Friday, October 31, 2008

சிங்கூர் நிலத்தை டாடா திருப்பி கொடுக்க வேண்டும் : இடதுசாரி கட்சி கோரிக்கை

மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் இருந்து டாடா மோட்டார்ஸ் வெளியேறி விட்டதால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த இடத்தை அவர்கள் அரசாங்கத்திடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அங்குள்ள ஆளும் கட்சியான இடதுசாரி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கூரில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அங்கிருந்து முழுமையாக டாடா வெளியேறி விட்டது. அங்கு தயாரிக்கப்படுவதாக இருந்த டாடாவின் நானோ கார் திட்டம்ற இப்போது குஜராத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. ஆனால் அந்த இடம் இன்னமும் டாடாவிடம் தான் இருக்கிறது. அந்த இடத்தை அரசாங்கம் பெற்று அந்த இடத்தை வேறு தொழிற்சாலைக்கு கொடுத்து அங்கு தொழில் துவங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆளும் இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்துள்ளார். அந்த இடம் விவசாயிகளுக்கும் திருப்பி கொடுக்கப்படாமல், அல்லது வேறு தொழிற்சாலையும் அமைக்கப்படாமல் இருந்தால், அந்த இடம் ஏலம் விடப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இது குறித்து நடந்த இடதுசாரி முன்னணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்ஜி, அந்த இடத்தில் டாடாவே வேறு தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்றார்.
நன்றி : தினமலர்


பணவீக்கம் குறைவதால் பலன் வருமா?

கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத வகையில், பணவீக்கம் 10.68 சதவீதமாகக் குறைந்தது. இதனால், இதுவரை ரிசர்வ் வங்கியும், அரசும் எடுத்த நடவடிக்கைகள் பலன் தரத் துவங்கியது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நிதியமைச்சகக் கருத்துப்படி, முக்கியமான 30 பொருட்கள் விலை சிறிது குறைவே. இதுவரை 11 சதவீதம் என்று அச்சுறுத்திய அளவில் இருந்து 10.68 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. பணவீக்கம் குறைவதால், ரிசர்வ் வங்கி இனி மேலும் 'வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை' குறைக்க வாய்ப்பு அதிகம் என்று எச்.டி.எப்.சி., வங்கி தலைமை பொருளாதார நிபுணர் பரூவா கருத்து தெரிவித்திருக்கிறார். பொதுவாக கடந்த சில நாட்களாக வங்கிகளும், பெரிய நிறுவனங்களும் சந்தித்து வரும் நிதி நெருக்கடி குறைய வேண்டும் என்ற கட்டத்திற்கு அரசு சிந்தித்து, அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இல்லாவிட்டால், தொழில் துறை தேக்கம் ஏற்படும் போது அதிகளவு வேலைவாய்ப்பு குறையும். தற்போது, அதிகளவில் எண்ணிக்கை இருப்பதாகக் கூறி பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பல பெரிய நிறுவனங்கள் இறங்கியிருப்பதாக பேச்சு உள்ளது. அதே சமயம், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதும், பலன் இருக்காது என்றும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகம் சரிவதை எளிதில் தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்ற பேச்சே இல்லை என்று பெட்ரோலிய அமைச்சர் தியோரா கருத்து தெரிவித்தார். சமையல் காஸ் விலை மட்டும் குறையும் என்று வெளியான தகவலையும் நேற்று அவர் மறுத்தார்.
நன்றி : தினமலர்


சிறிய முதலீட்டாளர்கள் ஒதுங்கி இருப்பதால் பங்குச் சந்தை 'டல்' : சேதுராமன் சாத்தப்பன்

மொபைல் போன்களில் தற்போது அதிகமாக சுற்றும் ஒரு ஜோக் என்ன தெரியுமா? பர்கர் வாங்கும் பணத்தில் ஒரு புளு சிப் பங்கை வாங்கி விடலாம். உதாரணமாக யுனிடெக் கம்பெனியின் ஒரு பங்கு 30 ரூபாய் அளவில் வந்தது. இது போல பல கம்பெனியின் பங்குகள் பர்கர் விலைக்கும் கீழே வந்தது. பணத்தை இழந்தவர்கள் மனம் விட்டு சிரிக்க முடியாவிட்டாலும், ஒரு வறட்டு சிரிப்பு சிரித்ததென்னவோ உறுதி. கடந்த சில வாரத்தைப் போலவே திங்களன்று சந்தை இன்னுமொரு பெரிய சரிவை சந்தித்தது. 1,000 புள்ளிகள் வரை சரிந்து 7,700 புள்ளிகளில் வந்து நின்றது. பார்த்தவர்களில் பலருக்கு நிச்சயம் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். காரணம், அமெரிக்க சந்தையில் கடந்த வாரம் வெள்ளியன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆசிய சந்தைகள் எல்லாம் திங்களன்று காலை கீழேயே துவங்கின. பல ஆசிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டு இறக்க அளவில் உள்ளன. இந்தியாவிலும் அதே நிலை நீடித்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பது நிற்கவில்லை. ஆதலால், அடிமட்டத்தை தொட்டு வருகிறது. நல்ல புளூ சிப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு கிடைத்தாலும் வாங்க யாரும் தயாராக இல்லை. மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் ஒதுங்கியே இருக்கின்றனர். எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) விற்பதை நிறுத்தினால் மற்றவர்கள் பயமில்லாமல் உள்ளே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு, நிலைமையை சரிசெய்ய பெரிய அளவில் கட்டுமானத் திட்டங்களை கொண்டு வரலாம். அதன் மூலம் அரசு திட்டங்கள், கம்பெனிகளுக்கு கிடைக்கலாம். இது, வேலை வாய்ப்பையும், தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதே சமயம் சந்தையையும் ஊக்குவிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ கட் மறுபடி செய்யப்படலாம். உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் எல்லாம் ஒன்று கூடி சந்தைகளை நிலைநிறுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. அது பலனளித்தால் சரிதான். இந்த முயற்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல நாடுகளின் கரன்சிகள் வலு கூடின. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயும் கூடியது. இந்திய சந்தையின் நிலை மட்டும் தான் இப்படியா என்று பலரும் நினைக்கலாம். ஜப்பானின் பங்குச் சந்தை கடந்த 26 ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. ஐரோப்பிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் காலாண்டு முடிவுகள், எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த ஆண்டின் காலாண்டு போலவே இருந்தது. ஸ்டேட் பாங்கின் காலாண்டு முடிவுகள் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாக இருந்தது. மியூச்சுவல் பண்டுகளில் இன்னும் ரிடம்ஷன் பிரஷர் அதிகமாக இருக்கிறது. அதாவது பிடுங்கிய வரை லாபம் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனரோ என்னவோ? இந்திய கம்பெனிகள் வலுவானவை. சந்தை மிகவும் மலிந்துள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிச்சயம் வருவர். வந்தால் சந்தை கூடும்; சந்தை கூடினால் இந்திய முதலீட்டாளர்களும் வருவர்.

நன்றி :தினமலர்



Thursday, October 30, 2008

அடுத்த மாதம் சிங்கப்பூரில் அலுவலகம் திறக்கிறது எல்.ஐ.சி.

லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா, அடுத்த மாதம் சிங்கப்பூரில் பிரதிநிதி அலுவலகம் ஒன்றை திறக்கிறது. முதலில் அங்குள்ள இந்தியர்கள் எங்களது பாலிசியை வாங்கிக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறோம் என்று எல்.ஐ.சி.,யின் மேலாண் இயக்குநர் டி.கே.மெஹ்ரோட்டா தெரிவித்தார். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும் அங்குள்ள இந்தியர்களிடம் எங்களது பாலிசியை விற்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார். எல்.ஐ.சி.,யின் பாலிசிகளுக்கு மக்களிடையே நல்ல பெயர் இருந்து வருவதால், இந்த பொருளாதார சரிவு நிலையிலும் எங்களால் பாலிசியை இந்தியர்களிடையே சுலபமாக விற்க முடியும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். சிங்கப்பூரை அடுத்து அது ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்திலும் வர்த்தகத்தை விரிவு படுத்தவும் எல்.ஐ.சி.,திட்டமிட்டிருக்கிறது. இருந்தாலும் எல்.ஐ.சி.,யின் இங்கிலாந்து கிளையில் எதிர்பார்த்த வர்த்தகம் நடக்கவில்லை. எனினும் அது, அங்குள்ள மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு போட்டி நிறுவனமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. எங்களுக்கு அங்கு சில தடைகள் இருப்பதால் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறோம். விரைவில் வளர்ச்சியை காண்போம் என்றார் மெஹ்ரோட்டா. தற்போது எல்.ஐ.சி.,க்கு இங்கிலாந்து, மொரீசியஸ், ஃபிஜி, நேபாளம், அரபு நாடுகள், சவுதி அரேபியா, மற்றும் பஹ்ரெய்னில் அலுவலகங்கள் இருக்கின்றன. மேலும் எல்.ஐ.சி.,யின் ஏஜென்ட் எண்ணிக்கையையும் அதிகரிக்க அது திட்டமிட்டிருக்கிறது. இப்போது அதற்கு 12 லட்சம் ஏஜென்ட்கள் இருக்கிறார்கள். இன்னும் மூன்று வருடங்களில் அதில் 30 சதவீதத்தை அதிகரிக்க அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குழைவால், எல்.ஐ.சி.,யின் யூனிட் லிங்க் பாலிசி திட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமான திட்டங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. பங்கு சந்தையில் ஏற்படும் மாற்றம் குறித்து மக்களிடையே சரியாக புரிதல் தன்மை இல்லாததால், நாங்கள் இந்த திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறோம். முன்பு 85 சதவீதமாக இருந்த யூலிப் திட்டங்கள் இப்போது 75 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டன என்றார் மெஹ்ரோட்டா. இந்திய இன்சூரன்ஸ் தொழிலில் இப்போதும் 55 சதவீத மார்க்கெட் ஷேர் எல்.ஐ.சி.,க்கு இருக்கிறது என்று சொன்ன மெஹ்ரோட்டா, ஹெல்த் பிளஸ் என்ற ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நாங்கள் 60,000 பேருக்கு விற்றிருக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்

இந்திய டெலிகாம் நிறுவனத்தை ரூ.6,120 கோடிக்கு வாங்கும் நார்வே நிறுவனம்

யூனிடெக் வயர்லெஸ் என்ற இந்திய நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை, நார்வே நிறுவனமான டெலினோர் ரூ.6,120 கோடிக்கு வாங்குகிறது.அதற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கிறது. உலகின் ஏழாவது பெரிய டெலிகாம் ஆப்பரேட்டரான நார்வேயின் டெலினோருக்கு உலகமெங்கும் 15 கோடியே 90 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம், 22 சர்க்கில்களுக்கான டெலிகாம் லைசன்சை ரூ.1,650 கோடிக்கு வாங்கி வைத்திருந்தது. இதன் காரணமாக யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தில் மதிப்பு ரூ.11,620 கோடியாக உயர்ந்து விட்டது. டில்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக்கிற்கு சொந்தமானதுதான் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம். பணப்பட்டுவாடா விஷயத்தில் அதற்கு ஏற்பட்ட கெட்ட பெயரால் கடந்த வாரத்தில் அதன் பெயர் பத்திரிக்கைகளில் பெரிதாக பேசப்பட்டது. பங்கு மதிப்பும் சரிந்து போயிருந்தது. இப்போது இதன் பங்கு ஒன்றிற்கு ரூ.50 என்ற விலையில் இதனை நார்வே நிறுவனமான டெலினோர் வாங்கிக்கொள்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் அது இங்கு ரூ.15,000 கோடி முதலீடு செய்து, 22 நகரங்களில் சேவையை துவங்க இருக்கிறது. முதலில் ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் இருக்கும் 13 நகரங்களில் அது சேவையை துவங்க இருக்கிறது. அனேகமாக அடுத்த வருட மத்தியில் அந்த சேவை துவங்கப்படும் என்று தெரிகிறது. டெலினோர் நிறுவனத்திற்கு பங்குகள் விற்கப்படுவது பற்றி கருத்து தெரிவித்த யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் சேர்மன் சஞ்சை சந்த்ரா, மெஜாரிட்டி ஷேரோ, மைனாரிட்டி ஷேரோ, எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர் தேவைப்பட்டார். அதனால்தான் அவர்களுக்கு பங்குகள் விற்கப்படுகின்றன... எங்களுக்கும் நிறைய முதலீடு தேவைப்படுகிறது என்றார். நாங்கள் பெற்றிருக்கும் லைசன்ஸ் மதிப்பிற்கு ஈடாக ஒரு நல்ல விலை கிடைத்ததால்தான் நாங்கள் விற்க முன்வந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மாதத்தில்தான் இன்னொரு வெளிநாட்டு நிறுவனமான யு.ஏ.இ.,யை சேர்ந்த எடிசலாட், 13 சர்க்கிள்களுக்கு டெலிகாம் லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை ரூ.4,050 கோடிக்கு வாங்கியது. இது தவிர கடந்த ஜூன் மாதத்தில், வெறும் இரண்டு சர்க்கிள்களுக்கு லைசன்ஸ் வாங்கி வைத்திருந்த பிகே மோடியின் ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 40.8 சதவீத பங்குகளை ஏவி பிர்லாவுக்கு சொந்தமான ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ.2,700 கோடிக்கு வாங்கியிருக்கிறது.
நன்றி :தினமலர்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: சில வாரங்களுக்கு காத்திருங்கள்...

'கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தபோதிலும், இன்னும் சில வாரங்களுக்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்த பின்பே, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து முடிவு செய்யப்படும். அதுவரை விலை குறைப்பு என்பதற்கே இடமில்லை' என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இப்போதே அதிகமாக ஏறிய விலையில் பாதி விலைக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக, பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சிகள், இது குறித்து பிரச்னை எழுப்பிய போது, ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா அறிவித்து இருந்தார். தற்போது, கச்சா எண்ணெயின் விலை நினைத்து பார்க்காத வகையில் பழைய நிலைக்கு நெருங்கிவிட்டது. இருப்பினும் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு பயங்கரமாக சரிந்து விட்டது. இதனால், கச்சா எண்ணெய்க்கு டாலரில் மாற்றி கொடுக்கும்போது தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருவதாக மத்திய அரசு கணக்கு காட்டி வருகிறது. இதையேதான் நேற்று மத்திய பெட்ரோலிய அமைச்சக துணை செயலர் எஸ்.சுந்தரேசன் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து, குறைந்துவந்தாலும், பெட்ரோல் ,டீசல், காஸ் விலையை குறைப்பது பற்றி இப்போதைக்கு முடிவு செய்யவில்லை. 15 மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துவந்த போதிலும், இதே நிலைக்கு ஸ்திரமாகுமா என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. மேலும் ஏற்கனவே ஏற்பட்டு வரும் இழப்புகளை மீண்டும் தொடராத அளவுக்கு நிலைமை யை சமாளிக்க முடியுமான என கவனித்து வருகிறோம். எனவே இன்னும் சில வாரங்களுக்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்த பிறகு முடிவு செய்யப்படும். ஒன்று இரண்டு நாட்களில் ஏற்படும் விலை குறைவை வைத்து முடிவு செய்ய முடியாது. நேற்று முன் தினம் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 56 டாலராக இருந்தது. இன்று இரண்டு டாலர் கூடியுள்ளது. சீரானநிலையில் ஸ்திரமாகும் பட்சத்தில் விலை குறைப்பு பற்றி முடிவு செய்யப்படும். இதற்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும். இவ்வாறு சுந்தரேசன் கூறினார்.
நன்றி : தினமலர்


வட்டியை ஒரு சதவீதமாக குறைத்தது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி

கடந்த சில மாதங்களாகவே மோசமான நிதி நிலையில் இருந்து வரும் அமெரிக்கா, பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து விடுமோ என்று அச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், அதிலிருந்து அமெரிக்க பொருளாதாரத்தை காப்பாற்றும் விதமாக அங்குள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை குறைத்திருக்கிறது. இப்போது அது விதிக்கும் வட்டி வெறும் ஒரு சதவீதம்தான். இந்த மாத துவக்கத்தில் தான், 2 சதவீதமாக இருந்த வட்டியை 1.5 சதவீதமாக அவசரமாக குறைத்தது. ஃபெடரல் ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து, உலகின் மற்ற ஐந்து மத்திய ரிசர்வ் வங்கிகளும் அப்போது வட்டியை குறைத்தன. ஆனாலும் இந்த நடவடிக்கை, அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் எந்தவித பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அங்குள்ள டவ்ஜோன்ஸ் மற்றும் எஸ் அண்ட் பி 500 சரிவைத்தான் சந்தித்திருக்கிறது.செப்டம்பர் 2007ல் 5.25 சதவீதமாக இருந்த வட்டி இப்போது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு சதவீத வட்டி, கடந்த ஜூன் 2003 க்கும் ஜூன் 2004 க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்ததுதான். இந்த வட்டி குறைப்பை ஏற்கனவே எல்லா பங்கு வர்த்தகர்களும் எதிர்பார்த்ததுதான் இருந்தார்கள் என்பதால், இதனால் ஒன்றும் பங்கு வர்த்தகத்தில் மாற்றம் நிகழவில்லை. நேற்றைய வர்த்தக முடிவில் டவ் ஜோன்ஸ் 0.82 சதவீதம், அல்லது 74.16 புள்ளிகள் குறைந்து, 8990.96 புள்ளிகளில் முடிந்திருந்தது. எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸ், 1.11 சதவீதம், அல்லது 10.42 புள்ளிகள் குறைந்து 930.09 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஆனால் நாஸ்டாக் 0.47 சதவீதம், அல்லது 7.74 புள்ளிகள் உயர்ந்து 1657.21 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்