Saturday, October 17, 2009

உல்லாசம் பொங்கும் தீபாவளி

தீபாவளி நமது கலாசாரத்தோடு ஒன்றி தொன்றுதொட்டு வரும் பண்டிகை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது நாட்டின் ஆத்ம பலம். எந்தச் சமயத்தவரது பண்டிகை என்றாலும் அந்நாளில் மற்றவரும் வாழ்த்துகள் தெரிவித்து சமுதாயத்தில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாகவே கொள்ள வேண்டும்.

தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்பு, பரஸ்பரம் சுற்றமும் நட்பும் கூடிமகிழ்தல், விருந்து, கேளிக்கை விளையாட்டு என்று இன்பமாகக் கழியும் நாள்கள்.

வாணவேடிக்கை, பட்டாசு வகைகள் இல்லாமல் தீபாவளி நிறைவு பெறுவது இல்லை. பெரியவர்களும் குழந்தைகளோடு பட்டாசு வெடிப்பதில் கலந்து கொள்வதைக் காணலாம்.

தொலைக்காட்சி மற்றும் நவீன கேளிக்கைகள் தோன்றாத காலத்தில் தீபாவளி மிக விமரிசையாக, கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தது. பெற்றோரோடு சென்று துணி எடுப்பது, நாள்கணக்கில் தையல்காரரிடம் அலைவது, கூட்டுச்சேர்ந்து இனிப்பு, காரம் செய்வது, தந்தையோடு சென்று பட்டியல்படி பட்டாசு வாங்குவது, மழையிலிருந்து அதைக் காப்பாற்றி வெதுவெதுப்பாகப் பாதுகாப்பது, விடியற்காலை குளித்து முதலில் யார் பட்டாசு விடுவது என்று போட்டி போடுவது, சூடாக சிற்றுண்டி அருந்தி தீபாவளி மருந்து மயக்கத்தில் சந்தோஷத்தில் திளைப்பது. இவையெல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்னால். இப்போது தொலைக்காட்சிப் பெட்டி முன் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பதில் கழிகிறது. "இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே' என்று ஏங்கத் தோன்றும்.

தீபாவளியோடு சேர்ந்து வருவது பட்டாசு வெடிகளால் ஏற்படும் விபத்துகள். மாறிவரும் சமுதாயச் சூழலில் முன்பு இருந்ததுபோல் இல்லாமல் பெரியவர்களுடைய கவனம் பல திசைகளில் ஈர்க்கப்படுகிறது.

குழந்தைகள் மீது செலுத்த வேண்டிய மேற்பார்வையின் அளவும் தேய்ந்துவிட்ட நிலையில் இத்தகைய பட்டாசு சம்பந்தப்பட்ட தீ விபத்துகள் குறைவில்லாமல் தொடர்கின்றன.

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 20,000 தீ விபத்து சம்பந்தப்பட்ட அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வருகின்றன. 2008-ம் ஆண்டு 17,433 தீ அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் பட்டாசு சம்பந்தப்பட்ட தீ விபத்துகள் 393. சென்னையில் மட்டும் 102 பட்டாசு தீ விபத்து அழைப்புகள் பெறப்பட்டன.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்புப் பிரிவு இயங்குகிறது. இந்தப் பிரிவில் 2008-ம் ஆண்டு பட்டாசு வெடி தீ விபத்தால் 56 நபர்கள் காயமுற்று அனுமதிக்கப்பட்டனர். இவற்றில் 19 பேர் உள்நோயாளிகள். ஸ்டான்லி மருத்துவமனையில் 12 பேர் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுள்ளனர். சந்தோஷமாகக் கழிக்க வேண்டிய நாளில், வேதனையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை. இது நாமே வரவழைத்துக் கொண்டதைத் தவிர வேறில்லை.
விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டியது. முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விதிகளையும் மீறாமல் மதித்து நடந்தால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம். தீயணைப்புத் துறை பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குத் தீ பாதுகாப்புத் தணிக்கை செய்து தடையின்மைச் சான்றிதழ் வழங்குகிறது.

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிமங்கள் வழங்குகின்றனர். மாவட்டங்களில் வருவாய்த்துறையும், 15 கிலோவிலிருந்து 200 கிலோ வரை பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்துக்கு வெடிபொருள் சட்டப்படி மத்திய அரசின் வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடமிருந்து உரிமம் பெற வேண்டும்.

200 கிலோவுக்கு மேற்பட்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள முதன்மை வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரால் இந்திய வெடிமருந்துச் சட்டம் மற்றும் வெடிமருந்து விதிகள் அடிப்படையில் இத்தகைய உரிமங்கள் வழங்கப்படுகின்றன. விதிமீறல்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக பட்டாசுப் பொருள்கள் தயாரித்தலுக்கும் 5,000 ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்.

அதிக அளவில் பட்டாசு தயாரிப்பதற்கு உரிமம் பெற்ற 590 நிறுவனங்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெடிமருந்து மற்றும் பட்டாசு வைத்துக் கொள்வதற்கென 29 உரிமதாரர்கள் உள்ளனர்.

பட்டாசுத் தொழிற்சாலையிலும், வெடிமருந்துகள் தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத ரசாயனப் பொருள்களை உயயோகிக்கக் கூடாது.

ரசாயனக் கலவைகளைத் தேவையான அளவு தயார் செய்ய வேண்டும். மிதக்கலவைகளை ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக வைத்தல் கூடாது. ஒவ்வொரு ரசாயனப் பொருளையும் தனித்தனி அறையில் வைத்து தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேலை தொடங்குவதற்கு முன் மேற்பார்வையாளர் சேமிப்புக் கிடங்கு, தயாரிக்கும் அறைகளைப் பார்வையிட வேண்டும். வேண்டாத பொருள்களும், விநோதமான வாசமும் இருந்தால் பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெப்பநிலை 40 டிகிரி சென்டிகிரேடுக்கு அதிகமாக இருந்தாலோ, காற்றின் ஈரப்பதம் குறைவாக இருந்தாலோ வேலையைத் தொடங்கக்கூடாது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களையே வேலையில் அமர்த்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தொழிற்சாலைகளுக்குள் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.

ஓர் அறையில் நிர்ணயிக்கப்பட்ட பணியாளர்களுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. பட்டாசுப் பொருள்களை அனுமதிக்கப்பட்ட உலர்மேடையில் மட்டுமே உலர வைக்க வேண்டும். இரும்புப் பட்டைகள் பொருத்திய பெட்டிகள், முக்காலிகள், இரும்பு ஆணிகள் கொண்ட பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது.

இடி மின்னல் ஏற்படும் சூழலில் வேலையை நிறுத்தி பாதுகாப்பு இடங்களுக்கு வரவேண்டும். பட்டாசு வெடிச்சோதனையை திறந்த வெளியில் செய்ய வேண்டும்.

2004-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு செப்டம்பர் வரை பட்டாசுத் தொழிற்சாலைகளில் 28 பெரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 106 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 225 பேர் காயமடைந்துள்ளனர். சேதாரம் ரூ.68.60 லட்சம். இந்த எல்லா விபத்துகளும் கவனக்குறைவாலும் விதிகளைப் பின்பற்றாததாலும் ஏற்பட்டவை.

பட்டாசு வைக்கும் இடங்களிலும் பாதுகாப்பு அவசியம். குறைந்தபட்ச தீயணைப்பு சாதனங்களான வாளி தண்ணீர், மண், தீயணைப்பான்கள் வைத்தல் வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 24-9-09 அன்று பாதுகாப்பு உணர்வில்லாமல் மற்றவர்களுடைய நலனையும் பாராமல் குடியிருப்புப் பகுதியில் பட்டாசுகளை விற்பனைக்கு முடக்கி வைத்ததால் அவை வெடித்து கட்டடமும் இடிந்து 10 பேர் உயிரிழந்தனர்.

தீயணைப்பு காவல் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய துறைகள், பட்டாசுக் கிடங்குகள், விற்பனை மையங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் கொடுத்துள்ளது. அவை: கடைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆயிரம் கிலோவுக்கு மிகாமல் கடையில் பட்டாசு வைக்க வேண்டும். தாற்காலிகக் கடைகள் தீப்பிடிக்காத பொருள்களால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

1998-ல் மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனுவில் அதிக ஓசையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு ஒலி அலை 125 டெசிபலுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது.

மேலும் இத்தகைய ஒலி, மருத்துவமனை, கல்விமையங்கள், நீதிமன்றங்களுக்கு அருகில் எழுப்பக்கூடாது. இந்த விதிப்படி ஆட்டம்பாம், அதிக ஒலி எழுப்பும் சரவெடி மேலே குறிப்பிட்ட மையங்களுக்கு அருகிலோ வேறு எங்குமோ வெடிக்கக்கூடாது.

பட்டாசு வெடிக்கும் பொழுது பெரியவர்கள் மேற்பார்வை தேவை. கையில் வைத்து வெடித்து சூரத்தனத்தைக் காட்டக்கூடாது.

ஒரு வாளி தண்ணீர் வைத்து வெடித்த கம்பிகள், குச்சிகளைப் போட வேண்டும். அடுக்கு மாடிக் கட்டடத்தில் ராக்கெட் போன்றவற்றைக் கொளுத்தக்கூடாது. குடிசைப்பகுதி அருகில் பட்டாசு கொளுத்தக்கூடாது. காலணி மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்தால் நலம்.

பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்படுவது குழந்தைகள். தீக்காயங்களைவிடக் கொடியது வேறொன்றுமில்லை. காயம் ஆறுவதற்கு நாளாகும். பட்ட இடம் விகாரம் அடையும்.

எனவே, பாதுகாப்பு நமது கையில்தான் இருக்கிறது. பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு நிமிடமும் வேண்டும். சாலை விதிகளை மதிப்பது, தலைக்கவசம் அணிவது. வாகன இருக்கை பெல்ட் போடுவது, வீட்டைப் பாதுகாப்பாக வைப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, தீ விபத்துகளைத் தவிர்ப்பது இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

உல்லாசமான தீபாவளி துன்பமில்லாத இன்பம் பொங்கும் தீபாவளியாக அமைய வேண்டும்.

கட்டுரையாளர் : ஆர். நடராஜ்
நன்றி : தினமணி

No comments: