Saturday, November 14, 2009

மதுரையில் பிரம்மாண்ட ஹோட்டல் : இண்டஸ் திட்டம்

பிரபல கட்டுமானத் துறை நிறுவனமான 'இண்டஸ்', மதுரையில் பிரமாண்டமான ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளது. கோயில் நகரமான மதுரையின் மீது ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறையினரின் கவனம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அரசும் தொழில்துறை சார்ந்த புதிய திட்டங்களை இப்பகுதியில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல இண்டஸ் டெவலப்பர்ஸ், மதுரையில் சுமார் ஏழரை ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. இங்கு 125 முதல் 150 அறைகள் கொண்ட நவீன பிசினஸ் ஹோட்டல் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள இண்டஸ் தயாராகி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து இண்டஸ் இயக்குனர் அபிஷேக் லுனாவத் கூறுகையில், 'ஹோட்டல் மட்டுமன்றி மதுரையி்ல் 550 யூனிட் கொண்ட குடியிருப்புகளை கட்டவும் திட்டமிட்டுள்ளோம். அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் 850 முதல் 1200 சதுரடி வரையிலான அளவுகளில் கட்டப்படும்' என்றார். ஆனால் அத‌ன் விலையை குறிப்பிடவில்லை. சென்னை சைதாப்பேட்டையிலும் தற்போது இண்டஸ் ஹவுசிங் பிராஜக்ட் நடப்பதாக அபிஷேக் தெரிவித்தார். 1000 முதல் 1500 சதுரடி அளவிலான குடியிருப்புகளின் விலை, சதுரடிக்கு ரூ.5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: