Wednesday, April 1, 2009

சிங்கூரில் நானோ கார் தயாரிக்கப்படும் : மேற்கு வங்க அரசு அதிகாரி

டாடாவின் நானோ கார் விரைவில் சிங்கூரில் இருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசின் முக்கிய தொழில்களுக்கான செயலாளர் சபாசாச்சி சென் கோலாலம்பூரில் தெரிவித்தார். கடந்த வருடத்தில்தான் டாடா மோட்டார்ஸ், சிங்கூரில் இருந்து தொழிற்சாலையை குஜராத்துக்கு மாற்றியது. சிங்கூரில் தொழிற்சாலை அமைத்த டாடா மோட்டார்ஸ், அங்குள்ள திரினாமூல் காங்கிரஸ் கட்சியினரின் கடும் எதிர்ப்பால் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிற்சாலையை குஜராத்தில் உள்ள சனாட் என்ற இடத்திற்கு மாற்றியது. இருந்தாலும் அவர்கள் அமைத்த தொழிற்சாலை சிங்கூரில் அப்படியே தான் இருக்கிறது. அங்கு கார் தயாரிப்பு வேலைகள் எதுவும் நடக்கவில்லை. அவ்வளவுதான். இந்நிலையில் மலேஷிய தலைநகர் சென்றிருக்கும் மேற்கு வங்க அரசின் முக்கிய தொழில்களுக்கான துறை செயலர் சென், நாங்கள் டாடாவின் முதல் தரமான நானோ தொழிற்சாலையை இழந்து விட்டோம். விரைவில் சிங்கூர் தொழிற்சாலையில் இருந்து அந்த கார் தயாரிக்கப்படும். ஏனென்றால் உலகின் மிக மலிவு விலை காருக்கு நான்கு முதல் ஐந்து தொழிற்சாலைகள் வரை தேவைப்படும் என்றார். இருந்தாலும் எப்போது இது நடக்கும் என்று சொல்லவில்லை. அவர் மேலும் தெரிவித்தபோது, மற்ற கம்பெனியினர் குறைந்த விலையில் சிறிய காரை அறிமுகப்படுத்தும் முன் நாம் அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் விரும்பியது. தாமதம் ஆகக்கூடாது என்று நினைத்தனர். இருந்தாலும் சிங்கூரில் நடந்த பிரச்னையை அவர்கள் மென்மையாகத்தான் கையாண்டார்கள். டாடாவுக்கு உலக அளவில் நல்ல மதிப்பு இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


No comments: