Wednesday, December 30, 2009

ஏன் இன்னும் பாராமுகம்...?

படிப்பனுபவம் வேறெந்த சுகானுபவத்தையும் விடச்சிறந்தது என்பது உய்த்துணர்ந்தவர்களுக்குப் புரியும்.

இசை,​​ நடனம்,​​ நாடகம்,​​ திரைப்படம்,​​ ஓவியம் போன்ற நுண்கலைகளைப் போலவே எழுத்தும் படிப்பும் ஓர் உயரனுபவம் என்பதோடு நில்லாது சிந்தனைக்குச் சாவி கொடுத்துச் செயலாக்கத்துக்கு அடித்தளம் அமைக்கும் அரும்பணி புரிகிறது.​ இந்தியச் சிந்தனை மரபு,​​ பல மொழிகளில் பல வடிவங்களில் வெளிப்பட்டு வந்தது-வருகிறது.

இன்று யந்திர கதியில் கோடுகளிடை ஓடும் சாரமற்ற வாழ்க்கையாக மாறிவரும் பரபரப்புச் சூழலில்,​​ நமது கலாசாரமும் கலைகளும் அருமருந்தாக உள்ளன.​ மக்கள் தொகைப் பெருக்கத்தாலும்,​​ சுய-புறக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் தகுதியற்ற போட்டிகளாலும் மாயமான் வேட்டையாகி வருகிற வாழ்க்கையில் வேரோடிய நமது நேற்றைய சிந்தனைகளும்,​​ சரித்திரமும்,​​ இலக்கியமும் இன்றைக்குப் புறந்தள்ளப்பட்டு விடுகிற அபாயம் தொடர்கிறது.​ இது நாளைய இந்தியாவுக்கு அபாயச் சங்கு ஊதும் தருணமாகி விட்டது.

வெறும் "மதிப்பெண்'தான் இன்றைய கல்வி.​ வெறும் வியாபாரமாகிவிட்ட கல்விச் சந்தையில் அறிவுதரும் கல்வியா கிடைக்கிறது?

"கல்வி அறிவு' என்பது பாமரர்க்கும்,எளியோர்க்கும் வழங்கப்பட வேண்டியது அவசியம்.​ ஆனால் கல்விதான் வழங்கப்படுகிறது இன்றிங்கே.​ அறிவு புகட்டப்படுவதில்லை.​ ​ ​ நிதியமைச்சர் அன்பழகன் அடிக்கடி கூறுவதுபோல,''படித்தவரெல்லாம் படிப்பவரல்ல''!

ஆம்.

​ ​ சற்று எளிதாகக் கூற முற்படின் வடிவேலு நகைச்சுவை போல்,​​

''தெரியும்;​ ஆனால் தெரியாது'' என்பது போல்தான் இது!

வெறும் "பாடத்திட்டக் கல்வி' மட்டுமே முட்ட முட்டப் புகட்டப்படுகிறது.​ பொது அறிவும்,​​ பல்துறை தாகம் ஏற்படுத்தும் படைப்பாளுமைத் திறன் வளர் கல்வியறிவும் அறவே ஒதுக்கப்பட்டு நசுக்கப்படுகிறது கல்விக்கூடங்களில்.

அரசு மற்றும் பெரும்பாலான தனியார் கல்விக் கூடங்களில் நூலகமோ,​​ நூல்களோ காணக்கிடைக்காதவையே!​ ஆகவே நூலகரும் கிடையாது.

பள்ளிப் பாடத் திட்டத்தில் "நூலக வகுப்'பை மீண்டும் கொண்டு வந்து அதை முழு ஆர்வத்துடன் செயல்படுத்தக் கோரி தமிழக அரசிடம் பலமுறை வேண்டுகோள் வைத்தோம்.​ ஆட்சி மாறுகிறது.​ ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள்.​ ஆனால் எக்காரணம் கருதியோ இக்கோரிக்கை உரிய கவனம் பெறுவதே இல்லை.

முன்பு தமிழகக் கல்லூரிகளில் நல்லொழுக்கக் கல்வியும்,​​ உயர்நிலைப் பள்ளிகளில் வாரமொரு வகுப்பு-​ 45 நிமிடம் நூலக வகுப்பு,​​ கைத்தொழில் ஆகியவையும் பாடத்திட்டத்திலேயே நடைமுறையில் இருந்தன.

இதன்மூலம் பள்ளிப் பருவத்திலேயே பாடநூலைத் தாண்டி பொது அறிவுத் தேடல் மாணவரிடம் விதைக்கப்படுகிறது.​ வாழ்நாள் முழுவதும் இந்தப் படிப்பனுபவ சுகம் அவருக்கு ஒளிகாட்டுகிறது.

இதேபோல் கைத்தொழில் வகுப்பில் ஒரு வாரம் தச்சு வேலை,​​ ஒரு வாரம் தையல்,​​ ஒரு வாரம் தோட்ட வேலை,​​ ஒரு வாரம் சுற்றுச்சூழல் தூய்மை,​​ ஒரு வாரம் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கக் கற்றுத் தருதல் போன்ற அடிப்படை விஷயங்கள் மூலம் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைச் சொந்த உழைப்பின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளத் தூண்டும் மனவலிவும் உழைப்பின் உயர்வும் ஊட்டப்பட்டு விடுகிறது.

இவையெல்லாம் நான் படித்த பள்ளி நாள்களில் எனக்குக் கிட்டிய அருமையான அஸ்திவாரங்கள்.

ஆனால் இன்று இவை பாடத்திட்டத்தில் இருந்து எங்கே விரட்டப்பட்டன?​ ஏன் விரட்டப்பட்டன?

இன்று பல பள்ளிகளில் விளையாட்டு உடற்பயிற்சி கூட,​​ மாணவர்களின் கவனத்திலிருந்து மறைந்து வருகிறதே என ஓர் ஆசிரியர் கவலையுடன் கூறினார்.

நமது அண்டை மாநிலங்களில் இன்றும் நூலக வகுப்பு சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அரசு,​​ தனியார் பள்ளிகளில் நூலகம்,​​ நூல்கள்,​​ நூலகர்,​​ நூலக வகுப்பு எனச் சீராகச் செல்கிறது.​

மாநிலம் முழுவதிலிருந்தும் பதிப்பாளர்களிடம் மாதிரிப் புத்தகங்கள் பெறப்பட்டு வகுப்பு-வயது வாரியான புத்தகங்கள் தேர்வு செய்யப் பெற்று பட்டியலிடப்படுகின்றன.​ இந்நூல்கள்தான் பள்ளி நூலகங்களில் வாங்கி மாணவர்களுக்கு மத்திய வாங்குகைத் திட்டத்தின் மூலம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திரத்தில் இன்றும் கடைப்பிடிக்கப்பெறும் இம்முறையை ​(தமிழகத்தில் முன்னர் நிகழ்த்தப் பெற்றது)​ நாமும் மீண்டும் தொடர வேண்டும்.

வளரும் இளம் பருவத்திலேயே படிப்பனுபவம் விதைக்கப்பட்டால்தான் அடுத்த தலைமுறையில் மனவளம் நிறைந்த ஆரோக்கியமான தமிழகத்தை வளர்த்தெடுக்க முடியும்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

தமிழகம் முழுவதும் மாநகராட்சி,​​ நகராட்சி அமைப்புகள் மூலம் மக்களின் சொத்துவரி விதிப்பில் 10 சதவீதம் ​(முன்பு 5 சதவீதம்)​ நூலக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.​ ஆனால் ஆண்டுதோறும் விரட்டி விரட்டி வசூலிக்கப்படும் இவ் வரித் தொகை உடனுக்குடன் நிதித்துறை வழியாக நூல்கள் வாங்குவதற்கு வந்து சேருவதில்லை.

நூலகத் துறைச் சம்பளம்,​​ வாடகை,​​ நிர்வாகச் செலவுகள் அரசிடமிருந்து நேரடியாகப் பட்டுவாடா செய்யப்படுகிறது.​ ஆனால்,​​ மூலாதாரமான புத்தகங்கள் வாங்கும் தொகை இவற்றுடன் ஒப்பிட்டால் -​ எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டால் -​ ​ வேதனைதான் மிஞ்சும்.

நமது தமிழ்நாடு பொது நூலகத் துறையில் நூல்கள் வாங்குவதும்,​​ வாங்காமல் தவிர்க்கப்படுவதும் ஒரு "பெரிய புராணம்'.

அதற்கு மேல் விலை நிர்ணயம் என்பதும் விலை நிர்ணய உத்தரவைச் செயல்படுத்தும் விதமும் மிக மிக விநோதமானது;​ விசித்திரமானது.

நாளுக்கு நாள் உற்பத்திச் செலவு அதிகரித்து வந்தாலும் பொதுவாக இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை விலை உயர்வு நிர்ணயம் செய்யப்படவேண்டிய நிலை கடைப்பிடிக்கப்படுவதில்லை.​ சுமார் நான்கு,​​ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.​ விலை நிர்ணயம் செய்த பின்பும் அதைச் செயல்படுத்தத் தாராளமாக ஆண்டுகளைத் தள்ளிப்போடும் நிர்வாக யந்திரம் தங்களது சம்பளம்,​​ படிகளை எல்லாம் முன்தேதியிட்டுப் பெற்றுக் கொள்கிறது உயர்த்தப்படும்போது.

பதிப்பாளர்களுக்குப் பாராமுகமே காட்டப்படுகிறது.​ "கட்டாத விலை' ​ என்பதால் சமர்ப்பிக்கப்படுவதும் இல்லாமல்,​​ பெறப்பட்ட ஆணைக்கு நூல்கள் வழங்கப்படாமலும் தவிர்க்கப்படுகிறது.

இது இப்படியிருக்க,​​ ''எமது நூல்களுக்கு ஆணை வழங்கப்படவில்லையே?'' என முறையிடச் சென்றால் "ஆணை பற்றிப் பேசக்கூடாது' என்பதுபோல் நோட்டீஸ் ஒட்டிய கதவடைப்பு!

"இவ்வருட அலொக்கேஷன்-​ ஒதுக்கீடு அவ்வளவுதான்.​ நீங்கள் எத்தனை புத்தகங்கள் சமர்ப்பித்தீர்கள்-​ எத்தனை நூலுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று சதவீதம்தான் அளவுகோல்.

என்ன புத்தகம் வாங்கப்பட்டுள்ளது,​​ என்ன புத்தகம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

"நூல் தேர்வு' என்பது மர்மக்குகை இருட்டு ரகசியம்!

நூலகத் துறையால் புறக்கணிக்கப்படும் புத்தகங்கள் மக்களின் நேரடி கவனத்தில் ஈர்க்கப்பட்டு தொடர் பதிப்புகள் காண்கின்றன.​ ஆனால்,​​ பொது நூலகக் கிளை நூலகங்களை நாடும் வாசகருக்கு இக்கருத்துகள்-​ நூல்கள் சென்றடைய வேண்டுமென்கிற எழுத்தாளரின் சார்பில் பதிப்பாளர் முயல்கையில் இந்த சாரமற்ற பதில்களே கிடைக்கின்றன.

இவையெல்லாம் களையப்பட தமிழ்ப் பதிப்பாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பொது நூலகத் துறை மூலம் தமிழ் நூல்கள் வாங்குவதற்கென்றே-​ குறிப்பிடப்பட்ட 5 சதவீதம் மட்டுமாவது கல்வி நிதி ஒதுக்கீட்டில் வருடாந்திர நிதியாக வழங்கப்பட வேண்டும்.

நூல் தேர்வில் உரிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்-தவிர்க்கப்பட்ட -​ ஆணை வழங்கப்படாத நூல்களை -​ முதலில் உரிய அமைச்சரும் அதிகாரியும் ஆண்டுதோறும் கண்காணிக்க வேண்டும்.​ அப்படிப்பட்ட நூல்கள் தகுதியுடையவை என அறியப்பட்டால் அவற்றுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும்-மாவட்ட வாரியாக உடனுக்குடன் பதிப்பாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.​

​ மழை,​​ வெயில் இயற்கைப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாகப் புத்தகக் காட்சி நடத்த ஊருக்குள் கண்காட்சி வளாகம் அமைத்துத்தர வேண்டும்.

தில்லியில் "பிரகதிமைதான்' போல் மாநகராட்சி,​​ நகராட்சிகளில் இக் "கண்காட்சி வளாகம்' கட்டப்பட்டு ஆண்டுதோறும் இருமுறை தலா பதினைந்து நாள்களுக்குப் புத்தகக் காட்சி நடத்த குறைந்த வாடகையில் இடம் தர வேண்டும்.​ மற்ற நாள்களில் ஆண்டு முழுவதும் வகைவகையான கண்காட்சிகள் நடத்தலாம் அங்கே.

மேலே குறிப்பிட்ட,​​ மூன்று கோரிக்கைகளையும் தொலைநோக்குப் பார்வையோடு அணுகி தமிழ்ச் சமூகம் மீண்டும் தமது பாரம்பரியம் மிக்க பண்பாட்டுப் பாதையில் பீடு நடையிட்டுப் பயணிக்க தமிழக அரசு கடைக்கண் பார்வையைப் பதிக்க வேண்டும்.​ 33-வது புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளையில்,​​ எழுத்தாளர்கள் சார்பிலும்,​​ பதிப்பகங்கள் சார்பிலும்,​​ புத்தகம் படிக்கும் தமிழ் ஆர்வலர்கள் சார்பிலும் தமிழக அரசுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள் இது.​ புத்தாண்டு நல்ல ஆண்டாகப் புலரும் என்கிற நம்பிக்கையுடன்...
கட்டுரையாளர் :அகிலன் கண்ணன்
நன்றி : தினமணி

No comments: