Friday, March 27, 2009

சிறிது முன்னேற்றத்துடன் முடிந்தது பங்கு சந்தை

50 வர்த்தக நாட்களுக்குப்பின் நேற்று மீண்டும் 10,000 புள்ளிகளை தொட்டிருந்த சென்செக்ஸ், இன்றும் அதை தக்க வைத்துக்கொண்டது. அவ்வளவு தான். மற்றபடி இன்று பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இன்று நாள் முழுவதும் பங்கு சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி, ஏறியும் இறங்கியும்தான் இருந்தது. இருந்தாலும் கடைசியாக வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 45.39 புள்ளிகள் ( 0.45 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 10,048.49 புள்ளிகளில் முடிவு பெற்றது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 26.40 புள்ளிகள் ( 0.86 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 3,108.65 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தின் போது மெட்டல், பார்மா, பேங்க், ஆட்டோ, ரியல்எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹிண்டல்கோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தன. ஹெச்டிஎஃப்சி, இன்போசிஸ், பெல், ரிலையன்ஸ், மாருதி ஆகிய நிறுவன பங்குகள் விலை குறைந்திருந்தன.ரூ.68,489 கோடிக்கு இன்று வர்த்தகம் நடந்திருக்கிறது. பொதுவாக, சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 12 சதவீதமும் நிப்டி 10.5 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: