Thursday, July 17, 2008

சொல்லவும், மெல்லவும் முடியாத பரிதாப நிலை


பங்குச் சந்தை தினம் தினம் ஏதாவது ஒரு காரணத்திற்காக விழுந்து கொண்டிருக்கிறது. பிரேக் பிடிக்காத கார், சாலையின் இறக்கத்தில் எப்படி இறங்குமோ அப்படி இறங்கிக் கொண்டிருக்கிறது. திங்களன்று ரான்பாக்சி கம்பெனியின் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்ததால், சந்தையில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ரான்பாக்சி கம்பெனியில் ஏற்பட்டுள்ள புதிய குழப்பங்கள், அதாவது, அமெரிக்க அரசு, அந்த கம்பெனி மீது தொடரப்போகும் வழக்கு (கலப்படமான மருந்துகளை விற்றதாக) வந்த அறிவிப்புகளை தொடர்ந்து, அந்தக் கம்பெனியின் பங்குகள் திங்களன்று படுபாதாளத்துக்கு சென்றது. மற்றும் சமீபகாலமாக பேசப்பட்டு வந்த ஸ்பைஸ் ஜெட் விமான கம்பெனியின் சேர்மன், தனது வேலையை திங்களன்று ராஜினாமா செய்து விட்டதால், அந்தக் கம்பெனியின் பங்குகள் 14 சதவீதம் அளவு குறைந்தது. மொத்தமாக மும்பை பங்குச் சந்தை 139 புள்ளிகளை அன்றைய தினம் இழந்தது.
நேற்று முன்தினம், 654 புள்ளிகள் குறைந்தது ஏன்? : பிட்ச் ரேட்டிங் என்ற கம்பெனி, இந்தியாவின் உள்நாட்டு கிரெடிட் ரேட்டிங்கை குறைத்துள்ளது. அது, சந்தையை நேற்று முன்தினம் பாதித்தது. சமீபத்தில் தான் ஸ்டாண்டர்டு அண்டு பவர் என்னும் வெளிநாட்டு ரேட்டிங் ஏஜென்சி, இந்தியாவின் சமீப நிலைமைகளை வைத்து பார்க்கும் போது கவலை தெரிவிக்கும் முகமாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதனால், வெளிநாட்டு கம்பெனிகளின் முதலீடு இந்தியாவில் குறைய வாய்ப்பு உள்ளது. உலகின் பல நாடுகளில் மறுபடி வங்கிகளில் சப்பிரைம் பிரச்னை வரலாம் என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது. இந்த வருடத்துவக்கத்தில் இதே பிரச்னைக்காக சந்தை பல தூக் கமில்லாத இரவுகளைக் கழித்தது, பல ஆயிரம் புள்ளிகளை இழந்தது, பலருக்கு ஞாபகம் இருக்கலாம். மறுபடியும் சப்பிரைம் பிரச்னை வரலாம் என்பதால் வங்கிப் பங்குகள் எல்லாம் கீழே இழுக்கப் பட்டன. இவையெல்லாம் சேர்ந்து நேற்று முன்தினம் சந்தையை 654 புள்ளிகள் கீழே இழுத்தது.
கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் சந்தை நேற்று மேலே செல்லவில்லை. காரணம் அரசியல் நிலைமை தான். துவக்கம் 250 புள்ளிகள் வரை மேலேயே இருந்தாலும், தொடர்ந்து பலரும் விற்கமுற்பட்டதால் சந்தை முடிவாக கீழே முடிவடைந்தது. கடந்த இரு தினங்கள் இறக்கத்திற்கு பிறகு ரான்பாக்சி கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன. காரணம், அந்தக் கம்பெனியை வாங்குவதாக அறிவித்திருந்த ஜப்பானைச் சேர்ந்த டாய்ச்சி கம்பெனி, கடந்த சில நாட்களில் ரான்பாக்சி கம்பெனியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தது தான். நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 100 புள்ளிகள் கீழே இறங்கி, 12,575 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 45 புள்ளிகள் இறங்கி 3,816 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சந்தை கடந்த 15 மாதங்களில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. இது கவலையளிக்கக் கூடிய விஷயம். புரோக்கரேஜ் கம்பெனிகள்: பங்குச் சந்தை நன்றாக இருந்தால் முதலீட்டாளர்கள் வாங்குவதும், விற்பதும் அதிகமாக இருக்கும். அது சார்ந்த புரோக்கரேஜ் கம்பெனிகளின் லாபங்களும் நன்றாக இருக்கும். ஆனால், சந்தை கீழேயே இருப்பதால், முதலீட்டாளர்கள் சந்தையை விட்டு விலகியே இருப்பதால் புரோக்கரேஜ் கம்பெனிகளின் லாபங் களும் காணாமல் போய்விட்டன. இதனால், சந்தை, அந்த கம்பெனிகளின் பங்குகள் மதிப்பிழந்து காணப் படுகின்றது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: சந்தையின் சரிவை யாராலும் நிறுத்த முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. பலருக்கு என்ன செய்வது என்ற கவலை. சொல்லவும் முடியாத, மெல்லவும் முடியாத நிலமை. மியூச்சுவல் பண்டுகளில் ரிடம்ஷன் அதிகம் இல்லாதது ஒரு ஆறுதலான விஷயம். அதாவது, போட்ட பணத்தை அவசர அவசரமாக அதிகம் பேர் எடுக்காதது. இரண்டு காரணங்கள் இருக்கலாம். இப்போது எடுத்தால் நிறைய நஷ்டப்பட வேண்டிய வரும் அல்லது மியூச்சுவல் பண்டு என்பது நீண்ட நாள் முதலீடு என்ற எண்ணங் கள் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை என்பது நீண்ட நாள் முதலீடு என்ற எண்ணம் வந்தாலே போதும். அதுவே ஒரு பெரிய ஆறுதலான விஷயம். வரும் நாட்களும் கசப்பானவையாகத்தான் இருக்கும். குறிப்பாக, 22ம் தேதி டில்லியில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே சந்தையின் போக்கு அமையும்.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


No comments: