Thursday, November 27, 2008

800 மெகாவாட் மின் உற்பத்தி: 2 திட்டங்கள் கையெழுத்து

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 8,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம், முதல்வர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாடு மின்சார வாரியம், மத்திய அரசின் 'பெல்' நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் இந்த இரண்டு மின் திட்டங்களையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் முதல்வர்
கருணாநிதி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. மின்வாரியத் தலைவர் மச்சேந்திரநாதன் மற்றும் 'பெல்' தலைவர் ரவிக்குமார், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உடன்குடியில் கண்டறியப்பட்டுள்ள 760 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் இந்தத் திட்டங்கள் அமைகின்றன. திட்டத்தின்படி, முக்கிய இயந்திரங்களை 'பெல்' நிறுவனம் வழங்கும். திட்டத் தைச் செயல்படுத்தி, மின் நிலையத்தை இயக்குவதற்கான பணிகளை மின்சார வாரியம் மேற்கொள்ளும். மின் நிலையங்களை அமைப்பதற்குத் தேவையான பூர்வாங்கப் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். திட்டங்களுக்கான நிலக்கரி, கப்பல்கள் மூலம் கொண்டுவரப்படும் என்பதால், கடலில் தளம் அமைப்பதற்கான ஆய்வுப் பணியை முடித்து, சென்னை ஐ.ஐ.டி., அறிக்கை வழங்கியுள்ளது. முதல் திட்டம் 2012ம் ஆண்டு மார்ச்சிலும், இரண்டாவது திட்டம் அதே ஆண்டில் செப்டம்பரிலும் இயக்கப்படும்.
நன்றி : தினமலர்


No comments: