Friday, November 21, 2008

பெட்ரோல் விலை குறைய இன்னமும் ஒரு மாதம்...

சமையல் காஸ் மற்றும் கெரசின் விற்பனையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருப்பதால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் திட்டம் இல்லையென, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 147 டாலராக அதிகரித்த போது, கடந்த ஜூன் மாதத்தில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும் உயர்த்தப்பட்டன. ஆனால், அதன் பின், கச்சா எண்ணெய் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தற்போது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 50 டாலராகக் குறைந்துள்ளது.இதனால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படலாம் என செய்திகள் வெளியாயின. இந்நிலையில், பெட்ரோலியத் துறை செயலர் ஆர்.எஸ்.பாண்டே கூறுகையில், 'பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனையில் லாபம் பெற்றாலும், சமையல் காஸ் மற்றும் கெரசின் விற்பனையில், தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. 'இந்த நிலை தொடரும் வரை, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படாது. விலைகளைக் குறைப்பது குறித்த திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை' என்றார்.ஆனால், நமது அரசு வாங்கும் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 48 டாலர் என்று தற்போது அரசால் கணக்கிடப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான எக்சைஸ் வரி வரவு கடந்த மாதத்தில் அரசுக்கு குறைந்திருக்கிறது. ஏற்கனவே விலை அதிகரிப்பால் எக்சைஸ் வரிக் குறைப்பை மேற்கொண்ட மத்திய அரசுக்கு இழப்பு 6000 கோடி ரூபாயாகும். ஆகவே, தற்போது பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு எக்சைஸ் வரி ஒரு ரூபாய் விதிப்பது, அதற்குப் பின் பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைக்கலாம் என்ற திட்டம் அரசிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.அதே சமயம், தற்போது ஆறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடப்பதால், டிசம்பர் மாதக் கடைசி வரை இந்த விலைக் குறைப்பை அமல் படுத்த வேண்டாம். அதுவரை எண்ணெய் கம்பெனிகள் லாபம் அடையட்டும் என்ற கருத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: