Wednesday, June 24, 2009

பங்கு சந்தையில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய எல்.ஐ.சி.,திட்டம்

பங்கு சந்தையில் ரூ.50,000 கோடியை இந்த நிதி ஆண்டில் முதலீடு செய்ய எல்.ஐ.சி.,ஆஃப் இந்தியா திட்டமிட்டிருக்கிறது. கடந்த வருடம் நாங்கள் ரூ.40,800 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தோம். இந்த வருடம் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம் என்றார் எல்.ஐ.சி.,யின் மேலாண் இயக்குனர் தாமஸ் மேத்யூ. இந்த நிதி ஆண்டில் இதுவரையிலும் எல்.ஐ.சி., ரூ.8,000 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருக்கிறது. இது தவிர அரசுத்துறை பத்திரங்களிலும், கார்பரேட் கடன் பத்திரங்களிலும் எல்.ஐ.சி., முதலீடு செய்திருக்கிறது. நேற்று எல்.ஐ.சி.,யின் சேர்மன் விஜயன் இது குறித்து பேசியபோது, இந்த நிதி ஆண்டில் நாங்கள் 20 சதவீத கூடுதல் பிரீமியம் வருவாயை எதிர்பார்க் கிறோம். புது பிரீமியம் மூலம் கிடைக்கும் வருவாயை பொறுத்தவரை, 2008 - 09 நிதி ஆண்டில் 10 சதவீதம் குறைந்திருந்தது. அது இந்த நிதி ஆண்டில் 25 சதவீதம் உயரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். 2008 - 09 நிதி ஆண்டில் எல்.ஐ.சி.,பிரீமியம் வருவாயாக ரூ.1,55,000 கோடியை பெற்றிருந்தது. அதில் புது பிரீமியம் வருவாய் ரூ.52,000 கோடியும் அடங்கும்.
நன்றி :தினமலர்


பஜாஜ் அறிமுகப்படுத்திய 220 சிசி பல்சர்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன் புதிய 220 சிசி பல்சர் மாடல் பைக்கை நேற்று டில்லியில் அறிமுகம் செய்தது. 21.4 பிஎஸ் பவருடன் வெளிவரும் இந்த புதிய பைக்கின் விலை ரூ.70,000. இதன் அறிமுக விழாவில் பேசிய பஜாஜ் ஆட்டோவின் சி.இ.ஓ.,( இரு சக்கர வாகனம் ) ஸ்ரீதர், நாங்கள் அதிக மைலேஜ் கொடுக்க கூடிய இஞ்சின்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். அவைகளை கொண்டு இந்த வருடத்திற்குள் மேலும் இரண்டு பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார். மேலும் பல்சர் பிரியர்களுக்காக, அதில் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி அதன் மேம்படுத்தப்பட்ட மாடல்களை வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறோம் என்றார். இப்போது வெளியிட்டிருக்கும் பல்சர் 220 சிசி பைக் தான் இப்போதைக்கு இந்தியாவில் அதிக வேகமாக போகக் கூடிய பைக்காக இருக்கும் என்று சொன்ன அவர், உலகிலேயே அதிக மைலேஜ் கொடுக்க கூடிய டிடிஎஸ் -எஸ்ஐ 2.0 பைக்கை அடுத்த மாதம் வெளியிட இருக்கிறோம் என்றார். பஜாஜ் ஆட்டோவின் மேலாண் இயக்குனர் ராஜிவ் பஜாஜ் இது பற்றி பேசுகையில், நாங்கள் வருடத்திற்கு 2.50 லட்சம் பைக்குகளை விற்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்


டாடாவின் நானோ காரை பெறுவதற்காக 1.55 லட்சம் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பு

உலகின் மிக மலிவான கார் என்று சொல்லப்படும் டாடா மோட்டார்ஸின் நானோ காரை பெறுவதற்காக, 1.55 லட்சம் வாடிக்கையாளர்கள் கம்ப்யூட்டர் உதவியுடன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு அடுத்த மாதத்தில் இருந்து நானோ சப்ளை செய்யப்படும். அடுத்த மாதத்தில் துவங்கும் சப்ளை, அடுத்த வருடம் மார்ச்சுக்குள் முடியும். அடுத்த கட்டமாக 55,021 பேருக்கு அதன்பின்னர் நானோ சப்ளை செய்யப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. டாடாவின் நானோவுக்காக மொத்தம் 2,06,703 பேர் புக் செய்திருந்தார்கள். அவர்களில் ஒரு லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டிய கார் தயாரிக்கப்பட்டு விட்டது என்றும், அவர்கள் மட்டும் நாங்கள் மார்ச் 23ம் தேதி அறிவித்த எக்ஸ் - ஷோரூம் விலையில் நானோவை பெறுவார்கள் என்றும் சொன்னார்கள்.
நன்றி : தினமலர்



மகிந்திரா சத்யத்திற்கு புது சி.இ.ஓ.,வாக குர்னானி நியமனம்

மகிந்திரா சத்யம் என்று பெயர் மாற்றம் செய்ப்பட்டுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஒ.,வாக சி.பி.குர்னானி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக சஞ்சய் கர்லா என்பவர் டெக் மகிந்திராவின் சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதே போல் மகிந்திரா சத்யத்தின் புதிய சி.எஃப்.ஓ.,வாக சுப்ரமணியம் துர்கா சங்கரும், டெக் மகிந்திரா மற்றும் மகிந்திரா சத்யத்தில் வைஸ் பிரசிடென்ட் ஆக வினீத் நய்யாரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே மகிந்திரா சத்யத்தில் இடைக்கால சி.இ.ஓ.வாக இருந்த ஏ.எஸ் மூர்த்தி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாகத்தான் குர்னானி நியமிக்கப்பட்டிருக்கிறார். குர்னானி இதற்கு முன் டெக் மகிந்திராவின் சர்வதேச நடவடிக்கைகளின் தலைவராக இருந்தவர். ஆனால் ஏ.எஸ்.மூர்த்தி தொடர்ந்து மகிந்திரா சத்யத்தில்தான் இருப்பார். துர்காசங்கர் இதற்கு முன் மகிந்திரா அண்ட் மகிந்திராவின் எம் அண்ட் ஏ பிரிவில் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ஆக இருந்தார். நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் நேற்று செவ்வாய் கிழமையில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


Tuesday, June 23, 2009

ஆசிய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி

உலக பொருளாதாரம் வீழ்ந்து வருவதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டதையடுத்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. அதனையடுத்து இன்று ஆசிய பங்கு சந்தைகளும் கடும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. ஜப்பானின் சந்தை குறியீட்டு எண் நிக்கி 3.4 சதவீத வீழ்ச்சியை கண்டிருக்கிறது. ஹாங்காங்கின் ஹோங்செங் 3.2 சதவீதம் சரிந்திருக்கிறது. உலக வங்கியின் அறிக்கையால் கச்சா எண்ணெய் விலை மற்றும் மெட்டல் விலை சரிந்திருக்கிறது. எனவே இது சார்ந்த தொழில்துறை பங்கு மதிப்பும் குறைந்திருக்கிறது. இன்று காலை வர்த்தகத்தின்போது, அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.10 டாலர் குறைந்து 66.40 டாலராக இருக்கிறது. திங்கள் அன்று அதன் விலை பேரலுக்கு 2.76 டாலர் குறைந்திருந்தது. லண்டனில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 98 சென்ட் குறைந்து 66 டாலராக இருக்கிறது. அமெரிக்காவின் டவ்ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் இன்டக்ஸ் திங்கள் அன்று 2.4 சதவீதம் குறைந்திருந்தது. லண்டனின் எஃப்.டி.எப்.சி. 100 ன் இன்டக்ஸ் 2.6 சதவீதம் குறைந்திருந்தது.ஆஸ்திரேலி பங்கு சந்தையிலும் 3 சதவீத சரிவு ஏற்பட்டிருக்கிறது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், முன்னேறும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம் தான் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. 2008ல் அதன் வளர்ச்சி 5.9 சதவீதமாகவும், 2007ல் அதன் வளர்ச்சி 8.1 சதவீதமாகவும் இருந்தது.
நன்றி : தினமலர்


சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸின் பெயர் மகிந்திரா சத்யம் என மாற்றம் செய்யப்பட்டது

ஊழல் சூறாவளியில் சிக்கித் திணறிய சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் பெயர் மகிந்திரா சத்யம் என மாற்றப்பட்டுள்ளது. இது, மகிந்திரா குழுமத்தின் நற்பெயர் மற்றும் சத்யம் நிறுவனத்தின் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துவதாக அமையும் என மகிந்திரா குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்தார். நம்நாட்டில் இதுவரை எந்த நிறுவனமும் செய்தாத மோசடியை சத்யம் கம்ப்யூட்டர்ஸின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ செய்திருந்தார். சுமார் ரூ.8,000 கோடிக்கு நிதி நிலை கணக்குகளில் முறைகேடுகள் செய்ததை அவர் ஜனவரி மாதத்தில் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய களங்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த நிறுவனம் விற்பனைக்கு வந்ததையடுத்து, மகிந்திரா குழுமுத்தின் ஓர் அங்கமான டெக் மகிந்திரா நிறுவனம், சத்யம் நிறுவனத்தின் 31 சதவீத பங்குகளை ரூ.1,760 கோடிக்கு சென்ற ஏப்ரல் மாதத்தில் வாங்கியது. அப்போதே, அதன் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று மகிந்திரா கருதியது. சத்யம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் பெயரை மாற்ற வேண்டும் என டெக் மகிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்ற டெக் மகிந்திரா மற்றும் சத்யம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில், மகிந்திரா சத்யம் என பெயர் மாற்றம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
நன்றி : தினமலர்


ஏர் - இந்தியா ஊழியர்களுக்கான சம்பளத்தில் 17 சதவீதம் குறைக்கப்படுகிறது

நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி வரை நஷ்டம் அடைந்து வரும் ஏர் - இந்தியா நிறுவனம், செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழியர்களுக்கான ஜூன் மாத சம்பளத்தை, ஜூன் கடைசி தேதிக்கு பதிலாக ஜூலை 15 ம் தேதி கொடுப்பதாக அறிவித்தது. பின்னர் அதன் உயர் அதிகாரிகள் எல்லோரும் ஜூலை மாதத்தில் சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை இல்லாமல் வேலை பாருங்கள் என்றது. இப்போது மூன்றாவதாக ஊழியர்களுக்கு செலவு செய்து வந்த வருடாந்தர தொகையில் 17 சதவீதத்தை அல்லது ரூ.500 கோடியை குறைக்க முடிவு செய்திருக்கிறது. அதற்காக ஒரு கமிட்டியை நியமனம் செய்திருக்கிறது. இப்போது அந்த நிறுவனத்தில் 31,000 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு வருடந்தோறும் சம்பளம் மற்றும் மற்ற வசதிகளுக்கான தொகையாக ரூ.3,000 கோடி செலவு செய்யப்படுகிறது. இதிலிருந்து ரூ.500 கோடியை குறைத்து ரூ.2,500 கோடியாக மாற்ற முயற்றிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நான்கு பேரை கொண்ட அந்த கமிட்டி, ஊழியர்களுக்கும் ஏர் - இந்தியா நிர்வாகத்துக்கு மிடையே போடப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த ஒப்பந்தத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.ற அந்த குழுவில் மனித வள மேம்பாட்டு துறையை சேர்ந்தவர்களும் நிதித்துறையை சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இப்போது ஏர் - இந்தியாவின் மொத்த நிர்வாக செலவில் 35 சதவீதம், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மற்ற வசதிகளுக்காகவே செலவு செய்யப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அமைப்பது குறித்து அந்த குழு ஆராய்ந்து, ஜூலை 15ம் தேதிக்கும் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்