Friday, July 24, 2009

நாய் வால் நிமிராது...

மேற்கு வங்க மாநிலம் லால்கர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல்போய் அவர்களை முறியடிக்க மத்திய, மாநில அரசுகளின் போலீஸ் படையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கும் வரையில் அப்பகுதியில் என்ன நடக்கிறது எனும் விவரம் இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதன் முழுப் பரிமாணத்தையும் நாம் புரிந்துகொண்டால் நம் நாட்டிற்கு வெளியிலிருந்து வரும் ஆபத்தைவிட உள்ளே உருவாகியுள்ள ஆபத்து அதிகம் என்ற எண்ணமே மிஞ்சும்.

இடது கம்யூனிஸ்ட் கட்சி தீவிர ஒழுக்க சீலர்களான பல தலைவர்களைக் கொண்டது என்றும், அடித்தட்டு மக்களின் நல்வாழ்விற்கு வழிகோலும் வகையிலான ஆட்சி முறையை கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நிறுவியுள்ளனர் எனவும் நம்மில் பலர் நினைத்து வந்தோம். ஆனால் லால்கர் பகுதி அடங்கிய மேற்கு மிதுனபுரி மாவட்டத்திலுள்ள சுமார் 50 கிராமங்களில் மாநில அரசின் நிர்வாகம் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்வசம் இருந்தது என்பது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. கந்தபகாரி எனும் இடத்தில் 2005-ம் ஆண்டுமுதல் போலீஸ் நிலையம் மூடப்பட்டுக் கிடக்கிறது எனும் உண்மை இப்போதுதான் வெளிவருகிறது.

1967-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் முதன்முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கூட்டணி அரசு மூலம் பதவி ஏற்றது. உணவுப்பொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியன தலைவிரித்தாடியதாகக் கூறி நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் பலியாகி அதன்பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி தோற்கடித்தது. தமிழகத்தில் அரிசித் தட்டுப்பாடு, இலவச அரிசி வாக்குறுதி அளித்து 1967-ல் திமுக அரியணை ஏறியதை நினைவில் கொள்க. அதேதான் மேற்கு வங்கத்திலும் அரங்கேறியது.

இதே காலகட்டத்தில் நக்சல்பாரி எனும் இடத்தில் மேற்கு வங்க மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினர், தீவிரவாதக் கொள்கைகளை இடது கம்யூனிஸ்ட் கட்சியினர் கைவிட்டுவிட்டு பதவி சுகம் தேடி ஓடி மாநில அரசில் பங்கேற்றுள்ளனர் எனக் குற்றம் சாட்டி நக்சலைட்டுகள் என நாம் இன்று அழைக்கும் தீவிரவாத இயக்கத்தை ஆரம்பித்தனர்.

சாரு மஜும்தார் எனும் தலைவர் அன்றைய சீனத் தலைவர் மாசேதுங்கின் கொள்கைகளே உண்மையான கம்யூனிஸம் மலரத் தேவை எனக் கூறி வர்க்கப் போராட்டமே தங்கள் கொள்கை என அறிவித்தார். அதன்படி நிறைய நிலச்சுவான்தார்களும், வியாபாரிகளும் ""தொழிலாளர்களின் எதிரிகள்'', "பணமுதலைகள்' எனப் பெயரிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஒரு சில கம்யூனிஸ்ட் கட்சியினரும் இனப் போராட்ட எதிரிகள் எனப் பட்டியலிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

நக்ஸல்பாரிகள் நடத்திய இந்தப் போராட்டத்தின் மையப் பிரச்னை நிலங்களை, உழுபவர்களுக்கு, அதாவது விவசாயக் கூலிகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான்.

1971 தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியிலிருந்து பிரிந்து பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸýடன் கைகோர்த்துக் கொள்ள, தனிப்பெரும்பான்மை பலத்துடன் சித்தார்த்த சங்கர்ரேயின் தலைமையில் ஆளும் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, நக்சல்பாரி இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு உதவியது. சித்தார்த்த சங்கர் ரேயின் அடக்குமுறை ஆட்சி, ஒருபுறம் நக்சல்பாரிகளைச் செயலிழக்க வைத்தது எனினும், இன்னொருபுறம், இடதுசாரிகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தியது. 1977-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகள் ஐக்கியம் ஏற்பட்டு, இடது முன்னணி ஆட்சியையும் பிடித்தது.

1977-ல் இடது கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடன், நிலத்தை ஏழை விவசாயக் கூலிகளுக்கும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் தாராளமாகப் பிரித்து அளித்தது. மத்திய காங்கிரஸ் அரசின் நிலச்சீர்திருத்தச் சட்டம் இதற்கு வெகுவாக உதவியது. 40 சதவிகித மேற்கு வங்க மக்களுக்கு நிலம் பட்டுவாடா செய்யப்பட்ட பெருமை அன்றைய முதல்வர் ஜோதிபாசுவைச் சாரும்.

இதுபோன்ற பரவலான நிலப் பங்கீடு, அதேநேரத்தில் நம் நாட்டில் நடந்த பசுமைப்புரட்சியையும், சிறிய நிலங்களில் நிறைய வேலையாள்கள் தீவிர விவசாயம் செய்ததையும் உள்ளடக்கி அரிசி உற்பத்தியை அமோகமாக அதிகரித்தது. விளைவு, கிராமப்புறங்களில் சிறு குறு விவசாயிகளின் வளர்ச்சி, நிறைய விவசாயக் கூலிகள் கைநிறையச் சம்பளம் பெற்றதால் உருவான கிராமப்புற சுபீட்சம்.

இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி இதுபோன்ற நற்செயல்களால் மேற்கு வங்க மாநிலத்தில் அசைக்க முடியாத ஓர் இடத்தைப் பிடித்தது. நகர்ப்புறங்களில் தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தில் மாதச் சம்பளம் பெறுபவர்களும் தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களாக மாறியதால் எந்தத் தேர்தலானாலும் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியே உருவானது. இதன் உச்சகட்டமாக 2006-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் புத்ததேவ் பட்டாச்சார்ய தலைமையில் இடதுசாரிக் கூட்டணி 294 தொகுதிகளில் 235 தொகுதிகளை வென்றது.

ஆனால், 2008-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி முதல்வர் புத்ததேவ் அன்றைய மத்திய உருக்குத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுடன் லால்கர் பகுதியில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க எளிமையான முறையில் ரிக்ஷாவில், அவருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக நிறைய கார்கள், ஜீப்கள் தொடரப் பயணித்தபோது, அப்பகுதி மக்களால் எள்ளி நகையாடப்பட்டார். மேலும் அன்று அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கண்ணி வெடிகுண்டுகள் அவர் சென்று வந்த பாதையில் வெடித்தன. இனியும் வாளாவிருக்க முடியாது எனும் நிலைக்குத் தள்ளப்பட்ட, மேற்கு வங்க இடதுசாரி அரசு அதன்பின் மத்திய அரசுடன் கலந்து பேசி இரண்டு அரசுகளின் காவல் படைகளும் தாக்குதல்களை ஆரம்பித்து அரசின் பிடியிலிருந்து போய்விட்டிருந்த பல பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு மாநில அரசின் பல துறைகளும் செயலிழந்து காவல்நிலையங்கள் மூடப்பட்டு ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மக்களிடம் வரி வசூல் செய்து ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். மாநிலத்தின் ஒரு பகுதி மேற்கு வங்க அரசின் கட்டுப்பாடில் இல்லை எனும் இந்த அதிர்ச்சி தரும் செய்தியை தென் மாநிலத்தின் எந்த ஒரு பிரஜையாலும் நம்பவே முடியாது.

கடந்த ஜூன் 18-ம் தேதி லால்கர் போலீஸ் ஸ்டேஷனைக் கைப்பற்றி அதன் இரும்பு வாசல் கதவுகள் திறக்கப்பட்டபோது மாநில அரசு மறுபடியும் இப்பகுதிக்குள் நுழைந்து தனது நிர்வாகத்தை ஏழு மாதங்களுக்குப் பிறகு நிலைநிறுத்தி இருப்பது உலகிற்கு உணர்த்தப்படுகிறது என பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டது.

லால்கர் போலீஸ் ஸ்டேஷனைக் கைப்பற்றிய போலீஸ் படைக்கு தலைமை தாங்கிய போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீண் குமார் அளித்த பேட்டியில், மத்திய அரசின் கோப்ரா கமாண்டோக்கள் முந்தைய பல இரவுகளில் ஜிட்கா எனும் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சாலைகளில் வைத்திருந்த கண்ணி வெடிகளை அகற்றியதனால்தான் மத்திய, மாநில போலீஸ் படை முன்னேறி லால்கர் போலீஸ் ஸ்டேஷனைக் கைப்பற்ற முடிந்தது எனவும், அதன்பின் செய்ய வேண்டிய முதல்பணி அரசு நிர்வாகம் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டதால் அதை நம்பி அப்பகுதி மக்கள் தைரியமாக வாழலாம் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனவும் கூறியுள்ளார்.
""மக்கள் தீவிரவாதிகளுக்குப் பயந்து போய் தங்களை மனிதக் கேடயமாக அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது'' எனப் பல துண்டுப் பிரசுரங்களை ஹெலிகாப்டர்கள் லால்கர் பகுதியில் வீசிச் சென்றது நமது ஜனநாயகத்திற்கு இழுக்கல்லவா எனும் கேள்வி எழுகிறது.

போலீஸ் படையினரின் தாக்குதலுக்கு எதிராக பொதுமக்களைத் தீவிரவாதிகள் மனிதக் கேடயமாக உபயோகப்படுத்தப்படுவதும், லால்கர் பகுதியில் அரசின் எல்லாத் துறைகளும் இழுத்து மூடப்பட்டுவிட்டதும், எல்லா சாலைகளிலும் குறுக்குக் குழிகள் வெட்டப்பட்டு எந்த வாகனமும் செல்ல முடியாதபடி செய்யப்பட்டதும், எல்லா போலீஸ் ஸ்டேஷன்களின் வெளிக்கதவுகளும் பூட்டப்பட்டு போலீஸôர் ஸ்டேஷன்களுக்குப் போகாமல் இருந்துவிட்டதும், போலீஸ் உடையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாடி சட்டம் ஒழுங்கினை பரிபாலனம் செய்ததும், பல இடது கம்யூனிஸ்ட் குட்டித் தலைவர்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டதும் இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் மாசேதுங்க் பாணியில், மாவோயிஸ்டுகள் வர்க்க எதிரியாக மேற்கு வங்க முதல்வர் புத்ததேவை தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை வழங்கி அதை நிறைவேற்ற 2008-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி கண்ணி வெடியை அவர் சென்று திரும்பிய பாதையில் வெடிக்கச் செய்ததும் எந்த வகையான நிர்வாகம் மேற்கு வங்கத்தில் நடந்து வருகிறது என்பதை நமது இடதுசாரி கம்யூனிஸ்ட் தோழர்கள் நமக்கு விளக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நிர்வாகம் தொலைந்துபோய் கிராமப்புற ஏழைகள் இடதுசாரிகளை வெறுத்து தோற்கடிக்கும் நிகழ்வு மேற்கு வங்கத்தில் நடப்பது ஏன்? கம்யூனிஸம் வெற்றியடைந்து சோஷலிசம் மலர்ந்தபின், நிர்வாகம் தேவையற்றது என்கிற மனப்போக்குடன் அவர்கள் செயல்படுவதால் நிர்வாக இயந்திரம் செயலிழந்து, தேசம் சிதறிவிட வழிகோலும் (‘‘The State will wither away’’) எனக் கூறுவார்கள். அதுபோல்தான் மேற்கு மிதுனபுரில் நிர்வாகம் செயலிழந்துவிட்டதோ?
இதுபோன்ற நிலைமை ஓரிரு நாள்களில் உருவாகிவிட முடியாது. பல வருடங்களாக நடைபெற்றுவரும் சீர்கேட்டினை உளவுப் பிரிவின்மூலம் அறிந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை என்னவென்பது எனும் கேள்வி எழுகிறது. இதுபோல் சட்டமுறையிலான ஆட்சி முறை தகர்ந்துபோன பிற இந்தியப் பகுதிகள் யாவை என அறியும் உரிமை மக்களுக்கு உண்டு. அதை ஒரு வெள்ளை அறிக்கை மூலம் வெளிப்படுத்த வேண்டும் இன்றைய மத்திய அரசு.

மேற்கு வங்கத்தில் அரங்கேறி இருப்பது, அரசு இயந்திரம் செயலிழந்ததால் ஏற்பட்ட அபாயகரமான நிலைமை. இதற்கு மூல காரணம், இடதுசாரி ஆட்சியில் கட்சிக்கும் ஆட்சிக்கும் வேறுபாடு இல்லாத நிலைமைதான். நிர்வாகத்திலும் சரி, காவல்துறையிலும் சரி, கட்சி உறுப்பினர்கள் மற்றும் அனுதாபிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள கட்சித் தலைவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப செயல்படத் தொடங்கினார்கள். கட்சி வைத்ததுதான் சட்டம் என்றாகிவிட்ட பிறகு, மக்கள் மாற்றுக் கருத்தை வெளியிட முடியாத நிலைமை.

இது ஏறத்தாழ தமிழகத்தில் ஆளும் கட்சியின் வட்டமும், மாவட்டமும் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதுபோல என்று கூறலாம். மாவட்டச் செயலாளருக்கு அடிபணியாத மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் பந்தாடப்படுவதுபோல மேற்கு வங்கத்திலும் ஆரம்பத்தில் நடந்தது.

நல்ல வேளையாகத் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்ததால், ஒட்டுமொத்த நிர்வாகமும் ஒரே கட்சியின் கட்டுப்பாட்டில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பித்தது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இடதுசாரிக் கூட்டணி மட்டுமே ஆட்சியில் தொடர்ந்ததும், மார்க்சிஸ்ட் தவிர ஏனைய கூட்டணிக் கட்சிகள் பெரிய அண்ணனின் அடாவடிக்கு அடிபணிந்து வாய்மூடி மௌனியானதும், நிர்வாகம் செயலிழந்துவிட வழிகோலியது.
தொடர்ந்து இடதுசாரிக் கூட்டணி தேர்தல்களில் வெற்றி பெற்றதற்குக்கூட இந்த நிர்வாக இயந்திரம் உதவியிருக்க வாய்ப்பிருக்கிறது. மக்கள் மத்தியில் இதுவே அதிருப்தி அலையை எழுப்பி இருக்கக் கூடும். இந்த அதிருப்தி அலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள் மாவோயிஸ்டுகள் என்பதுதான் உண்மை. விளைவு? இடதுசாரித் தலைவர்களும் கட்சிக்காரர்களும், அவர்களுக்கு சேவகம் செய்த காவல்துறை உள்ளிட்ட நிர்வாக இயந்திரமும் அடித்து விரட்டப்பட்டனர்.

கட்சியின் கட்டுப்பாடில் அரசு என்று இறுமாப்புடன் இருந்த மார்க்சிஸ்ட் தலைமை, தனது கட்டுப்பாடில் இருந்த ஆட்சியை மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாடில் கைநழுவவிட்ட அசட்டுத்தனம்தான் மேற்கு வங்கத்தில் அரங்கேறி இருக்கிறது. கட்சியையும் ஆட்சியையும் பிரித்துப் பார்த்து, நிர்வாகத்தைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்காமல் போனால், எந்த ஓர் அரசும் வெகுஜன விரோத அரசாக மாறும் என்பதை மேற்கு வங்கம் உணர்த்தி இருக்கிறது.

வட்டம், மாவட்டம் என்று தங்களைச் சுற்றி ஒளிவட்டம் போட்டுக் கொண்டு வளையவரும் நம்ம ஊர் தானைத் தலைவர்கள் இதைப் பார்த்தாவது பாடம் படிப்பார்களா என்றெல்லாம் அனாவசியமான கேள்விகளைக் கேட்டு அசடு வழியக் கூடாது. நாய் வால் நிமிராது என்பது இயற்கையின் நியதி!
கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி

No comments: