இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், 2008 - 09 நிதி ஆண்டில் ரூ.2,505 கோடி நிகர நஷ்டம் அடைந்திருக்கிறது. இங்கிலாந்தின் சொகுசு கார் கம்பெனிகளான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவரை கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 2.5 பில்லியன் டாலருக்கு டாடா மோட்டார்ஸ் வாங்கியதை அடுத்து, இந்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஜாகுவார், லேண்ட்ரோவர் நிறுவனங்களால் மட்டும் டாடா மோட்டார்ஸூக்கு ரூ.1,777 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. டாடா மோட்டார்ஸின் கைக்கு ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் வந்ததற்கு பின், அந்த இரு கார்களின் வருடாந்தர விற்பனை 32 சதவீதம் குறைந்து 1.67 லட்சமாகி இருக்கிறது. லேண்ட் ரோவரின் விற்பனை 1.98 லட்சத்தில் இருந்து 1.2 லட்சமாகவும், ஜாகுவாரின் விற்பனை 1,000 கார்கள் குறைந்து 47,000 ஆகவும் ஆகி விட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸ் வைஸ் சேர்மன் ரவி காந்த், கடந்த நிதி ஆண்டில் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவரின் விற்பனை வட அமெரிக்காவில் 37 சதவீதமும் இங்கிலாந்தில் 31 சதவீதமும் குறைந்திருந்தது என்றார். ஆனால் இப்போது, அங்கு நிலைமை மாறி வருகிறது. விற்பனை அதிகரித்து வருகிறது என்றார்.நன்றி : தினமலர்


பெங்களுருவில் இருந்து துபாய்க்கு தினசரி விமான சேவையை தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் இயக்குகிறது. ஏற்கனவே லண்டன், கொழும்பு, மற்றும் தாகா போன்ற சர்வதேச நகரங்களுக்கு விமான சேவையை நடத்திக்கொண்டிருக்கும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், இப்போது நான்காவதாக துபாய்க்கு சேவையை துவங்கியிருக்கிறது. இந்த பயணத்திற்காக ஏ320 ரக விமானம் பயன்படுத்தப்படும் என்றும் கிங்ஃபிஷர் கிளாஸ், பிரீமியம் எக்கனாமி போன்ற வகுப்புகள் அதில் இருக்கும் என்றும் அந்த கிங்ஃபிஷர் தெரிவித்திருக்கிறது. பெங்களுருவில் இருந்து தினமும் மாலை 6 : 15 க்கு புறப்படும் அந்த விமானம்,ற இரவு 8 : 55 க்கு ( அங்குள்ள நேரம் ) துபாய் சென்றடையும். அதேபோல் அங்கு இரவு 10 : 10 க்கு புறப்படும் அந்த விமானம், பெங்களுருவுக்கு அடுத்த நாள் அதிகாலை 3 : 45 க்கு வந்து சேரும் என்று தெரிவித்திருக்கிறது.



