Saturday, April 18, 2009

வோடஃபோன் நிறுவனத்திற்கு ஸ்டேட் பேங்க் கொடுக்கிறது ரூ.10,000 கோடி கடன்

இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனமும் இந்தியாவின் எஸ்ஸார் நிறுவனமும் இணைந்து நடத்தும் வோடஃபோன் நிறுவனத்திற்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.10,000 கோடி கடன் கொடுக்க சம்மதித்திருக்கிறது. மூன்றாம் தலைமுறை ( 3 ஜி ) சேவையில் நுழையும் வோடஃபோன் நிறுவனம், அதற்கு தேவையான நிதிக்காகவும், பிராட்பேன்ட் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தேவையான நிதிக்காகவும் இந்த கடன் வழங்கப்படுகிறது என்று ஸ்டேட் பேங்க் தெரிவித்திருக்கிறது. ஐந்து வருட கடனாக வழங்கப்படும் இந்த தொகைக்கு, முதல் இரண்டு வருடங்களுக்கு 13.25 சதவீத வட்டியும், அதற்கு பிறகு, அப்போதுள்ள நிலைமையை பொறுத்து, வட்டியும் வசூலிக்கப்படும். ரூ.10,000 கோடியை ஸ்டேட் பேங்க் கடன் கொடுத்தபின், அதில் ரூ.7,000 கோடி கடனை மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மாற்றி விடும் என்றும், மீதி ரூ.3,000 கோடி கடனை மட்டும் அது வைத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 13.25 சதவீத வட்டி என்பதும் ஸ்டேட் பேங்க் கின் முக்கிய வட்டி விகிதத்தை விட கொஞ்சம் அதிகம் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்டேட் பேங்க்கிடமிருந்து ரூ.10,000 கோடி கடன் வாங்கும் வோடஃபோன் நிறுவனம், அதில் ரூ.6,000 கோடியை, இப்போதிருக்கும் சேவையை விரிவாக்கம் செய்வதற்கும் பழைய கடனை அடைக்கவும் பயன்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: