Wednesday, November 4, 2009

கைக்கு எட்டாத தூரத்தில் தங்கம் விலை

சர்வதேச அளவில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, எப்போதும் இல்லாத வகையில் தங்கத்தின் விலை ஒரு சவரன், 12 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விட்டது. இன்று சென்னையில் ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1,559 ரூபாயாக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 16 ஆயிரத்து 765 ரூபாயாகவும், பார் வெள்ளியின் விலை 28 ஆயிரத்து 345 ரூபாயாகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) ரூ. 30.30ஆக உள்ளது.
கடந்த அக்., 1ம் தேதி ஒரு கிராம் 1,457 ரூபாயாகவும், சவரன் 11 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்றது. அடுத்தடுத்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. கடந்த 27ம் தேதி ஒரு கிராம் 1,485 ரூபாயாகவும், சவரன் 11 ஆயிரத்து 880க்கும் விற்பனையானது.நாள்தோறும் கிராமுக்கு மூன்று, நான்கு ரூபாய் என உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை ஒரு சவரன் 12 ஆயிரத்தையும் தாண்டியது. ஒரு கிராம் 1,513 ரூபாயாகவும், சவரன் 12 ஆயிரத்து 104 ரூபாயாகவும் விற்றது.நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 17 ரூபாய், சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்தது. நேற்று காலை ஒரு சவரன் 12 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது. மாலையில் சற்று குறைந்து ஒரு கிராம் 1,527 ரூபாயாகவும், சவரன் 12 ஆயிரத்து 216 ரூபாய்க்கும் விற் றது. சென்னை தவிர மற்ற மாவட் டங்களில், ஒரு கிராம் விலை ஒன்று முதல் மூன்று ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
விலை உயர்வுக்கு காரணம் என்ன?தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன.மேலும், தங்கத்தின் விலை சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் 1,056 டாலராக உயர்ந்ததும் சர்வதே அளவில் தங்க மார்க்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவில் 12 ஆயிரம் ரூபாயையும் கடந்து விற்பனையாகி வருகிறது.தமிழகத்தில் தங்கத்தின் விலை ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மாதிரியாக இருந்து வந்தது. தற்போது தமிழகம் முழுதும் ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்துள்ளனர். இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. இதனால், சாமானிய மக்கள் தங்கத்தின் பக்கம் தலைகாட்டவே தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை நகைக் கடை உரிமையாளர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ''ஆன்-லைன் வர்த்தகமே விலை உயர் வுக்கு காரணம். பலமுறை அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அமெரிக்கா, லண்டன் சந்தையில் விலை நிர்ணயிப்பதால், நிமிடத்திற்கு நிமிடம் விலை மாறுபடுவதால் உறுதியான விலையில் விற்கமுடியவில்லை. ஆன்-லைன் வர்த்தகத்திற்கு தடைவிதித்தால் மட்டுமே விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 29.39 ரூபாய்க்கும், கிலோ 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கிறது.
நன்றி : தினமலர்

No comments: