Friday, April 17, 2009

இந்தியாவில் பெட்ரோலிய உபயோகம் 6.9 சதவீதம் அதிகரித்திருக்கிறது

நலிவடைந்திருந்த இந்திய பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து வருவது தெரிகிறது. முதலில் ஸ்டீல், அடுத்ததாக சிமென்ட்டின் உபயோகம் அதிகரித்தது. இப்போது பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. இது, இந்திய பொருளாதாரம் வலுவடைந்து வருவதை காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். கடந்த ஜனவரியில் 3.4 சதவீதமும், பிப்ரவரி மாதத்தில் 2.5 சதவீதமும் அதிகரித்திருந்த பெட்ரோலிய உபயோகம், மார்ச் மாதத்தில் 6.9 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்திய தொழில் துறையும் பொருளாதாரமும் நலிவடைந்து வரும் நிலையில் பெட்ரோலிய உபயோகம் அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ( 2008 ஏப்ரல் - பிப்ரவரியில் 8.8 சதவீதமாக இருந்த இந்திய தொழில் வளர்ச்சி, 2009 ஏப்ரல் - பிப்ரவரியில் 2.8 சதவீதமாக குறைந்திருந்தது.) மார்ச் மாதத்திற்கான வளர்ச்சி விகிதம் இன்னும் தயாராகவில்லை என்றாலும், தொழில் வாரியாக கணக்கிட்டால், ஸ்டீல் மற்றும் சிமென்ட் துறை மார்ச் மாதத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதாக தெரிகிறது. மார்ச் மாதத்தில் விவசாய உற்பத்தி அதிகரித்திருப்பதை அடுத்து, சரக்கு போக்குவரத்தும் அதிகரித்திருக்கிறது. மேலும் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் இந்த இரு மாதங்களிலும் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகமாக இருக்கும் என்கிறார் இந்தியன் ஆயில் கார்பரேஷனின் இயக்குநர் ( மார்க்கெட்டிங் ) தாகா.
நன்றி : தினமலர்


No comments: