வீட்டிலிருந்தோ கொண்டு வரக்கூடாது என்று தடுப்பதும், பாதுகாப்பு என்ற பெயரில் அவற்றை அரங்குக்குள் நுழையும்போதே சோதித்துப் பறிப்பதும் தனிமனித உரிமை மீறல் என்று மாநில மனித உரிமை ஆணையம் கருதுகிறது என்பதை கரகோஷத்துடன் வரவேற்க வேண்டும்.

திரையரங்குகளில் நடைபெறும் கொள்ளைகளைத் தட்டிக் கேட்க யாருமில்லையே என்கிற மனப்புழுக்கத்துடன் படம்பார்க்க வரும் ரசிகர்கள்தான் பெரும்பாலோர். வெளியில், வெறும் 12-க்கு விற்கப்படும் மினரல் வாட்டர் திரையரங்குகளில் 30 முதல் 40. பாப்கார்ன் சிறியது 50, பெரியது 100 என்று விற்பது வெளியில் வெறும் பத்தே ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு காபி குடிக்க வேண்டுமானால் இந்தத் திரையரங்குகளில் 40 செலவழித்தாக வேண்டும். சென்னையிலுள்ள அதிநவீன திரையரங்குகளில் தொடங்கிய இந்த "தியேட்டர் கொள்ளை' இப்போது மாவட்டத் தலைநகரங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.

அதிநவீனத் திரையரங்குகள் சுமார் 10 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகின்றன. இந்தத் திரையரங்குகளில் உள்ள வசதிகள் முதலீடு போன்றவற்றைக் கருத்தில்கொண்டு அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது நியாயம்தான். ஆனால், அந்தக் கட்டணம் இவ்வளவுதான் என்கிற நிர்ணய வரம்பு இல்லாமல் இருக்கிறதே, அதுதான் அநியாயம்.

அதிநவீனத் திரையரங்குகளில் குறிப்பிட்ட இடங்கள் சாதாரண ரசிகனுக்கும் பயன்படும்படியாகக் குறைந்த கட்டணத்தில், அதாவது பத்தே பத்து ரூபாய் என்று அமைய வேண்டும் என்பது அரசின் நிபந்தனை. அதற்காக, ஒரு கண்துடைப்புப்போல, திரையை ஒட்டிய முதல் வரிசையை மட்டும் குறைந்த கட்டணம் என்று ஒதுக்குகிறார்கள். அதை ஒட்டுமொத்தமாக வாங்கி கறுப்பு மார்க்கெட்டில் விற்றுப் பணம் சம்பாதிப்பதற்கென்றே திரையரங்கு உரிமையாளர்களின் ஆசியுடன் இயங்கும் ஒரு "தாதா' கும்பல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏனைய அத்தனை சீட்டுகளும் 100 ரூபாய் கட்டணத்துக்கு மேல். இந்த அதிநவீனத் திரையரங்குகளில் 100 அல்லது 120 என்கிற இரண்டே கட்டணங்கள்தான்.

திரையரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும் பகுதி, அந்த அரங்கத்தின் தொழில்நுட்பம், திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில், திரையின் அருகில் சற்று பின்னால், அதற்கும்பின்னால், அதிகம் பின்னால் அமைந்த இருக்கைகளுக்கு ஏற்பக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட காலம், எம்.ஜி.ஆரின் ஆட்சியுடன் போய்விட்டது என்பதுதான் யதார்த்த உண்மை.

திரையரங்குகளில் இருக்கைக் கட்டணம் 100 அல்லது 120 என்று நிர்ணயிக்கப்பட்ட பிறகு அந்தக் கட்டணத்தைத்தானே எந்தத் திரைப்படமாக இருந்தாலும் வசூலிக்க வேண்டும். அப்படியொரு லாஜிக்கும் இன்றைய திரையரங்குகளில் கிடையாது. பிரபல நடிகர்கள் நடித்த புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, இருக்கைக் கட்டணத்தைத் திரையரங்குகளே தீர்மானித்துக் கொள்கின்றன. சில திரைப்படங்களுக்கு 1,000 வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளையடிக்கும் திரையரங்குகள் பல.

குறைந்தது 1,000 இல்லாமல் குடும்பத்துடன் திரையரங்குக்குப்போய் திரைப்படம் பார்க்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதால்தானே திருட்டு டிவிடிக்கள் கோலோச்சுகின்றன. திருட்டு டிவிடிக்களை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிடும் திரைப்படத்துறையினர் திரையரங்குகளின் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி வற்புறுத்தாமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை.

கட்டணம் வசூலிப்பது திரையரங்குகள் தரும் வசதிக்காகவே தவிர, இன்னார் திரைப்படத்துக்கு இன்ன கட்டணம், இத்தனை நாள்களுக்கு இவ்வளவு கட்டணம் என்று திரையரங்குகளே தீர்மானிப்பது பகல்கொள்ளை என்று தெரிந்தும் அரசு அதை ஏற்றுக்கொண்டிருக்கிறதே அதன் காரணம்தான் புரியவில்லை. அரசியல் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் பெரிய அளவில் திரைப்படத் தொழிலில் ஏகபோக உரிமை செலுத்தத் தொடங்கியிருப்பது சமீபகாலத்தில்தான். ஆனால், இந்த நிலைமை நீண்டநாள்களாகவே தொடர்கிறது.

திரையரங்குகளின் கட்டணம், முதலீடு, தரம், வசதிகளைப் பொறுத்து 100 அல்ல, 1,000 கூட நிர்ணயிக்கப்படட்டும். வசதி உள்ளவர்கள் அங்கேபோய் திரைப்படம் பார்த்துக் கொள்ளட்டும். ஆனால், நடிகருக்குத் தகுந்தபடி, படத்துக்குப் படம் இந்தக் கட்டணம் வேறுபடுவது என்பது ஏற்புடையதல்ல. பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இந்தக் கட்டண நிர்ணயமுறை எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதன் காரணம் புரியவில்லை. ஆட்சிகள் மாறின. கட்சிகள் மாறின. கட்டணக் குளறுபடி மட்டும் மாறாமல் தொடர்கிறது.

திரையரங்குகள் வாடிக்கையாளர்களுக்கு முறையான விலையில் மட்டுமே உணவுப்பொருள்களை விற்க வேண்டும். ரசிகர்கள் கொண்டுவரும் உணவுப்பொருள்களைத் தடை செய்வது ஏற்புடையதல்ல. திரையரங்குகள் அசுத்தமாகும் என்பது அபத்தமான வாதம். அதற்காகத்தானே கட்டணம் வசூலிக்கிறார்கள். திரைப்படக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்வது திரைப்படத்துறையினருக்கும் நல்லதல்ல; நடிகர்களுக்கும் நல்லதல்ல.

இந்தப் பிரச்னைகளை மக்கள் மன்றத்தின் விவாதத்துக்குக் கொண்டு வந்திருக்கும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு நமது பாராட்டுகள்!
நன்றி : தினமணி

Thursday, August 19, 2010

ஒருமரத்துப் பறவைகள்!

பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள் என்று விலைவாசிப் பிரச்னையில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று வெற்றிகரமாக "பாரத் பந்த்' நடத்தியபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு மாற்று ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை வெறும் கானல்நீர்தான் என்பதை சமீபத்திய நாடாளுமன்ற நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தயவில் அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம், நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அன்னிய முதலீடு, பொருளாதாரக் கொள்கை, அமெரிக்காவை மையப்படுத்தியுள்ள பிரச்னைகள், உலகமயமாக்கல் என்று வரும்போது காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் கைகோத்துச் செயல்படுவதைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நாம் பார்த்து வருகிறோம்.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக்கப்படும் என்பதுதான் நிலைமை. நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயத்துக்குமுன் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி அமெரிக்க முதலீட்டாளர்களையும், அரசையும் மனம் குளிர்விக்க வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் குறியாக இருக்கிறார் என்கிறார்கள். மன்மோகன் சிங்கின் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பதில் காங்கிரஸýம், அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியேகூட முனைப்புடன் செயல்படுகிறது என்பதுதான் குறிப்பிடவேண்டிய ஒன்று.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிப்படைக் காரணம், அணுமின் நிலையங்களில் அணுக்கசிவோ, விபத்தோ ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால்தான் இந்த நிபந்தனை.

இழப்பீட்டுக்கு ஓர் உச்சவரம்பு விதிப்பதன் மூலம் அணுவிபத்தால் ஏற்படும் தலைமுறைகளைக் கடந்த பாதிப்புகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருக்காது. அணுமின் நிலையங்களை அன்னிய முதலீட்டாளர்கள் மட்டுமே நிறுவ முடியும் என்பதால் தங்களது நாட்டு முதலீட்டாளர்களின் இழப்பைக் குறிப்பிட்ட வரம்புக்குள் நிறுத்த அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு விரும்புகிறது.

போபாலில் நடந்த விஷவாயுக் கசிவில் யூனியன் கார்பைடு நிறுவனம் முழுமையான இழப்பீடு கொடுக்காத நிலையில், இன்னமும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதும், நீதிமன்றப்படிகளில் ஏறி, இறங்கி சலித்துவிட்டிருப்பதும் இதுபோன்ற விபத்துகளில் இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஆனால், அப்படிப்பட்ட இழப்பீட்டுக்கு உச்சவரம்பு விதிக்கப்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அணுசக்தி என்பது ஆபத்தானது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது, அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு முழுமையான இழப்பீடு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுவதும்கூட ஒரு நல்லரசின் கடமை.

கடந்த மக்களவையில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்த பாரதிய ஜனதா கட்சி இப்போது இந்த இழப்பீட்டு மசோதாவில் அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது ஏன்? தங்களது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். அது என்ன நிபந்தனைகள்?

முதலாவதாக, அணுசக்திக் கூடங்கள் தனியார் தரப்பில் விடப்படக் கூடாது என்பதும் அரசுதான் நடத்த வேண்டும் என்பதும். இரண்டாவதாக, அணுசக்தி நிறுவனங்களின் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 500 கோடியாக இருந்ததை 1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதும் தேவைப்பட்டால் மேலும் உயர்த்திக் கொள்ளும் அதிகாரமும் அரசுக்கு இருக்க வேண்டும் என்பதும்.

முன்பு தயாரிக்கப்பட்ட மசோதாவின்படி, அணுசக்தி உற்பத்தியாளர்களின் இழப்பீடு 500 கோடி என்றும், அதற்குமேல் இழப்பீடு தரப்பட வேண்டுமானால் அதை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் இருந்தது. இப்போது பாஜகவின் கோரிக்கையின்படி அரசு நிறுவனமாக மட்டுமே அணுசக்திக் கூடங்கள் அமைக்கப்படும் என்கிற நிலையில் இழப்பீடு எவ்வளவு இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொள்வது என்பதுதானே நியாயம். அரசே நடத்தும்போது உச்சவரம்பின் அவசியம் தேவையில்லையே!

இப்படி ஒரு மசோதாவை நிறைவேற்றி, அரசு நிறுவனமாக அணுசக்திக் கூடங்களை அமைத்து, பிறகு அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டிருப்பது இந்த மசோதாவிலிருந்தே பளிச்செனத் தெரிகிறதே. அப்படியானால் இது மக்களை முட்டாளாக்கும் மசோதாதானே?

சரி, மின்உலைகளில் தயாரிப்புக் குறைபாடுகள் இருந்தால் அதற்கு உலைகளை வழங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்குமா? அவர்களிடமிருந்து விபத்து ஏற்பட்டால் இழப்பீடு முழுமையாகப் பெறப்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு மசோதா பதில் சொல்லவில்லையே, ஏன்?

பாரதிய ஜனதாவும், காங்கிரஸýம் ஓரினப் பறவைகள். பொருளாதாரக் கொள்கையிலும், பன்னாட்டு நிறுவன ஆதரவிலும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம். ஏனைய மாநிலக் கட்சிகள் இந்தப் பிரச்னையில் மௌனம் சாதிக்கின்றனவே, ஏன்? அவர்களைப் பொறுத்தவரை அணுவாவது.. உலையாவது.. விபத்தாவது.. இழப்பாவது..! உறுப்பினர்களின் சம்பள உயர்வுதான் இப்போதைய கவலை!

மக்களைப் பற்றியும் வருங்காலச் சந்ததியினரைப் பற்றியும் இவர்கள் எங்கே கவலைப்படுகிறார்கள்...?
நன்றி : தினமணி

சரிவில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு


சந்தை 18 ஆயிரம் புள்ளியிலிருந்து மேலே சென்றாலும், சிறிதுசறுக்கி கீழே வந்து விடுகிறது.அதே சமயம், 18 ஆயிரம் புள்ளிக்குகீழே செல்லாமலும் இருக்கிறது.பருவ மழை நன்றாக இருக்கிறது;காலாண்டு முடிவுகளும் நன்றாக இருக்கிறது.வெளிநாட்டு முதலீடுகள் வந்தாலும், சந்தை மேலும் கீழுமாகஇருக்கிறது. காரணம், உலகளவுசந்தைகளும், லாப நோக்கும் தான்.திங்களன்று மும்பை பங்குச்சந்தை, 116 புள்ளிகள் குறைந்து முடிவ டைந்தது. செவ்வாயும் இதுதொடர்ந்தது. ஆனால், சந்தைபெரிய நஷ்டத்தை சந்திக்கவில்லை. 'பொன் கிடைத்தாலும்புதன் கிடைக்காது' என்பது போல, புதன் சந்தைக்கு பெரியலாபத்தை தந்தது.புதனன்று சந்தை ஏன் கூடியது?வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கியதால், சந்தை மிகவும் முன்னேறியது. திங்கள், செவ்வாய் நஷ்டங் களைக் குறைத்து,லாபம் கண்டது என்றே கூறலாம்.குறிப்பாக, ஐ.டி., பங்குகள், மெட்டல் பங்குகள் மேலேசென்றன.புதனன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 208 புள்ளிகள் கூடி, 18 ஆயிரத்து 257 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை 65 புள்ளிகள் கூடி, 5,479 புள்ளிகளுடனும் முடிந்தது.புதிய வெளியீடுகள்: 'குஜராத் பிப்பாவ் துறைமுக கம்பெனியின் புதிய வெளியீடு, இம்மாதம் 23ம் தேதி முதல், 26ம்தேதி வரை வருகிறது. 42 முதல் 48 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் வெளியீடு இது.இது போல, பிக் பஜாரின் பியூச்சர் வென்சர்ஸ், 750கோடி ரூபாய்க்கு வெளியீடு கொண்டு வர செபியிடம்விண்ணப்பித்துள்ளது.எஸ்.கே.எஸ்., மைக்ரோபைனான்ஸ், திங்களன்று பட்டியலிடப்பட்டது. சிறிய முதலீட்டாளர்களுக்கு 935 ரூபாய்அளவில்கொடுக்கப்பட்ட, இந்த வெளியீடு கிடைத்த வர்களுக்கு 20 சதவீதம் லாபத்தைக் கொடுத்துள்ளது.இதே போல பஜாஜ் கார்ப்(பஜாஜ் நிறுவனம்), வெள்ளியன்று பட்டியலிடப்பட்டது. இந்தவெளியீடு கிடைத்தவர்களுக்கு 15சதவீதம் லாபத்தைக் கொடுத்துள்ளது.
சிறிய முதலீட்டாளர்களுக்குஇரண்டு லட்சம்: இதுவரை, 'சிறியமுதலீட்டாளர்கள் ஒரு லட்சம்வரை, புதிய வெளியீடுகளில்முதலீடு செய்யலாம்' என்றிருந்தது.இவ்வரம்பை இரண்டு லட்சமாகக் கூட்டலாமா என, செபி யோசிக்கிறது. இது, சிறிய முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும்.

இன்பிரா பாண்ட்கள்: பட்ஜெட்டில்குறிப்பிடப்பட்ட இன்பிரா பாண்ட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.இதில் முதலீடு செய்வதால், தற்போதுள்ள முதலீட்டுவரம்பை விட, 20 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வருமானவரிச் சலுகை பெறலாம். 30 சதவீதம் வருமான வரி கட்டுபவர்களுக்கு, 14.3 சதவீதம் வரை வருமானம் கிடைக்கும்.வரும் நாட்கள் எப்படி இருக்கும்?சந்தையில் எந்த பாதகமும் இல்லை. மெது மெதுவாகமேலே செல்லும். ஆகவே, சரிவுகளில் முதலீடு செய்துவாருங்கள்; நல்ல லாபங்கள் கிடைக்கும்.

கட்டுரையாளர் -சேதுராமன் சாத்தப்பன்-

நன்றி : தினமலர்


Wednesday, August 18, 2010

வேண்டாம் வேதாந்தம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆறுதல் தரும் இரண்டு விவகாரங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன. முதலாவதாக, நாட்டில் முறைகேடான கனிமச் சுரங்கங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒரு குழுமத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. இரண்டாவது, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் பாக்சைட் கனிமச் சுரங்கத் திட்டத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த இரண்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் விவகாரங்கள். மத்திய அரசு இப்போதுதான் ஒன்றில் நடவடிக்கை எடுக்கிறது. இன்னொன்றில் நடவடிக்கை எடுக்க ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பும் குரல்கள் யார் காதிலோ விழுந்து ஏதோ விஷயங்கள் நடக்கவே செய்கின்றன என்பது உறுதிப்படுவதன் மூலம் இந்த விழிப்புணர்வுக் குரல்களுக்கு வலுவும் தெம்பும் ஏற்படும்.

மத்திய அரசு அமைத்துள்ள குழு, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி, இரும்பு, மக்னீசியம் தாதுக்கள் முறைகேடாகச் சுரண்டப்படுகின்றன என்பது குறித்து ஆந்திர மாநிலம், ஜார்க்கண்ட், கர்நாடகம், சத்தீஸ்கர் ஒரிசா ஆகிய இடங்களில் ஆய்வுகள் செய்து தனது அறிக்கையை அளிக்கும்.

கனிமங்களை முறைகேடாகத் தோண்டியெடுத்தல் சாத்தியமா என்ற ஐயம் எழக்கூடும். ஆம், அவை நடைபெறுகிறது என்பதும், சில இடங்களில் மாநில அரசுகளின் மறைமுக ஒத்துழைப்புடனும், சில இடங்களில் மிக ரகசியமாகவும் நடந்துகொண்டிருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், ஒரு சுற்றுச்சூழல் இதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முறைகேடாகத் தோண்டியெடுக்கும் நிலக்கரியை இங்குள்ள ஆதிவாசிகள் மலைகளின் குறுக்கு வழியில் சுமந்து செல்கிறார்கள். இவர்களை வழிமறிக்கும் வனத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்கும் மாமூல்போக, இவர்களது கூலியில் ஒரு நாளைக்கு ரூ.50 கிடைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளுக்கு இது கடத்தல் என்றோ முறைகேடு என்றோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது ஒருநாள் கூலி மட்டும்தான். அவர்கள் வாழ்க்கை அப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த முறைகேடான கனிமச் சுரங்கங்களும் தாதுப்பொருள் கடத்தலும் ஆதிவாசிகளின் உழைப்பைச் சுரண்டுவதும் ஒருபுறமிருக்கட்டும், அரசு அனுமதியுடன் நடைபெறும் சுரங்கங்களில்கூட, அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவு.

தற்போது கர்நாடக மாநிலத்தில் இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான பனிப்போர் என்கிற உண்மை ஒருபுறம் இருக்க, இதில் கர்நாடக அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

உலகிலேயே மிகச் சிறந்த, தரமான இரும்புத் தாது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில்தான் கிடைக்கிறது. இதற்காக அரசு நிர்ணயித்துள்ள ராயல்டிதொகை ஒரு டன் இரும்புத் தாதுக்கு 27. ஆனால் உலகச் சந்தையில் பெல்லாரி இரும்புத் தாதுவின் விலை டன் 6,000 முதல் 7,000 வரை. சுரங்கம் தோண்டும் செலவு, போக்குவரத்துச் செலவு, வேலையாள் கூலி, கட்சிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அளிக்கும் லஞ்சம் எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் பார்த்தாலும்கூட ஒரு டன் இரும்புத் தாதுக்கு குறைந்தது 5,000 கிடைக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. அப்படியானால், ஏன் அரசு இவ்வளவு மலிவாக ராயல்டி தொகையை நிர்ணயிக்க வேண்டும்?

இது கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்ல, ஆந்திரம், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும்கூட, கனிமங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் உரிமத் தொகைக்கும் (ராயல்டி) இந்த தனியார் நிறுவனங்கள் பெறும் லாபத்துக்கும் குறைந்தபட்சம் 1000 விழுக்காடு வித்தியாசம் இருக்கிறது. முதலில் இந்த வேறுபாட்டைக் களைந்தாலே அரசுக்கு மிக அதிகமான வருவாய் கிடைக்கும். முறைகேடாக கனிமங்களைச் சுரண்டுபவர்களைவிட, முறையாகச் சுரங்கம் அமைத்து சுரண்டுபவர்கள்தான் மிகமிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.

ஒரிசாவில் வேதாந்தா என்கிற நிறுவனம் நியம்கிரி என்ற மலையில் தொடங்கவிருந்த பாக்ûஸட் கனிமம் தோண்டும் திட்டத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று இது தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருப்பதுடன், வேதாந்தா நிறுவனம் எவ்வாறு சுற்றுச்சூழல் விதிமுறைகள் பலவற்றை மீறியுள்ளது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

"....இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதிக்கச் செய்வதுடன், இரு பழங்குடி மக்களின் நலனுக்கு முரணாக அமையும் இந்தத் திட்டத்தை அனுமதித்தால், ஆதிவாசிகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் மீதும் அவர்களது சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்' என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இன்று இந்த மாநிலங்களில் மாவோயிஸ்ட் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே, ஆதிவாசிகள் நம் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதுதான்.

கனிம ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸஸ், அண்மையில் வேதாந்தா பல்கலைக்கழகம் அமைக்கப்போவதாகக் கூறி, 2400 ஹெக்டேர் நிலத்தை, பூரி-கொனார்க் நெடுஞ்சாலையில் வாங்கியது பெரும் பிரச்னையானதால், அந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது, இதே நிறுவனத்தின் பாக்ûஸட் திட்டத்துக்கும் எதிராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பழனி கோயிலில் மூலவர் முருகனின் நவபாஷாண சிலையின் முன்புறம் அப்படியே இருக்க பின்புறம் நிறையச் சுரண்டப்பட்டு, சிலையே பாதிப்படைந்ததாகப் புகார்கள் உண்டு. சிலையின் பின்புறத்தைப் பார்த்தவர் இல்லை. மத்திய அரசு கடுமையாகவும், நியாயமாகவும், முதுகெலும்புடனும் செயல்படாவிட்டால் இந்தியாவையும் கூட பழனியாண்டவர் நவபாஷாண சிலைகதை போல ஆக்கிவிடுவார்கள்.

எல்லாம் விதிப்பயன் என்பதுதானே வேதாந்தத்தின் அடிப்படைத் தத்துவம். வேதாந்தத்தை நம்பும் இந்தியாவுக்கு வேதாந்தம் புகட்ட வேதாந்தா போன்ற நிறுவனங்கள் கச்சை கட்டிக்கொண்டு இறங்கி இருக்கின்றன. எல்லாம் விதிப்பயன், வேறென்ன?
நன்றி : தினமணி

Tuesday, August 17, 2010

நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்...

சிறு,குறு விவசாயிகளின் பம்புசெட்டுகளில் உள்ள பழைய மின்மோட்டார்களை நீக்கிவிட்டு அரசின் சார்பில் புதிய மின்மோட்டார்கள் இலவசமாகப் பொருத்தித் தரப்படும் என்பதும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் புதிய பம்புசெட்டுகள் பொருத்தித் தரப்படும் என்பதும் தமிழக முதல்வரின் விடுதலை நாள் விழா அறிவிப்பு.

திறன் இல்லாத பழைய மோட்டார்களைப் பயன்படுத்துவதால், விவசாயத்துக்கான மின்சாரத்தில் 20 விழுக்காடு வீணாகிறது, இத்தகைய புதிய, தரமான மின்மோட்டார்களை இலவசமாகப் பொருத்தித் தருவதால் (இலவசமாக வழங்குவது மட்டுமல்ல, கிணற்றில் பொருத்தித் தருவதும்கூட இலவசம்தான்) இந்த மின்இழப்பைத் தவிர்த்துவிடலாம் என்பது முதல்வர் இதற்குக் கூறியிருக்கும் காரணம்.

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 19 லட்சம் விவசாயிகள் தங்கள் கிணறுகளுக்கு மின்இணைப்புப் பெற்றுள்ளனர். இவர்களில் 15 லட்சம் பேர் சிறு, குறு விவசாயிகள். ஆக இப்போது முதல்வரின் அறிவிப்பின்படி 15 லட்சம் விவசாயிகளுக்கு மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் 4 லட்சம் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் பொருத்தித் தர வேண்டும். அதாவது மொத்தம் 19 லட்சம் மின்மோட்டர்களுக்கான செலவினத்தை தமிழக அரசு ஏற்றாக வேண்டும். ஒரு மின்மோட்டார் குறைந்தது 40 ஆயிரம் ஆகும். இந்தக் கணக்கின்படி இத்திட்டத்தின் மொத்த நிதித்தேவை ஏறக்குறைய 6,800 கோடி.

இந்தத் திட்டத்தை இத்தனை செலவில் அமல்படுத்தி, அனைத்து மின்மோட்டார்களையும் இலவசமாக மாற்றிப் பொருத்தினால், முதல்வர் கூறுவதைப்போல 20 விழுக்காடு வீணாகும் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுமா என்றால், அதுவும்கூட மிகப் பெரிய கேள்வியாகத்தான் இருக்கும். மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம் இலவச மின்சாரம் கூடாது என்று சொல்லி வந்தபோதிலும், பொதுவாக ஆண்டுக்கு 3,000 கோடி என்று மின்வாரியத்துக்கு அரசு ஒரு தொகையை மானியமாக வழங்கும் போதும், ஒவ்வொரு பம்புசெட்டில் உள்ள மீட்டரையும் ரீடிங் எடுத்து, அதன்படி உள்ள கட்டணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்த ஆணையம். ஆனால் தமிழக அரசோ, இலவசம் என்றான பின்பு எவ்வளவு மீட்டர் ரீடிங் இருந்தால் என்ன என்று சொல்வதோடு, ஆணையம் எதற்காக இதனை வலியுறுத்துகிறது என்கிற சிந்தனைக்கே திரும்பவில்லை. மின்வாரிய ஊழியர்கள் வயலுக்குப் போய், பம்புசெட்டுகளில் ரீடிங் எடுக்கும் வழக்கமே மறைந்தொழிந்துவிட்டது.

மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம், இலவச மின்சாரத்தையும் ரீடிங் செய்து கொடுக்க வேண்டும் என்கிற நடைமுறையானது, தமிழ்ப் பழமொழி சொல்வதைப்போல, "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பதைத் தவிர வேறில்லை.

ஒரு பம்புசெட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்பட்டிருக்கிறது என்பதை வைத்து, அந்த நிலத்தில் நடைபெற்ற விவசாயத்தின் வீச்சு, விளைச்சல் எல்லாவற்றையும் தோராயமாகக் கணக்கிட முடியும். மேலும், இந்த மின்சாரம் அந்த நிலத்தின் அளவுக்குத் தகுந்தபடிதான் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கணிப்பதன் மூலம், அவர்கள் தவறாக மின்சாரத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வாய்ப்புகளும்கூட உண்டாகும். மேலும், ஒவ்வோராண்டும் இந்த மின்சாரப் பயன்பாட்டில் கூடுதல் குறைதல் இருக்கிறதா என்பதைக் கொண்டு, விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நல்லது கெட்டதுமான மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்க மறுத்துவிட்டது தமிழக அரசு.

இதனால், பம்புசெட் மின்சாரம் பல நேரங்களில் பண்ணை வீடுகளுக்கும் போகிறது. சில இடங்களில் கரும்பு பிழிவதற்கும் போகிறது. சில நேரங்களில் வெறுமனே லாரிகளில் தண்ணீர் நிரப்பவும் பயன்படுகிறது. வணிக ரீதியில் இவ்வாறு இலவச மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அரசியல் தலைவர்களை வரவேற்க சாலைகளில் பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் போடப்படும் குழல்விளக்குகளுக்கும்கூட, கட்சி பேதமின்றி, சாலையோரம் இருக்கும் பம்புசெட்டுகளிலிருந்து இலவசமாக மின்சாரத்தை இழுத்துக் கொள்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, தற்போது தரமான புதிய மின்மோட்டார்களை மாற்றிக் கொடுத்தால் அதனைப் பயன்படுத்தும் நேரம் அதிகரிப்பதுடன், மின்சாரத்தின் அளவும் அதிகரிக்குமே தவிர, குறையாது. அதாவது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாற்கர சாலைகள் அமைத்தால் வேகம் அதிகரித்து வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விபத்துகளும் அதிகரிப்பதைப் போலத்தான் இதுவும். நல்ல மின்மோட்டார்களை நன்றாகப் பயன்படுத்தி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சுவார்கள். வீணடிப்பார்கள், வேறென்ன?

கிணறுகளை ஆழப்படுத்துவதற்காக அண்மையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டது. அதேபோன்று மின்மோட்டார்களின் தரம் உயர்த்த மானியம் அளிக்கப்படுவது என அரசு முடிவு செய்திருந்தால் அதனைப் பாராட்டியிருக்கலாம்.

ஒரு டன் கரும்புக்கு மேலும் 500 அதிகரிக்கப்படும் என்றாலோ அல்லது நெல்லுக்கு விலை 500 அதிகம் என்றாலோ விவசாயிக்கு நன்மை கிடைக்கும். விவசாயத்துக்கு ஊக்கம் அளித்ததாகவும் அமையும்.

விதை நெல்லுக்கு மானியம் இல்லை என்று சொல்லும் அரசு, மின்மோட்டாரை இலவசமாக வழங்குவதால், மின்மோட்டார் உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சில நிறுவனங்கள் இதற்கான அனைத்து ஆர்டர்களையும் பெற்று வளம்பெறப் போகின்றன.

மக்கள் பணத்தை முறைப்படி செலவிடுவதில் தவறில்லை. காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி சாதாரண விவசாய மின்மோட்டார் வரை, திட்டங்கள் உண்மையான நோக்கத்தைத் தாண்டி, வீணாகின்றன என்பதும், யாரோ சிலர் அதனால் சில ஆயிரம் கோடி ரூபாய் பார்க்கிறார்கள் என்பதும் தான் நமது ஆதங்கம்.

"வயலுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்பது புரிகிறது. ஆனால் புல்லுக்கு மட்டுமே வாய்க்கால் நீர் ஓடி, நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றால்...
நன்றி : தினமணி

Monday, August 16, 2010

காஷ்மீர்: பிரதமர் முனைப்புக் காட்டுவாரா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக நடந்துவரும் வன்முறைப் போராட்டங்களால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவது, தில்லியில் ஆளும் அதிகார வட்டத்தினருக்குப் பெருங்கவலையை அளித்துள்ளது. இதுவரை இல்லாத அளவு அங்கு நிலைமை மோசமாக இருப்பதைப் பரவலாக அனைத்து அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். 1989-ல் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் "ஆஸôதி' கோஷம் முதன்முதலாக எழுந்தபோது இருந்த நிலைமையைவிட இப்போது நிலைமை படுமோசமாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

பெண்கள் உள்பட பெரும்பாலானவர்கள் வீதிகளில் திரண்டு பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்குவதிலிருந்து அவர்களின் கோபத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அசம்பாவித சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களை முதல்வர் ஒமர் அப்துல்லா சென்று பார்த்தபோது, முதல்வரின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக் கேள்வி கேட்டுள்ளார் ஒரு பெண். இதிலிருந்தே காஷ்மீர் மக்களின் மனநிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

நான்காம் தலைமுறையைச் சேர்ந்த காஷ்மீரி இளைஞர்கள் பெரும் அளவில் திரண்டு, தடையை மீறி வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை யார் பின்னிருந்து இயக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் காரணமா? அல்லது பிரிவினைவாதிகள் காரணமா? அல்லது நமது அண்டை நாடான பாகிஸ்தான் காரணமா? என்பது புரியவில்லை. எனினும் காஷ்மீர் பள்ளத்தாக்கில், தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களால், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பாகிஸ்தான் முயல்வது மட்டும் தெளிவாகிறது.

தற்போதைய நெருக்கடிக்கு என்ன காரணம் என்று கேட்டால், அனைத்து நிலைகளிலும் தலைமை சரிவர செயல்படத் தவறிவிட்டது என்றே சொல்லலாம். மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்தால் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்பதை உரிய நேரத்தில் தெரிவிக்கும் தலைவர்கள் இல்லாததும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.

கடந்த தேர்தலுக்குப் பிறகு பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், இதை தில்லியில் உள்ள தலைவர்களோ, ஸ்ரீநகரில் உள்ள ஆட்சியாளர்களோ புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கூட்டணி அரசை நிறுவின. உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதிகாரப் பகிர்வுக்கு வழிசெய்து அதன் மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து, எங்கே எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வலுப்பெற்றுவிடுமோ என்ற பயம்தான் இதற்குக் காரணம். மாநில அரசு சரிவர செயல்படாததால் மக்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

மாநில அரசுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், அந்தச் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார் ஹுரியத் பிரிவினைவாத அமைப்பின் தலைவரும், பாகிஸ்தான் ஆதரவாளருமான சையத் அலி ஷா கிலானி. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, சிறையில் இருக்கும் கிலானியுடன் மாநில அரசு நிர்வாகம் பேச்சு நடத்தும் அளவுக்கு நிலைமை அங்கு முற்றிவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கிலானியுடன் பேச்சு நடத்த முயன்றும் அவர் அதை நிராகரித்துவிட்டார். கிலானியைப் போல மஸôரத் ஆலம், ஆஸிய ஆந்திரபி போன்ற தீவிரவாதத் தலைவர்களும் இப்போது காஷ்மீர் விவகாரத்தில் தலைகாட்டத் தொடங்கியுள்ளனர்.

காஷ்மீர் முதல்வராக ஓமர் அப்துல்லா பொறுப்பேற்றபோது, இளம் தலைவர், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், எதையும் சிந்தித்துப் பார்த்துச் செயல்படக்கூடியவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது. ஆனால், ஒமர் அப்துல்லா, தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை. 2009-ம் ஆண்டு காஷ்மீர் பெண்கள் இருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தபோது மக்கள் போராட்டம் வெடித்தது. ஆனால், நிலைமையை உணர்ந்து துரிதமாகச் செயல்பட முதல்வர் ஒமர் தவறிவிட்டார். இதேபோல கடந்த ஜூன் 11-ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயது இளைஞர் டஃபைல் மட்டூ உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதும் பிரச்னை என்ன என்பதை அறிந்து அதற்குத் தீர்வுகாண ஒமர் அப்துல்லா தவறிவிட்டார். இதையடுத்து வன்முறையும் போராட்டமும் தொடர்கதையாகிவிட்டது.

தற்போதைய நிலைமையை முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நிற்கும் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு உதவவும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி தயாராக இல்லை. இது தொடர்பாக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் திட்டமும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு மாற்றாக மக்கள் ஜனநாயகக் கட்சி உருவானபோது மக்கள் பிரச்னைகளைத் தேசிய அளவில் எடுத்துச் செல்ல புதிய அரசியல் கட்சி உருவானதாகவே மக்கள் நம்பினார்கள். ஆனால், அவற்றின் செயல்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை.

வன்முறை ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், 8 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கல்வீச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத்தான் சுட்டதாக போலீஸôர் கூறினாலும், நிலைமையைச் சமாளிக்க அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லையா? இது விஷயத்தில் போலீஸ் துறை சரிவர செயல்படத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். போராட்டத்தின் போது இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபடுவதைத் தவிர்க்க புதிய உத்திகளைப் பாதுகாப்புப் படையினர் கையாள வேண்டுமே தவிர, அதற்காக கண்மூடித்தனமான அடக்குமுறையைக் கையாளக்கூடாது.

பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்தாலும், குதிரையை லாயத்தில் கட்டிவிட்டு கதவையும் இழுத்துப் பூட்டியதுபோல் அவரது பேச்சு உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் நபராவார்.

கடந்த காலங்களில் காஷ்மீர் பிரச்னை தலைதூக்கிய போதெல்லாம் அதைச் சமாளிக்கப் பின்னாலிருந்து செயல்பட்டவர் அவர். பிரதமர் ஆவதற்கு முன் ஒரு சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தியவர்.

இப்போது இரண்டாவது முறையாக மன்மோகன் பிரதமராகியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதிலும், காஷ்மீர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வுகாணவும் அவருக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஆனால், இன்று நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் போல் வாய் பேசாமல் மௌனமாக இருக்கிறார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆராய பணிக்குழுவை பிரதமர் நியமித்திருந்தார். மத்திய அரசும் அக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. ஆனால், அவற்றைச் செயல்படுத்தத்தான் முன்வரவில்லை.

காஷ்மீரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, வன்முறை வெடித்து தடியடி, துப்பாக்கிச்சூடு நடந்து ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்தபோதிலும், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து அதற்குத் தீர்வுகாண பிரதமர் அலுவலகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கு பா.ஜ.க. எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நிலைமையை எப்படி பிரதமர் சமாளிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஸ்ரீநகருக்குச் சென்றார். பயங்கரவாதிகளுடன் பேசி அவர்களை ஜனநாயகப் பாதைக்கு அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்டே வி.பி.சிங் அங்கு சென்றார். ஸ்ரீநகரில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வி.பி.சிங்கை சந்தித்துவிட்டுச் சென்றனர். ஷபீர் ஷா, தேநீர் விருந்துக்கு வருமாறு வி.பி.சிங்கை அழைத்தார். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.

வி.பி.சிங், ஷபீர் ஷா வீட்டுக்குச் செல்லவிருந்த சில மணி நேரங்களுக்கு முன் அவரிடம் புலனாய்வுத் துறை போலீஸôர், "நீங்கள் அந்த இடத்துக்குச் செல்லவேண்டாம். அப்பகுதியைச் சுற்றிலும் வெடிமருந்துகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கிறோம்' என்று கூறினர். ஆனால், வி.பி.சிங், உடனடியாக அவற்றை அகற்ற உத்தரவிட்டார். இரண்டு மணிநேரத்தில் அவை அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து ஷபீர் ஷாவை சந்தித்தார் வி.பி.சிங். பின்னர் வி.பி.சிங் தனது சகாக்களிடம், பிரதமராகிய நான் ஷபீர் ஷாவுடன் தேநீர் அருந்துவதாகக் கொடுத்த வாக்கை காப்பாற்றாவிட்டால் காஷ்மீர் மக்கள் என்னை பிற விஷயங்களில் எப்படி நம்புவார்கள் என்று கேட்டார்.

இப்போது நிலைமை என்ன?

மத்திய அரசும், மாநில அரசும் துரிதமாகச் செயல்பட்டு காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மத்திய அரசு எம்.பி.க்கள் குழுவை அங்கு அனுப்பி உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். காஷ்மீர் விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் குறிப்பாக பாஜகவுடன் விவாதித்து ஒருமித்த கருத்தை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். ஆனால். இப்போதைய தேவை காஷ்மீர் மக்களின் வலியை இதர மாநிலத்தவர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான்!

கட்டுரையாளர் :நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

இந்தியன் வங்கியின் புதிய திட்டம் அறிமுகம்


இந்தியன் வங்கி, குறுகிய கால, 'மெச்சூரிட்டி' கொண்ட நிரந்தர வைப்புநிதி திட்டத்தில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கான நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில், 'இன்டபுள்' மற்றும் 'இன்டபுள் சீனியர்' என்ற இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியன் வங்கி. அதன்படி, 'இன்டபுள்' திட்டத்தில் வைப்பு நிதி செலுத்தும் பொதுமக்களுக்கு அத்தொகை 108 மாதங்களில் இரண்டு மடங்கு ஆகும். மூத்த குடிமக்களுக்கான 'இன்டபுள் சீனியர்' திட்டத்தில், வைப்பு நிதி 100 மாதங்களில் இரண்டு மடங்கு ஆகும். மற்ற சாதாரண வைப்பு நிதி திட்டங்களுக்கு பொருந்தக் கூடிய அனைத்து விதிகளும் இத்திட்டத்துக்கும் பொருந்தும். அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட 'மெச்சூரிட்டி' காலகட்டத்தில் செலுத்தப்படும் ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புத் தொகைக்கு, 7.25 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதம் ஆக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்


பொறுமைக்கும் எல்லையுண்டு...

வயல் வரப்புகளுக்காக வெட்டி மடிந்த சகோதரர்கள் பற்றிய கதைகள் இந்த மண்ணுக்குப் புதியதல்ல. ஆனால் அத்தகைய கொலைகள் வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் மேலீட்டால் நடந்தவையாகத்தான் இருந்து வந்தது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில், சகோதரர்களைத் தூண்டிவிட்டு, கூலிப் படைகள் கொலை செய்யும் அளவுக்கு வரம்புகள் எல்லை மீறிச் சென்றுள்ளன.

இரு தினங்களுக்கு முன்பு, சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடைசி வாரிசான சிவகுரு என்கிற சிறுநீரக நோயாளி, தானே இந்தக் கொலைகளைச் செய்துள்ளதாகச் சென்னையில் சரணடைந்தபோதிலும், இந்தக் கொலையைச் செய்தவர்கள் நிலம் பறிக்கும் கும்பல்தான் என்பதைக் காவல்துறை உள்பட அனைவரும் உறுதியாக நம்புகின்றனர். இதன் பின்புலத்தில் சில அரசியல்வாதிகள் இருப்பதாகவும் வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. போலியாக பவர் ஆப் அட்டார்னி தயாரித்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று ஏற்கெனவே காவல்நிலையத்தில் புகார் செய்தும்கூட, நடவடிக்கை இல்லை என்பதால்தான் இந்தக் கொலைகள் நடந்துள்ளன.

இந்தக் கொலைகள் நடந்த பண்ணை வீட்டுக்கு வந்த மோப்ப நாய், அங்கே தூவப்பட்டிருந்த மிளகாய்ப் பொடி காரணமாக, வீட்டுக்கு உள்ளேயும் நுழையாமல் திரும்பியது. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான தந்தை முன்னாள் காவல் ஆய்வாளர். ஒரு சகோதரருக்குக் கராத்தே தெரியும். ஆகவே இது கூலிப்படையின் செயல் என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.

சென்ற ஆண்டு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதும், கொலையாளியைப் பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பின்னர் அவர் இறந்து போனார் என்பதும் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தக் கொலையும், கொலையான நபருக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலத்தை விற்க மறுத்ததால் நிகழ்த்தப்பட்ட கொலை என்றும், இதில் இரு முக்கிய அரசியல்வாதிகளின் சகோதரர் மற்றும் மகன் சம்பந்தப்பட்ட நிலபேரம் காரணம் என்றும் பேசப்பட்டது. கொலையாளி காவல் நிலையத்தில் எப்படி இறந்தார் என்பதை விசாரிக்க குழு அமைத்தார்கள். என்ன ஆயிற்று? மக்கள் மறந்தே போனார்கள்.

இன்று தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்ற பெயரில் மிகப்பெரும் மோசடிகள் அரசியல்வாதிகளின் ஆசியுடன், கடைக்கண் பார்வையுடன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. முக்கியமான ஓர் இடத்தில் காலி மனை அல்லது பழைய வீடு இருக்குமானால், இந்தக் கூட்டம் உள்ளே நுழைந்து, விற்றுவிடுங்கள் என்று ஆலோசனை சொல்கிறது. மறுத்தால் கொலை மிரட்டல் விடுக்கிறது. விற்கச் சம்மதித்தால், விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள். பவர் ஆப் அட்டார்னி பத்திரம் செய்து அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். இரண்டு மடங்கு விலைக்கு விற்றுவிட்டு, பேசிய தொகையில் பாதியை உரிமையாளர்களிடம் கொடுத்துவிட்டு, மிச்சத் தொகையை இந்தக் கூட்டம் அப்படியே பங்குபோட்டுக் கொள்கிறது. இதுதான் இன்று தமிழகத்தில் நடைபெறும் நிலம் பறிக்கும் கும்பலின் கொள்ளையடிக்கும் தந்திரம்.

இவர்களை மீறி ஒரு பத்திரம் எழுதப்பட்டால்கூட இந்தக் கூட்டத்துக்கு முதல் தகவல் போய்ச் சேரும் வகையில் அரசியல் செல்வாக்கு இவர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலம் பறிப்புக் கூட்டத்தில் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் முக்கிய நபராக இருந்தாலும், ஒவ்வொரு பகுதியைப் பொறுத்து, ஆங்காங்கே பலமாக இருக்கும் மாற்றுக் கட்சிப் பிரமுகரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டுவிடுகிறார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் சட்டை செய்வதில்லை.

இந்த நிலம் பறிக்கும் கூட்டத்திடம் ஒரு சர்வே இருக்கிறது. ஊருக்குள் எந்தெந்த வீட்டில் நுழைந்தால் கேட்க நாதியில்லை, யாருக்கு எந்தப் பின்புலம் இருக்கிறது, எந்த வீட்டில் இருக்கும் பெற்றோர் தனியாக இருக்கிறார்கள், யார் இந்தச் சொத்தை வாங்கிப் போட்டுவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள் என எல்லா புள்ளிவிவரமும் இருக்கிறது. அதன் பிறகே இவர்கள் தங்களுடைய நிலம் பறிப்பு நடவடிக்கையைத் தொடங்குகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத் தலை-களும் தங்களை அப்பகுதியின் குறுநில மன்னர்களாக நினைத்துக் கொண்டு கோலோச்சுவதுதான் இந்த நிலைமைக்கு எல்லாம் காரணம் என்பதை நாம் சொல்லித் தெரிவிக்க வேண்டியதில்லை. இன்ன மாவட்டம் இன்னாருக்குச் சொந்தம் என்று பட்டா போட்டுக் கொடுக்காத குறை.

காவல்துறையும் அரசியல் கட்சித் தலைமைகளும் இதில் கண்மூடிக் கொண்டு இருக்கலாம். ஆனால் மக்கள், யார் அனுபவத்தில் இருந்த சொத்து யாருக்கு எப்படிக் கைமாறியது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்குச் சாவடியின் வரிசையில் நிற்கும்போது அங்கே இருக்கும் ஒவ்வோர் அரசியல்வாதியையும் பார்த்து எந்த அளவுக்கு வயிற்றெரிச்சல் அடைகிறார்கள் என்பதைப் பொறுத்து வாக்குகளும் இடம் மாறும். கட்சித் தலைமைகள் இதைப் புரிந்துகொண்டு, வால்-கள் ஆடாமல் இருக்க வகை செய்தால் மட்டும்தான் தமிழகத்தில் பல குடும்பங்கள் அச்சமின்றி இருக்கும். மக்களாட்சியில் அச்சத்தை மாற்றவல்ல மாமருந்தாக ஆட்சி மாற்றம் அமைந்த சரித்திரங்கள் பல உண்டு என்பதை இவர்கள் நினைவில் நிறுத்தினால் நலம்!
நன்றி : தினமணி

Sunday, August 15, 2010

கைவரிசை காட்டும் கரையான்கள்!

அண்மைக்காலமாக லஞ்சம் வாங்கியதாக அரசு அலுவலர்கள் கைது செய்யப்படுவது செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் அடிக்கடி இடம்பெறும் செய்தியாகிவிட்டது. லஞ்சம் தொடர்பாக எப்போதாவது ஒருவர் பிடிபட்ட காலம்போய் இன்று தினம் ஒருவர் கைதுசெய்யப்படும் நிலை. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பதுடன் இனி வாங்கிய கையும் சும்மாயிருக்காது என சேர்த்துக் கொள்ளலாம்.

லஞ்சம் வாங்கியவர்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால், இந்தத் துறைதான் என்பது இல்லாமல் லஞ்சம் அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது புரியும்.

தங்கள் தேவைகளுக்காக அரசு அலுவலகங்களை அணுகும் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க இயலாமலோ, விரும்பாமலோ ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் செய்து, அத்தகைய ஊழியர்களைச் சிக்கவைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது பொதுமக்களிடையே லஞ்சம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது. எனினும் லஞ்சம் கொடுப்பது தவறு என்னும் விழிப்புணர்வு முழு அளவில் ஏற்படவில்லை என்பதே உண்மை.

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளையோ, ஊழியர்களையோ காட்டிக் கொடுத்தால் தனக்கு ஆகவேண்டிய காரியம் தடைபட்டுவிடுமோ என்ற ஐயமும், அச்சமுமே மேலோங்க, எவ்வளவோ செலவாகிறது ஒரு ஐநூறு, ஆயிரம் கொடுப்பதால் நமது வேலை பிரச்னை இல்லாமல் முடிந்தால் சரிதான் என எண்ணும் பொதுமக்களாலேயே லஞ்சம் லஜ்ஜையின்றி முளைவிடத் தொடங்குகிறது. பிறகு அதை நீருற்றி, வாடவிடாமல் வளர்ப்பது அத்தகைய அலுவலர்களின் பணியாகிவிடுகிறது.

சமூகத்தின் அடித்தட்டில் அன்றாடம் பிடிசோற்றுக்கு ஏங்குவோர் ஐந்துக்கும் பத்துக்கும் அடிமைகளைப்போல உழைத்து ஓடாய்த் தேய்வதைப் பார்க்கலாம்.

ஆனால், அரசாங்கப் பணி கிடைத்துவிட்ட ஒரே காரணத்துகாக குளிரூட்டப்பட்ட அறையில் வியர்க்காமல் வேலைபார்க்கும் இவர்களுக்கு, அரசு பல்லாயிரக்கணக்கில் ஊதியத்தை அள்ளி வழங்கினாலும், சிறிதும் வெட்கமின்றி புன்னகை முகத்துடன் தலை சொறிந்தபடியோ, இறுகிய முகத்துடன் வலுக்கட்டாயமாகவோ லஞ்சம் பெறுவது தவறென்பது உரைப்பதில்லை.

லஞ்சம் வாங்கியதாகக் கைதாகும் பலரும் வறுமையில் வாடிக்கொண்டிருப்போராகத் தெரியவில்லை. சொந்த வீடு, மனை, கார் என சகல வசதியுடன் சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ளவர்களாகவே தென்படுகின்றனர். அவர்கள் லஞ்சம் வாங்கியே இவ்வளவு வசதிபெற்றனரா அல்லது உயரும் விலைவாசியைத் தான் மட்டுமன்றி, தனது பல தலைமுறையும் சமாளிக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் லஞ்சம் வாங்கினரா என்பது முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா என்பதுபோல விடைதெரியாத கேள்வியாகிவிடும்.

ஆனால், இதுபோன்ற பேர்வழிகள் அனைவருமே நினைக்கும் ஒன்று, லஞ்சம் வாங்கினால் தாங்களும் கவலைகளின்றி ராசாபோல வாழலாம் என்பதே!

பலநாள் அதிர்ஷ்டம், ஒருநாள் துரதிர்ஷடமாக மாறிவிடும்போது அவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். ஆனால், கைதாகி அழைத்துச் செல்லப்படும்போது சிலர் வெற்றிப்புன்னகை சிந்துவதைப் பார்க்கலாம். எப்படியும் வழக்கு தனக்குச் சாதகமாகவே முடியும், இறுதியில் "தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வென்றது' என்ற டயலாக் பேச தனக்கும் ஒரு வாய்ப்புக் கிட்டும் என்பதாக இருக்கலாம்.

சிலரோ முகத்தை மூடியபடி செல்வதைப் பார்க்கலாம். அதற்கு, இந்தத் துறையில் இருந்துகொண்டு இவ்வளவு குறைந்த தொகைக்காக சிக்கிக் கொண்டோமே என்ற வெட்க உணர்வும் காரணமாக இருக்கலாம்.

"ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று கும்மியடிக்கக் கூறினான் எட்டையபுரத்து எரிமலை. இருபத்தியோராம் நூற்றாண்டில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிவிடுவர், லஞ்சம் வாங்குவதில் அவர்கள் 33 அல்ல, 50 சதவிகித பங்கு வகிக்கும் காலம் வரும் எனத் தெரிந்துதான் பாரதி இப்படி பாடினானோ?

லஞ்சம் வாங்கியதாகக் கைதுசெய்யப்படும் பலரையும் பத்திரிகைகளும், ஊடகங்களும் போட்டிபோட்டுக் கொண்டு அன்றைய தினத்தில் மட்டும் முடிந்தளவு முக்கியச் செய்தியாக்கிவிட்டு தொடரும் சில நாள்களில் மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. விளைவு, அந்த நபர் தன் மீதான குற்றச்சாட்டையோ, வழக்குகளையோ "எதிர்கொள்ளும்விதமாய்' எதிர்கொண்டு, சில நேரங்களில் அதே துறையிலோ, வேறு துறையிலோ பதவி உயர்வுடன் மீண்டும் மக்களுக்கு வழக்கம்போலப் பணியாற்றும் வாய்ப்புபெறும் அதிர்ஷ்டத்துக்கு உள்ளாகும் சம்பவங்களும் நிகழ்ந்துவிடுகின்றன. சிக்கிய லஞ்சப் பணம் சாட்சி சொல்ல வருவதில்லை. அதில் சிரித்தபடியிருக்கும் காந்தியும் சாட்சி சொல்ல வருவதில்லை.

அவர்கள் விஷயத்தில் ஒருவேளை "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பது கடைப்பிடிக்கப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

கைதாகும் ஊழியர்கள் மீது இடைநீக்கம், துறைரீதியான விசாரணை என்பன போன்ற நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண்துடைப்போ என நினைக்க வைக்கத் தக்கவிதத்திலேயே அமைந்துள்ளன.

நேர்மையான விசாரணை, தாமதமில்லா தீர்ப்பு, சிறை, வேலைபறிப்பு போன்ற கடுமையான தண்டனைகளை அமல்படுத்தாதவரை லஞ்சம் வாங்குவோர் எதுகுறித்தும் கவலைப்படப்போவதில்லை.

அரசை ஒரு மரம் எனக் கொண்டால் அனைத்துத் துறைகளும் கிளைகளுக்கு ஒப்பாகும். எல்லாக் கிளைகளிலுமே லஞ்சம் என்ற கரையான் தன் கைவரிசையைக் காட்டுவது இயற்கைதான். தாமதமின்றி நடவடிக்கை எடுத்து அவற்றை முற்றிலும் ஒழித்தால்தான் மரமும் வளம்பெறும்; மரத்தின் நிழலைப் பாதுகாப்பு என நம்பி நிற்கும் மக்களும் நிம்மதியாய் நலம்பெறுவர்!
கட்டுரையாளர் :மா. ஆறுமுககண்ணன்
நன்றி : தினமணி

Saturday, August 14, 2010

புதிய சலுகைத்திட்டத்தை அறிவித்தது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

சர்வதேச அளவில் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், ரவுண்ட்டிரிப் விமானப் பயணத்திற்கான கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. இதுதொடர்பாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இந்த கட்டணக்குறைப்பு அனைத்து ( பர்ஸ்ட், பிசினஸ் மற்றும் எகானமி) பிரிவுகளுக்கும் பொருந்தும் என்றும், இந்த கட்டணக்குறைப்பின் மூலம், 13 சதவீத அளவிற்கு சேமிப்பைப் பெறலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாஸ்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையங்களிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளான பக்ரைன், கெய்ரோ, டமாஸ்கஸ், துபாய், குவைத், மஸ்கட், ரியாத், டெஹ்ரான் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்லும் விமானங்களில் இந்த கட்டணக்குறைப்பு பொருந்தும் என்றும், மக்கள் இந்த புதிய சேவையை தங்கள் நிறுவன இணையதளமான டபிள்யூடபிள்யூடபிள்யூ. எமிரேட்ஸ்.காம்/யுஎஸ் என்ற இணையதளத்தில் பெறலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளது. இந்த தி்ட்டம், இந்த மாதம் 31ம் ‌தேதி முடிவடைவதாகவும், செப்டம்பர் 1ம் தேதி முதல், அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.


நன்றி: தினமலர்


பேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது ‌வோனேஜ்


இணையதளம் மூலம் தொலைபேசி சேவை தரும் நிறுவனமான வோனேஜ் நிறுவனம், பேஸ்புக் நண்பர்களுக்குள்ளே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்து, வோனேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இணையதளத்தின் மூலமமான தொலைபேச வசதியை பிரபலப்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் ‌போன்களில் இந்த வசதி அறிமுகப்படு்த்தப்பட உள்ளதாகவும், இந்த வசதியைப் பெற, வோனேஜ் இணையதளத்திற்கு சென்று, அதற்குரிய சாப்ட்வேரை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும், அதன்பின், அவர்கள் வழக்கம்போல, பேஸ்புக்கை லாக் இன் செய்தால், அதில் அவர்களின் நண்பர்களின் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தகவல் தொலைதொடர்பு வரலாற்றின் முக்கிய மைல்கல் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்