Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Tuesday, November 24, 2009

என்றும் பதினாறு-மதுரப் பதினேழு!

தனது 16-வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் டெஸ்ட் வரிசையில் டான் பிராட்மனுக்கு இரண்டாவது. ஒரு தினப் போட்டியில் விவியன் ரிச்சர்டுக்கு இரண்டாவது என்று கிரிக்கெட் பஞ்சாங்கமான "விஸ்டன்' ஆரூடம் கணித்தது. ஆனால் சாதனைகள் என்று வரும்போது அவர்தான் இன்று "நம்பர்-ஒன்' இதைச் சொல்ல எந்த விஸ்டனும் தேவை இல்லை.

இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால் சச்சின் அதன் கடவுள் என்று பாரி ரிச்சர்டு சொன்னார். இப்போது 439 ரன்கள் எடுத்து உலகச் சாதனை படைத்துள்ள பள்ளி மாணவன் சர்ஃப்ராஸ் கானும் அதைத்தான் சொல்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 12,877 ரன்கள். ஒருதினப் போட்டியில் 17,178 ரன்கள். முதல்தர ஆட்டத்தில் 21,662. 20-20 போட்டியில் ஒரே ஓர் ஆட்டத்தில்தான் ஆடி இருக்கிறார். அதில் வெறும் பத்து ரன்கள்.

டெஸ்டில் 43 சதங்கள் 53 அரைச் சதங்கள். ஒருதினப் போட்டியில் 45 சதங்கள் 91 அரைச்சதங்கள். அதிகபட்ச "ஸ்கோர்' டெஸ்டில் 248; ஒருதினப் போட்டியில் 186. அதிகமான ஆட்ட - தொடர் நாயகன் விருதுகள்.

டெஸ்டில் அதிக சதங்கள் என்று வந்தபோது கவாஸ்கர், டெஸ்டில் அதிக ரன்கள் என்றபோது பிரையன் லாரா, அதிக அரைச் சதங்கள் என்று வந்தபோது ஆலன் பார்டர் ஆகியோரது சாதனைகள் தகர்ந்தன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் பத்துச் சதங்கள் என்பது எழுபது ஆண்டுகள் நிலை நின்றிருந்த ஜேக் ஜொப்சையே முறியடித்த சாதனை.

பொது வாழ்க்கையில் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், விளையாட்டில் உயர் வகை விருதான அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்ன இவர் கையடக்கியவை. இனி "பாரத ரத்னா'தான் பாக்கி. அது விரைவில் வீடு வந்துசேரும் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. "விஸ்டன்' ஓராண்டு இவரை அந்த ஆண்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று அறிவித்தது. பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் ஒரு படி மேலே போய், சம்பிரதாயங்களைப் பற்றிக் கவலைப்படாது பிரிட்டனின் உயரிய விருதான ""சர்'' பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அமெரிக்க "டைம்' சஞ்சிகை, ""அவர் தேர்ந்தெடுத்த துறையில் இன்று உயிர் வாழும் மிக உன்னதமான பிறவி'' என்று வர்ணித்தது.

"லிட்டில் சாம்பியன்' லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் ப்ளாஸ்டர், டெண்டியா என்பவை இவரது நண்பர்களும் அபிமானிகளும் இவருக்கு வைத்துள்ள செல்லப் பெயர்கள்.

மராத்திய எழுத்தாளர் ரமேஷ் டெண்டுல்கர் தன் செல்லப் பிள்ளைக்கு சூட்டிய பெயர் தன் அபிமானத்துக்குரிய இசைக் கலைஞரான சச்சின் தேவ் பர்மனுடைய பெயர்.

வேகப் பந்து வீச்சில் பயிற்சி பெற டென்னிஸ் லில்லியை இவர் அணுக, ""தம்பி இதற்கு நீ சரிவர மாட்டாய் வேறு வேலை இருந்தால் பார்'' என்று திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் இவருடைய துரோணாச்சாரியார் ராம்காந்த் அச்ரேகர். இவர் உள்ளில் உறையும் அர்ஜுனனை அடையாளம் கண்டு கொண்டார்.

1988-ல் இவர் தனது பள்ளிக்காக ஆடிய எல்லாப் போட்டிகளிலும் சதம் பெற்றதோடு, வினோத் காம்பிளியுடன் இணைந்து 664 ரன்கள் என்ற சாதனையைப் படைத்தார். அதில் சச்சினின் பங்கு மட்டும் 326 ரன்கள். 2006-ம் ஆண்டு வரை, ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முறியடிக்கும் வரை அது உலகச் சாதனையாக இருந்தது.

இவரது 14-வது வயதில் கவாஸ்கர் தன்னுடைய மெல்லிய கால் காப்புகளை இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அது நடந்து இருபது ஆண்டுகள் கழித்து அதே கவாஸ்கருடைய 34 சதங்கள் என்ற மகத்தான சாதனையை சச்சின் முறியடித்தார்.

15-வது வயதில் குஜராத்துக்கு எதிராக மும்பைக்காக ஆடிய கன்னி ரஞ்சி ஆட்டத்தில் சதமடித்தார். அதன் மூலம் முதல்தர ஆட்டத்தில் இத்தகைய சாதனை புரிந்த மிக இளைய ஆட்டக்காரர் என்ற சிறப்பைப் பெற்றார். ரஞ்சி, தியோதார், துலீப், ஈரானி ஆகிய அத்தனை விருதுகள் போட்டியிலும் சதம் பெற்றவர் சச்சின். இந்த விஷயத்தில் வேறு யாரும் இவர் அருகில் கூட வர முடியாது.

1998-ல் ஆஸி. அணிக்கு எதிராக மும்பை ஆடியபோது பிரேபோன் மைதானத்தில் இவர் பெற்ற இரட்டைச் சதம் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது. காரணம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அது எளிதான காரியமல்ல.

இங்கிலாந்தில் யோர்க்ஷயர் அணி வெளிநாட்டவர் எவரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒரே வெளிநாட்டவர் சச்சின்தான். அந்த சீசனில் அவர் 16 போட்டிகளில் 1070 ரன்கள் எடுத்தார். சராசரி 46.52.

1989-ல் தனது 15-வது வயதில் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் பிரவேசம். இந்த டெஸ்டில்தான் வேகப் பந்து வீச்சாளர் வக்கார் யூனுசும் தன் டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு போட்டியில் அப்துல் காதருக்கு எதிராக ஓர் ஓவரில் சச்சின் 28 ரன்கள் எடுத்ததை மறக்க முடியாது என்கிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

1990-ல் இங்கிலாந்தில் தான் இவரது கன்னிச் சதம் வந்தது. 91-92-ல் சச்சினின் ஆட்டத்தைப் பார்த்த மெர்வ் ஹியூஸ் ஆலன் பார்டரிடம் ""பார், இந்தப் பொடியன் உன் சாதனையை முறியடிக்கப் போகிறான்'' என்றார். அது நடந்தது.

கிரிக்கெட்டில் அவர் சாதனை படைக்க முடியாமல் போனது ஒரே ஒரு விஷயத்தில்தான். இரண்டு முறை கேப்டனாக இருந்தும் அந்தப் பதவியில் அவர் சோபிக்கவில்லை.

வாழ்நாளில் ஒருமுறைதான் சச்சின் போன்ற ஓர் ஆட்டக்காரரைச் சந்திக்க முடியும் என்றார் வாசிம் அக்ரம், 99.9 சதவீத பரிபூரண ஆட்டக்காரர் சச்சின் என்றார் விவியன் ரிச்சர்ட். சச்சினை ஒரு ஜீனியஸ் என்றார் சர் ரிச்சர்ட் ஹாட்லீ. இப்படி பல்வேறு சொற்றொடர்களால் ஆலன் பார்டர், பிரையன் லாரா ஆகியோர் புகழ்ந்திருக்கிறார்கள்.

சச்சினை மகிமைப்படுத்தும் இன்னொரு விஷயம் சச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடியவர்கள் என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவரும் இல்லை. சச்சினுக்குப் பிறகு அதிக ரன்கள் பெற்றுள்ள சனத் ஜயசூர்யா 4,000 ரன்கள் பின்னால் நிற்கிறார். அவரது ஆட்ட நாள்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டன. சதங்களில் அவரைத் தொடக்கூடும் என்று நம்பப்பட்ட ரிக்கி பாண்டிங்கும் அப்படியே. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைப் பெற்ற சாதனையிலும் அவரை மிஞ்ச யாரும் இருப்பதுபோல் தோன்றவில்லை.

விளம்பர வருவாயில் மாத்திரம் ஒருவர் அவரை முந்தி இருக்கிறார். அவர் தோனி. மற்றபடி வேறு எந்தச் சாதனையிலும் சச்சினை மிஞ்ச எவரும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

அவருடைய சமூகப் பிரக்ஞைக்கும், மனித நேயத்துக்கும் ஒரு சான்று. அவரது மாமியார் நடத்தி வரும் ""அப்னாலயா'' மூலம் அவர் 200 குழந்தைகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

சென்னையில் ஓர் ஆட்டத்தில் அவர் சதம் பெற்றார். ஆனால் இந்தியா தோற்றுப் போய்விட்டது. நான் வர்ணனை நடக்கும் மாடியில் நிற்கிறேன். சச்சின் தலை குனிந்த வண்ணம் பஸ் ஏறப் போகிறார். அவரது சகா அவரை ஆதரவாக அணைத்தவண்ணம் வழிநடத்தி வருகிறார். உற்றுப் பார்த்தபோது சச்சினின் கண்களின் கண்ணீர்.

சென்ற ஆட்டத்தில்கூட 175 ரன்கள். 17,000 ரன்கள் என்ற மந்திர இலக்கைக் கடந்த அற்புதச் சாதனை.

ஆட்ட நாயகன் விருது, என்றாலும் சச்சினின் கண்களில் நீர்கோர்ப்பு. தொண்டை கம்மி இருந்தது. தனக்கு இத்தனை புகழ் வந்தென்ன; நாடு தோற்றுவிட்டதே என்கிற சோகம். சோகத்தால் அவர் தலை குனிந்தது. ஆனால் அவரது அப்பழுக்கற்ற தேச பக்தியை எண்ணி - அவரது சாதனைகளை நினைந்து ஒவ்வோர் இந்தியரும் பெருமையுடன் தலைநிமிர்ந்தார். நம் தேசம் நம் சச்சின்.

(கட்டுரையாளர்: அப்துல் ஜப்பார், வானொலி கிரிக்கெட் வர்ணனையாளர்).
நன்றி : தினமணி