Sunday, November 29, 2009

துபாயில் கடலுக்கடியில் நகரமாம்: இந்திய பங்குச்சந்தைக்கோ துயரம்

கடந்த இரண்டு வாரங்களாகவே எச்சரித்து தான் வந்திருந்தோம். சந்தை மிகவும் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆதலால், லாபம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்; சந்தையில் இருக்கும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் திடீரென காணாமல் போய்விடும் என்று வியாழனும், வெள்ளியும் சந்தையை மிகவும் குறைத்துச் சென்றது. காரணம் துபாய்; பலரின் கனவுப் பிரதேசம்.

துபாயில் என்ன நடந்தது?: துபாய் அரசிற்கு சொந்தமான, 'துபாய் வேர்ல்ட்' என்று ஒரு சிட்டி கடலுக்குள் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இதற்கான செலவுகள் பல்லாயிரம் கோடி ரூபாய். அதற் காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த (அதாவது 80 பில்லியன் டாலர்கள், ஒரு பில்லியன் டாலர் என்பது 4,600 கோடி ரூபாய்). உள்ள தவணையை ஆறு மாதத் திற்கு தள்ளி வைக்கும்படி கடன் கொடுத்தவர்களை கேட்டுக் கொண்டதால், உலகம் பயப்பட ஆரம்பித்தது. அதாவது, அரசு வாங்கிய கடனைக் கொடுக்க முடியாத சூழ்நிலையா என்று? நிலைமை என்னவென்று முழுவதுமாக புரிந்து கொள்வதற்குள், சந்தைகளின் இறக்கம், கொளுத்தி போட்ட சரவெடி போல உலகின் பல இடங்களிலும் தொடர ஆரம்பித்தது. இது நடந்தது வியாழனன்று. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளின் சந்தையை பாதிக்கவில்லை. மற்ற ஆசிய சந்தைகளைப் பாதித்தாலும் பாதிப்பு, இந்தியா அளவு பெரிதாக பாதிக்கவில்லை.


ஏன் இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு?: இந்தியாவில் இருந்து பல லட்சக்கணக்காண நபர்கள் அங்கு வேலை செய்து வருகின்றனர். மேலும், பல இந்திய கம்பெனிகள் அங்கு தனது நிறுவனங்களை வைத்து வியாபாரங்கள் செய்து வருகின்றன. துபாய்க்கு பாதிப்பு என்றால் அது நிச்சயம் இந்தியாவிற்கும் ஓரளவு பாதிப்பு தான். ஆதலால், இந்திய சந்தைகள் சடசடவென 500 புள்ளிகளுக்கும் மேலாக விழ ஆரம்பித்தன.


விழுந்த சந்தை எப்படி திரும்பி சிறிது மேலே வந்தது?: ஐநூறுக்கும் அதிகமான புள்ளிகள் கீழே விழுந்து பின், சந்தை எப்படி மேலே வந்தது என்றால், அது இந்தியாவிற்கு பிறகு துவங் கிய ஐரோப்பிய சந்தைகளில் சிறிது ரெகவரி இருந்ததால், அது இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது. ஆதலால், சந்தை இழந்த புள்ளிகளில் 300 வரை திரும்பப் பெற்றது.


என்ன ஆகும்?: இன்னும் சரியான நிலவரம் தெரியவில்லை. அரபு நாடுகள் ஒருவருக்கொருவர் உதவி கொள் வதில் தயக்கம் காட்டமாட் டார்கள். மேலும் துபாய், உலகின் பல நாடுகளின் கம்பெனிகளுக் கும் ஒரு பொதுவான இடமாக இருக்கிறது. ஆகையால், பெரிய பாதிப்புகளுக்கு வாய்ப்பு இல்லை. இருந்தாலும், முழு நிலவரம் தெரியும் வரை முதலீட் டாளர்களுக்கு ஒரு கிலி இருக்கத் தான் செய்யும். வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 222 புள்ளிகள் குறைந்து 16,632 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 82 புள்ளிகள் குறைந்து 4,923 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. வியாழனும், வெள்ளியும் மட்டும் 566 புள்ளிகள் குறைந்துள்ளன.


வலுவடைந்த அமெரிக்க டாலர்: இந்த சூழ்நிலையில் அமெரிக்க டாலர் வலுவடைந்தது. அதாவது ரூபாய்க்கு எதிராக 45 பைசா வலுவடைந்தது. டாலர் வலுவடைந்ததால் சுத்த தங்கம் 10 கிராமிற்கு 477 ரூபாய் குறைந்தது. உணவுப்பொருட்களின் பணவீக்கம்: உணவுப்பொருட்களின் பணவீக்கம் தொடர்ந்து ஏறுவது ஒரு கவலைக்குரிய விஷயம் தான். என்ன செய்வது என்று அரசு முழிக்க வேண்டி வந்து விடும்.


உருகிய மெட்டல் பங்குகள்: கமாடிட்டி டிரேடிங்கில் துபாய் உலகளவில் ஒரு முக்கிய மார்க் கெட்டாக இருக்கிறது. துபாயில் பிரச்னை என்றவுடன் மெட்டல் பங்குகள் தான் அதிகம் உருகியது என்று கூறலாம்.


வரும் வாரம் எப்படி இருக்கும்?: உலகளவில் சந்தைகளில் பெரிய பிரச்னைகள் இல்லை. இந்திய சந்தைகளுக்கு தான் பாதிப்பு அதிகம். இப்போதுள்ள நிலையில், சந்தை ஏறத் துவங்கினால், லாபத்திற்கு குறிவைப்பதும், இறங்கும் நிலை வரும் போது, பொறுமை காத்து வாங்குவதற்கு பணத்தை தயாராக வைப்பதுதான் சிறந்தது. துறைகள் என்று பார்த்தால் பொங்கல் வரை கட்டுமானம், ரியல் எஸ்டேட் பக்கம் போவதை தவிர்க்கலாம். போனவாரமே நாம் சொல்லியிருந் தோம், 'நிப்டி 5ஆயிரத்து 50 மேலே போகும்போது வாங்குவதை குறைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதே சிறந்தது' என்று கோடிட்டு இருந்தோம். வேடிக்கை பார்த்தவர்கள், வெள்ளிக் கிழமை இறங்கி ஏறிய சந்தையை பார்த்து நல்ல பாடம் கற்றுஇருப்பவர். சந்தை வெகுவாக இறங்கும் போது, சிறுமுதலீட்டாளர்கள் முதலீடு செய்ய பணம் இல்லாமல் தத்தளிக்கின்றனர். இதிலிருந்து, விடுபட்டாலே வெற்றியை பெற்றுவிடலாம். சந்தை 17,000 புள்ளிகளில் நிலை பெற்று அதற்கு மேலேயும் சந்தை சென்றது, யாரும் பெரிதாக எதிர் பார்க்காதது. அதாவது, டிசம்பர் நெருங்க நெருங்க சந்தை சிறிது கீழே தான் செல்லும் என்று எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால், சந்தை 17,000 புள்ளிகளையும் தாண்டி மேலே சென்றிருந்தது. ஆதலால், ஏற்பட்டுள்ளது லாபத்தில் நஷ்டம் தான். அமெரிக்க சந்தைகளில் பாதிப்பு தெரிந் தால், அது உலகிலுள்ள சந்தைகளையும் பாதிக்கும். உலக நடப்புகள், அடுத்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளை வழி நடத்திச் செல்லும். நிப்டி 4 ஆயிரத்து 860க்கு மேல் சப்போர்ட் எடுத்துள்ளதுபோல் தெரிகிறது. இது தொடரவேண்டும். இது நிஜமானால்5 ஆயிரத்து 250க்கு நிப்டி தொடலாம்!
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்


Saturday, November 28, 2009

நம்பிக்கைத் துரோகம்...!

கடந்த மாதம் காவல்துறை சென்னையில் கடத்தல்காரர்களிடமிருந்து ஒரு மரகத லிங்கத்தைக் கைப்பற்றிய பிறகுதான், இதுபோல நமது ஆலயங்களிலிருந்து வேறு என்னவெல்லாம் களவு போயிருக்கிறதோ என்கிற கேள்வி அதிர்ச்சி அலையாகக் கிளம்பி இருக்கிறது. திருக்காரவாசல் கோயிலிலிருந்து களவாடப்பட்ட மரகத லிங்கம் என்னவாயிற்று என்று இன்றுவரை தகவல் இல்லை.

மரகத லிங்கங்கள் மட்டுமல்ல, பல அரசர்களும், தன வணிகர்களும் இந்தக் கோயில்களுக்கு அளித்திருக்கும் நகைகள் கணக்கிலடங்காதது. தங்களது நம்பிக்கையாலும், பக்தியாலும் இந்தக் கோயில்களின் பராமரிப்புக்காக காணிக்கையாக வழங்கப்பட்ட நிலபுலங்களின் அளவு கொஞ்சநஞ்சமல்ல.

நாளைய தலைமுறையினர், பக்தி அடிப்படையிலான நம்பிக்கையை மதிக்காமல், இந்த ஆலயங்களையும் பராமரிப்பின்றி பாழ்படுத்துவதுடன், பக்தர்கள் காணிக்கையாகத் தந்த நகைகளையும், நிலபுலங்களையும் அபகரித்துவிடக் கூடாது என்பதால்தானோ என்னவோ "சிவன் சொத்து குல நாசம்' என்று எச்சரிக்கை செய்தனர் நமது முன்னோர்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே, பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இல்லாத அளவுக்கு, நம்மவர்கள் ஆட்சியில் கோயில் சொத்துகள் கபளீகரம் செய்யப்பட்டது என்பதுதான் உண்மை.

ஒரு நாகரிகத்தின் அடிச்சுவடாக, அடிப்படை ஆதாரமாகத் திகழ்பவை இலக்கியமும், கட்டடக் கலையும்தான். காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்பது, நிற்கப் போவது இறை உணர்வு மட்டுமே என்பதை நமது முன்னோர்கள் உணர்ந்திருந்த காரணத்தினால்தான் இலக்கியமும், கட்டடக் கலையும் தமிழகத்தில் சமயம் சார்ந்ததாகவே இருக்கிறது. சமய இலக்கியங்கள் தோன்றாமல் போயிருந்தால், தமிழ் என்கிற மொழியே களப்பிரர்கள் காலத்துடன் அழிந்திருக்கக் கூடும்.

அதேபோல, தமிழனின் பொறியியல் வல்லமை, சிற்பக் கலை மேன்மை மற்றும் கட்டட அமைப்புத் திறமை போன்றவை நிலைத்து நின்றதற்குக் காரணம் அவை சமயம் சார்ந்ததாக, ஆலயங்களாக எழுப்பப்பட்டதால்தான். சேர, சோழ, பாண்டியர் காலத்து மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும், அரண்மனைகளும் மண்ணோடு மண்ணாகிவிட்ட நிலையில், பண்டைத் தமிழனின் நிலைமையைப் பறைசாற்றி நிற்பது வானுயர்ந்த கோபுரங்களுடனான நமது ஆலயங்கள் மட்டும்தான்.

இறை மறுப்பு என்கிற பெயரில் சமய இலக்கியங்களையும், ஆலயங்களையும் புறக்கணிக்க முற்பட்டதன் விளைவுதான் இப்போது தமிழ் பேசக்கூடத் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் நமது கல்விச்சாலைகள் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே பொறுக்கி எடுக்கும் விதத்தில் தமிழ் சொற்களைப் பயன்படுத்த சில இறைமறுப்புக் கொள்கையாளர்களின் தொலைக்காட்சி ஊடகங்கள் தலைப்பட்டிருக்கின்றன.

கோயில் நிலங்களை அபகரித்து வைத்திருப்பவர்களுக்கும், கோயிலிலிருந்து மரகத லிங்கத்தைக் களவாடிச் செல்பவருக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகக் கருத முடியாது. இறை நம்பிக்கையின் அடிப்படையில், ஓர் ஆலயத்தை நல்ல முறையில் பாதுகாக்க ஏதோ ஒரு பக்தரோ, அரசரோ, தனவணிகரோ காணிக்கையாகத் தந்த நிலத்தை, சம்பந்தமே இல்லாதவர்கள் அனுபவப் பாத்தியதை கொள்வது எந்தவிதத்தில் நியாயம்? திருட்டுப்போன நகைகளையும், சிலைகளையும் மீட்டுத் தரும் கடமை அரசுக்கு உள்ளது போலவே, கோயில் சொத்துகளையும் மீட்டெடுத்து, அந்தந்தக் கோயிலின் பராமரிப்பை மேம்படுத்தும் பொறுப்பும் அரசுக்கு இருப்பதுதானே நியாயம்?

இந்து அறநிலையத் துறையின் நேரடி மேற்பார்வையில் மட்டும் 38,465 கோயில்கள் உள்ளன. தனியார் மடங்களின் மேற்பார்வையில் மேலும் சில ஆயிரம் ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களைப் பற்றிய முறையான முழுமையான தகவல்கள் அறநிலையத் துறையிடம் இருக்கிறதா என்றால் சந்தேகமே.

மேலைநாடுகளில் இரண்டு மூன்று நூற்றாண்டுகள் சரித்திரமுடைய மாதா கோயில்களுக்குக்கூட அவைகளின் கட்டடக் கலை பற்றியும், சிறப்புகள் பற்றியும் பளபளப்பான தகவல் குறிப்புகளும், புகைப்படங்களுடன்கூடிய புத்தகங்களும் வெளியிடுகிறார்கள். ஆனால், பல நூற்றாண்டுச் சரித்திரமுடைய நமது ஆலயங்களைப் பற்றிக் கேட்டால் தல புராணம் தவிர, கோயிலின் சிற்பக்கலை, கட்டடக்கலை, சிறப்பம்சங்கள், எந்த ஆண்டு எந்தெந்த அரசர்களால் என்னென்ன கட்டப்பட்டது என்கிற சரித்திரம் எதுவுமே கிடையாது, தரப்படுவதில்லை.

தெருவுக்குத் தெரு புதுக் கோயில்கள் கட்டுவது முதலில் தடை செய்யப்பட வேண்டும். கோயில் சொத்துகள் அனைத்தும் சட்டம் போடப்பட்டு அந்தந்தக் கோயிலின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கோயிலின் நகைகள், சிலைகள் என்று ஒன்றுவிடாமல் முறையாகக் கணக்கெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதில், எவையெல்லாம் இப்போது போலிகள் என்பது கண்டறியப்பட்டு, தகுந்த நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும்.

கோயில்கள் மதச் சின்னங்கள் மட்டுமல்ல, தமிழரின் பண்பாட்டுப் பெட்டகங்கள். தமிழ் நாகரிகத்தின் சரித்திரச் சான்றுகள். கலாசாரக் கருவூலங்கள். நமது கோயில்களைப் பாதுகாப்பதன் மூலம் மட்டும்தான் தமிழையும், தமிழ் நாகரிகத்தையும், தமிழ்ச் சாதியையும் நாம் கட்டிக் காக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது!
நன்றி : தினமணி

ஐடி துறையில் 2.5 லட்சம் வேலை வாய்ப்பு :இன்போசிஸ்

ஐடி துறையில் அடுத்த ஆண்டுக்குள் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஐடி துறையின் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்போசிஸ் தெரிவி்த்துள்ளது. மேலும் 20,000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் மோகன்தாஸ் பை கூறுகையில், ஐடி துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. 2007ம் ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன. கடந்த 18 மாதங்களில்தான் இது குறைந்து வந்தது. இப்போது மீண்டும் உயர துவங்கி உள்ளது. அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம் என அவர் தெரிவித்துள்ளார்
நன்றி : தினமலர்


ஆச்சரியம்...!ஆனால் உண்மை : ரூ.1 மாத சம்பளம் பெறும் மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் ஒருவர் மாத சம்பளமாக ரூ.1 பெற்று வருகிறார். வேறு எங்கும் அல்ல; நம் இந்தியாவில் தான். அவர் இந்தியாவின் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணைமைச்சர் பிரபுல் படேல் தான். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான ஊதிய விவரங்கள் குறித்து தகவல் தருமாறு பொள்ளாச்சியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் விண்ணப்பித்திருந்தார்.

இதற்கு நாடாளுமன்ற செயலகம் உள்பட பல்வேறு துறைகள் தனித்தனியாக பதில் அளித்துள்ளன. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் பொது தகவல் அதிகாரி கௌரிசங்கர் அளித்துள்ள பதிலில், இணையமைச்சர் பிரபுல் படேல் தன்னுடைய மாத ஊதியமாக ரூ.1 மட்டுமே பெறுவதாக தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டதால் அவருக்கான மாத ஊதியம் ஒரு ரூபாயாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ திட்டத்தின் கீழ் அவருக்கான தொகை ரூ.500 ஐயும் சேர்த்து பிரபுல் படேலின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.501 மட்டுமே அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


Friday, November 27, 2009

துபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது: ஆனந்த் சர்மா

துபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டுள்ளது. இது நேற்று பங்குச் சந்தை, கடன் சந்தை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இன்று துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. துபாய் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, இந்திய பங்குச்சந்தையில் எதிரெலித்து கடும் சரிவினை கண்டது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, துபாய் பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கோ, ரியல் எஸ்டேட் தொழிலுகோ எந்த வித பாதிப்பும் வராது என்று கூறியுள்ளார். மேலும் , இந்திய பொருளாதாரம் பரந்த அளவிலானது. துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இங்கும் பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை நன்கு செயல்பட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


லிபரான் அறிக்கை: அத்வானிக்கு புது வாழ்வு?

பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சிப் பூசலும், ராஜ்நாத் சிங்குக்குப் பிறகு புதிய தலைவர் யார் என்கிற சர்ச்சையும் ஓய்ந்துள்ள நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கை முன்கூட்டியே வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இக் கமிஷன் 17 ஆண்டுகள் விசாரணை நடத்தி கடந்த ஜூன் 30-ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இந்நிலையில் நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே வெளியானது. பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ஏ.பி.வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 பேர் மீது கமிஷன் குற்றஞ்சாட்டியுள்ளது.

பாஜகவின் புதிய தலைவர் நிதின் கட்காரி என்று முடிவு செய்யப்பட்டு, அவர் இந்த ஆண்டு கடைசியில் பதவியேற்க உள்ளார். இதேபோல மாநிலங்களவையில் பா.ஜ.க. தலைவராக அருண் ஜேட்லி தொடர்ந்து நீடிப்பார் என்பதும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எல்.கே.அத்வானி ராஜிநாமா செய்த பிறகு, அந்தப் பதவியை சுஷ்மா சுவராஜ் வகிக்க இருக்கிறார் என்பதும் தெளிவாகியுள்ளது.

கட்சிக்குப் புதிய தலைவரும், புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அத்வானி தனது நண்பர்களிடம் கூறிவருகிறார். புதிய தலைமை செயல்படும்போது ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் அதற்குத் தம்மை யாரும் பொறுப்பாக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் இதற்கு முக்கிய காரணம்.

முரளி மனோகர் ஜோஷிதான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவதின் விருப்பம். ஆனால், இதற்கு அத்வானி உடன்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

பா.ஜ.க. தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., சங்கப்பரிவாரத் தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் நீடித்துவந்த நிலையில், நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானது அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திவிடும் என்று தெரிகிறது.

லிபரான் அறிக்கை தாக்கல், அத்வானியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவே உதவும் என்பது பலரது கருத்தாகும். அதாவது இந்த அறிக்கை மீதான நடவடிக்கையாக அத்வானி சிறைக்குச் சென்றால் அது கட்சிக்கு வலுசேர்க்கும் என்றும் பலர் கருதுகின்றனர். எனினும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த அறிக்கையின்பேரில் அத்வானியின் மீது நடவடிக்கை எடுத்து அவருக்குப் புதுவாழ்வு கொடுக்க காங்கிரஸ் விரும்பாது. ஆனால், அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்று கூறிவரும் சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங், ராஷ்ட்ரீய லோகதளம் தலைவர் லாலு பிரசாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் அத்வானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் அரசை வலியுறுத்தக்கூடும்.

மத்திய அரசு கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. அதாவது கரும்புக்கான ஆதரவு விலையை மத்திய அரசு அறிவிக்கும். மாநில அரசு இதற்கு மேல் விலை நிர்ணயம் செய்தால் அதைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் ஏற்க வேண்டும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது. இந்த அவசரச் சட்டத்துக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தச் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு, அதைத் திசைதிருப்பும் முயற்சியில் லிபரான் கமிஷன் அறிக்கையைக் கசிய விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபரான் கமிஷன் அறிக்கை இந்தக் கூட்டத்தொடரின் கடைசியில்தான் தாக்கல் செய்யப்பட இருந்தது.

கரும்பு கொள்முதல் தொடர்பான அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியிலேயே பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் சரத் பவார்தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். மிகவும் முக்கியமான விஷயத்தில் சரத் பவார் முன்யோசனையுடன் செயல்படாதது ஏன் என்று காங்கிரஸôர் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்மைத் தேர்தல்களில் வெற்றிபெற்றபோதிலும் எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்னையைக் கையிலெடுத்துக் கொண்டு தங்களை முற்றுகையிடக்கூடும் என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை மாநிலங்களவையில் அதற்குப் பெரும்பான்மை இல்லை. மக்களவையில் அது திமுகவின் ஆதரவையே பெரிதும் நம்பியுள்ளது. "ஸ்பெக்டரம்' ஊழல் விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அக்கட்சி ஏற்கெனவே காங்கிரஸýக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது. ஆனால், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஊழல் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஐ-க்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார். இது காங்கிரஸýக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னை, தொலைத் தொடர்புத்துறையில் ஊழல், மதுகோடா விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துவிடாமல் இருக்க காங்கிரஸ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவை அடக்கிவைக்கும் பொருட்டு லிபரான் கமிஷன் அறிக்கையை கையிலெடுத்துக் கொண்டுள்ளது.

அயோத்தி விவகாரத்தை மக்கள் மறந்துவிட்ட நிலையில், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முடியாது என்பதை பாஜகவும் உணர்ந்துவிட்ட நிலையில் லிபரான் அறிக்கை வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் அயோத்தி பேச்சு எழுந்துள்ளது.

17 தொகுப்புகளைக் கொண்ட லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி வேண்டும் என்றே பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பாபர் மசூதி செயல் கமிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் சரிவரச் செயல்படத் தவறிவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காங்கிரûஸ ஆதரிக்காத முஸ்லிம்கள் இதுகுறித்து மௌனமாக இருந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போது பிரதமர் பதவி வகித்த பி.வி.நரசிம்மராவ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கமிஷன் கூறியுள்ளது.

பாஜக தலைவர் அத்வானி சரிவரச் செயல்படவில்லை என்று கடந்த சில மாதங்களாக சங்கப் பரிவாரங்கள் அவரைக் குறைகூறி வந்தன.

மேலும் அத்வானி ஆதரவாளர்களுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறிவந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பின்னர் அத்வானியை அனுசரித்துச் செல்ல முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

பாஜகவின் அடுத்த தலைவராக நிதின் கட்காரியை அத்வானிதான் முன்மொழிந்ததாகத் தெரிகிறது. நரேந்திர மோடியை கட்சித் தலைவராக்கிவிட வேண்டும் என்று அத்வானி விரும்பினார். அதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போதைய சூழலில் கட்சித் தலைவர் பதவியை ஏற்க மோடி தயாராக இல்லை.

புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள நிதின் கட்காரி சரிவரச் செயல்படத் தவறும்பட்சத்தில் அல்லது அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிக்குத் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

லிபரான் கமிஷன் அறிக்கை வெளியீடும், அதன் தொடர் நிகழ்வுகளும் அத்வானி எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர வழிவகுக்கலாம். அதை பாஜக தலைமையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். அத்வானி எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கிறாரோ இல்லையோ நிச்சயம் இது அவரது கரத்தை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

3ஜி மொபைல் பேன்சி எண்கள் ஏலம்

பி.எஸ்.என்.எல்., சென்னை தெலைபேசி சமீபத்தில் வர்த்தக ரீதியாக வெளியிட்ட '3ஜி' மொபைல் இணைப்பின் 'பேன்சி எண்' விரும்புவோர் ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. அதிகப்படியான தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு விரும்பிய எண் வழங்கப்படுகிறது.

