Monday, July 20, 2009

'மகாராஜா'வை காப்பாற்ற அரசு அதிரடி தடை அமல்

'மகாராஜா'வை காப்பாற்றி, நிதி சிக்கலில் இருந்து மீட்க மத்திய அரசு போட்டது ஒரு அதிரடி தடை. 'அரசு அதிகாரிகள் யாரும் ஏர் இந்தியா தவிர மற்ற விமானங்களில் பறக்கக் கூடாது' என்பது தான் அது. ஏர் இந்தியா (மகாராஜா அதன் சின்னம்) நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதன் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கூட சம்பளம் போட முடியாமல் தத்தளிக்கிறது. பைலட், இன்ஜினியர்கள் தவிர, நிர்வாக பணியாளர்களுக்கு சம்பளம் இல்லா ஐந்தாண்டு சிறப்பு விடுப்பு அளிக்கும் திட்டம் உட்பட பல சிக்கன திட்டங்களை நிறைவேற்றி நிறுவனத்தை காப்பாற்ற முயற்சிகள் நடக்கின்றன.
ஏர் இந்தியா நிறுவனத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க மத்திய அரசும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பல நூறு கோடி நஷ்டத்தில் உள்ள ஏர் இந்தியா, முடங்கி விடாமல் தவிர்க்க நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது. அது மட்டுமின்றி, ஏர் இந்தியா போக்குவரத்து வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருக்க இன்னொரு வித்தியாசமான முடிவையும் அறிவித்துள்ளது. அரசு அதிகாரிகள், வேறு மாநிலங்களுக்கு சென்றாலும், வெளிநாடுகளுக்கு சென்றாலும், ஏர் இந்தியா விமானத்தில் தான் பயணிக்க வேண்டும். ஏர் இந்தியா விமானம் இல்லாத நகரங்களுக்கு செல்லும் போது, அருகே உள்ள நகரம் வரை ஏர் இந்தியாவில் பயணித்து, அங்கே உள்ளூர் விமானத்தை பிடித்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமானம் போக முடியாத இடங்கள் இருந்தால், அங்கு தனியார் விமானத்தில் பயணிக்க வேண்டிய நிலை வந்தால், சிவில் விமானப்போக்குவரத்து துறை அனுமதியை பெற வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளது. அரசு செலவழிக்கும் பயணத்தில் மட்டுமல்ல, அரசு தரப்பில் உள்ள பல்வேறு அமைப்புகளில் இருந்தும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்தும் அதிகாரிகள் பயணம் செய்யும் போது, இந்த புதிய விதிகள் பொருந்தும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்



1 comment:

ரவி said...

பாருங்களேன் ?