Sunday, February 15, 2009

சேமிப்பு கணக்குக்கு இனி 'பான்' தேவையில்லை

வங்கியில் சேமிப்பு கணக்குக்கு 'பான்' கட்டாயம் இல்லை; ஒரு லட்சம் ரூபாய் மேற்பட்ட பிரிமியம் கட்டும் இன்சூரன்ஸ் திட்டங்களில் மட்டும் தான் இது தேவைப்படும். சட்டவிரோத நிதி நடமாட்டங்களை தடுக்க, கருப்புப்பணத்தை ஒழிக்க 'பான்' கார்டு முறை வெகுவாக கைகொடுத்து வந்தது. கடந்தாண்டு பட்ஜெட் உரையில் கூட, நிதி அமைச்சர் சிதம்பரம் பேசும் போது,'எல்லா வித வங்கி நிதி பரிமாற்றங்களிலும் 'பான்' கார்டு எண் குறிப்பிட வேண்டியது சட்டப்படி கடைபிடிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். சரியாக ஓராண்டு கழிந்த நிலையில், இப்போது தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள் ளது. பட்ஜெட் மீதான நடவடிக்கை அறிக் கை சமீபத்தில் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'பான்' கார்டு தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லா விதமான வங்கி நிதி பரிமாற்றங்களிலும் 'பான்' எண் குறிப்பிடப் பட வேண்டும் என்ற கட்டாயம் நீக்கப்படுகிறது. சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் கட்டும் போது 'பான் 'எண் குறிப்பிட வேண்டும் என்று அவசியம் இனி இல்லை. ஆனால், நடப்பு கணக்கு ஆரம்பிக்கும் போது மட்டும் இந்த 'பான்' எண் குறிப்பிட வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசி விஷயங்களில் மட்டும் , ஒரு லட்சத்துக்கு மேல் பிரிமியம் கட்டும் பட்சத்தில், 'பான்' எண் குறிப்பிடப்பட வேண்டும். இதனால், வங்கியில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிமாற்றம் செய்யும் போது 'பான்' எண் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறை நீங்குகிறது. தபால் சேமிப்பு திட்டங்களில் சேர்ந்தாலும், 'பான்' கட்டாயமாக குறிக்கப்பட வேண்டும் என்பது உட்பட 'பான்' கட்டுப்பாடு வரப்போகிறது என்று பேசப்பட்ட நிலையில், பெரும் சலுகையை இப்போது அரசு அமல்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ஓட்டுக்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எண்ணினாலும், இதனால், பலருக்கும் பலன் கிடைத்துள்ளது என்பதே உண்மை. குறிப்பிட்ட தொகைக்கு மேல் கையாளும் போது, வங்கியில் 10 இலக்க 'பான்' குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை.
நன்றி : தினமலர்


No comments: