Thursday, November 6, 2008

பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளே அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி

ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா அடுத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளே அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்றாலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியாலும் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடையப்போகிறது என்றும் முதலீட்டாளர்களிடையே தகவல்கள் கசிந்ததை அடுத்து பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. டவ் ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் ஆவரேஜ் 486.01 புள்ளிகள் ( 5.05 சதவீதம் ) குறைந்து 9,139.27 புள்ளிகளாக இருந்தது. நாஸ்டாக் கில் 98.48 புள்ளிகள் ( 5.53 சதவீதம் ) குறைந்து 1,681.64 புள்ளிகளாக இருந்தது. எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸ் 52.98 புள்ளிகள் ( 5.27 சதவீதம் ) குறைந்து 952.77 புள்ளிகளாக இருந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியை அவர் சமாளித்தாக வேண்டும். ஆனால் அவரோ ஜனவரி 20 ம் தேதிதான் அதிபராக பதவி ஏற்பார். அதுவரை பிரச்னை காத்திருக்குக்காது. அமெரிக்காவில் வேலையில்லாதேர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, வீடுகளின் மதிப்பு குறைந்திருப்பது போன்ற பிரச்னைகளை அவர் சரி செய்தாக வேண்டியிருக்கிறது.
நன்றி : தினமலர்

கடன் வட்டி விகிதம் குறைப்பு : தனியார் வங்கிகளும் சம்மதம்

கடன் மற்றும் டிபாசிட்டுகளுக்கான வட்டியை குறைக்க தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளும் முன்வந்துள்ளன. இரண்டு வாரத்திற்குள் வட்டி குறைப்பை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளன. பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பல்வேறு துறையினருக்கு எளிதாக கடன் கிடைக்கவும், அதற்கான வட்டியை குறைப்பது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இதில், வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் தலைவர்களுடன் நிதித்துறை செயலர் அருண் ராமநாதன் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய அருண் ராமநாதன் கூறுகையில், 'பல்வேறு கடன்களுக்கான வட்டியை குறைப்பதாக தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கித் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். இதன் படி, வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகன கடன் மற்றும் கம்பெனிகளுக்கான கடன் ஆகியவற்றுக்கான வட்டி குறைக்கப்படும்.
'இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைக்கு உட்பட்டு இரண்டு வாரத்திற்குள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளன' என்றார்.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சர் கூறுகையில், 'பொருளாதாரத்தின் நலன் கருதி வட்டியை குறைக்க ஒரு மித்த முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும் நாங்கள் அன்றாட நிலைமையை ஆய்வு செய்து விரைவில் இது தொடர்பான அறவிப்பை வெளியிடுவோம்' என்றார். இதற்கிடையில், பல்வேறு கடன்களுக்கான வட்டிக்கு 75 அடிப்படை புள்ளிகளை குறைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் தேர்தல், அதற்குப் பின் லோக்சபா தேர்தல் வரும் சமயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக மேற்கொண்ட சில பொருளாதார நடவடிக்கைகள், தொழில்துறையிடம் நம்பிக்கை ஏற்படுத்த உதவும்.
வெளிப்படையாக அவர், தொழிலதிபர்களிடம், 'வேலைவாய்ப்பைப் பறித்து விடாதீர்கள்' என்று கூறி அதை உத்தரவாதமாகப் பெற்றவிதம் அவரை நல்ல ஒரு பொருளாதார சிந்தனையாளர் என்று காட்டியிருக்கிறது. இதன் பலன் தேர்தலில் காங்கிரசுக்கு வரும் என்றாலும் வங்கிகள் வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கை மூலம் பணப்புழக்கத்திற்கும், பொருளாதார நெருக்கடியைத் தளர்த்துவதற்கும் பிரதமர் முன்னுரிமை தருகிறார் என்ற கருத்து எழுந்திருக்கிறது.
நன்றி : தினமலர்

Wednesday, November 5, 2008

சிங்கூரில் டாடாவுக்கு பதில் சீன ஆட்டோ நிறுவனம் ?

மேற்கு வங்கம் சிங்கூரில் இருந்து டாடா வெளியேறி விட்டதால், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது. அதில் வேறு ஏதாவது தொழிற்சாலையை துவங்க வைக்க வேண்டும் என்று அங்குள்ள ஆளும் இடது சாரி கட்சி ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் நேற்று சீன வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபர்ஸ்ட் ஆட்டோமொபைல் வொர்க்ஸ் என்ற நிறுவனம் கோல்கட்டா வந்து அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த நிறுவனம், உலகில் 19 நாடுகளில் தொழிற்சாலை வைத்திருக்கும் உரால் இந்தியா லிமிடெட் என்ற இன்னொரு பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து, சிங்கூரில் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ முயற்சி செய்வதாக தெரிகிறது. எனவே நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது உரால் இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ஷராப்பும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்திற்குப்பின் ஷராப், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, நாங்கள் ஃபர்ஸ்ட் ஆட்டோமொபைல் வொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிங்கூரில் தொழிற்சாலை அமைக்க அதிக ஆவலுடன் இருக்கிறோம். அவர்களுக்கும் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து துவங்குவதாக இருக்கும் தொழிற்சாலைக்காக கல்யாணி, கராக்பூர், ஹால்டியா போன்ற இடங்களை பார்வையிட இருக்கிறோம் என்றார். இது குறித்து அரசு அதிகாரிகள் பேசியபோது, மேலே குறிப்பிட்ட இடங்களை அவர்கள் பார்வையிட இருந்தாலும் எங்கள் மனதில் சிங்கூர்தான் இருந்துகொண்டிருக்கிறது. சீன நிறுவனம் ஆரம்பத்தில் பெரிய டிரக் மற்றும் மினி பஸ்களை மட்டுமே தயாரிக்கும். இந்த கூட்டு நிறுவனத்திற்கு 600 ஏக்கர் நிலம் மட்டுமே தேவையானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : 500 புள்ளிகளை இழந்தது

மும்பை பங்கு சந்தை மீண்டும் ஒரு சோதனையான நாளை சந்தித்திருக்கிறது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி 5 சதவீதத்தை இழந்திருக்கிறது. சர்வதேச பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்திய பங்கு சந்தையையும் பாதித்தது. இன்றும் அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டன. ஆயில், மெட்டல், ரியல் எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ், டெலிகாம் துறை அதிகம் பாதிக்கப்பட்டன. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், செய்ல், டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் அதிகம் வீழ்ச்சி அடைந்திருந்தன. காலை வர்த்தக ஆரம்பத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகளும் நிப்டி 90 புள்ளிகளும் உயர்ந்திருந்தாலும், காலை 10.40 க்குப்பின் குறைய துவங்கியது. அது அப்படியே தொடர்ந்து மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 511.11 புள்ளிகள் ( 4.81 சதவீதம் ) குறைந்து 10,120.01 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.தேசிய பங்கு சந்தையில் நிப்டி 147.15 புள்ளிகள் ( 4.68 சதவீதம் ) குறைந்து 2,994.95 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்

இந்தியாவில் சிமென்டிற்கான டிமாண்ட் குறைந்தது

அக்டோபர் மாதத்தில் சிமென்டிற்கான டிமாண்ட் குறைந்திருக்கிறது. இதனால் பெரும்பாலான சிமென்ட் கம்பெனிகள் உற்பத்தியை குறைத்திருக்கின்றன. இது, இந்தியாவில் உற்பத்தி துறையில் சரிவு ஏற்பட்டு வருவதை காட்டுவதாக சொல்லப்படுகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 1.51 மில்லியன் டன் சிமென்ட் உற்பத்தி செய்திருந்த ஹோல்சியம் குரூப் கம்பெனியை சேர்ந்த அம்புஜா சிமென்ட்ஸ், இந்த வருடம் அக்டோபரில் 1.45 மில்லியன் டன் சிமென்ட் தான் உற்பத்தி செய்திருக்கிறது. அதன் சப்ளையும் குறைந்திருக்கிறது. ஹோல்சியம் குரூப்பை சேர்ந்த இன்னொரு பிரபல சிமென்ட் கம்பெனியான ஏ.சி.சி., யின் உற்பத்தியும் 1.13 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த அக்டோபரில் 1.76 மில்லியன் டன்களாக இருந்த சிமென்ட் உற்பத்தி, இந்த அக்டோபரில் 1.74 மில்லியன் டன்களாக குறைந்திருக்கிறது. சப்ளையும் 3.4 சதவீதம் குறைந்து, 1.75 மில்லியன் டன்களில் இருந்து 1.70 மில்லியன் டன்களாகி இருக்கிறது. ஆனால் இன்னொரு பிரபல சிமென்ட் கம்பெனியான ஆதித்ய பிர்லா குரூப்பை சேர்ந்த கிராஸிம் இன்டஸ்டிரீஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், 1.93 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கிறது. இந்தியாவில் சிமென்ட் துறையில் 55 சதவீத மார்க்கெட் ஷேர், ஹோல்சியம் குரூப் மற்றும் பிர்லா குரூப் கம்பெனிகளிடம் தான் இருக்கிறது.
நன்றி தினமலர்


கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அல்ல. சவுதி அரேபியா, எண்ணெய் ஏற்றுமதியின் அளவை குறைத்திருப்பதுதான் காரணம் என்கிறார்கள்.லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை, கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவாக நேற்று பேரலுக்கு 5.43 டாலர் உயர்ந்து 65.91 டாலராகி விட்டது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 69.88 டாலராக உயர்ந்து விட்டது. உலகில் அதிகம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா, அது ஏற்றுமதி செய்யும் எண்ணெய்யின் அளவில், நாள் ஒன்றுக்கு 9,00,000 பேரல்களை குறைத்திருக்கிறது. யூரோவுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்திருப்பதும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததற்கு காரணம் என்கிறார்கள். கடந்த மாதம் கூடிய ஓபக் மாநாட்டில், நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேரல்கள் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று உறுப்பு நாடுகளை அது கேட்டுக்கொண்டது. அது எப்போதிருந்து முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரியவில்லை. இருந்தாலும் கடந்த ஜூலை மாதத்தில் பேரலுக்கு 147 டாலர் வரை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை அதன் பின் மளமளவென குறைய துவங்கி, 60 டாலர்களை ஒட்டி வந்திருந்தது. இப்போது கொஞ்சம் உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்

Tuesday, November 4, 2008

இந்தியாவுக்கு பாதிப்பு தான்: மன்மோகன் வெளிப்படை

'சர்வதேச நிதி நெருக்கடியால், இந்தியாவிற்கு ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், வங்கிகளில் பொதுமக்கள் வைத்துள்ள டிபாசிட்டுகள் பாதுகாப்பாக உள்ளன. பொருளாதார வளர்ச்சியை பாதுகாக்க, அரசு மேலும் நடவடிக்கைகளை எடுக்கும்' என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலில் இருந்து இந்தியாவை மீட்கவும், தொழில் துறையின் நம்பிக்கையை பலப்படுத்தவும், முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ், திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் பங்கேற்றனர்.அசோசெம் சார்பில் சாஜன் ஜிண்டாலும், சி.ஐ.ஐ., சார்பில் கே.வி.காமத், எப்.ஐ.சி.சி.ஐ., சார்பில் ராஜிவ் சந்திரசேகரும் பங்கேற்றனர். டி.எல்.எப்., நிறுவனத்தின் தலைவர் கே.பி.சிங், ரத்தன் டாடா, அனில் அம்பானி, முகேஷ் அம்பானி(ரிலையன்ஸ்), சுனில் மிட்டல்(பாரதி) ஆனந்த் ஜி மகேந்திரா (மகேந்திரா அண்ட் மகேந்திரா), எச்.டி.எப்.சி., சேர்மன் தீபக் பரேக், ஐ.டி.சி., சேர்மன் தேவேஷ்வர் உட்பட பல தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இந்தியாவை ஓரளவு பாதித்துள் ளது. இருப்பினும், இதன் தாக்கம் இனி வரும் காலங்களில் கடுமையாக இருக்கலாம் அல்லது நீடித்து இருக்கலாம். இதன் மூலம் நமது வங்கிகள், கம்பெனிகள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச அளவில் தற்போதுள்ள நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்களின் ஆர்வத்தைக் குறைத்துள் ளன.நமது வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. வங்கிகளில் போட்டுள்ள பொதுமக்களின் டிபாசிட்டுகள் பாதுகாப்பாக உள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க, வங்கிகளுக்கு ஆதரவு அளிக்க அரசு தயாராக உள்ளது. பணப்புழக்கத்திற்காக சமீபத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும், குறுகிய கால கடன்களுக்கான ரெபோ ரேட்டும் குறைக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு வங்கிகள் நியாயமான விகிதங்களில் மேலும் கடன்களை வழங்க வேண்டும்.பொருளாதார வளர்ச்சியைப் பாதுகாக்க, மேலும் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. தேவைப்பட்டால், கட்டாய மற்றும் நிதிக் கொள்கைகளை கொண்டு வரவும் அரசு தயாராக உள்ளது. அன்றாடம் நிலைமைகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேவைப் பட்டால், மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு தயங்காது. சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிக்க தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்கும் படி, சர்வதேச நிதி அமைப்புகளை இந்தியா கோரும். மற்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து, சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு பெறுவதில் முழு மூச்சாக செயல்படுவோம்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சமாளிக்க, தொழிற்துறையினர் மனந்தளராமல் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். இது, எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடும். இக்கட்டான சூழ்நிலையை இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். நமது சேமிப்பும், மூலதன வீதமும் கடந்த காலங்களில் மிக வலுவாக இருந்துள்ளன. அதனால் தான் இந்தளவிற்கு நாம் தாக்குப் பிடித்து நிற்க முடிகிறது. அரசும், தொழிற்துறையும் முழுமையான மனதுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு சவால்களை சந்திக்க வேண்டும். இந்த நேரத்தில், நமது அனைத்து முயற்சிகளும் செலவைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்குவதாக இருக்க வேண் டும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.இக்கூட்டத்தில் தொழிற்துறையினரிடம், பணப் பற்றாக்குறை வராது என்று பிரதமர் உறுதியளித்ததாக தொழிலதிபர் சாஜன் ஜிண்டால் கூறினார். தொழிற்துறையை அரவணைக்க உயர்மட்ட அதிகார கமிட்டி: பணப்புழக்கம் உட்பட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் தொழிற்துறையினருக்கு உதவுவதற்காக அரசு, உயர்மட்ட கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.பிரதமர் நேற்று கூட்டிய தொழிற்துறையினர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நிருபர்களிடம் வர்த்தகத் துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது:சர்வதேச நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கவும், வேலை இழப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்கும் நோக்கில் உயர்மட்ட கமிட்டி ஒன்றை அரசு அமைத்துள்ளது.தொழிற்துறையினருக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளை தீர்வு காண்பதற்கு இக்கமிட்டி வழி காணும். குறிப்பாக அரசுக்கும், தொழிற்துறைக்கும் இக்கமிட்டி முக்கிய பாலமாகச் செயல்படும்.இக்கமிட்டிக்கு பிரதமரோ அல்லது நிதி அமைச்சரோ தலைமை ஏற்கக் கூடும். வீடு மற்றும் கட்டுமானத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு அரசு சாதகமாக நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு பிள்ளை கூறினார்.அதே சமயம், சிகாகோ பல்கலைப் பேராசிரியர் ரகுராம் ராஜன், பிரதமரின் கவுரவ பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நன்றி : தினமலர்