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,தற்போது இரண்டாம் தலைமுறை '2ஜி' சேவையில் இருந்து முன்னேறி வீடியோ கால் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 3ஜி சேவைக்கு மாறியுள்ளது. இந்தியாவின் முக்கிய பல நகரங்களில் இந்த சேவை வர்த்தக ரீதியாக வெளிவந்துள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி சமீபத்தில் '3ஜி' மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முன்பே, இச்சேவையை பெற விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று சென்னை தொலைபேசி அறிவித்திருந்தது.
தற்போது '2ஜி' சேவை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், 3ஜி சேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சிம்கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர,' 2ஜி' சேவையில் இருப்போரும் மொபைல் எண்ணை மாற்றாமல், கட்டணம் ஏதுமின்றி '3ஜி' சேவைக்கு மாறுவதற்கான வசதியையும் சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது. சிம் கார்டை மாற்ற வேண்டியதில்லை என்றாலும், கூடுதல் திறனுடைய புதிய சிம்கார்டு 59 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது '3ஜி 'மொபைல் இணைப்பு எண்களில் 'பேன்சி' எண்களை பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய '3ஜி' இணைப்புகள் அனைத்தும் '94455' என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த எண்களை தொடர்ந்து வரும் அடுத்த 5 எண்கள் தொடர் எண்களாகவோ, ஒரே எண்களாகவோ அமையும் பட்சத்தில் அவை பேன்சி எண்களாக குறிக்கப்படுகின்றன.

சாதாரணமாக இந்த எண்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கென குறைந்த பட்ச தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி மூன்று எண்கள் ஒன்றாக இருப்பின் ஆயிரம் ரூபாயும், கடைசி நான்கு எண்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், கடைசி 5 எண்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகை குறைந்த பட்ச இருப்பு தொகையாகவும், ஏலம் கேட்க விரும்புபவர்கள் இந்த தொகையை தொடர்ந்து 100ன் மடங்கில் ஏலத்தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது.

இந்தவகையில், சென்னையில் '3ஜி' மொபைல் எண்களில் 293 எண்கள் பேன்சி எண்களாக பிரிக்கப்பட்டு, அவற்றிற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான கட்டணம் ரூ. 1.50 மட்டுமே. பதிவுக்கட்டணம் 50 ரூபாயாகவும், பிரீபெய்டு போனில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்ச இருப்பு தொகை 300 வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் இருந்து விலக நினைப்பவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதி வரையில் ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் '2ஜி' சேவைக்கான மொபைல் எண்கள் ஏலம் முடிந்தது. அதில், 250 பேன்சி எண்கள் ஏலம் விடப்பட்டன.இந்த ஏலத்தில் தான் விரும்பிய மொபைல்போன் எண்ணிற்காக ஒருவர் அதிகபட்சமாக ' 55 ஆயிரம்' ரூபாய் செலுத்தி எடுத்துள்ளார். தொடர்ந்து தற்போது '3ஜி' சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அதில் 293 எண்கள் ஏலத்தில் விடப்படுகிறது. '2ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில் சென்னை தொலைபேசிக்கு 4.5 லட்சம் ரூபாய் வரையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. சென்னை தொலைபேசி தவிர தமிழ்நாடு தெலைதொடர்பு வட்டம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் தொலைபேசி எண்கள் ஏலம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு எண்கள் ஏலம் விடப்படும் நிலையில், பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கும் அதிகளவில் வருமானம் கிடைக்கும். தற்போது நடந்துவரும் 3 ஜி மொபைல் எண்கள் ஏலத்தில் ஒரு எண் குறைந்த பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கூட சென்னை தொலைபேசிக்கு 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மக்களிடமும் விழிப்புணர்ச்சி அதிகம் ஏற்பட்டு வரும் நிலையில் இது போன்ற ஏலம் நடத்தப்படுவது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அதிகளவில் வருமானத்தை ஈட்டித் தருவதாக அமைகின்றது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' 2 ஜி மொபைல் எண்கள் ஏலத்தை விட இதில் அதிக தொகை நிறுவனத்திற்கு கிடைக்கும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் திடீரென விலகிக் கொண்டால் அவரிடம் இருந்து எந்த தொகையும் பிடிக்கப்படமாட்டாது. அதே நேரத்தில் அவர் குறிப்பிட்ட தொகை அதிகபட்சமாக இருந்தால் 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஏலத்தில் அதிக தொகை எடுப்பவர்கள் திடீரென விலகும் நிலையில், அடுத்து இருப்பவர், விலகியவர் குறித்த தொகையை தந்தால் அவர் விரும்பிய எண் கிடைக்கும்,'' என்றார்.

நன்றி : தினமலர்