Friday, January 1, 2010

ஆன்-லைன் சர்க்கரை வர்த்தக தடை தொடர்வதால் விலை குறையுமா?

சர்க்கரையின் விலை, ஒவ்வொரு 100 கி.கி.,க்கும் 50 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்து கொண்டே போகிறது. சர்க்கரையின் இத்தகைய விலை உயர்வை கட்டுப்படுத்த, ஆன்-லைன் வர்த்தக தடையை வரும் செப்டம்பர் மாதம் வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரையின் விலை 36 ரூபாயாக அதிகரித்த போது, கடந்த மே மாதம் 26ம் தேதி, சர்க்கரையின் ஆன்-லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இந்நிலையில், சர்க்கரையின் ஆன்-லைன் வர்த்தகத்திற்கான தடையை வரும் செப்டம்பர் மாதம் வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுகுறித்து முன்னணி வர்த்தக கமிஷன் தலைவர் பி.சி.கதுவா கூறியதாவது: தற்போதைய பயிர் சூழ்நிலையை ஆய்வு செய்ததில், சர்க்கரை ஆன்-லைன் வர்த்தகத்தை மீண்டும் துவக்குவது ஏற்றதல்ல என, கருதப்பட்டது. எனவே, சர்க்கரை ஆன்-லைன் வர்த்தகத்திற்கான தடை வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பி.சி.கதுவா கூறினார். இதற்கிடையில், ஜனவரி மாதத்திற்காக, அரசு 14.30 லட்சம் டன் வரியில்லா சர்க்கரையை வெளியிட்டுள்ளது. லெவி என்ற வரியில்லா சர்க்கரை, ஆலை உரிமையாளர்கள் மூலம் சந்தையில் விற்கப்படும். ஆனால், ஒவ்வொரு ஆலையும் விற்கும் சர்க்கரையின் அளவை, மாத அடிப்படையில் அரசு நிர்ணயிக்கும். அந்த அடிப்படையில் டிசம்பர் மாதம், 13.92 லட்சம் டன் வரியில்லா சர்க்கரையை அரசு வெளியிட்டது. ஆனால் கரும்பு உற்பத்தி அளவு குறைந்ததாலும், சர்க்கரை உற்பத்தி அளவு குறைந்திருப்பதாலும், அடுத்த சில மாதங்களுக்கு இரண்டு ரூபாய் வரை கிலோவுக்கு ஏற்றம் அல்லது இறக்கம் தொடரும்; விலை முன்பு போல குறையாது என்று மும்பையில் சர்க்கரை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


வலையுலகப் படைப்பாளிகள்!

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை.

இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம்.

உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லாவிட்டால் முகவரியில்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.

தமிழைப் பொறுத்தவரை, வலைப்பூக்கள்தான் கருத்துகளைச் சொல்லும், படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுநர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களையும் வலைப்பூக்கள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தனது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான, பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைக்குள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாகவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ்பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம்.

நாடு, இனம், மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போல பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவற்றை வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.

நர்சிம், பரிசல்காரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல் விளக்கு, க.பாலாசி, நசரேயன், நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள், நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக்கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.

வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று. வலைப் பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகளை வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள், அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட, தொலைக்காட்சி விமர்சனங்கள் என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். ÷தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

இன்னும் சிலர், தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இதுபோன்ற முயற்சிக்கு வலைப் பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே, ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், மாலன், ஞாநி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், வலைப்பூக்கள், ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீனப் பரிமாணங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றிபெறச் செய்ததில் வலைப் பதிவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ளமுடிகிறது.

÷இன்னும் சில காலம் போனால், மரபுவழி ஊடகங்களுக்கு இணையாக வலைப்பூக்கள் மாதிரியான இணையவழி ஊடகங்களுக்கும் செல்வாக்குக் கிடைத்துவிடும். இதை மரபுவழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும், ஊடகங்களின் பரிமாணம் மாறிக் கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக்கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
கட்டுரையாளர் : எம். மணிகண்டன்
நன்றி : தினமணி

Thursday, December 31, 2009

புதிய முறையில் பணவீக்க விகிதம்

பணவீக்க விகிதம் விலைவாசியைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி என்று சொல்லுவார்கள் . இது எந்த அளவு உண்மை?

கடந்த அக்டோபர் மாதம் முதல், பணவீக்க விகிதத்தைக் கணக்கிடும் முறையை மத்திய அரசு மாற்றியுள்ளது. அதேபோல், பணவீக்க விகிதத்தை அறிவிக்கும் கால அட்டவணையையும் மாற்றியுள்ளது. இதன்படி, உணவுப் பொருள்களின் விலைகள் அடிப்படையில் பணவீக்கத்தைக் கணக்கிடும் நடைமுறை இந்தியாவில் முதன்முதலாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய முறைப்படி, டிசம்பர் 12-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க
விகிதம் 18.65 சதவீதமாக இருந்தது. புதிய முறை அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், கடந்த பல மாதங்களாக உணவுப் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்திருப்பது, பணவீக்க விகிதத்தில் பிரதிபலித்திருக்குமா என்பது சந்தேகமே!

மத்திய அரசு செய்துள்ள மாற்றம் என்ன? எல்லா பொருள்களின் மொத்த விலையின் அடிப்படையில் பணவீக்க விகிதத்தைக் கணக்கிட்டு, அதை அரசு வாராவாரம் அறிவித்துக் கொண்டிருந்தது. அக்டோபர் மாதம் முதல், பணவீக்க விகிதத்தை மாதம் ஒருமுறை அறிவிக்கிறது. இது ஒரு மாற்றம்.

இரண்டாவது மற்றும் முக்கியமான மாற்றம் என்னவெனில் உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைப் பொருள்களின் மொத்த விலை அடிப்படையில், பணவீக்க விகிதம் வாரம்தோறும் அறிவிக்கப்படுகிறது.

முன்னதாக என்ன நடந்தது என்றால், உணவுப் பொருள்களின் விலை ஏற்றம், தனியாகத் தெரியாமல், அது பல்வேறு பொருள்களின் விலை ஏற்றத்தில் இரண்டறக் கலந்து மூழ்கிப் போனது.

புதிய மாற்றத்தினால், உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் இனி தனியாக, தெளிவாகத் தெரிய வழி பிறந்துள்ளது. அந்தவகையில், புதிய மாற்றம் வரவேற்கப்பட வேண்டும். அதேநேரம், ""மொத்தவிலை அடிப்படையே'' தொடர்கிறது என்பதால் ஏமாற்றம் ஏற்படுகிறது.

உலகில் பெரும்பான்மையான நாடுகள் மொத்த விலையிலிருந்து மாறி சில்லறை விலை அடிப்படையில் பணவீக்க விகிதத்தைக் கணக்கிடத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் இன்னமும் மொத்த விலை அடிப்படையில்தான் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுகிறது.

மக்கள் பொருள்களை வாங்குவது சில்லறை விலையில் தானே? சில்லறை விலையில் எப்போதுமே விலை கூடுதல்தான்! ஆகையால்தான், பணவீக்க விகிதம் குறைந்துள்ள காலங்களில்கூட, சந்தையில் விலைகள் குறையவில்லையே, ஏன்? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள். அதுமட்டுமல்ல, இதனால் அரசு சார்ந்த புள்ளிவிவரம் என்றாலே, மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது.

இதுபோதாது என்பதுபோல், இந்தியாவில் வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுகிறது. சில்லறை விலையில் கணக்கிடும்போதுகூட, நான்கு வகையில் கணக்கிடப்படுகின்றன.

உதாரணமாக, விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு விதம்; கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வேறு விதம் - எனப் பல விதங்களில் கணக்கிடுகிறார்கள்.

விவசாயத் தொழிலாளர்களுக்குக் கணக்கிடுகையில், உணவுப் பொருள்களுக்கு 69.2 சதவீத "வெயிட்டேஜ்' தரப்படுகிறது. கிராமப்புறத் தொழிலாளர்களுக்குக் கணக்கிடும்போது, உணவுப் பொருள்களுக்கு 66.8 சதவீத "வெயிட்டேஜ்' தரப்படுகிறது.

அதாவது, 100-ல் 69.2 பங்குகள்; 100-ல் 66.8 பங்குகள் உணவுப் பண்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.

இப்படி பல வகையில் கணக்கிடப்படும் வழிமுறைகளில், மொத்த விலையில் கணக்கிடப்பட்டு வந்த வழிமுறையை மட்டும் தான் தற்போது மேலே கூறிய வகையில் மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.

÷இந்த மாற்றத்தின் பயனாக ஓரளவு தெளிவு ஏற்பட்டிருந்தாலும், முழுமையான தெளிவு ஏற்பட வேண்டும் எனில், மேலும் சில மாற்றங்கள் தேவை.

தற்போதைய வழிமுறைகள் 1942-ம் ஆண்டு முதல் ஏறக்குறைய அதே வடிவில் தொடர்கின்றன.

தற்போதைய முதல் தேவை, மொத்த விலையில் அல்லாமல் சில்லறை விலை அடிப்படையில் பணவீக்க விகிதத்தைக் கணக்கிட வேண்டும்.

உலகில் பல நாடுகளுக்கு இது சாத்தியம் என்றால் இந்தியாவுக்கும் அது சாத்தியமே. பாரத ரிசர்வ் வங்கி இதனை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, பொருள்களை வகைப்படுத்துவதிலும், அவற்றுக்கு வழங்கும் "வெயிட்டேஜ்'லும் சீர்திருத்தம் தேவை. விலைவாசிகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

ஒன்று, அரிசி, கோதுமை, காய்கறி, பால், பழம், எண்ணெய் உள்ளிட்ட 98 உணவுப் பொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 22 சதவீத "வெயிட்டேஜ்' பெறுகின்றன. அதாவது 100-ல் 22 பங்குகள் உணவுப் பண்டங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன.

இரண்டாவதாக, பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்ற 19 எரிபொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 14 சதவீத "வெயிட்டேஜ்' அல்லது பங்குகள் பெறுகின்றன.

மூன்றாவதாக, தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் 318 பொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 64 பங்குகள் பெறுகின்றன.

இவ்வாறு மக்களால் பயன்படுத்தப்படும் 435 பொருள்களின் விலைகளைக் கணக்கெடுத்து மொத்த விலைவாசி பற்றிய விவரம் கணக்கிடப்படுகிறது.

இதற்கு அடிப்படை ஆண்டு என 1993-94-ம் ஆண்டு கருதப்படுகிறது. அந்த ஆண்டு என்ன விலைவாசி நிலவரமோ அதை 100 என வைத்துக்கொண்டு, தற்போதைய விலைவாசி ஏற்ற, இறக்கம் கணக்கிடப்படுகிறது.

ஓராண்டு காலத்தில் ஏற்படும் விலைவாசி ஏற்றத்தை அந்த ஆண்டின் பணவீக்கத்தின் அளவுகோலாக வைக்கிறார்கள்.

தற்போது புதிய முறைப்படி, உணவுப் பண்டங்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இணைத்து அவற்றின் பணவீக்க விகிதத்தை மொத்த விலை அடிப்படையில் வாராவாரம் அறிவிக்கிறார்கள். தொழிற்கூடங்களில் தயாரிக்கப்படும் பொருள்கள் உள்ளிட்ட பணவீக்கத்தை, மொத்த விலைகளின் அடிப்படையில், மாதாமாதம் அறிவிக்கிறார்கள்.

உணவுப் பண்டங்களுக்கு தற்போது தரப்படும் 22 பங்குகள் (வெயிட்டேஜ்) மிகவும் குறைவு. இது கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மைநிலை பிரதிபலிக்கும்.

அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் வேகமாக மாறி உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, தற்போதுள்ள 98 உணவுப் பொருள்களை மறு ஆய்வு செய்து, மாறியு ள்ள சூழலுக்கு ஏற்பத் திருத்தி அமைக்க வேண்டும்.

ஆக, மொத்த விலை அடிப்படையிலிருந்து சில்லறை விலைகள் அடிப்படைக்கு மாறுவது; உணவுப் பொருள்களுக்கு கூடுதல் "வெயிட்டேஜ்' வழங்குவது மற்றும் உணவுப் பொருள்களின் பட்டியலில் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது ஆகிய மூன்று அம்சங்களிலும் ஒரே நேரத்தில் சீர்திருத்தம் மேற்கொண்டால்தான், பணவீக்க விகிதம் விலைவாசியின் நிலைக்கண்ணாடியாக அமையும்; அத்துடன் அரசின் புள்ளிவிவரங்களில் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
கட்டுரையாளர் : எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி : தினமணி


உணவு பணவீக்கம் 19.83%ஆக அதிகரிப்பு

டிசம்பர் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உணவுப் பொருளுக்கான பணவீக்கம் 19.83 சதவீதமாக அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் மற்றும் உருளைகிழக்கின் விலை அதிகரித்து இருப்பதே, பணவீக்க உயர்விற்கு காரணம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில்(கடைசியாக) உணவுப் பொருளுக்கான பணவீக்கம் 18.65 சதவீதமாக இருந்தது.
கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் உருளைக்கிழங்கின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது, பருப்பு வகைகளின் விலை 41 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை 40.75 சதவீதமும், காய்கறிகளின் விலை 46.7 சதவீதமும் அதிகரித்துள்ளன. அரிசி விலை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

உணவுப் பொருள் அல்லாத ரப்பர் மூலப்பொருள் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
நன்றி : தினமலர்

பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவு பொருட்கள் விலை உயர்வு : பிரபல நிறுவனங்கள் முடிவு

சர்க்கரை, பால் மற்றும் வெண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டதால், பிரபல நிறுவனங்களின் பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவுப் பொருட்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்த, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (எப்.எம்.சி.ஜி.,) தயாரிப்பு நிறுவனங்களான பிரிட்டானியா, பார்லே மற்றும் குஜராத்

கூட்டுறவு பால் பொருட்கள் தயாரிப்பு கூட்டமைப்பு (ஜி.சி.எம்.எம்.எப்.,) போன்றவை தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. உணவுப் பொருட்கள் பணவீக்கம் கடந்த பத்தாண்டுகள் இல்லாத அளவாக, தற்போது 20 சதவீதத்தை அடைந்துள்ளது. எனவே, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பை சமாளிக்க பிரிட்டானியா நிறுவனம், தங்கள் தயாரிப்பு பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவுப்பொருட்களின் விலையை, 5 சதவீதம் முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில், பார்லே நிறுவனம், 'பார்லி ஜி' (88 கிராமின்) விலையை 4 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேபோன்று பால் விலை அதிகரிப்பை தொடர்ந்து,

அமுல் நிறுவனம், தயாரிப்புகளின் விலையை பிரிவு வாரியாக 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மற்றொரு பெரிய நிறுவனமாக ஐ.டி.சி., அடுத்த இரண்டு வாரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், இத்துறையில் உள்ள பிற பெரிய நிறுவனங்கள், தற்போதைய நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

இதுகுறித்து, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வினிதா பாலி

கூறுகையில், 'எங்களின் அனைத்து பிராண்டுகளின் விலையையும், 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை, சமீபத்தில் அதிகரித்துள்ளோம். நாங்கள் லாபகரமான வளர்ச்சியையே எதிர்பார்க்கிறோம்' என்றார்.

இதுகுறித்து, குஜராத் கூட்டுறவு பால் பொருட்கள் தயாரிப்பு கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனர் ஆர்.எஸ்.சோதி கூறியதாவது: மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க, தயாரிப்புகளின் விலையை 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளோம். 100 கிராம் வெண்ணெயின் விலையை 23 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரித்துள்ளோம். சமீபத்தில், எங்கள் அனைத்து நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளின் விலையையும் அதிகரித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். எனினும், 'தங்கள் தயாரிப்பு பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் தற்போது இல்லை' என, டாபர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் துகால் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


Wednesday, December 30, 2009

ஏன் இன்னும் பாராமுகம்...?

படிப்பனுபவம் வேறெந்த சுகானுபவத்தையும் விடச்சிறந்தது என்பது உய்த்துணர்ந்தவர்களுக்குப் புரியும்.

இசை,​​ நடனம்,​​ நாடகம்,​​ திரைப்படம்,​​ ஓவியம் போன்ற நுண்கலைகளைப் போலவே எழுத்தும் படிப்பும் ஓர் உயரனுபவம் என்பதோடு நில்லாது சிந்தனைக்குச் சாவி கொடுத்துச் செயலாக்கத்துக்கு அடித்தளம் அமைக்கும் அரும்பணி புரிகிறது.​ இந்தியச் சிந்தனை மரபு,​​ பல மொழிகளில் பல வடிவங்களில் வெளிப்பட்டு வந்தது-வருகிறது.

இன்று யந்திர கதியில் கோடுகளிடை ஓடும் சாரமற்ற வாழ்க்கையாக மாறிவரும் பரபரப்புச் சூழலில்,​​ நமது கலாசாரமும் கலைகளும் அருமருந்தாக உள்ளன.​ மக்கள் தொகைப் பெருக்கத்தாலும்,​​ சுய-புறக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் தகுதியற்ற போட்டிகளாலும் மாயமான் வேட்டையாகி வருகிற வாழ்க்கையில் வேரோடிய நமது நேற்றைய சிந்தனைகளும்,​​ சரித்திரமும்,​​ இலக்கியமும் இன்றைக்குப் புறந்தள்ளப்பட்டு விடுகிற அபாயம் தொடர்கிறது.​ இது நாளைய இந்தியாவுக்கு அபாயச் சங்கு ஊதும் தருணமாகி விட்டது.

வெறும் "மதிப்பெண்'தான் இன்றைய கல்வி.​ வெறும் வியாபாரமாகிவிட்ட கல்விச் சந்தையில் அறிவுதரும் கல்வியா கிடைக்கிறது?

"கல்வி அறிவு' என்பது பாமரர்க்கும்,எளியோர்க்கும் வழங்கப்பட வேண்டியது அவசியம்.​ ஆனால் கல்விதான் வழங்கப்படுகிறது இன்றிங்கே.​ அறிவு புகட்டப்படுவதில்லை.​ ​ ​ நிதியமைச்சர் அன்பழகன் அடிக்கடி கூறுவதுபோல,''படித்தவரெல்லாம் படிப்பவரல்ல''!

ஆம்.

​ ​ சற்று எளிதாகக் கூற முற்படின் வடிவேலு நகைச்சுவை போல்,​​

''தெரியும்;​ ஆனால் தெரியாது'' என்பது போல்தான் இது!

வெறும் "பாடத்திட்டக் கல்வி' மட்டுமே முட்ட முட்டப் புகட்டப்படுகிறது.​ பொது அறிவும்,​​ பல்துறை தாகம் ஏற்படுத்தும் படைப்பாளுமைத் திறன் வளர் கல்வியறிவும் அறவே ஒதுக்கப்பட்டு நசுக்கப்படுகிறது கல்விக்கூடங்களில்.

அரசு மற்றும் பெரும்பாலான தனியார் கல்விக் கூடங்களில் நூலகமோ,​​ நூல்களோ காணக்கிடைக்காதவையே!​ ஆகவே நூலகரும் கிடையாது.

பள்ளிப் பாடத் திட்டத்தில் "நூலக வகுப்'பை மீண்டும் கொண்டு வந்து அதை முழு ஆர்வத்துடன் செயல்படுத்தக் கோரி தமிழக அரசிடம் பலமுறை வேண்டுகோள் வைத்தோம்.​ ஆட்சி மாறுகிறது.​ ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள்.​ ஆனால் எக்காரணம் கருதியோ இக்கோரிக்கை உரிய கவனம் பெறுவதே இல்லை.

முன்பு தமிழகக் கல்லூரிகளில் நல்லொழுக்கக் கல்வியும்,​​ உயர்நிலைப் பள்ளிகளில் வாரமொரு வகுப்பு-​ 45 நிமிடம் நூலக வகுப்பு,​​ கைத்தொழில் ஆகியவையும் பாடத்திட்டத்திலேயே நடைமுறையில் இருந்தன.

இதன்மூலம் பள்ளிப் பருவத்திலேயே பாடநூலைத் தாண்டி பொது அறிவுத் தேடல் மாணவரிடம் விதைக்கப்படுகிறது.​ வாழ்நாள் முழுவதும் இந்தப் படிப்பனுபவ சுகம் அவருக்கு ஒளிகாட்டுகிறது.

இதேபோல் கைத்தொழில் வகுப்பில் ஒரு வாரம் தச்சு வேலை,​​ ஒரு வாரம் தையல்,​​ ஒரு வாரம் தோட்ட வேலை,​​ ஒரு வாரம் சுற்றுச்சூழல் தூய்மை,​​ ஒரு வாரம் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கக் கற்றுத் தருதல் போன்ற அடிப்படை விஷயங்கள் மூலம் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைச் சொந்த உழைப்பின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளத் தூண்டும் மனவலிவும் உழைப்பின் உயர்வும் ஊட்டப்பட்டு விடுகிறது.

இவையெல்லாம் நான் படித்த பள்ளி நாள்களில் எனக்குக் கிட்டிய அருமையான அஸ்திவாரங்கள்.

ஆனால் இன்று இவை பாடத்திட்டத்தில் இருந்து எங்கே விரட்டப்பட்டன?​ ஏன் விரட்டப்பட்டன?

இன்று பல பள்ளிகளில் விளையாட்டு உடற்பயிற்சி கூட,​​ மாணவர்களின் கவனத்திலிருந்து மறைந்து வருகிறதே என ஓர் ஆசிரியர் கவலையுடன் கூறினார்.

நமது அண்டை மாநிலங்களில் இன்றும் நூலக வகுப்பு சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அரசு,​​ தனியார் பள்ளிகளில் நூலகம்,​​ நூல்கள்,​​ நூலகர்,​​ நூலக வகுப்பு எனச் சீராகச் செல்கிறது.​

மாநிலம் முழுவதிலிருந்தும் பதிப்பாளர்களிடம் மாதிரிப் புத்தகங்கள் பெறப்பட்டு வகுப்பு-வயது வாரியான புத்தகங்கள் தேர்வு செய்யப் பெற்று பட்டியலிடப்படுகின்றன.​ இந்நூல்கள்தான் பள்ளி நூலகங்களில் வாங்கி மாணவர்களுக்கு மத்திய வாங்குகைத் திட்டத்தின் மூலம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திரத்தில் இன்றும் கடைப்பிடிக்கப்பெறும் இம்முறையை ​(தமிழகத்தில் முன்னர் நிகழ்த்தப் பெற்றது)​ நாமும் மீண்டும் தொடர வேண்டும்.

வளரும் இளம் பருவத்திலேயே படிப்பனுபவம் விதைக்கப்பட்டால்தான் அடுத்த தலைமுறையில் மனவளம் நிறைந்த ஆரோக்கியமான தமிழகத்தை வளர்த்தெடுக்க முடியும்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

தமிழகம் முழுவதும் மாநகராட்சி,​​ நகராட்சி அமைப்புகள் மூலம் மக்களின் சொத்துவரி விதிப்பில் 10 சதவீதம் ​(முன்பு 5 சதவீதம்)​ நூலக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.​ ஆனால் ஆண்டுதோறும் விரட்டி விரட்டி வசூலிக்கப்படும் இவ் வரித் தொகை உடனுக்குடன் நிதித்துறை வழியாக நூல்கள் வாங்குவதற்கு வந்து சேருவதில்லை.

நூலகத் துறைச் சம்பளம்,​​ வாடகை,​​ நிர்வாகச் செலவுகள் அரசிடமிருந்து நேரடியாகப் பட்டுவாடா செய்யப்படுகிறது.​ ஆனால்,​​ மூலாதாரமான புத்தகங்கள் வாங்கும் தொகை இவற்றுடன் ஒப்பிட்டால் -​ எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டால் -​ ​ வேதனைதான் மிஞ்சும்.

நமது தமிழ்நாடு பொது நூலகத் துறையில் நூல்கள் வாங்குவதும்,​​ வாங்காமல் தவிர்க்கப்படுவதும் ஒரு "பெரிய புராணம்'.

அதற்கு மேல் விலை நிர்ணயம் என்பதும் விலை நிர்ணய உத்தரவைச் செயல்படுத்தும் விதமும் மிக மிக விநோதமானது;​ விசித்திரமானது.

நாளுக்கு நாள் உற்பத்திச் செலவு அதிகரித்து வந்தாலும் பொதுவாக இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை விலை உயர்வு நிர்ணயம் செய்யப்படவேண்டிய நிலை கடைப்பிடிக்கப்படுவதில்லை.​ சுமார் நான்கு,​​ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.​ விலை நிர்ணயம் செய்த பின்பும் அதைச் செயல்படுத்தத் தாராளமாக ஆண்டுகளைத் தள்ளிப்போடும் நிர்வாக யந்திரம் தங்களது சம்பளம்,​​ படிகளை எல்லாம் முன்தேதியிட்டுப் பெற்றுக் கொள்கிறது உயர்த்தப்படும்போது.

பதிப்பாளர்களுக்குப் பாராமுகமே காட்டப்படுகிறது.​ "கட்டாத விலை' ​ என்பதால் சமர்ப்பிக்கப்படுவதும் இல்லாமல்,​​ பெறப்பட்ட ஆணைக்கு நூல்கள் வழங்கப்படாமலும் தவிர்க்கப்படுகிறது.

இது இப்படியிருக்க,​​ ''எமது நூல்களுக்கு ஆணை வழங்கப்படவில்லையே?'' என முறையிடச் சென்றால் "ஆணை பற்றிப் பேசக்கூடாது' என்பதுபோல் நோட்டீஸ் ஒட்டிய கதவடைப்பு!

"இவ்வருட அலொக்கேஷன்-​ ஒதுக்கீடு அவ்வளவுதான்.​ நீங்கள் எத்தனை புத்தகங்கள் சமர்ப்பித்தீர்கள்-​ எத்தனை நூலுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று சதவீதம்தான் அளவுகோல்.

என்ன புத்தகம் வாங்கப்பட்டுள்ளது,​​ என்ன புத்தகம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

"நூல் தேர்வு' என்பது மர்மக்குகை இருட்டு ரகசியம்!

நூலகத் துறையால் புறக்கணிக்கப்படும் புத்தகங்கள் மக்களின் நேரடி கவனத்தில் ஈர்க்கப்பட்டு தொடர் பதிப்புகள் காண்கின்றன.​ ஆனால்,​​ பொது நூலகக் கிளை நூலகங்களை நாடும் வாசகருக்கு இக்கருத்துகள்-​ நூல்கள் சென்றடைய வேண்டுமென்கிற எழுத்தாளரின் சார்பில் பதிப்பாளர் முயல்கையில் இந்த சாரமற்ற பதில்களே கிடைக்கின்றன.

இவையெல்லாம் களையப்பட தமிழ்ப் பதிப்பாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பொது நூலகத் துறை மூலம் தமிழ் நூல்கள் வாங்குவதற்கென்றே-​ குறிப்பிடப்பட்ட 5 சதவீதம் மட்டுமாவது கல்வி நிதி ஒதுக்கீட்டில் வருடாந்திர நிதியாக வழங்கப்பட வேண்டும்.

நூல் தேர்வில் உரிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்-தவிர்க்கப்பட்ட -​ ஆணை வழங்கப்படாத நூல்களை -​ முதலில் உரிய அமைச்சரும் அதிகாரியும் ஆண்டுதோறும் கண்காணிக்க வேண்டும்.​ அப்படிப்பட்ட நூல்கள் தகுதியுடையவை என அறியப்பட்டால் அவற்றுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும்-மாவட்ட வாரியாக உடனுக்குடன் பதிப்பாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.​

​ மழை,​​ வெயில் இயற்கைப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாகப் புத்தகக் காட்சி நடத்த ஊருக்குள் கண்காட்சி வளாகம் அமைத்துத்தர வேண்டும்.

தில்லியில் "பிரகதிமைதான்' போல் மாநகராட்சி,​​ நகராட்சிகளில் இக் "கண்காட்சி வளாகம்' கட்டப்பட்டு ஆண்டுதோறும் இருமுறை தலா பதினைந்து நாள்களுக்குப் புத்தகக் காட்சி நடத்த குறைந்த வாடகையில் இடம் தர வேண்டும்.​ மற்ற நாள்களில் ஆண்டு முழுவதும் வகைவகையான கண்காட்சிகள் நடத்தலாம் அங்கே.

மேலே குறிப்பிட்ட,​​ மூன்று கோரிக்கைகளையும் தொலைநோக்குப் பார்வையோடு அணுகி தமிழ்ச் சமூகம் மீண்டும் தமது பாரம்பரியம் மிக்க பண்பாட்டுப் பாதையில் பீடு நடையிட்டுப் பயணிக்க தமிழக அரசு கடைக்கண் பார்வையைப் பதிக்க வேண்டும்.​ 33-வது புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளையில்,​​ எழுத்தாளர்கள் சார்பிலும்,​​ பதிப்பகங்கள் சார்பிலும்,​​ புத்தகம் படிக்கும் தமிழ் ஆர்வலர்கள் சார்பிலும் தமிழக அரசுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள் இது.​ புத்தாண்டு நல்ல ஆண்டாகப் புலரும் என்கிற நம்பிக்கையுடன்...
கட்டுரையாளர் :அகிலன் கண்ணன்
நன்றி : தினமணி

தனித்திரு,​​ விழித்திரு...

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன்,​​ ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6-வது முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்.​ பார​​திய ஜனதா கட்சி ஆத​ரவு தெரி​வித்​துள்​ளது.​

மாநிலத்தின் வளத்துக்கு நிலையான ஆட்சி அவசியம் என்பதாலும்,​​ மக்கள் நலன் கருதியும் ​ இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.​ கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும்போது இதைத்தானே எல்லா கட்சிகளும் சொல்லி வருகின்றன.​ அதனால் இதிலொன்றும் ஆச்சரியமில்லை.​ ​

சிபுசோரனுக்கும் முதலமைச்சர் பதவிக்கும் ராசியே கிடையாது.​ 2005-ல் முதல்வராகப் பதவியேற்றார்.​ ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பத்து நாளில் பதவியை இழக்க வேண்டியதாயிற்று.​ இரண்டாவது முறையாக 2009-ல் முதலமைச்சரானார்.​ ஆனால் அவரால் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.​ இப்போது 3-வது முறையாக முதலமைச்சராகிறார்.​ அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை,​​ நிரந்தர எதிரியும் இல்லை என்பது தெரிந்திருந்தாலும்,​​ சிபு சோரன் கூடுதலாக தெரிந்துவைத்திருக்க வேண்டிய,​​ சொந்த அனுபவத்தில் தெரிந்துவைத்திருக்கும் தகவல்-​ முதல்வர் பதவியும் நிரந்தரமில்லை.

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிலக்கரித் துறை அமைச்சராக சிபுசோரன் பதவி வகித்தபோது,​​ அவர் மீதான கொலை வழக்கு காரணமாக,​​ அவரை அமைச்சர் பதவியிலிருந்து ​ நீக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்றத்தில் நடத்திய அமளி,​​ கூச்சல் அத்தனையும் இப்போதும் கண்முன் நிற்கிறது.​ இப்போது சிபுசோரன் தன் மீது தொடுக்கப்பட்ட இரண்டு கொலை வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டார்.​ ஆகையால் அவருக்கு தங்கள் ஆதரவுக் கரத்தை நீட்டுவதாக பாஜக சொல்லிக்கொள்ள முடியும்.

ஜார்க்கண்ட் மாநிலம் அமைக்கப்பட்ட நாள் முதலாக மூன்று முறை பாஜகதான் ஆட்சி அமைத்துள்ளது.​ இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக,​​ தற்போது வேறு வழியின்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது.​ இதனை சிபுசோரன் நன்கு அறிவார்.​ பாஜகவின் இந்த பலவீனத்தை அவர் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

பாஜக மட்டுமன்றி அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு உள்பட நான்கு அமைப்புகளின் ஆதரவில்தான் சிபுசோரன் ஆட்சி அமையவிருக்கிறது.​ அரசியல் சட்டப்படி இத்தகைய கூட்டணி ஆட்சி சாத்தியமாக இருந்தாலும்,​​ ஜார்க்கண்ட் போன்ற ஒரு மாநிலத்தில் இது எத்தகைய கேடுகளை ​ ஏற்கெனவே விளைவித்திருக்கிறது என்பதற்கு முந்தைய முதலமைச்சர் மது கோடா ஒரு சாட்சி.​ அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பிலிருந்து உருவான மது கோடா,​​ காங்கிரஸ்,​​ ஜேஎம்எம் முரண்களைப் பயன்படுத்திக்கொண்டு முதலமைச்சராகி,​​ ரூ.4000 கோடி பணம் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு,​​ இப்போது சிறையில் இருக்கிறார் என்பதே போதும் இந்த மாநிலத்தின் வளத்தையும் ஊழல் வாய்ப்புகளையும் அறிந்துகொள்வதற்கு.

ஜார்க்கண்ட் கனிம வளம் நிறைந்த மாநிலம்.​ சுமார் 2 கோடி மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள்.​ இன்னமும்கூட இந்த மக்கள் மிகவும் மோசமான வறுமையில் வாழ்க்கை நடத்தும் நிலைமை மாறவில்லை.​ ​ சிபுசோரன் தன் வாழ்க்கையில் முதன்முதலாக கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளானதே,​​ பழங்குடியல்லாத வெளியாட்களே வெளியேபோ என்ற போராட்டத்தின்போது சிருடி என்ற கிராமத்தில் 16 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்தான்.​ ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சின்னமே,​​ பழங்குடியினரைக் குறிக்கும் வில்லும் அம்பும்தான்.​ பழங்குடியினருக்கான போராட்டத்தில் உதித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,​​ பழங்குடியினர் முன்னேறவில்லை.

இந்த மாநிலத்தில் உள்ள 32,620 கிராமங்களில் 45 சதவீத கிராமங்கள்தான் மின்இணைப்பு பெற்றுள்ளன.​ இன்னும் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருண்டுதான் கிடக்கின்றன.​ வெறும் 8,484 ​ கிராமங்களுக்கு மட்டுமே அணுகுசாலை இருக்கிறது.​ இந்த நிலையில் அந்த மக்களின் வாழ்க்கை,​​ கல்வி,​​ வேலைவாய்ப்பு குறித்து அதிகமாக புள்ளிவிவரங்களை அடுக்க வேண்டியதில்லை.​ சொல்லாமலே புரியும்.

கனிம வளத்தைக் கொள்ளையடிக்க வரும் பெரும் நிறுவனங்கள் ஆட்சியாளர்களை தன்வயப்படுத்தத் தவறுவதில்லை.​ ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து விலகி ​ விலகிப் போய்,​​ அடுத்த தேர்தலுக்கு மட்டுமே இறங்கி வருகிறார்கள் என்பதுதான் இம்மாநில அரசியல் நிலவரம்.​ ​

நிலைமை இப்படி இருக்கையில்,​​ இந்த மாநிலத்தில் இத்தனை கட்சிகள் ஆதரவுடன் ஒரு கட்சி தனியாக ஆட்சி அமைத்தாலோ அல்லது கூட்டணி ஆட்சி அமைத்தாலோ பல்வேறு சமரசங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது.​ சமரசங்கள் என்றால்,​​ அரசியல் அகராதியில் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?​ ​

தேசியக் கட்சியான பாஜகவுக்கு உண்மையாகவே மாநிலத்தில் நிலையான ஆட்சி மக்கள் நலன் ஆகியவைதான் முக்கியம் என்றால்,​​ ஆட்சியில் பங்கு கொள்ளாமல் அதே நேரத்தில் ஒரு கண்காணிப்பாளரைப் போல செயல்பட வேண்டும்.​ தவறு நேரும் எந்த நிமிடத்திலும் ஆதரவை விலக்கிக் கொண்டுவிடத் தயாராக இருக்க வேண்டும்.​ தான் ஆதரவை விலக்கிக் கொண்டால் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிடுவார்களே என்ற எண்ணத்தில் தவறுகளைச் சகித்துக் கொள்ளுமேயானால்,​​ அந்த மாநிலத்தில் பல "மது கோடா'-க்கள் வளம் பெறுவார்கள்.​ மக்கள் வளம் பெற மாட்டார்கள்.
நன்றி : தினமணி