Friday, July 24, 2009

இந்தியன் வங்கி 52.40 சதவீதம் வளர்ச்சி

''இந்தியன் வங்கி இந்த ஆண்டின் முதல் காலாண்டு முடிவில், 331.66 கோடி ரூபாய் மொத்த லாபம் ஈட்டி உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 52.40 சதவீதத்தை எட்டி உள்ளது,'' என வங்கியின் தலைவரும், அதன் நிர்வாக இயக்குனருமான சுந்தரராஜன் கூறினார். இந்தியன் வங்கி இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான முடிவை நேற்று வெளியிட்டது. இது குறித்து சுந்தரராஜன் கூறியதாவது: இந்தியன் வங்கி இந்த ஆண்டின் முதல் காலாண்டு முடிவில் 331.66 கோடி ரூபாய் மொத்த லாபம் ஈட்டி உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 52.40 சதவீதத்தை எட்டி உள்ளது. மேலும், இந்தியன் வங்கி மூலதன அடிப்படையில் முதல் காலாண்டின் முடிவில் 13.68 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டை ஒப்பிடும்போது 12.06 சதவீதத்தை விட அதிகம். இந்தியன் வங்கி எல்லா நிலைகளிலும் தனிச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, வங்கியின் அலுவல் 20.63 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கி முதலீடு 62,215 கோடி ரூபாயிலிருந்து 76,717 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 23.31 சதவீதம் அதிக வளர்ச்சி. இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்., கார்டு பயன்பாடு முதல் காலாண்டின் முடிவான ஜூன் 30ம் தேதியோடு 34.39 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. கல்விக் கடன் வழங்குவதில் இந்தியன் வங்கி முன்னிலை வகிக்கிறது. 2009ம் ஆண்டின் முதல் காலாண்டு இறுதி வரை 143.76 கோடி ரூபாய்க்கு மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி உள்ளது. இவ்வாறு சுந்தரராஜன் கூறினார். இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : தினமலர்


No comments: