Monday, November 9, 2009

சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழின் நிலை

தமிழக அரசின் திடீர் அறிவிப்புகளுள் ஒன்று சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்துவது பற்றியது. 2006-ல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் அமைக்கப்பட்ட சமச்சீர் கல்விக்குழு, 2007-ல் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது.

இக்குழுவில் அவருடன் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத் தலைவர், பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோருடன் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள இயக்குநர் சிலரும் இடம்பெற்றிருந்தனர்.

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மாநிலக் கல்வி முறை, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ - இந்தியன், ஓரியண்டல் பாடத்திட்டம், நர்சரிப் பள்ளிக் கல்வி முறை என ஐந்தினையும் நன்கு ஆராய்ந்து, குறைகளைக் களைந்து, நிறைகளை எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே சீராக வழங்கும்வகையில் பொதுவானதொரு கல்விமுறையை உருவாக்குவது இக்குழுவின் நோக்கமாகும்.

எனவே எல்லாநிலைப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம், தேர்வுமுறைகள் மூலம் மாணவர்களை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக சமச்சீர் கல்வித் திட்டமானது, தரம் உயர்ந்த கல்வியைக் கீழே தாழ்த்திச் சமப்படுத்துவது என்று பொருள் கொள்ளக் கூடாது. பொதுப்பாடத் திட்டத்தால் புளியம்பட்டி மாணவனும் பூந்தமல்லி மாணவனும் ஒரே பாடத்தைப் படிக்க வேண்டும், அதற்குரிய அறிவைப் பெற வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.

தமிழகத்தில் மாநிலக் கல்வி முறையில் 44,241 தொடக்க நடுநிலைப் பள்ளிகளும், 5,908 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. அத்துடன் 41 ஆங்கிலோ - இந்தியன் பள்ளிகள், 25 ஓரியண்டல் பள்ளிகளும் இருக்கின்றன. இவற்றுக்காக அரசுத் தேர்வுத்துறை நான்குவிதமான அரசுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. இவற்றின் மதிப்பீட்டு முறையும் வேறுபட்டுள்ளன. இந்த வேறுபாடுகளை மாற்றியமைப்பதற்காக, இப்பள்ளிகளின் பாடத்திட்டம், செயல்முறைகள், தேர்வு முறை, பள்ளி ஆய்வு, கல்வி விதிமுறைகள் ஆகிய அனைத்தையும் ஒரே நிலைப்படுத்த சமச்சீர் கல்விக்குழு ஆய்வை மேற்கொண்டது.

இக்குழு பல மாவட்டங்களிலும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரைச் சந்தித்துக் கருத்துகளைக் கேட்டறிந்தது. பலவகைப் பள்ளி நிறுவனங்களும் தத்தம் கருத்துகளைக் குழுவின் பரிசீலனைக்கு வைத்தன. பல உள்குழுக்கள் பாடத்திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை தந்தன. இவற்றோடு தேசிய கலைத்திட்டம் - 2005-ன் நோக்கங்களையும் உள்வாங்கிக்கொண்டு குழு ஆய்வு செய்தது.

சமச்சீர் கல்விக் குழு பள்ளி சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஆராய்ந்து, தரமான கல்வித் திட்டத்தை உருவாக்கும் வகையில் அறிக்கையைத் தயார் செய்தது. இதில் கலைத்திட்ட நோக்கம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு, பள்ளிகளை ஆய்வு செய்தல், தேர்வு முறைகள், பள்ளிசாரா செயல்முறைகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆகியவையும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பல இயக்குநர்களைக் கொண்டு தனித்தனியாகச் செயல்படும் பள்ளிக் கல்வி நிர்வாக முறையை மாற்றவும் இக்குழு பரிந்துரை செய்துள்ளது. தன்னாட்சி பெற்ற மாநிலக் கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், இதில் பாடவாரியாகக் குழுமங்கள் அமைத்து பல்கலைக்கழகக் கல்விக்குழுவுக்கு இணையாகச் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. முத்துக்குமரன் குழு அறிக்கையில் உள்ள எக்கருத்துகள் கொள்ளப்பட்டன, எவையெவை தள்ளப்பட்டன என்ற விவரம் தெரியவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு, 2010 - 2011-ம் கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்து, கல்வியாளர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை பொதுப்பாடத் திட்ட வரைவை உருவாக்கியுள்ளது. பொதுமக்களும் கல்வியாளர்களும் அதைப்பற்றித் தெரிந்து, கருத்துகளைக் கூறும் வகையில் இணையதளத்தில் அப் பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புகளுக்குப் புதிய பாடநூல்களைத் தயாரிக்கும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி எனும் நோக்கில் இப்பாடத்திட்டத்தை ஆய்வு செய்தபோது சில தகவல்கள் தெரியவந்துள்ளன. மாநிலக் கல்வி முறையில் அமைந்த முந்தைய பாடத்திட்டத்துக்கும் புதிய பாடத்திட்டத்துக்கும் ஆங்காங்கே வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மொழிப்பாடத்தைப் பொறுத்தமட்டில், முதல் மொழி தமிழ், இரண்டாவது மொழி ஆங்கிலத்துடன், மூன்றாவது மொழியாக ஓர் ஓரியண்டல் மொழி, சிறப்புத் தமிழ், சிறப்பு ஆங்கிலம் அல்லது தாய்மொழி இவற்றுள் ஏதேனும் ஒன்று கற்கலாம் என இக்குழு பரிந்துரைக்கிறது. இதன் அடிப்படையிலேயே தேர்வுமுறைக்கும் இரண்டு மாதிரிகளைத் தந்துள்ளது. மூன்று மொழிகள் கணிதம், அறிவியல் (செய்முறையுடன்), சமூக அறிவியல் ஆகியவற்றுக்கு மொத்தமாக 600 மதிப்பெண் அடிப்படையில் தேர்வை நடத்தவும் வழிகாட்டியுள்ளது.

ஏற்கெனவே குறிப்பிட்டவாறு தமிழகத்தில் உள்ள ஐந்து வகைப் பள்ளிகளும், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள தமிழ்ப் பாடநூல்களையே எல்லா வகுப்புகளிலும் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தேர்வு முறைகள் மாறியுள்ளன. எனவே சமச்சீர் கல்வி நடைமுறைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள தமிழ்மொழிக்கான பொதுப் பாடத்திட்ட வரைவில் மிகப்பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாடத்திட்ட அமைப்பில் வழக்கம்போல் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.

ஒன்றுமுதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடத்திட்டத்தில் எந்த வகுப்பிலும் கடவுள் வாழ்த்துப் பகுதி இல்லை. தமிழ்மொழி வாழ்த்து மட்டுமே இடம்பெற்றுள்ளது. அத்துடன் இந்திய விடுதலைப் போராட்டம், நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் போன்றவற்றை விவரிக்கும் உரைநடைப்பாடம் எந்த வகுப்பிலும் அமைந்திருக்கவில்லை. வகுப்புகள்தோறும் இடம்பெற வேண்டிய சமூக மேம்பாட்டுக்காக உழைத்த மகளிர், மொழித் தொண்டாற்றிய மகளிர் பற்றிய பாடம் ஒன்றிரண்டு தவிர, பிற வகுப்புகளில் காணப்படவில்லை. மகளிர்தம் முன்னேற்றம் பற்றிய பகுதிகளே இல்லாத வகுப்புப் பாடத்திட்டங்களும் உள்ளன.

அனைத்து வகுப்புகளின் செய்யுள் பகுதிகளில் செயற்கையான வறட்சி காணப்படுகிறது. காப்பிய வரிசையில் கம்பராமாயணம், சீறாப்புராணம், தேம்பாவணி, திருவிளையாடல் புராணம், ராவண காவியம், காந்தி மகான் கதை போன்றவை எதுவும் பாடநூலில் இடம்பெறவில்லை. இவையனைத்தும் முந்தைய பாடத்திட்டத்தில் வகுப்பிற்கேற்ப அமைந்திருந்தன. தற்போது சிலப்பதிகாரம், மணிமேகலை தவிர காப்பியப் பஞ்சம் பாடத்திட்டத்தில் காணப்படுகிறது. கம்பன் என்னும் சொல்லை உச்சரிக்காமலேயே ஒரு மாணவன் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பை முடித்துச் சான்றிதழ் பெற்றுச் சென்றுவிடுகிற சூழலைப் பாடத்திட்டக் குழுவினர் உருவாக்கியுள்ளனர். சில இலக்கணத் தலைப்புகள் வகுப்புக்கு வகுப்பு இடம்மாறியும் ஒரே வகுப்பில் பல அலகுகளை அடைத்துக்கொண்டும் தாறுமாறாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அறுவகைப் பெயர்கள் எனும் சிறு இலக்கணப் பகுதி பல வகுப்புகளில் பல அலகுகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வளர்ச்சிநிலையெனக் காரணம் கூறித் தட்டிக் கழிக்க முடியாது.

"உழைப்பால் உயர்ந்த உத்தமர்' எனும் தலைப்பிலான உரைநடைப் பகுதிக்கு பரோட்டா கடையில் வேலை பார்த்து ஐஏஎஸ் ஆன ஒருவர், களஞ்சியம் சின்னத்தாய் போன்றவர்கள் எடுத்துக்காட்டுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உழைப்பும் உயர்வும் பாராட்டுதற்குரியவைதான். ஆனால் இவர்கள் வாழுநர்கள். இவர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று உறுதிபடக் கூற முடியாது. இதைத் தொலைநோக்குப் பார்வையில் ஆய்வு செய்து வாழுநர்களைப் பாடப்பொருளாக்குவதைத் தவிர்க்கலாம்.

ஒரு வகுப்பின் செய்யுள்கதைப் பகுதிக்காக தேசிங்குராஜன் கதையைப் பாடத்திட்டம் பரிந்துரைத்துள்ளது. இது பல தலைமுறைகளைக் கடந்த கதை. செல்போனையும் கணினித் தகவல்களையும் பாடமாக வைக்க வேண்டும் என வலியுறுத்துகிற மொழிப்பாடத்திட்டம் மிகப்பழமையான இந்தக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது வியப்பாக உள்ளது. பாடத்திட்ட வல்லுநர்கள் கவிமணி, நாமக்கல் கவிஞர், அழ. வள்ளியப்பா, பெருஞ்சித்திரனார் போன்றோரின் படைப்புகளைப் பார்க்கவில்லை போலத் தோன்றுகிறது.

துணைப்பாடப் பகுதிக்காக எடிசன் இரண்டு வகுப்புகளில் குறிப்பிடப்பட்டுடுள்ளார். பிற அறிவியல் அறிஞர்களோ நோபல் பரிசு பெற்றவர்களோ அவர்கள் கண்ணில்படவில்லையா? உலகத் தமிழ் மாநாடுகள் உணர்த்தும் செய்திகள் எனும் தலைப்பில் பத்தாம் வகுப்பில் உரைநடைப்பகுதி உள்ளது. கருத்து முரண்பாடு இல்லாத வகையில் இப்பாடத்தை எவ்வாறு அமைக்கப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.

அதுபோதாதென்று தமிழில் நாற்பது அடிகளில் செய்யுள்களையும் உரைடை, துணைப்பாடப் பகுதிகளையும் வேண்டாம் என்று வெட்டித் தள்ளியுள்ளது யாருக்குச் சுமை என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.

தமிழைத்தவிர பிற பாடங்களில் இத்தகைய குளறுபடிகள் இல்லை. அவை கருத்துப் பாடங்களாதலால் சில பாடப்பகுதிகள் முன்னும் பின்னுமாக மாற்றப்பட்டுள்ளன. பாடத்திட்டக் குறைபாடுகளை நீக்க வேண்டியது முதன்மையான வேலை. எனவே கல்வித்துறை பல முனைகளிலுமிருந்து வரும் கருத்துகளுக்கும் மதிப்பளித்து ஆய்வு செய்து ஏற்பன ஏற்று, செம்மையான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் அமையும் பாடநூலே மிகச் சிறந்ததாக அமையும் என்பது உறுதி.

இம்மாதிரியான முன்திட்டமிடாத பணிகளைத் தவிர்த்து உயர்ந்த குறிக்கோளுடன் பாடத்திட்டத்தையும் செம்மையான பாடநூல்களையும் வழங்க வேண்டியது கல்வித்துறையின் தலையாய கடமை.

(கட்டுரையாளர்: தமிழ்ப் பெரியசாமி ஓய்வுபெற்ற தமிழாசிரியர்)
நன்றி : தினமணி

No comments: