Friday, July 31, 2009

இன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸூக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை ( சி ஐ எஸ் எஃப் ) பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஒரு உதவி கமாண்டர் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 12 சப் இன்ஸ்பெக்டர்கள், 18 தலைமை காவலர்கள் மற்றும் 69 காவலர்கள் அடங்கிய 101 பேரை கொண்ட குழு இன்று முதல் இன்போசிஸ் நிறுவனத்தை 24 மணி நேரமும் பாதுகாக்கும். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்திய கார்பரேட் உலகில் இதுவரை இல்லாத வகையில், ஒரு தனியார் நிறுவனத்திற்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு போடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. சி ஐ எஸ் எஃப். பின் பாதுகாப்பிற்காக, இன்போசிஸ் நிறுவனம் வருடத்திற்கு ரூ.2.56 கோடியை கட்டணமாக கொடுக்க வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த சட்டப்படி, பணம் கொடுக்க தயாராக இருந்தால் தனியார் நிறுவனங்களும் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பிற்காக வைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. அதன்படி, தனியார் நிறுவனமான இன்போசிஸ்தான் முதன் முதலில் இந்த பாதுகாப்பை பெறுகிறது. ஆனால் அங்கிருக்கும் பாதுகாப்பு படையினர், அங்கு ' வாட்ச் அண்ட் வார்டு ' வேலையை பார்க்க மாட்டார்கள் என்றும், அதை ஏற்கனவே அங்கிருக்கும் தனியார் பாதுகாப்பு படையினரே பார்த்துக் கொள்வார்கள் என்றும், தீவிரவாத தாக்குதல் மற்றும் சதி வேலை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பது தான் எங்கள் வேலை என்று சி ஐ எஸ் எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரிலையன்ஸின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், விப்ரோ, தாஜ் ஹோட்டல் ( மும்பை ), டிரைடன்ட் ஹோட்டல்ஸ் ( எட்டு இடங்களில் இருப்பவை ), ஹோட்டல் மேரியோட் ( மும்பை ), டில்லி பப்ளிக் ஸ்கூல் ( டில்லியில் மூன்று இடங்களில் இருப்பது ), ஜேபி குரூப் ஆப் ஹோட்டல்ஸ் ( எட்டு ஹோட்டல்கள் ), டோரன்ட் பவர்ஸ் ( அகமதாபாத் ) ஆகியவையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பிற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.

நன்றி : தினமலர்


No comments: