கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் சென்னை இசை விழா முடிவடையும் நிலையை எட்டிவிட்டது. முக்கியமான பழம்பெரும் சபாக்களின் நிகழ்வுகள் முடிந்துவிட்டன. சென்னை சங்கமத்துடன் இந்த ஆண்டுக்கான இசைவிழா நிறைவுபெறும்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற இசை, நாட்டியம் தொடர்பான கலை விழாக்கள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் மாதம் எடின்பரோ சர்வதேசக் கலைவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழா. 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இசை, நாட்டிய விழாவில் பங்குபெறவும், கலந்துகொள்ளவும் உலகெங்கிலும் இருந்து கலைஞர்களும் ரசிகர்களும் குவிகிறார்கள். ஆனால், இந்த இசை விழா நடப்பது ஆறே ஆறு அரங்கங்களில் மட்டுமே.
லண்டன் நாட்டிய விழா, நியூயார்க் நாட்டிய விழா, ஐரோப்பிய நாட்டிய விழா என்று எத்தனை எத்தனையோ இசை, நாட்டிய விழாக்கள். ஆனால், அவை அனைத்துமே வியாபாரக் கண்ணோட்டத்துடன், பல தொழில் நிறுவனங்களும், அந்தந்த நகர அமைப்புகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்திக் குளிர்காய முற்படுகின்றனவே தவிர, கலைக்காக நடத்தப்படும் விழாக்களா என்றால் கிடையாது.
ஆனால் நமது சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் இசைவிழா அப்படிப்பட்டதல்ல. இது வியாபாரத்துக்காக நடத்தப்படுவது அல்ல. சுற்றுலாப் பயணிகளைக் கவர வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்படுவதும் அல்ல. கலைக்காகக் கலாரசிகர்களால் நடத்தப்படும் நமது சென்னை இசை விழாவின் பிரமாண்டம் உலகில் வேறு எந்தப் பகுதியில் நடைபெறும் விழாக்களுக்கும் இல்லை என்பதால்தான், சென்னை மாநகரம் இந்தியாவின் கலாசார தலைநகரம் என்று போற்றப்படுகிறது.
73 சபாக்கள் ஏறத்தாழ 2,850 இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களின் திறமையை ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த அதிசயத்தைப் பார்த்து வடநாட்டவரும், வெளிநாட்டவரும் வாய் பிளந்து ஆச்சரியப்படுகிறார்கள். ஆண்டுதோறும் சில நூறு புதிய இளைய தலைமுறைக் கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள். சொல்லப்போனால் இந்த இளைய தலைமுறைக் கலைஞர்களில் பலர் பணத்துக்காக இசையைத் தேர்ந்தெடுக்காமல், இசையை இசைக்காக நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
கர்நாடக இசை என்பதை நாம் தென்னிந்திய இசை அல்லது திராவிட இசை என்று சொல்வதுதான் சரி. எப்படித் தமிழர், கேரளத்தவர், கன்னடர், ஆந்திரர் ஆகிய அனைவரையும் வடவர்கள் "மதராசிகள்' என்று குறிப்பிடுகிறார்களோ அதைப்போல, நமது தஞ்சைத் தரணியில் தோன்றி தென்னகமெங்கும் பரவிய தென்னக இசையைக் கர்நாடக இசை என்று குறிப்பிடுகிறார்கள், ஆற்காடு நவாபுகள் அப்போது கர்நாடிக் நவாப் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கிருஷ்ணா நதிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையிலான பகுதியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்தனர். மைசூர் உள்பட உள்ள பகுதியை ஆண்ட கர்நாடிக் நவாபுகளின் நாட்டு இசையைக் கர்நாடக இசை என்று இந்துஸ்தானிய இசை மரபினர் அழைக்க முற்பட்டனர். இதுதான் வரலாற்று உண்மை.
சப்த ஸ்வரங்களின் அடிப்படையில் அமைந்த இசை எப்படித் தமிழிசையாகும் என்று கேட்பவர்கள் மறந்துவிடும் ஒன்று, இந்த சப்த ஸ்வரங்கள் நமது பண்களின் பரிணாமம்தான் என்பதை. இசையும், முழவும், தாளமும், கூத்தும், அபிநயமும் ஆய இவை ஐந்தும் பஞ்ச மரபு என்பார்கள். "பஞ்ச மரபு' என்கிற சங்க கால நூலில் இசை மரபின் வங்கிய மரபு என்கிற உட்பிரிவில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் சுத்த எழுத்தால், ""வரிபரந்த கண்மடவாய் வைக்கத் தெரிவரிய ஏழிசையும் தோன்றும். இதனுள்ளே பண் பிறக்கும். சூழ் முதலாம் சுத்தத் துளை'' என்று வங்கியம் (புல்லாங்குழல்) வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
நமக்கே உரித்தான இந்த இசையை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் முதலில் அந்த இசை பாமரனுக்கும் புரியும் இசையாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகத் தமிழ் சாகித்யங்கள் (பாடல்கள்) கையாளப்பட வேண்டும். பெயருக்குத் துக்கடாவாக ஒரு திருப்புகழோ, திருப்பாவையோ பாடுவது என்பது இசையை மட்டுமல்ல, தமிழையும் கேவலப்படுத்துவதாக இருக்கிறது.
இளைய தலைமுறைக் கலைஞர்கள் பலர் தமிழ் சாகித்யங்களை மட்டுமல்ல, தெலுங்கு சாகித்யங்களையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பாடும் அவலநிலை ஏற்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழில் பாடினால் மட்டும் போதாது. தமிழ் படித்துத் தமிழைச் சரியாக உச்சரித்தும் பாட வேண்டும்.
கலைஞர்களை ஒப்பந்தம் செய்யும்போது, நீங்கள் தமிழில் பாடுவதாக இருந்தால்தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்கள் நிபந்தனை விதிப்பதில்லை என்கிற நியாயமான கேள்வியை எழுப்பி இருக்கிறது "விடுதலை' நாளிதழ். நாமும் அந்தக் கருத்தையே பிரதிபலிக்கிறோம்.
இசை பாமரர்களைப் போய்ச் சேர வேண்டும். இந்த நோக்கம் சென்னை சங்கமத்தால் ஓரளவுக்கு செயல்வடிவம் கொள்கிறது என்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டும். பூங்காக்களில் பாடும் பல கலைஞர்கள் பாமரர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழில் பாடுகிறார்கள். இவர்கள் சபாக்களில் பாடும்போது தமிழில் பாடுவதில்லையே ஏன்? அங்கே கூடும் ரசிகர்கள் தமிழ் பாடக்கூடாது என்று சொல்வார்களா என்ன? இல்லை அவர்கள்,வெளிநாட்டவர்களும் வெளிமாநிலத்தாருமா, தமிழர்கள்தானே?
பணக்கார நிலச்சுவான்தார்கள் மற்றும் ஜமீன்தார்களின் ஏகபோக உரிமையாக இருந்த இசை இன்று அனைவருக்கும் பொதுவாகி இருக்கிறது. இனி அதைப் பாமரனும் ரசிக்கும் நிலை ஏற்பட வேண்டும். அதற்குப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை இசை கட்டாயமாகக் கற்றுத்தரப்பட வேண்டும். நமது சபாக்களும், இசைவாணர்களும் தமிழிசைக்கு முன்னுரிமை தரவேண்டும். தமிழகத்தில் தமிழில் பாடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் கேவலம் இனியும் தொடரக்கூடாது!
நன்றி : தினமணி
Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts
Monday, January 11, 2010
Subscribe to:
Posts (Atom)
