Sunday, November 29, 2009

துபாயில் கடலுக்கடியில் நகரமாம்: இந்திய பங்குச்சந்தைக்கோ துயரம்

கடந்த இரண்டு வாரங்களாகவே எச்சரித்து தான் வந்திருந்தோம். சந்தை மிகவும் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆதலால், லாபம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்; சந்தையில் இருக்கும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் திடீரென காணாமல் போய்விடும் என்று வியாழனும், வெள்ளியும் சந்தையை மிகவும் குறைத்துச் சென்றது. காரணம் துபாய்; பலரின் கனவுப் பிரதேசம்.

துபாயில் என்ன நடந்தது?: துபாய் அரசிற்கு சொந்தமான, 'துபாய் வேர்ல்ட்' என்று ஒரு சிட்டி கடலுக்குள் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இதற்கான செலவுகள் பல்லாயிரம் கோடி ரூபாய். அதற் காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த (அதாவது 80 பில்லியன் டாலர்கள், ஒரு பில்லியன் டாலர் என்பது 4,600 கோடி ரூபாய்). உள்ள தவணையை ஆறு மாதத் திற்கு தள்ளி வைக்கும்படி கடன் கொடுத்தவர்களை கேட்டுக் கொண்டதால், உலகம் பயப்பட ஆரம்பித்தது. அதாவது, அரசு வாங்கிய கடனைக் கொடுக்க முடியாத சூழ்நிலையா என்று? நிலைமை என்னவென்று முழுவதுமாக புரிந்து கொள்வதற்குள், சந்தைகளின் இறக்கம், கொளுத்தி போட்ட சரவெடி போல உலகின் பல இடங்களிலும் தொடர ஆரம்பித்தது. இது நடந்தது வியாழனன்று. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளின் சந்தையை பாதிக்கவில்லை. மற்ற ஆசிய சந்தைகளைப் பாதித்தாலும் பாதிப்பு, இந்தியா அளவு பெரிதாக பாதிக்கவில்லை.


ஏன் இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு?: இந்தியாவில் இருந்து பல லட்சக்கணக்காண நபர்கள் அங்கு வேலை செய்து வருகின்றனர். மேலும், பல இந்திய கம்பெனிகள் அங்கு தனது நிறுவனங்களை வைத்து வியாபாரங்கள் செய்து வருகின்றன. துபாய்க்கு பாதிப்பு என்றால் அது நிச்சயம் இந்தியாவிற்கும் ஓரளவு பாதிப்பு தான். ஆதலால், இந்திய சந்தைகள் சடசடவென 500 புள்ளிகளுக்கும் மேலாக விழ ஆரம்பித்தன.


விழுந்த சந்தை எப்படி திரும்பி சிறிது மேலே வந்தது?: ஐநூறுக்கும் அதிகமான புள்ளிகள் கீழே விழுந்து பின், சந்தை எப்படி மேலே வந்தது என்றால், அது இந்தியாவிற்கு பிறகு துவங் கிய ஐரோப்பிய சந்தைகளில் சிறிது ரெகவரி இருந்ததால், அது இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது. ஆதலால், சந்தை இழந்த புள்ளிகளில் 300 வரை திரும்பப் பெற்றது.


என்ன ஆகும்?: இன்னும் சரியான நிலவரம் தெரியவில்லை. அரபு நாடுகள் ஒருவருக்கொருவர் உதவி கொள் வதில் தயக்கம் காட்டமாட் டார்கள். மேலும் துபாய், உலகின் பல நாடுகளின் கம்பெனிகளுக் கும் ஒரு பொதுவான இடமாக இருக்கிறது. ஆகையால், பெரிய பாதிப்புகளுக்கு வாய்ப்பு இல்லை. இருந்தாலும், முழு நிலவரம் தெரியும் வரை முதலீட் டாளர்களுக்கு ஒரு கிலி இருக்கத் தான் செய்யும். வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 222 புள்ளிகள் குறைந்து 16,632 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 82 புள்ளிகள் குறைந்து 4,923 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. வியாழனும், வெள்ளியும் மட்டும் 566 புள்ளிகள் குறைந்துள்ளன.


வலுவடைந்த அமெரிக்க டாலர்: இந்த சூழ்நிலையில் அமெரிக்க டாலர் வலுவடைந்தது. அதாவது ரூபாய்க்கு எதிராக 45 பைசா வலுவடைந்தது. டாலர் வலுவடைந்ததால் சுத்த தங்கம் 10 கிராமிற்கு 477 ரூபாய் குறைந்தது. உணவுப்பொருட்களின் பணவீக்கம்: உணவுப்பொருட்களின் பணவீக்கம் தொடர்ந்து ஏறுவது ஒரு கவலைக்குரிய விஷயம் தான். என்ன செய்வது என்று அரசு முழிக்க வேண்டி வந்து விடும்.


உருகிய மெட்டல் பங்குகள்: கமாடிட்டி டிரேடிங்கில் துபாய் உலகளவில் ஒரு முக்கிய மார்க் கெட்டாக இருக்கிறது. துபாயில் பிரச்னை என்றவுடன் மெட்டல் பங்குகள் தான் அதிகம் உருகியது என்று கூறலாம்.


வரும் வாரம் எப்படி இருக்கும்?: உலகளவில் சந்தைகளில் பெரிய பிரச்னைகள் இல்லை. இந்திய சந்தைகளுக்கு தான் பாதிப்பு அதிகம். இப்போதுள்ள நிலையில், சந்தை ஏறத் துவங்கினால், லாபத்திற்கு குறிவைப்பதும், இறங்கும் நிலை வரும் போது, பொறுமை காத்து வாங்குவதற்கு பணத்தை தயாராக வைப்பதுதான் சிறந்தது. துறைகள் என்று பார்த்தால் பொங்கல் வரை கட்டுமானம், ரியல் எஸ்டேட் பக்கம் போவதை தவிர்க்கலாம். போனவாரமே நாம் சொல்லியிருந் தோம், 'நிப்டி 5ஆயிரத்து 50 மேலே போகும்போது வாங்குவதை குறைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதே சிறந்தது' என்று கோடிட்டு இருந்தோம். வேடிக்கை பார்த்தவர்கள், வெள்ளிக் கிழமை இறங்கி ஏறிய சந்தையை பார்த்து நல்ல பாடம் கற்றுஇருப்பவர். சந்தை வெகுவாக இறங்கும் போது, சிறுமுதலீட்டாளர்கள் முதலீடு செய்ய பணம் இல்லாமல் தத்தளிக்கின்றனர். இதிலிருந்து, விடுபட்டாலே வெற்றியை பெற்றுவிடலாம். சந்தை 17,000 புள்ளிகளில் நிலை பெற்று அதற்கு மேலேயும் சந்தை சென்றது, யாரும் பெரிதாக எதிர் பார்க்காதது. அதாவது, டிசம்பர் நெருங்க நெருங்க சந்தை சிறிது கீழே தான் செல்லும் என்று எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால், சந்தை 17,000 புள்ளிகளையும் தாண்டி மேலே சென்றிருந்தது. ஆதலால், ஏற்பட்டுள்ளது லாபத்தில் நஷ்டம் தான். அமெரிக்க சந்தைகளில் பாதிப்பு தெரிந் தால், அது உலகிலுள்ள சந்தைகளையும் பாதிக்கும். உலக நடப்புகள், அடுத்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளை வழி நடத்திச் செல்லும். நிப்டி 4 ஆயிரத்து 860க்கு மேல் சப்போர்ட் எடுத்துள்ளதுபோல் தெரிகிறது. இது தொடரவேண்டும். இது நிஜமானால்5 ஆயிரத்து 250க்கு நிப்டி தொடலாம்!
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்


No comments: