Thursday, August 7, 2008

பி.எஸ்.என்.எல்., இன் முதன்மை பங்கு வெளியீட்டு திட்டத்திற்கு யூனியன் கடும் எதிர்ப்பு

கோடி சந்தாதாரர்களை கொண்ட ரூ.4,20,000 கோடி மதிப்புள்ள பி.எஸ்.என்.எல்.,நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை, முதன்மை பங்கு வெளியீடு மூலம் ( ஐ.பி.ஓ.) வெளியிட்டு, அதன் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அப்போது அதன் ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஓ.பி., திட்டாத்தின் கீழ் ( ஊழியர்களும் பங்குதாரர்களாகும் திட்டம் ) ஒவ்வொரு ஊழியர்களுக்கும் பங்கு ஒன்றுக்கு ரூ.10 விலையில் பங்குகளை வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஒவ்வொரு ஊழியரும் அதிக பட்சமாக 500 பங்குகள் வரை வாங்கிக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் பங்குகள், பங்கு சந்தையில் லிஸ்ட் செய்யப்படும்போது அதன் பங்கு மதிப்பு ரூ.300 - 400 ஆக உயர்ந்து விடும். அப்போது பங்குகளை விற்கும் ஊழியர்களுக்கு ரூ.1.5 - 2 லட்சம் வரை கிடைக்கும் என்று மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். ஆனால் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் பங்குகளை ஐ.பி.ஓ., மூலம் கொடுப்பதற்கோ ஊழியர்களையும் பங்குதாரர்களாக்கும் இ.எஸ்.ஓ.பி., திட்டத்திற்கோ பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயீஸ் யூனியன் ஒத்துக்கொள்ளவில்லை. இது குறித்து மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜாவுக்கும் யூனியன் தலைவர்களுக்கு மிடையே இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தைக்குப்பின் அமைச்சர் ராஜா பேசியபோது, பி.எஸ்.என்.எல்., போர்டு கடந்த வாரமே ஐ பி ஓ மூலம் நிதி திரட்ட முடிவு செய்து விட்டது. இது குறித்து இன்று தான் அதன் யூனியன் தலைவர்களிடம் பேசினேன். ஐ பி ஓ வெளியிடுவதால் நிறுவனத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் இ.எஸ்.ஓ.பி.,திட்டத்தால் ஊழியர்களுக்கு ஏற்படும் பலன்கள் குறித்தும் அவர்களிடம் விளக்கி இருக்கிறேன் என்றார். ஆனால் இந்த இரு திட்டங்களையும் யூனியன் நிராகரித்து விட்டது. எங்களுக்கு ஐ பி ஓ.,விலோ, இ எஸ் ஓ பி., யிலோ ( ஊழியர்களும் பங்குதாரர்களாகும் திட்டம் ) விருப்பம் இல்லை. ஐ.பி.ஓ.,வினால் நன்மைகள் ஏற்படும் என்ற அரசின் விளக்கத்தில் நாங்கள் திருப்தி அடையவில்லை என்று பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச்செயலாளர் நம்பூதிரி கூறி விட்டார். இது குறித்து பி.எஸ்.என்.எல்.,நிறுவனத்தின் சேர்மன் குல்தீப் கோயல் தெரிவிக்கையில், ஐ பி ஓ., வுக்கான வேலைகள் துவங்கப்பட்டு விட்டன. ஆனால் எப்போது வெளியிடப்படும் என்று இப்போது சொல்லமுடியாது. இது குறித்து யூனியனில் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்

No comments: