Saturday, October 24, 2009

சந்திரயானின் மாபெரும் கண்டுபிடிப்பு

சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று இந்தியா அனுப்பிய சந்திரயான் விண்கலம் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. இது மனித குல வரலாற்றில் மாபெரும் கண்டுபிடிப்பாகும்.

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 400 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனை நோக்கி முதன்முதலாகத் தொலைநோக்கியைத் திருப்பிய காலத்திலிருந்து எண்ணற்ற விஞ்ஞானிகள் சந்திரனை தொலைநோக்கி மூலம் ஆராய்ந்தனர்.

பின்னர் நவீன காலத்தில் 1958-ல் தொடங்கி அமெரிக்காவும் அப்போதைய சோவியத் யூனியனும் போட்டி போட்டுக் கொண்டு மொத்தம் 50-க்கும் மேற்பட்ட விண்கலங்களை அனுப்பி சந்திரனை ஆராய்ந்தன. அமெரிக்கா 1969-ல் தொடங்கி 1972 வரை ஆறு தடவை சந்திரனுக்கு 12 விண்வெளி வீரர்களை அனுப்பியது. அவர்கள் சந்திரனிலிருந்து கிலோ கணக்கில் அள்ளி வந்த கற்களும் மண்ணும் விரிவாக ஆராயப்பட்டன. சோவியத் யூனியனின் தானியங்கி விண்கலம் சந்திரனிலிருந்து சேகரித்து வந்த கற்களும் ஆராயப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளில் ஜப்பான் 6 ஆளில்லா விண்கலங்களை அனுப்பியது. சீனா கடந்த ஆண்டில் ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்பியது. சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்களால் - விண்வெளி வீரர்களால் அவர்கள் கொண்டு வந்த கற்களை ஆராய்ந்த விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்காமல் போன ஒரு விஷயத்தை சந்திரயான் கண்டுபிடித்துக் கூறியுள்ளது.

சந்திரனில் தண்ணீர் உள்ளதை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனதேன்? சந்திரனில் உள்ள தண்ணீர் அப்படி என்ன மர்மமாக மறைந்து இருந்து வந்துள்ளதா?

இக் கேள்விகளுக்கு விடை அளிக்கும் முன்னர் நாம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சந்திரனில் பூமியில் உள்ளதைப்போல ஏரி, குளம், ஆறு, கடல் என எதுவும் கிடையாது. சந்திரனில் காற்று மண்டலம் இல்லை. மேகங்கள் இல்லை, மழை இல்லை. ஆனாலும் கலிலியோவைத் தொடர்ந்து, சந்திரனை தொலைநோக்கி மூலம் ஆராய்ந்த விஞ்ஞானிகள் சந்திரனில் காணப்படும் கருமையான பகுதிகளைக் கடல்களாகக் கருதி அவற்றுக்குக் கடல்கள் என்று பெயரிட்டனர். நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் சந்திரனில் போய் இறங்கிய இடத்தின் பெயர் அமைதிக்கடல் என்பதாகும். பெயர்தான் கடலே தவிர அது வெறும் கட்டாந்தரை.

சந்திரன் பூமியிலிருந்து அதிகபட்சம் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பூமியும் சந்திரனும் சூரியனிலிருந்து கிட்டத்தட்ட ஒரே தூரத்தில் இருந்தாலும் சந்திரன் மட்டும் பூமியிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணற்ற வால் நட்சத்திரங்கள் பூமியில் வந்து மோதின. சந்திரன் மீதும் மோதின. வால் நட்சத்திரங்கள் அடிப்படையில் பிரம்மாண்டமான பனிக்கட்டி உருண்டைகள். பூமியில் கடல்கள் ஏற்பட்டதற்கு வால் நடசத்திரங்கள் பெரும் பங்களித்திருக்கலாம் என்ற கொள்கை உள்ளது. சந்திரனில் மோதிய வால் நட்சத்திரங்களால் சந்திரனில் ஏன் கடல்கள் ஏற்படவில்லை?

பூமியானது சந்திரனைவிட வடிவில் பெரியது. ஆகவே, பூமிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். இதன் பலனாக பூமியால் தனது காற்று மண்டலத்தைக் கெட்டியாகப் பிடித்துவைத்துக் கொள்ள முடிந்துள்ளது. பூமியின் காற்று மண்டலம் தகுந்த அழுத்தத்தில் உள்ளது. ஆகவேதான் பூமியில் நாம் நீரைப் பெற்றிருக்கிறோம். பூமி மட்டும் வடிவில் சிறியதாகவும் அத்துடன் பூமியின் காற்றழுத்தம் குறைவாகவும் இருந்திருக்குமானால் பூமியில் தண்ணீர் இருந்திருக்காது. பூமியும் சந்திரன் போல ஆகியிருக்கும்.

பூமியுடன் ஒப்பிட்டால் சந்திரன் வடிவில் மிகவும் சிறியது. சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமிக்கு உள்ளதில் ஆறில் ஒரு பங்கு தான். ஆகவே, சந்திரனில் ஒரு காலத்தில் காற்று மண்டலம் இருந்திருக்குமானால் அது எப்போதோ போய்விட்டது. அத்துடன் சந்திரனில் இருந்த தண்ணீரும் மறைந்துவிட்டது. எல்லாம் சரி, இப்போது சந்திரனில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எப்படி?

இதில் சூரியனுக்குப் பங்கு இருக்கிறது. சூரியனிலிருந்து ஒளிக்கதிர் உள்பட பல வகையான கதிர்கள் வெளிப்படுகின்றன. அத்துடன் ஆற்றல்மிக்க ஹைட்ரஜன் துகள்களும் வெளிப்படுகின்றன. இந்த ஹைட்ரஜன் துகள்களுக்கு (இவை காற்று அல்ல என்றாலும்) "சூரியக் காற்று' என்ற பெயரும் உண்டு.

இந்த ஹைட்ரஜன் துகள்கள் பகல் நேரங்களில் சந்திரனின் நிலப்பரப்பின் மீது மோதுகின்றன. சந்திரனின் நிலப்பரப்பில் ஆக்ஸிஜன் அடங்கிய கனிமங்கள் பல உள்ளன. இவற்றின் மீது ஹைட்ரஜன் துகள்கள் மோதும்போது கனிமங்களில் அடங்கிய ஆக்ஸிஜன் தனியே பிரிகிறது. பின்னர் இந்த இரண்டும் வேதியியல் ரீதியில் பிணைந்து நீர் மூலக்கூறுகள் தோன்றுகின்றன. (நீர் என்பதே இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்ஸிஜன் அணுவும் பிணைந்த பொருளாகும்).

இந்த முறையில் சந்திரனின் நிலப்பரப்பு முழுவதிலும் மிகமிக நுண்ணிய அளவில் நீர் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த நீரைத் தான் சந்திரயான் கண்டுபிடித்துள்ளது. ஆனால், சந்திரனில் காற்று மண்டலம் இல்லை என்பதால் இந்த நீர் மூலக்கூறுகள் தொடர்ந்து அந்த நிலையில் நீடிப்பதில்லை. விரைவிலேயே அவை ஆக்ஸிஜன் வாயுவாகவும் ஹைட்ரஜன் வாயுவாகவும் பிரிந்து சந்திரனின் வான் வழியே மேலே சென்றுவிடுகின்றன. சந்திரனில் தண்ணீர் உள்ளதைக் கடந்த காலத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

இது ஒருபுறம் இருக்க, சந்திரனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தண்ணீரைத் தகுந்த வழிகள் மூலம் சேமித்துவைக்க இயலும் என்று கருதப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சந்திரனில் நீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவும் இயலும். இதற்கு வழி கண்டுபிடிக்கப்படும்போது, சந்திரனில் விண்வெளி வீரர்கள் நீண்ட நாள்கள் தங்கியிருக்கலாம். சந்திரனில் சேகரிக்கின்ற அதே தண்ணீரை ஆக்ஸிஜன் வாயு, ஹைட்ரஜன் வாயு என்று தனித்தனியே பிரித்து அவற்றைக் குளிர்வித்து ராக்கெட்டுகளுக்கான எரிபொருளாகப் பயன்படுத்த இயலும்.

எதிர்காலத்தில் சந்திரனில் நிலத்துக்கு அடியில் பாதாளக் குடியிருப்புகளை நிறுவ முடியலாம். பயிர் விளைச்சலும் சாத்தியமாகலாம். பல பொருள்களை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை அமைக்க முடியலாம். தண்ணீர் இல்லை என்பதுதான் இதுவரை ஒரு தடையாக இருந்தது.

சந்திரனில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட நிலையில் சந்திரனில் தண்ணீர் தேடும் படலம் முடிந்து விட்டதா? அதுதான் இல்லை. சந்திரனில் தண்ணீர் உள்ளதா என்று தேடுவது சந்திரயான் 1 விண்கலத்தின் முக்கியப் பணிகளில் ஒன்றாக இருந்தது. அமெரிக்கா கடந்த ஜூன் மாதம் சந்திரனுக்கு அனுப்பிய எல்ஆர்ஓ எனப்படும் அமெரிக்க விண்கலமும் தண்ணீரைத் தேடுவதில் ஈடுபட்டது. தண்ணீரைத் தேடுவதில் அமெரிக்க விண்கலத்தின் இலக்கு முற்றிலும் வேறானது.

சந்திரனின் தென்துருவப் பகுதியில் ஒருபோதும் வெயில் படாத மிக ஆழமான பள்ளம் ஒன்றில் ஐஸ்கட்டி வடிவில் தண்ணீர் இருக்கலாம் என்று கடந்த பல ஆண்டுகளாக ஒரு கருத்து உள்ளது. இங்கு பனிக்கட்டி வடிவில் 10 கோடி முதல் 30 கோடி மெட்ரிக் டன் அளவுக்குத் தண்ணீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாகத் தென் துருவப் பகுதியில் இருப்பது, தண்ணீர் உறைந்ததால் ஏற்பட்ட பனிக்கட்டியா அல்லது வேறு வாயு இவ்விதம் உறைந்த நிலையில் உள்ளதா என்று கண்டறிவதில் அமெரிக்க விண்கலம் ஈடுபட்டது. அமெரிக்க விண்கலத்தைச் சுமந்து சென்ற ராக்கெட்டின் ஒரு பகுதி அக்டோபர் 9-ம் தேதியன்று தென்துருவப் பகுதியில் உள்ள பள்ளத்தில் போய் பயங்கர வேகத்தில் மோதும்படி செய்யப்பட்டது. இது சந்திரன் மீது குண்டு வீசுவதற்கு ஒப்பாகும்.

இத் தாக்குதலின் விளைவாக சிதறல்களும் தூசும் புகை மண்டலம் போல உயரே கிளம்பும் (பூமியிலிருந்து தொலைநோக்கி மூலம் பார்த்தால் தெரியுமாம்). அமெரிக்க விண்கலத்துடன் அனுப்பப்பட்ட ஒரு சிறிய விண்கலம் தனியே பிரிந்து இப்புகை மண்டலத்தின் ஊடே பறந்து ஆராய்ந்தது. இதன்மூலம் கிடைத்த தகவல்கள் ஆராயப்படுகின்றன. தென் துருவப் பள்ளத்தில் இருப்பது தண்ணீரால் ஆன பனிக்கட்டிதானா என்று தெரிவதற்கு இன்னும் சில நாள்கள் ஆகலாம். அங்கு தண்ணீர் தான் பனிக்கட்டியாக உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவ்வளவுதான் சந்திரன் மீது பெரும் படையெடுப்புத் தொடங்கிவிடும்.

ஆனால் ஒன்று, சந்திரனில் தண்ணீர் உள்ளது என்பதை முதலில் கண்டுபிடித்த பெருமை இந்தியாவின் சந்திரயானுக்கே உரியது. சந்திரனை ஆராயும் முயற்சியில் கடும் வெப்பம் தாக்கி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சந்திரயான் இறவாப் புகழ் பெற்றுவிட்டது.

கட்டுரையாளர் : என். ராமதுரை

நன்றி : தினமணி

No comments: