Wednesday, November 25, 2009

குனியக் குனிய...

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய அரசர் அகிஹோடோவைக் குனிந்து வணங்கி நட்புப் பாராட்டிய நிகழ்ச்சி, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது. அமெரிக்காவிடம் நிதி உதவியும், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உதவியும் பெறும் குட்டி நாடான ஜப்பானின் மன்னரை, அதிபர் ஒபாமா குனிந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன என்று அமெரிக்கர்கள் கொதித்தெழுந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?

இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!

உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?

சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.

அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.

கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.

சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?

அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!

குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?
நன்றி : தினமணி

சத்யம் மோசடி ரூ.14,000 கோடி: சிபிஐ அறிவிப்பு


சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் மோசடி இத்தனை நாள் சொல்லப்பட்டது போல் ரூ.7800 இல்லை எனவும் உண்மையான தொகை ரூ.14000 கோடி என்கிறது சிபிஐ. நேற்று தாக்கல் செய்யப்பட்ட சத்யம் மோசடி குறித்த குற்றப் பத்திரிகையில் இதற்கான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு.
சத்யம் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ ரூ 7800 கோடி வரை மோசடி செய்தார். இதனை அவரே ஒப்புக் கொண்டதால், கைது செய்யப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சத்யம் நிறுவனத்தை மகிந்திரா நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் உண்மையில் சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடி எத்தனை கோடி ரூபாய் என்ற விவரத்தை தனது குற்றப்பத்திரிகையில் வெளியிட்டுள்ளது சிபிஐ.
200 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப் பத்திரிகையில் சத்யம் நிறுவன நிதி எவ்வாறு மோசடியாக உயர்த்திக் காட்டப்பட்டதென்றும், போலியான வாடிக்கையாளர்கள் உருவாக்கப்பட்டதையும் அம்பலமாக்கியுள்ளது. மேலும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் சொத்துக்களையும் கண்டுபிடித்துள்ளது சிபிஐ. 1065 இடங்களில் இந்த சொத்துக்கள் பரவியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் 6,000 ஏக்கர் நிலம், 40,000 ஸ்கொயர் யார்டு வீட்டு மனைகள், 90,000 சதுர அடி கட்டடங்கள் போன்றவை அடங்கும்.

நன்றி : தினமலர்


கோவையில் ரூ.50 கோடி முதலீட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி


யுபிஎஸ் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நியூமரிக் பவர் சிஸ்டம்ஸ், சூரிய ஒளியில் 1.5 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக ரூ.25 கோடியை நியூமரிக் பவர் நிறுவனம் முதலீடு செய்கிறது. எல்இடி தெருவிளக்குகளை தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளது. தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பான எரிசக்தி கருவிகளை தயாரிக்கவும், காற்றாலை மின் உற்பத்திக் கருவிகள் தயாரிக்கவும் நியூமரிக் முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.50 கோடி முதலீட்டில் கோவையில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் துவங்கப்பட உள்ளது.

நன்றி : தினமலர்


Tuesday, November 24, 2009

என்றும் பதினாறு-மதுரப் பதினேழு!

தனது 16-வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் டெஸ்ட் வரிசையில் டான் பிராட்மனுக்கு இரண்டாவது. ஒரு தினப் போட்டியில் விவியன் ரிச்சர்டுக்கு இரண்டாவது என்று கிரிக்கெட் பஞ்சாங்கமான "விஸ்டன்' ஆரூடம் கணித்தது. ஆனால் சாதனைகள் என்று வரும்போது அவர்தான் இன்று "நம்பர்-ஒன்' இதைச் சொல்ல எந்த விஸ்டனும் தேவை இல்லை.

இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால் சச்சின் அதன் கடவுள் என்று பாரி ரிச்சர்டு சொன்னார். இப்போது 439 ரன்கள் எடுத்து உலகச் சாதனை படைத்துள்ள பள்ளி மாணவன் சர்ஃப்ராஸ் கானும் அதைத்தான் சொல்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 12,877 ரன்கள். ஒருதினப் போட்டியில் 17,178 ரன்கள். முதல்தர ஆட்டத்தில் 21,662. 20-20 போட்டியில் ஒரே ஓர் ஆட்டத்தில்தான் ஆடி இருக்கிறார். அதில் வெறும் பத்து ரன்கள்.

டெஸ்டில் 43 சதங்கள் 53 அரைச் சதங்கள். ஒருதினப் போட்டியில் 45 சதங்கள் 91 அரைச்சதங்கள். அதிகபட்ச "ஸ்கோர்' டெஸ்டில் 248; ஒருதினப் போட்டியில் 186. அதிகமான ஆட்ட - தொடர் நாயகன் விருதுகள்.

டெஸ்டில் அதிக சதங்கள் என்று வந்தபோது கவாஸ்கர், டெஸ்டில் அதிக ரன்கள் என்றபோது பிரையன் லாரா, அதிக அரைச் சதங்கள் என்று வந்தபோது ஆலன் பார்டர் ஆகியோரது சாதனைகள் தகர்ந்தன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் பத்துச் சதங்கள் என்பது எழுபது ஆண்டுகள் நிலை நின்றிருந்த ஜேக் ஜொப்சையே முறியடித்த சாதனை.

பொது வாழ்க்கையில் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், விளையாட்டில் உயர் வகை விருதான அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்ன இவர் கையடக்கியவை. இனி "பாரத ரத்னா'தான் பாக்கி. அது விரைவில் வீடு வந்துசேரும் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. "விஸ்டன்' ஓராண்டு இவரை அந்த ஆண்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று அறிவித்தது. பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் ஒரு படி மேலே போய், சம்பிரதாயங்களைப் பற்றிக் கவலைப்படாது பிரிட்டனின் உயரிய விருதான ""சர்'' பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அமெரிக்க "டைம்' சஞ்சிகை, ""அவர் தேர்ந்தெடுத்த துறையில் இன்று உயிர் வாழும் மிக உன்னதமான பிறவி'' என்று வர்ணித்தது.

"லிட்டில் சாம்பியன்' லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் ப்ளாஸ்டர், டெண்டியா என்பவை இவரது நண்பர்களும் அபிமானிகளும் இவருக்கு வைத்துள்ள செல்லப் பெயர்கள்.

மராத்திய எழுத்தாளர் ரமேஷ் டெண்டுல்கர் தன் செல்லப் பிள்ளைக்கு சூட்டிய பெயர் தன் அபிமானத்துக்குரிய இசைக் கலைஞரான சச்சின் தேவ் பர்மனுடைய பெயர்.

வேகப் பந்து வீச்சில் பயிற்சி பெற டென்னிஸ் லில்லியை இவர் அணுக, ""தம்பி இதற்கு நீ சரிவர மாட்டாய் வேறு வேலை இருந்தால் பார்'' என்று திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் இவருடைய துரோணாச்சாரியார் ராம்காந்த் அச்ரேகர். இவர் உள்ளில் உறையும் அர்ஜுனனை அடையாளம் கண்டு கொண்டார்.

1988-ல் இவர் தனது பள்ளிக்காக ஆடிய எல்லாப் போட்டிகளிலும் சதம் பெற்றதோடு, வினோத் காம்பிளியுடன் இணைந்து 664 ரன்கள் என்ற சாதனையைப் படைத்தார். அதில் சச்சினின் பங்கு மட்டும் 326 ரன்கள். 2006-ம் ஆண்டு வரை, ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முறியடிக்கும் வரை அது உலகச் சாதனையாக இருந்தது.

இவரது 14-வது வயதில் கவாஸ்கர் தன்னுடைய மெல்லிய கால் காப்புகளை இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அது நடந்து இருபது ஆண்டுகள் கழித்து அதே கவாஸ்கருடைய 34 சதங்கள் என்ற மகத்தான சாதனையை சச்சின் முறியடித்தார்.

15-வது வயதில் குஜராத்துக்கு எதிராக மும்பைக்காக ஆடிய கன்னி ரஞ்சி ஆட்டத்தில் சதமடித்தார். அதன் மூலம் முதல்தர ஆட்டத்தில் இத்தகைய சாதனை புரிந்த மிக இளைய ஆட்டக்காரர் என்ற சிறப்பைப் பெற்றார். ரஞ்சி, தியோதார், துலீப், ஈரானி ஆகிய அத்தனை விருதுகள் போட்டியிலும் சதம் பெற்றவர் சச்சின். இந்த விஷயத்தில் வேறு யாரும் இவர் அருகில் கூட வர முடியாது.

1998-ல் ஆஸி. அணிக்கு எதிராக மும்பை ஆடியபோது பிரேபோன் மைதானத்தில் இவர் பெற்ற இரட்டைச் சதம் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது. காரணம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அது எளிதான காரியமல்ல.

இங்கிலாந்தில் யோர்க்ஷயர் அணி வெளிநாட்டவர் எவரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒரே வெளிநாட்டவர் சச்சின்தான். அந்த சீசனில் அவர் 16 போட்டிகளில் 1070 ரன்கள் எடுத்தார். சராசரி 46.52.

1989-ல் தனது 15-வது வயதில் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் பிரவேசம். இந்த டெஸ்டில்தான் வேகப் பந்து வீச்சாளர் வக்கார் யூனுசும் தன் டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு போட்டியில் அப்துல் காதருக்கு எதிராக ஓர் ஓவரில் சச்சின் 28 ரன்கள் எடுத்ததை மறக்க முடியாது என்கிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

1990-ல் இங்கிலாந்தில் தான் இவரது கன்னிச் சதம் வந்தது. 91-92-ல் சச்சினின் ஆட்டத்தைப் பார்த்த மெர்வ் ஹியூஸ் ஆலன் பார்டரிடம் ""பார், இந்தப் பொடியன் உன் சாதனையை முறியடிக்கப் போகிறான்'' என்றார். அது நடந்தது.

கிரிக்கெட்டில் அவர் சாதனை படைக்க முடியாமல் போனது ஒரே ஒரு விஷயத்தில்தான். இரண்டு முறை கேப்டனாக இருந்தும் அந்தப் பதவியில் அவர் சோபிக்கவில்லை.

வாழ்நாளில் ஒருமுறைதான் சச்சின் போன்ற ஓர் ஆட்டக்காரரைச் சந்திக்க முடியும் என்றார் வாசிம் அக்ரம், 99.9 சதவீத பரிபூரண ஆட்டக்காரர் சச்சின் என்றார் விவியன் ரிச்சர்ட். சச்சினை ஒரு ஜீனியஸ் என்றார் சர் ரிச்சர்ட் ஹாட்லீ. இப்படி பல்வேறு சொற்றொடர்களால் ஆலன் பார்டர், பிரையன் லாரா ஆகியோர் புகழ்ந்திருக்கிறார்கள்.

சச்சினை மகிமைப்படுத்தும் இன்னொரு விஷயம் சச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடியவர்கள் என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவரும் இல்லை. சச்சினுக்குப் பிறகு அதிக ரன்கள் பெற்றுள்ள சனத் ஜயசூர்யா 4,000 ரன்கள் பின்னால் நிற்கிறார். அவரது ஆட்ட நாள்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டன. சதங்களில் அவரைத் தொடக்கூடும் என்று நம்பப்பட்ட ரிக்கி பாண்டிங்கும் அப்படியே. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைப் பெற்ற சாதனையிலும் அவரை மிஞ்ச யாரும் இருப்பதுபோல் தோன்றவில்லை.

விளம்பர வருவாயில் மாத்திரம் ஒருவர் அவரை முந்தி இருக்கிறார். அவர் தோனி. மற்றபடி வேறு எந்தச் சாதனையிலும் சச்சினை மிஞ்ச எவரும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

அவருடைய சமூகப் பிரக்ஞைக்கும், மனித நேயத்துக்கும் ஒரு சான்று. அவரது மாமியார் நடத்தி வரும் ""அப்னாலயா'' மூலம் அவர் 200 குழந்தைகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

சென்னையில் ஓர் ஆட்டத்தில் அவர் சதம் பெற்றார். ஆனால் இந்தியா தோற்றுப் போய்விட்டது. நான் வர்ணனை நடக்கும் மாடியில் நிற்கிறேன். சச்சின் தலை குனிந்த வண்ணம் பஸ் ஏறப் போகிறார். அவரது சகா அவரை ஆதரவாக அணைத்தவண்ணம் வழிநடத்தி வருகிறார். உற்றுப் பார்த்தபோது சச்சினின் கண்களின் கண்ணீர்.

சென்ற ஆட்டத்தில்கூட 175 ரன்கள். 17,000 ரன்கள் என்ற மந்திர இலக்கைக் கடந்த அற்புதச் சாதனை.

ஆட்ட நாயகன் விருது, என்றாலும் சச்சினின் கண்களில் நீர்கோர்ப்பு. தொண்டை கம்மி இருந்தது. தனக்கு இத்தனை புகழ் வந்தென்ன; நாடு தோற்றுவிட்டதே என்கிற சோகம். சோகத்தால் அவர் தலை குனிந்தது. ஆனால் அவரது அப்பழுக்கற்ற தேச பக்தியை எண்ணி - அவரது சாதனைகளை நினைந்து ஒவ்வோர் இந்தியரும் பெருமையுடன் தலைநிமிர்ந்தார். நம் தேசம் நம் சச்சின்.

(கட்டுரையாளர்: அப்துல் ஜப்பார், வானொலி கிரிக்கெட் வர்ணனையாளர்).
நன்றி : தினமணி

ஃபாஸ்ட்புட்டை பின்னுக்கு தள்ள வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தமிழக இட்லி

தமிழர்களுக்கு இட்லி இப்போது இந்திய அளவில் பிரபலமாகி விட்டது. ஆனால் உலகஅளவில் இட்லிக்கு எந்த மவுசும் ஏற்படவில்லை. வெளி நாட்டுக்காரர்கள் இந்தியா வரும் போதும் இட்லியை சாப்பிட்டு விட்டு அதன் ருசியை பாராட்டுவது உண்டு. இருப்பினும் நாம் இன்னும் வெளிநாடுகளில் இட்லியை அறிமுகப்படுத்தாததால் அவை இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழ்நாட்டுக்குள் முடங்கி கிடக்கின்றன.
சீனாவில் பிறந்த “நூடுல்ஸ்”, வெள்ளைக்காரர்களில் கண்டுபிடிப்பான “பர்க்கர்” போன்றவை இன்று உலக அளவில் முக்கிய இடத்தை பிடித்து விட்டன. இப்போது இந்த இடத்துக்கு இட்லியையும் கொண்டு வரும் திட்டத்தை தஞ்சாவூரில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழில் நுட்ப மையம் உருவாக்கியுள்ளது. இட்லியை பதப்படுத்தி அனுப்புவதுதான் பெரிய பிரச்சினை அதை மட்டும் கண்டுபிடித்து விட்டால் இட்லியையும் உலக அளவில் சந்தைப்படுத்தி விடலாம். அதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்க இந்த மையம் முயற்சித்து வருகிறது. இது பற்றி இந்த மைய இயக்குனர் அழகு சுந்தரம் கூறியதாவது: இட்லியை உற்பத்தி செய்து, பதப்படுத்தி வெளிநாட்டு விற்பனைக்கு அனுப்ப 3 வருட ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். பர்க்கர் போன்ற உணவுகளை விட இட்லியில் அதிக சத்தும், ருசியும் இருக்கிறது. இருந்தாலும் ஏன் இதை உலக அளவில் பிரபலப்படுத்த முடியவில்லை என்ற கேள்வி எழுந்தது. இட்லி மிகவும் சத்தான உணவு. விலை மலிவான உணவு. எல்லா வயதினரும் இதை சாப்பிடலாம்.
எனவே இதை தொழில் உற்பத்தி பொருளாக்கி சந்தை படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். இதன் முதல் கட்ட ஆராய்ச்சிக்காக இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் ரூ.2 கோடியே 60 லட்சம் வழங்கி உள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஒரு பகுதியாக குடும்ப பெண்கள் பங்கேற்கும் “இட்லி மேளா” என்ற விழாவை டிசம்பர் 3ந் தேதி தஞ்சாவூரில் நடத்த உள்ளோம். அப்போது குடும்ப பெண்கள் ஒவ்வொரு வரும் இட்லியை தயாரித்து கொடுக்கலாம். அதில் எந்த இட்லி ருசியாக இருக்கிறது. எப்படி தயாரிப்பதால் இந்த ருசி வருகிறது? என்று ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்


காட்பரி நிறுவனத்தை வாங்க கடும் போட்டி

பிரிட்டிஷின் புகழ்பெற்ற சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான காட்பரி விற்பனைக்கு வருகிறது. இதனை வாங்க சர்வதேச நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. காட்பரி நிறுவனத்துக்கு 16.5 பில்லியன் டாலர் வரை தர க்ராப்ட் புட்ஸ் முன்வந்துள்ளது. ஆனால் இப்போது அமெரிக்காவின் ஹெர்ஷே நிறுவனமும் களத்தில் குதித்துள்ளதால், போட்டி கடுமையாகியுள்ளது. க்ராப்ட் புட்ஸ் நிறுவனத்தைவிட 0.5 பில்லியன் டாலர் அதிகம் தர ஹெர்ஷே முன் வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இன்னும் வாய்திறக்காமல் உள்ளது காட்பரி. இந்நிலையில் காட்பரியை வாங்க தங்களுக்கும் விருப்பமுள்ளது என்று அறிவித்துள்ளது புகழ்பெற்ற நெஸ்லே நிறுவனம். காட்பரி நிறுவனத்தை வாங்க நெஸ்லே, 18 பில்லியன் டாலர் வரை தரவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


பயன்படுத்தாத பழைய நகைக்கு வட்டி : எஸ்பிஐ அறிவிப்பு

பயன்படுத்தாத பழைய தங்க நகைகளை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால் அவற்றை ஸ்டேட் பாங்க்கில் டெபாசிட் செய்து, வட்டியும் பெறலாம். மதிப்பு மீது கடனும் பெறலாம். கோல்டு டெபாசிட் திட்டத்தை நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, அடிக்கடி பயன்படுத்தாத பழைய தங்க நகைகள், டெபாசிட்டாக ஏற்கப்படும். இத்திட்டத்தில் பெறப்படும் நகைகள் மும்பையில் உள்ள மத்திய அரசின் நாணய அச்சடிப்பு மையத்துக்கு அனுப்பப்படும். அங்கு நகைகள் உருக்கப்பட்டு, கழிவுகள் நீக்கப்படும். சுத்தத் தங்கமாக்கி (999 சுத்தம்) பிஸ்கெட்டுகளாக மாற்றப்படும்.
அதன் மதிப்பை நிர்ணயம் செய்து, வாடிக்கையாளருக்கு அந்த தொகைக்கு தங்க டெபாசிட் சான்றிதழ் அளிக்கப்படும். தங்க டெபாசிட் தொகை மீது 1.5 சதவீதம் வரை வட்டியை வங்கி அளிக்கும். இந்த திட்டத்தின்கீழ் டெபாசிட் செய்ய குறைந்தபட்சம் 500 கிராம் (62.5 பவுன்) நகை தேவை. குறைந்தது 3 ஆண்டு கால டெபாசிட்டாக ஏற்கப்படும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்