Wednesday, July 30, 2008

இந்தியா - சீனா இணைந்து போராடியும் உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது


ஜெனிவா உலக வர்த்தக அமைப்பில் கடந்த 9 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது. 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கடந்த பல நாட்களாக கடுமையாக உழைத்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது.விவசாய பொருட்கள் இறக்குமதி சம்பந்தமாக அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்திற்கு இந்தியா மற்றும் சீனா இணைந்து மறுப்பு தெரிவித்ததால் கடந்த 9 நாட்களாக நடந்த பலதரப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியை கொண்டுவந்துள்ளது. இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே உள்ள பிரச்னை அல்ல. சீனா உள்பட சுமார் 100 நாடுகளுக்கு பிரதிநிதியாகத்தான் இந்தியா, அமெரிக்காவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பேச்சுவார்த்தை முறிந்தது குறித்து, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத், இது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார். இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் அவரவர்கள் நாட்டு விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் என்றார்.


நன்றி : தினமலர்


சப் - பிரைம் கடன் பிரச்னையிலும் உலக பொருளாதாரம் வளர்ந்துதான் இருக்கிறது : ஐ.நா.அறிக்கை


கடந்த வருடத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட சப் - பிரைம் மார்ட்கேஜ் லோன் பிரச்னையால் பல முன்னேறிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் உலக அளவில் 2007 - 08 ல் பொருளாதாரம் வளர்ந்துதான் இருக்கிறது என்கிறது ஐ.நா.,வின் அறிக்கை. உலக அளவில் பொருட்களின் ஏற்றுமதி 14 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சர்வீஸ் துறையில் 18 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சி இருந்திருக்கிறது. இருந்தாலும் உலக மக்கள் தொகையில் பெரும்பகுதியை கொண்டிருக்கும் ஏழை நாடுகள், பணக்கார நாடுகளுடன் பொருளாதாரத்தில் போட்டி போட முடியாமல் திணறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டுள்ள யுனைடட் நேஷன்ஸ் கான்பரன்ஸ் ஆன் டிரேட் அண்ட் டெவலப்மென்ட் வெளியிட்ட 2008 க்கான புள்ளிவிபர அறிக்கையில் இந்த விபரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உலக மக்கள் தொகையில் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்தே உலக மொத்த உற்பத்தியில் ( ஜி.டி.பி. ) 70 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி பொருட்களின் மதிப்பு மற்றும் சர்வீஸ் துறையின் மதிப்பு ஆகியவைதான் ஜி.டி.பி.,யாக கணக்கிடப் படுகிறது. அதுதான் ஒரு நாட்டின் வளத்தை குறிக்கும். உலக அளவில் நடக்கும் ஏற்றுமதியில் பெரும்பகுதி தொழில்வளமிக்க நாடுகளில் இருந்துதான் நடக்கிறது. அங்கிருந்துதான் 60 சதவீதம் பொருட்களும் 70 சதவீதம் சர்வீஸூம் ஏற்றுமதியாகின்றன. முன்னேறும் நாடுகளில் இருந்தும் 2007ல் பொருட்கள் மற்றும் சர்வீஸ் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது என்று அந்த அறிக்கை சொல்கிறது.


நன்றி : தினமலர்


மீண்டும் உயர்ந்தது பங்கு சந்தை : பேங்கிங் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்தது


பங்கு சந்தை, நேற்று இழந்திருந்த 557 புள்ளிகளை இன்று அனேகமாக மீட்டு விட்டது எனலாம். நேற்று ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை அதிரடியாக உயர்த்தி இருந்திருந்ததால் மதிப்பை இழந்திருந்த பேங்கிங் பங்குகள் இன்று மீண்டும் பெற்றன. இன்றைய வர்த்தகத்தில் பேங்கிங் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்திருந்தது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த நிமிடத்திலேயே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 283 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 71 புள்ளிகளும் உயர்ந்தது. பின்னர் அது மேலும் முன்னேறி, மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 495.67 புள்ளிகள் ( 3.59 சதவீதம் ) உயர்ந்து 14,287.21 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 123.70 புள்ளிகள் ( 2.95 சதவீதம் ) உயர்ந்து 4,313.55 புள்ளிகளில் முடிந்தது.நேற்று பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி இருந்ததால், குறைந்த விலையில் கிடைத்த ரியால்டி, பேங்க், மெட்டல், ஐ.டி., பவர், ஆயில் அண்ட் கேஸ்,கேப்பிடல் குட்ஸ் மற்றும் ஆட்டோ நிறுவன பங்குகளை வாங்க மக்கள் முண்டியடித்தனர். பி எஸ் சி.,யில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஒவ்வொன்றும் 1.5 சதவீதம் வளர்ந்திருந்தன. இன்றைய பங்கு சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி., 6.29 சதவீதம், எஸ்.பி.ஐ., 5.26 சதவீதம், டாடா கம்யூனிகேஷன்ஸ் 9.43 சதவீதம், டாடா ஸ்டீல் 7.82 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 4.91 சதவீதம் 4.91 சதவீதம், டாடா பவர் 7.03 சதவீதம் உயர்ந்திருந்தது. சர்வதேச சந்தையில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 121.83 டாலருக்கு வந்து விட்டதால் அமெரிக்க பங்கு சந்தைகளான டௌ ஜோன்ஸ் 2.39 சதவீதம் உயர்ந்திருந்தது. நாஸ்டாக் 2.45 சதவீதம் உயர்ந்திருந்தது. ஆசிய பங்கு சந்தையிலும் இன்று நல்ல வளர்ச்சி காணப்பட்டது.


நன்றி: தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது


கொஞ்சம் காலத்திற்கு முன்புவரை உயர்ந்துகொண்டே இருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது குறைய துவங்கி இருக்கிறது. இந்த வருடத்தில் மிக குறைந்த அளவாக, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 122 டாலருக்கும் கீழே சென்றுவிட்டது. யு எஸ் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 36 சென்ட் குறைந்து 121.83 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 21 சென்ட் குறைந்து 122.50 டாலராக இருக்கிறது. ஜூலை 11ம் தேதி பேரலுக்கு 147.27 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 17 சதவீதம் குறைந்திருக்கிறது. பொதுவாக கச்சா எண்ணெயின் விலை அதிகமாக இருப்பதாலும், பொருளாதாரத்தில் மந்த நிலை இருப்பதாலும் உலகில் அதிகம் பெட்ரோலை பயன்படுத்தும் அமெரிக்கா இப்போது தேவையை ( டிமாண்ட் ) குறைந்துக்கொண்டது. மேலும் அமெரிக்காவில் கிடைக்கும் கச்சா எண்ணெய்யின் அளவும் அதிகரித்துள்ளதாக வந்த தகவலாலும் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக சொல்கிறார்கள்.


நன்றி : தினமலர்


இந்திய, ஆசிய பங்கு சந்தைகளில் மீண்டும் வளர்ச்சி


நேற்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 557 புள்ளிகள் குறைந்து போன நிலையில், இன்று ஆரம்பம் முதலே உயர்ந்திருக்கிறது. காலை வர்த்தகம் ஆரம்பித்த நிமிடத்திலேயே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 283 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 71 புள்ளிகளும் உயர்ந்தது. பின்னர் அது மேலும் முன்னேறி, பகல் 11.21க்கு சென்செக்ஸ் 327.77 புள்ளிகளும் நிப்டி 76.70 புள்ளிகளும் உயர்ந்திருந்தது. ஆசிய பங்கு சந்தையிலும் இன்று நல்ல வளர்ச்சி காணப்பட்டது. டோக்கியோ பங்கு சந்தையில் நிக்கி 156 புள்ளிகள் உயர்ந்து 13,316 புள்ளிகளாக இருந்தது. ஹாங்காங்கின் ஹேங்செங் 413 புள்ளிகள் உயர்ந்து 22,671 புள்ளிகளாக இருந்தது. தைவானின் வெயிட்டட் இன்டக்ஸ் 79 புள்ளிகள் உயர்ந்து 7,093 புள்ளிகளாக இருந்தது. சிங்கப்பூரின் ஸ்டெரிட்ஸ் டைம்ஸ் இன்டக்ஸ் 33 புள்ளிகள் உயர்ந்து 2,919 புள்ளிகளாக இருந்தது. சியோலின் காம்போசைட் இன்டக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்து 1,581 புள்ளிகளாக இருந்தது. ஷாங்கை காம்போசைட் இன்டக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்து 2,860 புள்ளிகளாக இருந்தது.
நன்றி : தினமலர்


வட்டி விகிதம் அதிகரிப்பால் வீட்டுக் கடன் இனி பெரும் சுமையாகும்: பணவீக்கத்தை தடுக்க ரிசர்வ் வங்கி கடிவாளம்


அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு கடிவாளமிடும் வகையில், மத்திய ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கையை கடுமையாக்கி உள்ளது. வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.25 சதவீதத்தை உயர்த்தி உள்ளது. இதையடுத்து, வீட்டுக் கடன், தனி நபர் மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
மத்தியில் ஐ.மு., கூட்டணி அரசின் பதவிக் காலம் அடுத்தாண்டு முடிவடைகிறது. ஆனால், அதற்குள்ளாக பல்வேறு இக்கட்டான நிலைகளை அரசு சந்தித்துள்ளது.
முக்கியமாக பணவீக்கம், விலைவாசி உயர்வு தான் ஆட்சியையே ஆட்டம் காண செய்துவிட்டது. இதை காப்பாற்றும் விதமாக அணுசக்தி ஒப்பந்தத்தை கையில் எடுத்து கொண்டு அரசு நம்பிக்கைஓட்டெடுப்பில் தப்பித்தது. இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒய்.வி.ரெட்டி இந்த நிதியாண்டுக்கான முதல் காலாண்டு ஆய்வு அறிக்கையை நேற்று அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'உலகிலேயே அதிக வளர்ச்சி கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.
அதே சமயம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது இந்த நேரத்திற்கு அவசியம். பல்வேறு நிதி தொடர்பான நெருக்கடிகள் நிர்வாக அளவில் பூர்த்தி செய்வதில் சிரமமாக இருக்கிறது' என்றும் தெரிவித்தார்.
முக்கியமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், பணப் புழக்கத்தை சீராக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய சி.ஆர்.ஆர்., (ரொக்க கையிருப்பு விகிதம்) 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9 சதவீதமாக ஆக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் 30ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும். இதன் காரணமாக வங்கிகள் புழக்கத்தில் இருந்து ரூ.8000 கோடி உறிஞ்சப்படும். இம்மாதிரியான நடவடிக்கையால் இதுவரை ரூ.50 ஆயிரம் கோடி உறிஞ்சப்பட்டிருக்கிறது.
* வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த கால கடன்கள் மீதான வட்டி விகிதம் 'ரெப்போ ரேட்' 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9 சதவீதமாக ஆக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வங்கிகளுக்கான 'ரிசர்வ் ரெப்போ ரேட்' தொடர்ந்து 6 சதவீதமாக இருக்கும்.
* இந்த நடவடிக்கைகளால் தற்போது 11.89 சதவீதமாக உள்ள பணவீக்கம், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 7 சதவீதமாக குறையும்.
* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கு 8 சதவீதமாக இருக்கும். இது ஏற்கனவே மதிப்பிட்டதைவிட அரை சதவீதம் குறைவு.
* சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம், அதிக மானியம், கடன் தள்ளுபடி, அதிகரித்து வரும் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் ஏற்படும் நிதிச்சுமை போன்றவற்றால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சுமை: வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதன் மூலம், பல்வேறு வங்கிகளும், வீட்டுக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கு வட்டி விகிதத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
வீட்டுக்கடன், கார் கடன் ஆகியவை நிச்சயம் தற்போது உள்ளதை விட 1 சதவீதம் அதிகரிக்கும்.
வங்கிகள் கருத்து: ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் வங்கிகளின் லாபம் பாதிக்கப்படும் என வங்கிகளின் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
யுனைடெட் பாங்க் தலைவர் பி.கே.குப்தா கூறுகையில், 'ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைக்கும் பணத்திற்கு எவ்வித வட்டியும் இல்லை. அப்படியிருக்கும் போது, ரொக்க கையிருப்பு விகிதத்தை உயர்த்துவதன் மூலம் வங்கிகளின் லாபம் தான் குறையும்' என்றார்.
ஏ.பி.என். ஆம்ரோ வங்கி தலைவர் மீரா சன்யால் கூறுகையில், 'பணவீக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது' என்றார். 'வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதமாவது அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே சமயம் வாடிக்கையாளர்களின் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்காது' என்று பெரும்பாலான வங்கிகளின் தலைவர்கள் கூறினர்.
நிதியமைச்சர் கருத்து: 'ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவுகளின் மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்' என, மத்திய நிதியமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பங்குச் சந்தையில் பாதிப்பு: ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை அறிவிப்பை யொட்டி நேற்று பங்குச்சந்தை 200 புள்ளிகள் சரிவுடன் தான் ஆரம்பித்தது. முடிவில் 500 புள்ளிகளுக்கு மேல் இழந்தது.


நன்றி :தினமலர்


பி.ஓ.பி., ஆந்திரா வங்கியுடன் இணைந்து மலேஷியாவில் பேங்க் துவங்குகிறது ஐ.ஓ.பி




இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ( ஐ.ஓ.பி., ), பேங்க் ஆப் பரோடா மற்றும் ஆந்திரா வங்கியுடன் இணைந்து மலேஷியாவில் ஒரு வங்கியை துவக்குகிறது. ஐ.ஓ.பி.,யின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் எஸ்.ஏ.பாத் இதனை தெரிவித்தார். இந்த புதிய வங்கியை மலேஷியாவில் அமைப்பதற்கு 100 மில்லியன் டாலர்கள் ( சுமார் 400 கோடி ரூபாய் ) முதலீடு தெவைப்படுகிறது. இதில் 30 சதவீதத்தை ஐ.ஓ.பி.,கொடுக்கும். மீதி தொகையை மற்ற இரு வங்கிகளும் பகிர்ந்து கொள்ளும் என்றார் அவர். இந்த புது வங்கி, இந்த நிதி ஆண்டின் கடைசியில் அங்கு துவங்கப்படும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்றார் அவர். மேலும் சிட்னியிலும் ( ஆஸ்திரேலியா ) ஹூஸ்டனிலும் ( அமெரிக்கா ) ஐ.ஓ.பி., அதன் கிளையை துவங்க உள்ளது. துபாயில் ஐ.ஓ.பி.,யின் பிரதிநிதி அலுவலகம் ஒன்றும் துவங்கப்பட இருக்கிறது. ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஐ.ஓ.பி., ரூ.1,48,420 கோடிக்கு வர்த்தகம் செய்திருக்கிறது. இது கடந்த வருடம் முதல் காலாண்டில் செய்ய வர்த்தகத்தை விட 24.9 சதவீதம் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.








நன்றி : தினமலர்