Monday, November 3, 2008

25 சதவீதம் பேரை 'வீட்டுக்கு அனுப்ப' ஜரூர்: எக்கச்சக்க சம்பளம் கொடுத்த கம்பெனிகள்

கைநிறைய சம்பளம் தந்து ஆட்களை இழுத்த பல தனியார் கம்பெனிகள் ஆட் குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளன; உருக்கு, கட்டுமானம், விமானத்துறை, சாப்ட்வேர், பிபிஓ.,க்கள், கால் சென்டர்கள் உட்பட பல நிறுவனங்கள், 25 சதவீத ஊழியர்களை குறைக்க தயாராகி விட்டன.அமெரிக்காவை தாக்கிய 'நிதி நெருக்கடி' புயல், இந்தியாவை அதிகமாக தாக்கவில்லை என்றாலும், ஓரளவு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது மட்டும் உண்மை.பல தொழில்களில் முதலீடுகளை முடக்கிய தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க நிறுவனங்கள் 'பின் வாங்கி' விட்டதால் நிலைமை மோசமாகி விட்டது. அதுபோல, அமெரிக்க நிறுவனங்களில் இந்திய கம்பெனிகள் போட்ட பணமும் 'முடங்கி' உள்ளதால் சில கம்பெனிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.இதுபோக, அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகளில் உள்ள பெரிய கம்பெனிகளின் பணிகளை செய்து வந்த சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் அடி விழுந்துள்ளது. அந்த கம்பெனிகளே திவால் ஆகி விட்டதால், இந்த இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு பணிகளை செய்வதற்கான ஆர்டரும் வருவதில்லை; ஏற்கனவே செய்த பணிகளுக்கான வருவாயும் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.இப்படி பல காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கிய இந்திய சாப்ட்வேர், கட்டுமான, நிதி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக் கையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது. உருக்கு, சாப்ட்வேர், பி.பி. ஓ.,க்கள், கால் சென்டர்கள், சிமென்ட், ரியல் எஸ்டேட் உட்பட பல துறை கம்பெனிகளில் 25 சதவீதம் வரை ஆட் களை குறைக்க திட்டமிடப் பட்டுள்ளன.தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் குறைப்பு குறித்து மனித வள மேம்பாட்டு ஆய்வாளர்கள் கூறுகையில், 'சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு முன்பே, சில கம்பெனிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், தாமதம் ஆனாலும், இப்போது அடுத்த இரண்டு மாதங்களில் குறைந்த அளவு ஊழியர்களை வெளியேற்ற பட்டியல் எடுக்கும் பணி ஆரம்பித்து விட்டது' என்று தெரிவித்தனர்.திறமைக் குறைவு, பணியில் சுணக்கம், அடிக்கடி விடுப்பு எடுப்பது போன்ற காரணங்களை காட்டி, ஊழியர்களை பட்டியலிட்டு வேலையில் இருந்து நீக்க கம்பெனிகள் முடிவு செய் துள்ளன. அதற்கேற்ப, பத்தாண்டு பணியில் இருக்கும் ஊழியர்கள் குறைந்தபட்சம் 20 சதவீதம் பேர் அடிக்கடி விடுப்பு எடுப்பது, திறமை குறைவாக வேலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கம்பெனியும் அதிருப்தி அடைந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ளது போல, ஊழியர்களை நீக்கும் அதிரடி போக்கு இந்தியாவில் ஏற்படுத்தாமல் தடுக்க , தொழில், வர்த்தக கூட்டமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. வேலையில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் காக்க உரிய நிவாரண நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

No comments: