Tuesday, April 21, 2009

பொறுப்புள்ள செயலா...

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 41-வது பிரிவுக்குத் திருத்தம் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்ற பிறகு, அதை அரசு கெஜட்டில் வெளியிடாமல் நிறுத்திவைப்பது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
""மிகவும் முற்போக்கான நடவடிக்கை, மனித உரிமைகளைக் காப்பதற்கு இதைவிட வேறு வழியே இல்லை'' என்று வெகுவாகப் பாராட்டப்பட்ட ஒரு சட்டத் திருத்தம், வழக்கறிஞர்கள் சங்கத்தின் பலமான ஆட்சேபம் காரணமாகக் கைவிடப்படும் அல்லது திருத்தப்படும் நிலையை எட்டியிருக்கிறது. இந்த நடவடிக்கை அடிப்படையாகச் சில கேள்விகளை எழுப்புகிறது.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் விரிவாகவும் ஆழமாகவும் விருப்பு வெறுப்பு இல்லாமலும் விவாதித்துத் தீர்வு காண்பார்கள் என்றுதான் நாடு நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த 2008-வது ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவில்லை.
எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் சட்டத் திருத்தமாக இருந்தாலும் அதன் மீது 3 கட்டங்களில் பரிசீலனை நடக்கிறது. முதலில் அந்தச் சட்டம் அல்லது சட்டத் திருத்தம் வரைவு நிலையில் தயாரித்து முடிக்கப்பட்டு அவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் படித்துப் பார்க்கவும், விவாதத்துக்குத் தயார் செய்து கொள்ளவும் இப்படிச் செய்யப்படுகிறது.
அடுத்தபடியாக அதே சட்ட வரைவு மசோதா அல்லது சட்டத் திருத்த மசோதா அந்தந்தத் துறைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவில் விவாதிக்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக இந்த மசோதா மீது பொது விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்குப்பின் நிறைவேற்றுகிறார்கள்.
சர்ச்சைக்குரிய இந்தக் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த மசோதாவில், சில வகைக் குற்றங்களுக்கு போலீஸ் அதிகாரிக்கு இருந்த ""கைது அதிகாரம்'' நீக்கப்பட்டிருக்கிறது. அதாவது 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாகத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச் செயல்களாக இருந்தால், ""விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும்'' என்று எழுதி வாங்கினால் போதும், கைது செய்ய வேண்டாம் என்று திருத்தம் செய்யப்பட்டது. இந்தத் திருத்தமே 41 (ஏ) என்று அழைக்கப்படுகிறது.
இந்தத் திருத்தத்தின் மூலம் போலீஸ் அதிகாரியின் வரம்பற்ற கைது அதிகாரம் மட்டுப்படுத்தப்படுவதாகவும், மனித உரிமைகள் மீறப்படும் நடவடிக்கைகள் இனி குறைந்துவிடும் என்றும், மனித உரிமை ஆர்வலர்களும், சட்டக் கமிஷன்களும் நெடுநாள்களாக வலியுறுத்தி வந்த விஷயத்துக்கு இத் திருத்தம் வடிவம் கொடுத்துவிட்டதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எல்லா சிறைச்சாலைகளும் நிரம்பி வழிவதால், சாதாரணக் குற்றங்கள் செய்கிறவர்களையும் அடைத்தால் அவர்களைப் பராமரிப்பது கடினமாக இருக்கிறது என்பதால் இப்படித் திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் கூட அப்போது கூறப்பட்டது. இப்படிக் கைது அதிகாரத்தை மட்டுப்படுத்தினால் சிறிய குற்றங்கள் பெருகிவிடும்; வரதட்சிணைக் கொடுமை போன்ற வழக்குகளில் பெண்கள் தரும் புகார்கள் மீது மாமியார், நாத்தனார், மாமனார், கணவர் போன்றோரைக் கைது செய்யத் தடை ஏற்பட்டுவிடும். அதன் பிறகு இக் கொடுமைகளைச் செய்வோருக்கு அதுவே ஊக்குவிப்பாகிவிடும் என்று பல மகளிர் அமைப்புகள் சுட்டிக்காட்டின.
பெண் சீண்டல், பெண்களைக் கேலி செய்தல், பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் அல்லது அதற்குக் குறைவான தண்டனைகளே விதிக்கப்படுவதால் அத்தகைய குற்றங்கள் பெருகிவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
வழக்கறிஞர் சங்கங்கள்தான் இந்தத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்தன. ""ஜாமீன் வாங்கித்தருவதன் மூலம்தான் வழக்கறிஞர்களுக்கு நிறையப் பணம் கிடைக்கிறது; அந்த வழக்குகளில் பெரும்பாலானவை இனி அடிபட்டுப் போய்விடும் என்பதால் வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்'' என்று கூறப்பட்டது. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம்; ஆனால் வழக்கறிஞர்களுடைய ஆட்சேபத்தில் வலுவும், நியாயமும் இருக்கிறது.
""குற்றவியல் சட்டத்தின் 41-வது பிரிவு "ஏ'-வுக்கு இப்படி எதிர்ப்பு என்றதும் கைவிடுகிறீர்களே, இதை ஏன் முதலில் ஏற்றுக் கொண்டீர்கள்?'' என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கேட்டதற்கு, ""மலிமத் கமிட்டி பரிந்துரைத்தது, சட்டக் கமிஷனும் இதை அமல் செய்யும்படி கூறியது'' என்று மட்டும் பதில் அளித்திருக்கிறார். இது ஏற்கும்படியான விளக்கமாக இல்லை.
""வரும்பொருள் உரைத்தல் மந்திரிக்கழகு'' என்பது முதுமொழி. இப்படியொரு சட்டம் இயற்றப்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை ஊகித்தறிய முடியாதவர்களா சிதம்பரங்களும், கபில் சிபல்களும், ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ்களும்? நம்பவே முடியவில்லை.
நன்றி : தினமணி

No comments: