Thursday, November 13, 2008

'யுனிவர்செல்'லுடன் பி.எஸ்.என்.எல்., ஒப்பந்தம்

தமிழகம் முழுவதும் உள்ள யுனிவர்செல் மொபைல் விற்பனை நிலையங்களில், பி.எஸ்.என்.எல்., பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு இணைப்புகளை விற்பனை செய்வது தொடர்பாக சென்னையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த 'யுனிவர்செல்' நிறுவன முதன்மை செயல் அதிகாரி ராஜகோபால் கூறியதாவது: யுனிவர்செல் மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம், பி.எஸ்.என்.எல்., நிறுவன பிரீபெய்டு, போஸ்ட்பெய்டு இணைப்புகள், தமிழகம் முழுவதும் உள்ள யுனிவர்செல் விற்பனை நிலையங்களில் கிடைக்கும். மேலும், பி.எஸ்.என்.எல்., ரீசார்ஜ் வசதியையும், பி.எஸ்.என்.எல்., கட்டண திட்டங்கள் குறித்த விவரங்களையும் யுனிவர்செல் விற்பனை நிலையத்தில் பெற முடியும். இத்திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, இதர மாநிலங்களில் உள்ள யுனிவர்செல் விற்பனை நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு ராஜகோபால் கூறினார். சென்னை தொலைபேசி முதன்மை பொது மேலாளர் வேலுசாமி கூறுகையில், ''ஆறு மாதத்தில், சென்னையில் அதிக டவர்களை அமைக்கவுள்ளோம்,'' என்றார். பி.எஸ்.என்.எல்., தமிழக முதன்மை பொது மேலாளர் வரதராஜன் கூறுகையில், ''கட்டடங்களுக்கு உள்ளே பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைப்பதில் உள்ள பிரச்னையை நீக்க, புதிய டவர்களை அமைக்கவுள்ளோம்,'' என்றார். யுனிவர்செல் நிறுவன மார்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் ரமேஷ் பரத் கூறுகையில், ''யுனிவர்செல் நிறுவனத்தில் மொபைல் எக்ஸ்சேஞ்ச், எளிய தவணையில் மொபைல் விற்பனை, மொபைல் இன்சூரன்ஸ், மெமரி கார்டில் புதிய பாடல்களை பதிவு செய்து வழங்குவது உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வருகிறோம்,'' என்றார்.
நன்றி : தினமலர்


No comments: