Wednesday, September 10, 2008

சரிவில் முடிந்த இன்றைய பங்கு சந்தை

இன்றும் மும்பை பங்கு சந்தை சரிவில்தான் முடிந்திருக்கிறது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து கொண்டிருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 238.15 புள்ளிகள் ( 1.6 சதவீதம் ) குறைந்து 14,662.61 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 68.45 புள்ளிகள் ( 1.53 சதவீதம் ) குறைந்து 4,400.25 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில், டெலிகாம், பவர் மற்றும் தனியார் வங்கி பங்குகள் குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 103 டாலர்தான்

வியன்னாவில் நடக்கும் ஓபக் அமைப்பின் ( பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பு ) மாநாட்டில், கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 5.2 லட்சம் பேரல்கள் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. நியுயார்க் மெர்கண்டைல் சந்தையில் அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 3.08 டாலர் குறைந்து 103.26 டாலராக இருக்கிறது. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப்பிறகு இப்போதுதான் கச்சா எண்ணெய் விலை இவ்வளவு குறைந்திருக்கிறது. ஓபக் அமைப்பின் கூட்டத்திற்குப்பின் அதன் தலைவர் சாகிப் கெலில் பேசுகையில், ஓபக் நாடுகள் இனிமேல் இப்போதுள்ள எண்ணெய் உற்பத்தியில் இருந்து நாள் ஒன்றுக்கு 5,20,000 பேரல்கள் குறைத்து 2 கோடியே 88 லட்சம் பேரல்கள் தான் உற்பத்தி செய்யும் என்றார். ஆனால் பொதுவாகவே ஓபக் நாடுகள், ஓபக் அமைப்பு விதிக்கும் உற்பத்தி அளவை விட கூடுதலாகவே எண்ணெய்யை உற்பத்தி செய்து வந்துள்ளன. இதற்கு முன் நடந்த ஓபக் மாநாட்டில் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 73 லட்சம் பேரல்கள்தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அதற்கு மேல்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நன்றி : தினமலர்


எல்லாருக்கும் வளர்ச்சி தரும் திட்டம்: ரிசர்வ் வங்கி கவர்னர் முதல் பேட்டி

'பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நிதிநிர்வாக நடவடிக்கை எடுத்த போதும், வளர்ச்சி பாதிக்காத வகையில் அதிகரிக்க நிதித்துறை சீர்திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்படும்' என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்தார்.ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பு ஏற்றுள்ள சுப்பாராவ் நேற்று முதல் முறையாக நிருபர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது;நிதித்துறை சீர்திருத்தம் என்பது யாருக்கு பயன் போய்ச் சேர வேண்டுமோ அதற்கேற்ற நடை முறை, செயல் திட்டங்கள் உருவாக்கப்படும். இது குறித்து மத்திய அமைச்சரவை கமிட்டி அளித்த பரிந்துரைகள் அடங்கிய ஒருங்கிணைந்த அறிக்கையை மத்திய அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கிறது. உலக சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அதே சமயம் நமது தேவையுடன் கூடிய வளர்ச்சியை மேற்கொள்ளும் வகையில் இது இருக்கும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான், கடுமையான நிதி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை தொட்டுவிட்டு, தற்போது உலகளவில் உள்ள பொருளாதார சூழ்நிலையால் சற்றே தொய்வு அடைந்துள்ளது. தற்போதுள்ள பணவீக்கம், பொருட்கள் வரத்து மற்றும் தேவை போன்ற காரணிகளால் ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் பணவீக்கம் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்படும்.உள்நாட்டு மொத்த உற்பத்தி சதவீத நிலைமை குறித்த ஆய்வு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் நிதி கொள்கையில் இடம் பெறும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவானதாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் உள்ளது.நாட்டின் உடனடி மற்றும் மத்திய தர தேவைகளை கருத்தில் கொண்டு நிதித்துறை சீர்திருத்தங்கள் பொருத்தமான நேரத்தில் கொண்டுவரப்படும். வங்கிகள் சீர்திருத்தம் மேலும் அதிகரிக்கும்இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.
நன்றி : தினமலர்