Monday, March 9, 2009

சுபிக்ஷாவை 'நிமிர்த்த' வங்கிகள் முயற்சி

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பல்பொருள் அங்காடித்தொடர் 'சுபிக்ஷா' வை மீண்டும் நிலை நிறுத்த வங்கிகள், முதலீட்டாளர் கள் மூலம் தீவிர முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. பல்பொருள் அங்காடி 'சுபிக்ஷா' கடந்தாண்டு வரை மொத்த வர்த்தகம் நான்காயிரம் கோடி ரூபாய்; இதற்கு நாடு முழுவதும் 1,600 கிளைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக இதன் வர்த்தகம் பெருமளவில் குறைந்தது; ஊழியர்களுக்கு சம்பளமும் தரப்படவில்லை. இந்த நிலையில், பல கடைகளில் விற்பனை படுமந்தமாகவே இருந்தது. இப்போது, இதன் நிலை மோசமாகி விட்டது. சம்பளம் தரப்படவில்லை என்பதை காரணம் காட்டி அதன் பிரதான அதிகாரிகள் பணியில் இருந்து வெளியேறி வருகின்றனர்; கிளைகளும் தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுபிக்ஷா நிறுவனம் விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது என்று பரபரப்பான தகவல் பரவியது. ஆனால்'சுபிக்ஷா , எக்காரணம் கொண்டும் விற்கப்படமாட்டாது; அதை மீண்டும் நிலை நிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்று இதை நிறுவிய தலைவர் சுப்ரமணியம் கூறியுள்ளார். சுபிக்ஷாவில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மற்றும் சாப்ட்வேர் நிறுவனம் விப்ரோவுக்கு கூட்டாக 33 சதவீத பங்குகள் உள்ளன. இவர்கள் தலைமையில், சில வங்கிகளும், முதலீட்டாளர்களும் சேர்ந்து, சுபிக்ஷாவை மீண்டும் புதுப்பித்து நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சுபிக்ஷாவுக்கு ஏற்கனவே 700 கோடி ரூபாய் கடன் தொகையை ஐ.சி.ஐ.சி.ஐ.,உட்பட சில வங்கிகள் தந்துள்ளன. அவற்றின் அசல், வட்டியை கட்டும் கால அவகாசத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல, நிதி நெருக்கடியை தீர்க்கவும் கடன்பத்திரங்கள் வெளியிடும் யோசனையும் பரிசீலீக்கப்பட்டு வருகிறது.
நன்றி : தினமலர்


1 comment:

அக்னி பார்வை said...

சுபிக்‌ஷாவுக்கு சுபிக்‌ஷ்ம் உண்டாகட்டும்