Tuesday, November 18, 2008

ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் பஸ்: டாடா - ஐ.எஸ்.ஆர்.ஓ., புதிய திட்டம்

ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் பஸ்சை உருவாக்குவதில், டாடா
நிறுவனத்துடன் இணைந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஐ.எஸ்.ஆர்.ஓ.,) ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஐ.எஸ்.ஆர்.ஓ., தலைவர் மாதவன் நாயர் கூறியதாவது:ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில், திரவ வடிவிலான ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இதில், ஐ.எஸ்.ஆர்.ஓ., நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது. அந்த அடிப்படையில், டாடா நிறுவனத்துடன் இணைந்து, சுற்றுச் சூழலுக்கு உகந்த வாகன தயாரிப்பில் ஈடுபட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த விஷயத்தில், இன்ஜினின் வடிவத்தை ஐ.எஸ்.ஆர்.ஓ., தீர்மானித் துள்ளது. இன்ஜினின் மாதிரி வடிவமும் தயார் நிலையில் உள்ளது. திட்டத்தின் வாகனப் பிரிவு தயாரிப்பை, டாடா நிறுவனம் பார்த்துக் கொள்ளும். இந்த புதிய முறையில் தயாரிக்கப்படும் முதல் வாகனம் அடுத்த ஆண்டு சாலைகளில் ஓடும்.மொத்தத்தில் இந்த புதிய ரக வாகன தயாரிப்பில், திரவ ஹைட்ரஜன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியா சொந்தமாக கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 2009ம் ஆண்டின் முதல் பகுதியில், இந்த இன்ஜின் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும்.இவ்வாறு மாதவன் நாயர் கூறினார்.ஹைட்ரஜனில் இயங்கும் பஸ், தயாரிக்கும் திட்டத்திற்கு தலைமை வகிக்கும் ஞானகாந்தி கூறியதாவது:எரிபொருள் செல்களுக்குள் ஹைட்ரஜனை செலுத்தும் போது, அது 80 கிலோ வாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. அதன்மூலம் அதிக சுமை கொண்ட பஸ்சையும் ஓட்டிச் செல்ல முடியும். இந்த பஸ், சி.என்.ஜி.,யில் இயங்கும் பஸ் போல இருக்கும். எட்டு பாட்டில்களில் அதிக பிரசரில் அடைக்கப்பட்ட ஹைட்ரஜனானது, வாகனத்தின் மேற்
பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு நாள் இரவும் அந்த ஹைட்ரஜன் வாயு பாட்டில்களை மாற்றிக் கொள்ள முடியும்.ஹைட்ரஜனில் பஸ்சை இயக்கும் போது ஆகும் செலவானது, டீசலில் இயங்கும் பஸ்சுக்கு ஆகும் செலவை விட அதிகமாக இருக்கும். ஆனால், இந்த வகை பஸ் சுற்றுச் சூழலுக்கு உகந்தது. மாசு ஏற்படுத்தாது. இந்த வகை பஸ்கள் அறிமுகமானால், நகரங்களில் வாகனங்களால் மாசு ஏற்படுவது குறையும்.இவ்வாறு ஞானகாந்தி கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: