Thursday, September 4, 2008

பங்குச் சந்தையை நிமிர வைத்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

சாதாரணமாக தரையில் எண்ணெய் விழுந்துவிட்டால் அது நம்மை வழுக்கி விடும். ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டால், அது பங்குச் சந்தையில் எல்லாரையும் தூக்கி விடும். அது தான் நேற்று முன்தினம் நடந்தது. எண்ணெய் வரலாறு காணாத அளவு வழுக்கி விழுந்தது(விலையில்). அதாவது, சமீபத்தில் ஒரு பேரல் 147 டாலர் அளவு இருந்த கச்சா எண்ணெய், நேற்று முன்தினம் 106 டாலர் அளவிற்கு வந்தது. இது, சந்தையை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. முதலீட்டாளர்களுக்கு இந்த வாரம் லாப வாரமாகவே இருந்தது. நேற்று முன்தினம் கிடைத்த லாபம், சமீப காலத்தில் கிடைத்த லாபங்களில் பெரிதான ஒன்று. அது, திங்களன்று ஏற்பட்ட சிறிய சரிவையும் ஈடுகட்டி விட்டது. நேற்று சந்தைக்கு விடுமுறையாதலால் முதலீட்டாளர்களும் சந்தோஷத்தில் விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடி இருப்பார்கள். உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததால், திங்களன்று சரிவிலேயே துவங்கிய சந்தை முடிவாக 66 புள்ளிகள் நஷ்டத்தில் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சந்தை 200க்கும் அதிகமான புள்ளிகளை இழந்திருந்தது. வங்கிப் பங்குகள் தான் சந்தையைக் காப்பாற்றின. நேற்று முன்தினம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி, சந்தையை நிமிர வைத்தது. அதுவும், 500 புள்ளிகளுக்கு மேலே. வங்கிப் பங்குகள், கட்டுமானத்துறை பங்குகள், ஏர்லைன்ஸ் கம்பெனிகளின் பங்குகள் ஆகியவை மேலே சென்றன. விமான எரிபொருள் விலைகளும் மிகவும் குறைந்துள்ள நிலையிலும் விமானக் கட்டணங்கள் குறையாதது ஒரு ஆச்சரியமான விஷயம் தான். மக்களும் குறைந்த கட்டண விமானப் பயணங்களுக்கு அடிமையாகி விட்டதால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். நேற்று முன்தினம் முடிவாக மும்பை பங்குச் சந்தை 551 புள்ளிகள் கூடி 15,049 புள்ளிகளுடன் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை 155 புள்ளிகள் கூடி 4,504 புள்ளிகளுடன் முடிவடைந்தது. 15,000க்கு மேல் என்றாலே தற்போதெல்லாம் ஒரு நிம்மதி வருகிறது. கச்சா எண்ணெய் விழுந்தால் சந்தை ஏன் மகிழ்கிறது? மக்களின் அத்தியாவசியப் பொருட்களில் கச்சா எண்ணெயும் ஒன்று. கச்சா எண்ணெய் விலை கூடும் போது அதை அதிகம் உபயோகிக்கும் கம்பெனிகளின் பொருட்களின் விலையும் கூடும். மேலும் அதிகம் உபயோகிக்கும் சரக்கு லாரிகள், டிரக்குகள் தங்கள் கட்டணங்களை கூட்ட வேண்டியிருக்கும். அப்படி பொருட்களின் விலைகள் கூடும் போது பணவீக்கம் கூடுகிறது. அதுபோல கச்சா எண்ணெய் விலை விழும் போது பொருட்களின் விலையும் குறையும், பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்புகளில் தான் சந்தை மகிழ்கிறது. மேலும், சமீபத்தில் எண்ணெய் வள நாடுகளை ஒட்டி வந்த வந்த புயல் எந்த நாட்டையும் தாக்காமல் சென்றதால் அதுவும் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஒரு காரணமாக இருந்தது.
புதிய வெளியீடு: செபி கடந்த மாதம் அறிவித்த புதிய விதிகளின் படி வரும் புதிய வெளியீடு 20 மைக்ரான். இந்த வெளியீடு வரும் 11ம் தேதி முடிவடையும். 43.5 லட்சம் பங்குகள் வெளியிடப்படவுள்ளன. நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை ரூபாய் 50 முதல் 55 வரை. பெயின்ட், பிளாஸ்டிக் கம்பெனிகளுக்கு தேவையான அல்ட்ரா பைன் மினரல் தயாரிக்கிறது இந்தக் கம்பெனி.
சந்தையும் 2008ம்: டிசம்பர் 31, 2007 அன்று சந்தை 20,286 புள்ளிகளில் இருந்தது. தற்போது 5,237 புள்ளிகள் குறைந்து நிற்கிறது. சதவீத கணக்கில் பார்த்தால் 25.81 சதவீதம் சந்தை கடந்த வருடத்தை விடக்குறைந்துள்ளது.
கடந்த டிசம்பரை விட, இந்த வருடம் ஜனவரி 10ம் தேதி அதிகபட்ச அளவான 21,206 புள்ளிகளை தொட்டிருந்தது. அதிலிருந்து பார்த்தால் சந்தையில் 6,156 புள்ளிகள் குறைந்துள்ளது. சந்தையில் கடந்த வருடங்களில் பல சரிவுகள் இது போல ஏற்பட்டிருந்தாலும், பெரிய சரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: சந்தை 15,000 தாண்டி இருப்பதே ஒரு நல்ல செய்தி தான். இது தொடர்ந்தால் சந்தைக்கும் நல்லது, முதலீட்டாளர்களுக்கும் நல்லது. சென்ற முதலீட்டாளர்கள் திரும்பி சந்தைக்கு வருவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


No comments: